கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

அபாய விளக்குகள் - வன்னியில் ஊழல் - லஞ்சம் - முறைகேடுகள்

Tuesday 28 February 2012



00
முன்னர் வன்னி மக்கள் இரத்தம் சிந்தும் அரசியற் சூழலில் தங்களின் வாழ்வை இழந்தனர். இப்போது அதே மக்கள் இரத்தத்தை உறிஞ்சும் அரச அதிகாரிகளின், ஒப்பந்தகாரரின் அதிகாரச் சூழலில் தங்களின் எதிர்காலத்தை இழந்து கொண்டிருக்கின்றனர். 
00










முன்னர் வன்னி மக்கள் இரத்தம் சிந்தும் அரசியற் சூழலில் தங்களின் வாழ்வை இழந்தனர். இப்போது அதே மக்கள் இரத்தத்தை உறிஞ்சும் அரச அதிகாரிகளின், ஒப்பந்தகாரரின் அதிகாரச் சூழலில் தங்களின் எதிர்காலத்தை  இழந்து கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறாயின் காயங்களோடும் கண்ணீரோடும்தான் வன்னி மக்களின் எதிர்காலமும் கழியப்போகிறதா?  என்று கேட்கும் நிலையிலேயே வன்னியின் நிலைவரங்கள் இருக்கின்றன. யுத்தம் ஓய்ந்த பின்னர் உருவாகிய புதிய சூழலை இலங்கையின் பிற பிரதேசத்தினர் அனுபவிக்கிற அளவுக்கு வன்னியிலுள்ள மக்கள் பெறவில்லை.

வன்னியில் பெரும்பாலான இடங்களில் இன்னும் இருள்தான் நிறைந்திருக்கு. அங்கே இன்னமும் புழுதிபெருகிய தெருக்கள்தான் நீண்டுகிடக்கின்றன. இடிந்த பாலங்களிற் பலவும் அந்த நிலையிலேயே உள்ளன. சிதைந்த வாய்க்கால்கள் முழுமையாகச் சீரமைக்கப்படவில்லை.

ஆனால், யுத்தத்திற்குப் பிறகு வன்னிக்கெனப் பெருந்தொகையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குளங்களைப் புனரமைப்பதற்கு, மின்சாரம் வழங்குவதற்கு, வீதிகளைத் திருத்துவதற்கு, பாடசாலைக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு, ஆஸ்பத்திரிகளைக் கட்டுவதற்கு, ஊர்கள் தோறும் பொதுநோக்கு மண்டபங்களை அமைப்பதற்கு, விவசாயிகளை ஊக்குவித்து விவசாயச்செய்கையை மேம்படுத்துவதற்கு, கடற்றொழிலை விரிவாக்கம் செய்வதற்கு, சிறு கைத்தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கு, வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, நீர் விநியோகத்துக்கு, வீடுகளை அமைப்பதற்கு, கால்நடை வளர்ப்புக்கு, கலாச்சார மேம்பாட்டுக்கு, தொழிற்றுறைக் கல்விக்கு, சமூக அபிவிருத்திக்கு, மீள்குடியேற்றத்துக்கு, கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு, வாய்க்கால்களைச் சீர்ப்படுத்துவதற்கு, உள்ளுர் மூலவளப் பயன்பாட்டுக்கு எனப் பல கோடிக்கணக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியின் மூலமாக போரினாற் சிதைந்து போயிருக்கும் உட்கட்டமைப்புகளை மீளமைப்பதும் மிகப் பின்னடைந்திருக்கும் மக்களின் வாழ்நிலையை மேம்படுத்துவதுமே பிரதான நோக்கம்.

போரினாற் பாதிக்கப்பட்ட சமூகங்களை மீள் கட்டமைப்புச் செய்யும் வேலைத்திட்டத்தில் அரசும் பிற நாடுகளும் சர்வதேச மற்றும் உள்ளுர் அமைப்புகளும் ஈடுபடுவது வழக்கம்.

அந்த வகையில் இலங்கையிலே போர் நடைபெற்ற வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இத்தகைய மீள் கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு, அபிவிருத்தி ஆகியனவற்றின் திட்ட நோக்குகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்காக அரசாங்கம் நேரடியாகவும் பிற நாடுகள் மற்றும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றிடமிருந்து கடனடிப்படையிலும் நிதியைப் பெற்று இந்த வேலைத்திட்டங்களைச் செயற்படுத்துகிறது. இதைவிட சர்வதேசத் தொண்டர் அமைப்புகளும் சில வெளிநாடுகளும் மனிதாபிமான உதவித்திட்டங்களின் கீழ் குறிப்பிட்டளவு நிதியை வழங்குகின்றன.

எனவே யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் பெருமளவு நிதி வன்னிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வன்னியின் இழப்புக்கு, வன்னி மக்கள் இழந்தவற்றுக்கு இது ஈடாகாது. போரினாலும் இயற்கை அழிவுகளினாலும் ஏற்படும் இழப்புகளை எதனாலும் முழுமையாக ஈடுசெய்து விடமுடியாது. எனினும் ஓரளவுக்கு அவற்றைச் சீர்ப்படுத்துதவற்கு முயற்சிப்பது அவசியம். அது ஒரு பொது நிலையும்கூட.

என்பதால் வன்னிக்கான நிதி ஒதுக்கீடுகள் யுத்தத்துக்குப் பிந்திய இந்த இரண்டாண்டுகளில் மிக அதிகமாகவே உள்ளன.

எந்த வழியினால் இந்த நிதி மூலம் பெறப்பட்டாலும் அல்லது இந்த நிதிப் பங்களிப்புகள் வந்தாலும் அதை வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்துவதும் பயனாளர்களைத் தேர்வு செய்வதும் உள்ளுர் அரச நிர்வாகமே. அதாவது அரச அதிகாரிகளும் உத்தியோகத்தர்களுமே.

இங்கேதான் பிரச்சினை.

இந்த நிதி மூலத்துக்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதிலும் உதவித்திட்டங்களை மேற்கொள்வதிலும் முறைகேடுகளும் ஊழல்களும் தாராளமாகியுள்ளன.

போருக்குப் பிறகு கிளிநொச்சி மாவட்டத்தில் புனரமைப்புச் செய்யப்பட்ட கல்மடுக்குளம், அக்கராயன்குளம் போன்றன உடனடியாகவே பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளன. அக்கராயன் குளத்தின் கட்டை மேலும் உயர்த்துவதற்கும் மேலதிக நீரை வெளியேற்றும் பகுதியைப் புனரமைப்பதற்கும், வாய்க்கால்களைச் சீரமைப்பதற்கும் என கடந்த ஆண்டு 300 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

ஆனால், இந்த வேலைகளைச் செய்த ஒரு சிலமாதங்களிலேயே  மேலதிக நீரை வெளியேற்றும் பகுதி முற்றாகச்சிதைந்து முன்னர் இருந்த நிலையையும் விடப் பெரும்பாதிப்புக்குள்ளாகியுள்ளது. போதாக்குறைக்கு முறிகண்டி – ஜெயபுரம் பிரதான வீதியின் ஒரு பகுதியும் முழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

திட்டமிடலில் ஏற்பட்ட குறைபாடா அல்லது வேலையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முறைகேடா இதற்குக் காரணம்? நிச்சயமாக முறைகேடுதான் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஆராயும் கூட்டமொன்றும் சம்மந்தப்பட்ட குளப்பகுதியில் நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார், வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர், மேலதி அரசாங்க அதிபர், உதவி அரச அதிபர், நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள், வீதி அபிவிருத்தித் திணைக்களப் பொறியிலாளர், விவசாயத்திணைக்களப் பணிப்பாளர் போன்ற உயர் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்திருந்தனர்.

தற்போது கரியாலை நாகபடுவான் என்ற குளப்பகுதியிலும் இத்தகைய குறைபாடான – திட்டத்துக்கு மாறான வகையில் புனரமைப்புப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதேச விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அண்மையில் பூநகரியில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின்போது விவசாயிகள் தங்களுடைய ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளர்.

சுமார் 6.5 கிலோ மீற்றர் நீளமுடைய குளத்தின் அணைக்கட்டினைப் புனரமைப்புச் செய்வதற்கென திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான நிதியும் பெறப்பட்டுள்ளது. ஆனால், வேலையை நடைமுறைப்படுத்தும் கட்டத்தில் குறித்த குளத்தின் அணைக்கட்டுப் பகுதியில் கண்ணிவெடி அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒதுக்கப்பட்ட நிதியை அதே குளத்தின் பிறிதொரு முக்கியத்துவமற்ற வேலைக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த விவசாயிகள் கூறுகின்றனர்.

மிதிவெடி அபாயம் இருக்குமானால், அதை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை உதவி அரசாங்க அதிபர், அரசாங்க அதிபர் ஊடாக மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறான முயற்சிகள் எடுக்கப்படாமல், ஒப்பந்தகாரரின் வசதிப்படியே திட்ட ங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று குற்றம் சாட்டுகின்றன கமக்காரர் அமைப்புகள்.

இத்தகைய ஒரு நடவடிக்கை கல்மடுக்குளத்தின் புனரமைப்பின் போதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விவசாயத்திலும் நீர்ப்பாசனத்திலும் செழிப்பான பாரம்பரியத்தையுடைய இலங்கையின் இன்றைய நீர்ப்பாசன நிலைவரம் இப்படியா இருக்கிறது என்று அக்கராயன் குளக்கட்டில் ஒரு விவசாயி வருத்தத்தோடு உயர் அதிகாரிகளிடம் எழுப்பிய கேள்வியே இந்த இடத்தில் நினைக்கு வருகிறது.

இந்த நிலையில் இரணமடுக்குளத்தின் புனரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 3300 பில்லியன் ரூபாய்க்கு என்ன நடக்கப்போகிறது என்று கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

அடுத்த முறைகேடு மின்சார வழங்கலில் நடைபெறுகிறது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ், இலவச மின்சாரத்தை வழங்கி வருகிறது அரசாங்கம். மின்சார இணைப்பும் குறிப்பிட்ட காலத்துக்கான சேவையும் இலவசமாகவே வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த இலவச இணைப்பை வழங்குவதற்கு இரகசியமாகப் பணத்தை அறவிடுகின்றனர் மின்சார சபையின் ஊழியர்கள் சிலர். இதற்கான ஒரு பொறிமுறையையே அவர்கள் மிக நுட்பமாக உருவாக்கியுள்ளனர்.

மின்சாரத்தைப் பெறுவதற்காக பயனாளிகள் விண்ணப்பிக்கும் படிவங்கள் தவறிவிட்டன. அவற்றைக் காணவில்லை என்று பயனாளிகளுக்கு முததற்கட்டமாகக் கூறப்படும். இதனால், நடையோ நடையென்றும் அலையோ அலை என்று அலைந்து களைத்து விடுகின்றனர் பயனாளிகள். ஒரு கட்டத்தில் மின்சாரத்தை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்திற்குப் பயனாளிகள் வரும்போது பேரம் பேசப்படுகிறது. அடுத்த கட்டமாக இலவச மின்சாரம் இரகசியக் கட்டணம் பெறப்பட்டு வழங்கப்படுகிறது.

இந்த நடைமுறை ஒன்றும் மிக இரகசியமானதல்ல. மிகப் பகிரங்கமான அளவுக்கு வந்துள்ளது.

இதைப்போல நீர் இறைக்கும் இயந்திரங்களை வழங்குவதில், விவசாய உபகரணங்களை பகிர்வதில், வாழ்வாதார உதவிளுக்கான பெயர்களைத் தெரிவு செய்வதில் எல்லாம் முறைகேடுகள் தாராளமாகவே நடக்கின்றன. விவசாயம் செய்யாதவர்களே நீர்ப்பம்புகள், மருந்து தெளிகருவிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். பயனாளிகளைத் தேர்வு செய்வதில் உள்ள லஞ்சம் பெறுகையே இதற்குக் காரணம்.

இதைப்போல கூட்டுறவுத்துறையில், வீட்டுத்திட்டத் தேர்வுகளில் என இந்த முறைகேடுகள் மேலும் விரிவடைகின்றன.

தனியார் பேருந்துகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குதல், தென்பகுதியிலிருந்து வரும் முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் என்ற வகையிலும் சில உயர் அதிகாரிகள் தாராளமாகவே கைகளை நீட்டிப் பெற்றுக்கொள்கிறார். சில அதிகாரிகள் சட்டத்துக்கு மாறான வகையில் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி, தங்களுடைய பேருந்துகளைப் போக்குவரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இதைப்போல வீதி அபிவிருத்திக்கும் வீதிகளின் புனரமைப்புக்கும் என ஒதுக்கப்பட்ட நிதியில் எந்த உள்ளுர் வீதிகளும் சீராகப் புனரமைக்கப்பட்டதாக இல்லை. உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தலை முன்னிட்டு அரசாங்கத்தினால் அவசர கதியில் முன்னெடுக்கப்பட்ட வீதிப் புனரமைப்புகள் தேர்தல் முடிந்த கையோடு மீண்டும் புழுதி மயமாகிவிட்டன.

அவசர அவசர அவசர அவசர அவசரகதியிலே பூசப்பட்ட தார் பெய்த மழையோடும் அடித்த காற்றோடும் காணாமலே போய்விட்டது. அதோடு பெருமளவு பணமும் காணாமற்போய்விட்டது.

இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஒப்பந்தகாரரும் அவர்களுக்கு அனுசரணையாக இருக்கும் அதிகாரிகளுமே கொழுக்கிறார்கள்.

இதை விட வீட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் தொண்டு நிறுவனப்பணியாளர்கள் கிராமங்களில் செய்கின்ற அட்டகாசங்கள் சாதாரணமானதல்ல.

வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் - கண்காணிக்கும் பணிகளில் ஈடுபடும் இவர்களிற் சிலர், தங்களிடமே கட்டிட மூலப்பொருட்களை வாங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றனர். அவ்வாறு இவர்களிடம் வாங்கவில்லை என்றால், கட்டம் கட்டமாக வழங்கப்படும் பயனாளிகளுக்கான நிதியை வழங்குவதில் இழுத்தடிப்புகளைச் செய்வதும், கட்டப்படும் வீடுகளின் கட்டுமாணப் பணிகளில் குறைபாடுகளைக் கண்டு பிடித்து நெருக்கடிக்குள்ளாக்கும் காரியங்களும் நடக்கின்றன. இது பலவந்தப்படுத்தித் தங்களுடைய வியாபாரத்தைச் செய்யும் அதிகாரமின்றி வேறென்ன?

கிராம மக்களின் அறியாமையையும் இயலாமையையும் பயன்படுத்தி இந்த மாதிரியான காரியங்களைச் செய்கின்றனர் இவர்கள்.

இப்படி ஊரையே கொள்ளையிடும் காரியங்கள் தாராளமாகவே நடக்கின்றன. சிறிய மட்டத்திலான உத்தியோகத்தர்களிற் தொடங்கி, உயர் அதிகாரிகள் வரையில் ஒரு கூட்டம் இந்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக் கொள்கிறது. தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களும் இதிற் சேர்த்தி.

போருக்குப் பிறகு, உருவாகிய சூழலில் ஒருவிதமான கட்டற்ற நிலை – தாராளவாத நிலை - வடக்கிலே அறிமுகமாகியுள்ளது. முன்னர் விடுதலைப் புலிகளுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலை இருந்தது. அல்லது புலிகள் எல்லாவற்றையும் கண்காணிப்பார்கள். குறைந்த பட்சம் அரசுக்கும் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடிருந்தது. ஆனால், அந்தக் காலத்திற்கூட புலிகளுக்கும் அரசுக்கும் சமநேரத்திலேயே தண்ணி காட்டிய அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள்.

இப்போது புலிகளே களத்தில் இல்லை என்றால் நிலைமையைச் சொல்ல வேண்டுமா? அதுவும் ஊழல்கள் மலிந்துள்ள இன்றைய இலங்கைச் சூழலில் சிறிய இடைவெளி போதும் பெரிய மலைகளையே தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள்.

வன்னி மக்கள் மயிரிழையில் உயிர் தப்பி – தப்பிய அந்த உயிரை மட்டுமே கொண்டு முகாம்களுக்குப் போனதிலிருந்து தொடங்கியது இந்த இரத்தத்தை உறிஞ்சும் காரியங்கள். அல்லது மலைகளைக் காவிக்கொண்டு போகும் விசயங்கள்.

அகதிகளுக்கென்று வரும் உடைகளில், அவர்களுக்கான தண்ணீரில், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய சாப்பாட்டில், அகதிகளுக்கென்று கொடுக்கப்படும் உதவிப் பொருட்களில், அவர்களுக்கான உணவுப் பொருட்களில் என்று இந்தக் ‘கை வைப்புகள்’ ஆரம்பமாகின.

சனங்களையும் அரசாங்கத்தையும் சமநேரத்தில் உறிஞ்சும் ‘சுழியன்கள்’ இந்தச் சந்தர்ப்பத்தில் மிக உச்சமாகத் தங்களின் கைத்திறனைக் காட்டினார்கள்.

மெனிக் பாமில் உழைத்தவர்கள் - மெனிக் பாமின் பேரில் (வன்னி அகதிகளின் மிகப் பெரிய அகதி முகாம் இங்கேதான் இருந்தது) உழைத்தவர்கள் என்றொரு பெரும் பட்டியலே இன்று உண்டு. அந்தளவுக்குத் தாராளமாக அங்கே, அப்போது உழைத்தார்கள்.

போரிலே உழைத்தவர்கள் பலருண்டு. ஆயுதக் கொள்வனவு தொடக்கம் அகதிகளுக்கான உதவிப்பொருட்களின் வழங்கல்வரை ஏராளம் வழிகளில் தங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டவர்கள் பலர்.

போருக்குப் பிறகு இன்னொரு சூழல் உருவாகிய போது அதில் இன்னொரு சாரார் உழைக்கத்தொடங்கியிருக்கின்றனர். ஆனால், இது எல்லாற்றையும் இழந்திருக்கும் மக்களின் கண்ணீரிலிருந்து - அவர்களடைந்திருக்கும் காயங்களிலிருந்து உறிஞ்சிக்கொள்ளும் காரியங்கள்.

புலிகளின் வீழ்ச்சியோடு ஆரம்பமாகிய இந்த இரத்தத்தை உறிஞ்சும் போக்கானது, அடுத்து வந்த நாட்களில் மிக வேகமாக வளர்சியடைந்து இன்று அது எல்லா இடங்களிலும் மிகப் பயங்கரமான ஒரு வியாதியாகப் பரவியுள்ளது.

இதனால் வன்னியே இப்போது ஊழலின், லஞ்சம் வாங்கிகளின் பெரும் பரப்பினால் நிறைந்துள்ளது என்ற நிலைக்காளாகியுள்ளது. மீள்குடியேற்றத்தின்போது தொடங்கியது இந்தக் கேள்விக்கிடமற்ற போக்கு.

போர் முடிந்த பின்னர் வெறுமையாக இருந்த வன்னியில் மக்களுடைய சொத்துகளும் புலிகளின் உடமைகளும் அரச உரித்துகளும் தாராளமாகவே எங்கும் இருந்தன. இதில் படையினர் தமக்குத் தேவையானவற்றை முதலில் எடுத்தனர்.

பிறகு, மீள் குடியேற்ற நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக வன்னிக்கு வருகை தந்த அதிகாரிகளிற் சிலரும் அவர்களோடு இணைந்து வேலை செய்த உத்தியோகத்தர்களிற் பலரும் எடுக்கக் கூடியவற்றை எடுத்துக் கொண்டனர். குறிப்பாக புலிகளின் கட்டிடங்களைக்கூடப் பல அதிகாரிகள் உடைத்து எடுத்துக் கொண்ட சம்பவங்கள் நடந்தன. சிதைந்திருக்கும் அரச கட்டிடங்களைப் புனரமைப்பதற்கு என்று படையினரிடம் கூறி இந்தக் காரியங்களைப் பார்த்துக்கொண்டனர் இவர்கள்.

அதற்குப் பிறகு மக்களுக்குக் கொடுக்கப்பட்ட சீமெந்தில், தகரத்தில், பெட்சீற்றில், பாயில் என்று தொடங்கி, இப்போது மில்லியன் கணக்கிலான நிதியில் கையை வைத்துப் பையை நிரப்பிக்கொள்ளும் நிலைக்கு இது வளர்ந்துள்ளது.

இதைத் தடுப்பதற்கு உள்ள ஒரேயொரு வழி மக்கள் விழிப்படைவது மட்டுமே. அந்த விழிப்பை ஏற்படுத்துவதில் பெரும்பங்கு ஊடகங்களுக்கும் சமூக சிந்தனையுடையோருக்குமே உண்டு.

தேசியவாத – எதிர்த்தேசிய வாத அரசியலின் குருட்டுத்தனங்கள் எல்லாச் சீரழிவுக்கும் கதவுகளைத் திறந்துள்ளன என்பதே கவலைக்குரியது.

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB