கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

இலங்கை மீதான மேற்கின் சமகால அழுத்தங்கள்?

Saturday 25 February 2012





00


‘சிங்கங்கள் கர்ச்சிக்கலாம். ஆனால், குகையின் வாசல் மூடப்படாதிருக்க வேண்டும்’ 

நிலைமைகள் ஒரு திலூட்டும் திரைப்படத்தைப் பார்ப்பதைப்போல புதிர்த்தன்மைகள் நிறைந்தனவாகவே உள்ளன. 

00




இலங்கையின் கீர்த்திக்கும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் ஒரு நெருக்கடி நிலை – ஆபத்தான கண்டம் - உருவாகிக் கொண்டிருப்பதான தோற்றம் ஒன்றுண்டு.

மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய ஒரு நிலைமையை நோக்கி, இலங்கை அரசாங்கத்தைக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா தலைமையிலான அணி எடுத்து வரும் முயற்சிகளே மேற்கூறிய நெருக்கடிக்குக் காரணம்.

அமெரிக்க அணி எதற்காக இந்தத் தீவிர அழுத்தத்தை இலங்கைக்கு – மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்குக் கொடுக்கிறது என்று எல்லோருக்குமே தெரியும்.

இலங்கையைத் தனது காலுக்குக் கீழே கொண்டு வருவதே இதன் நோக்கம்.

ராஜபக்ஷ அரசாங்கம் அதிகம் மேற்கிலிருந்து விலகி, சீனா, ஈரான், பாகிஸ்தான், கியூபா, சிரியா, லிபியா, ரஷ்யா மற்றும் இந்தியா சார்பான அணியைத் தன்னுடைய உறவிலும் நெருக்கத்திலும் கொண்டது.

மகிந்த ராஜபக்ஷ பதவியேற்றதற்குப் பிறகு இந்த நாடுகளுடன் அவர் கொண்டுள்ள, காட்டிக் கொண்ட உறவைத் தொடர்ச்சியாக அவதானித்தவர்கள் இதை இலகுவாகவே விளங்கிக் கொள்ள முடியும்.

குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளே அதிகமான முதலீடுகளையும் உதவித்திட்டங்களையும் அண்மைய காலத்தில் இலங்கையில் மேற்கொண்டுள்ளன.

வர்த்தகம்,  தொழிற்றுறை, பாதுகாப்பு போன்ற விசயங்களில் அதிகமான உடன்படிக்கைகளைக் கைச்சாத்திட்டிருக்கும் தரப்புகளும் சமகால இலங்கையில் இந்த அணியே.

யுத்தத்துக்குப் பிறகு இந்தப் போக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா தலைமையிலான மேற்கின் அணி ஏறக்குறைய பின்தள்ளப்பட்டிருப்பது போன்றதொரு நிலையே காணப்படுகிறது. இதை இந்த அணி நன்றாகவே உணர்ந்துமுள்ளது.

ஆனால், இதை இந்த அணியினால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவேதான் அது இலங்கையில் தனக்கு வாய்ப்பான ஒரு தரப்பை ஆட்சியில் அமர்த்த முயன்றது.

அதற்கான தெரிவே முன்னாள் ராணுவத்தளபதியான சரத் பொன்சேகா.

மகிந்த ராஜபக்ஷ ஒரு போதுமே மேற்குக்குச் சார்பாக வரமாட்டார் என்று தெரிந்து கொண்ட மேற்கு சரத்தைத் தெரிவு செய்தது. சரத்தை விட வேறு கவர்ச்சிகரமான தெரிவுகள் இல்லாத நிலையிலேயே மேற்கு இந்த முடிவுக்கு வந்தது. ரணில் மேற்கின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடிய கவர்ச்சிகரமான தலைவர் என்ற தகுதியை இழந்து விட்டார். யு.என்.பியில் வேறு தெரிவுகளும் இல்லை. எனவேதான் சரத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கையின் அரசியலானது உணர்ச்சி மயப்பட்டது. அது உணர்ச்சியின் மையத்திலேயே கட்டப்பட்டது. யுத்தத்தின் வெற்றியை அரசியல் முதலீடாக்கும் ஒரு அணுகுமுறையை மகிந்த ராஜபக்ஷ கையாண்டபோது அதற்குப் பொருத்தமான – மாற்றான - அந்த உணர்ச்சிக்குச் சமனிலை வலுவைப் பெறக்கூடிய தெரிவாக சரத் பொன்சேகாவே இருந்தார்.

இதைப் புரிந்து கொண்ட மேற்குலகம் யுத்த வெற்றியில் பங்காளியும் யுத்தக் கதாநாயகர்களில் ஒருவருமாகிய சரத் பொன்சேகாவை தெரிவு செய்தது.

ஆனால், மேற்கு எதிர்பார்த்தவாறு சரத்தை வெற்றி பெறவைக்க முடியவில்லை. சரத்தும் தன்னுடைய வெற்றிக்கான தகுதியை நிரூபிக்கவில்லை.

எனவே வெற்றியடைந்த மகிந்த ராஜபக்ஷ மேற்கை மேலும் விலக்கினார். அவருக்கு எதிராகவே உள்வீட்டிலிருந்து ஒருவரை உருவியெடுத்த அமெரிக்காவின் தந்திரத்தை அவரால் எப்படி மன்னிக்க முடியும்? எப்படி மறக்க முடியும்?

ஆனால், யுத்தத்தை நடத்துவதற்கான மைய உதவிகளைச் செய்த அமெரிக்கா, இப்போது யுத்த வெற்றியைப் பெற்ற பின்னர் இலங்கையானது தன்னைக் கைகழுவி விடுவதை அனுமதிக்கத் தயாராக இல்லை. அது தனது நலன்களை விட்டுக்கொடுக்கவும் முடியாது.

எனவே அது தொடர்ந்து மகிந்த ராஜபக்ஷவை நெருக்கடிக்குள்ளாக்கத் தொடங்கியிருக்கிறது. இதற்காக அது போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் அடுத்த ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. மேலும் அமெரிக்க உதவிக்குறைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகள் இடைநிறுத்தம், ஜி.எஸ்.பி வரிச்சலுகை நீக்கம் என்ற வாறான நெருக்கடிகளையும் அது ஏற்படுத்தியிருக்கிறது.

இதன்படி இலங்கைக்கு எதிரான மனப்பாங்கொன்றை அது சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கூடாகவும் சக்தி மிக்க ஊடகங்களில் வழியாகவும் உருவாக்கி வருகிறது.

இத்தகைய அமெரிக்;க அணுகுமுறையானது அமெரிக்காவுக்குப் பணியாத நாடுகளைப் பணிய வைப்பதற்கான வாய்பாடாகவும் உபாயமாகவும் உள்ளதை நாம் கவனிக்கலாம். இதற்கு நேற்றுவரை நிறைய உதாரணங்கள் உண்டு.

அதேவேளை இந்த அணுகுமுறைக்கு வாய்ப்பை அளிக்கும் விதமாகவே அமெரிக்காவினால் நெருக்கடிக்குள்ளாகும் நாடுகளின் விவகாரங்கள் அமைந்து விடுவதையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் இலங்கையும் அடக்கம்.

உள் வீட்டைச் சுத்தமாக வைத்திருந்தால் எத்தகைய வெளிச்சக்திகளுக்கும் சட்டங்களுக்கும் பணிய வேண்டியதில்லை. எந்த நடவடிக்கைக்கும் இடமளிக்கத்தேவையில்லை என்பது சாதாரண நடைமுறை வாழ்விலேயே தெரிகின்ற உண்மை.

ஆனால், இந்த உண்மையைப் பெரும்பாலான அரசியற் தலைவர்களும் அவர்களுக்கான ஆலோசகர்களும் வழிகாட்டிகளும் மறந்து விடுகிறார்கள். அல்லது நினைவிற்கொள்வதற்கு விரும்பாதிருக்கிறார்கள்.

இத்தகைய ஒரு நிலைதான் இன்றைய இலங்கையின் நிலவரமாகவும் இருக்கிறது.

எனவேதான் அது இன்று அமெரிக்கா இலங்கையைச் சுற்றித் தனது கயிற்றை இருக்குகிறது.

‘சிங்கங்கள் இதற்கெதிராகக் கர்ச்சிக்கலாம். ஆனால், குகையின் வாசல் மூடப்படாதிருக்க வேண்டும்’ என்று அவை சிந்திக்கவும் வேணும்.

எனவே முடிந்த வரையில் வாசல்களை மூடுவதைப் போன்ற ஒரு இறுக்க நிலையை ஏற்படுத்த இப்பொழுது இந்த மேற்கணி விரும்புகிறது.

இதேவேளை இலங்கை தொடர்பான விசயத்தில் அமெரிக்கா இந்தக் காலப்பகுதியில் நிறையப் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறது. தன்னுடைய விருப்பங்களை இலகுவில் நிறைவேற்றிக் கொள்ள முடியாத ஒரு நிலையிலான பின்னடைவு.

இதைச் சரிக்கட்ட அது சரத் பொன்சேகாவைக் களத்தில் இறக்கியதைப்போல இப்போது போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் கருவியாக்கியிருக்கிறது என்று கண்டோம்.

ஆனால், அமெரிக்காவின் இந்த அணுகுமுறையானது உண்மையில் இலங்கைக்கான நெருக்கடி என்பதையும் விட இந்தியாவிற்கான நெருக்கடியாக அமைகிறது என்பதே இங்கே கவனிப்பிற்குரியது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கை மேற்கின் பக்கம் சாய்வதை அது பெரிதாக விரும்பவில்லை. மேற்கின் பக்கம் இலங்கை சாயுமாக இருந்தால் இந்தியாவிற்கான பிடியோ செல்வாக்கோ இலங்கையில் இப்போதைக்கு இருக்காது என்பது இந்தியாவுக்குத் தெரியும்.

இலங்கையில் மகிந்த ராஜபக்ஷவுக்குப் பதிலாக ரணிலோ சரத்தோ அல்லது மேற்குக்கு விருப்பமான பிரதிநிதியொருவரோ ஆட்சிக்கு வந்தால், சிங்களத்தரப்பும் மேற்குக்குச் சார்பாகிவிடும். தமிழர்களும் மேற்கோடு சார்ந்திருப்பார்கள். ஆகவே இந்தியா தனிமைப்பட்டு விடும். எனவே விருப்பங்களுக்கும் உடன்பாடின்மைகளுக்கும் அப்பால் மகிந்த ராஜபக்ஷ அரசைப் பாதுகாப்பமே இந்தியாவுக்கு இப்போதைக்குப் பரவாயில்லை என்ற நிலை.

இதற்குக் காரணம், தென்னாசியப்பிராந்தியத்தில் இலங்கை என்ற கேந்திரத்தின் முக்கியத்துவத்தை இந்தியா இழந்து விடக்கூடிய அபாயமே அதனுடைய அச்சம்.

சீனாவுடன் ராஜபக்ஷ அரசு நெருக்கமாக இருந்தாலும் அது தனக்கு அதிக பாதிப்பைத் தராது என்று இந்தியா கருதுகிறது. இதற்குள் தன்னுடைய நலன்கள் பாதிக்கப்படாத ஒரு சமனிலையைத் தக்க வைத்துக் கொள்ளமுடியும் என்பது இந்தியாவின் நம்பிக்கை. அப்படியே அது தற்போதும் செயற்பட்டு வருகிறது.

அதாவது, இப்போதுள்ள நிலையின்படி சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இலங்கை கடைப்பிடித்து வரும் ஒரு நிலையைப் பேணிக் கொண்டால் பரவாயில்லை என்ற நிலை இந்தியாவுக்குண்டு. இலங்கையில் மேற்குச்  செல்வாக்குச் செலுத்துவதையும் விட சீனாவின் செல்வாக்குப் பரவாயில்லை என்றே இந்தியா கருதுகிறது.

இதற்குக் காரணம், மேற்குக்கு ஆதரவான சக்திகள் இலங்கையின் உள்ளே மிகச் சாதாரண மட்டங்களில் எல்லாம் உள்ளன. அதேவேளை சீனாவுக்குச் சார்பாக அவ்வாறான சக்திகள் இல்லை என்பது இந்தியாவின் அவதானிப்பு.

எனவே இந்த ஒப்பு நிலையில் மேற்கின் கை மேலோங்குவதை இந்தியா அதிகம் விரும்பவில்லை. எனவேதான் இலங்கையின் மீதான நெருக்கடிகளை இந்தியா அதிகம் விரும்பாமற் தடுக்கிறது. அப்படி ஒரு நெருக்கடி வருமானால் அது தனக்கு வரும் நெருக்கடி என்றே இந்தியா கருதுகிறது.

இந்த யதார்த்தத்திற்குள்தான் இன்றைய இலங்கை மீதான போர்க்குற்றச் சாட்டுகளும் பிற எதிர் நடவடிக்கைகளும் அமையப்போகின்றன.

ஆகவே இலங்கை மீதான போர்க்குற்றச் சாட்டுகளையும் நெருக்கடிகளையும் இந்தியா தானும் எதிர்க்க வேண்டிய, முறியடிக்க வேண்டிய ஒரு நிலையில் உள்ளது. இதே நிலை சீனாவுக்கும் உண்டு. மேலும் இலங்கையின் நட்பு வளையத்தில் இன்றிருக்கும் பிற நாடுகளுக்கும் உண்டு. ஆனால், ஏனைய நாடுகளின் நிலை இந்தியாவையும் விட அழுத்தம் குறைந்தவை.

ஆகவே, இலங்கையின் மீதான நெருக்கடி என்பது இன்று இந்தியாவின் மீதான நெருக்கடியாக மாறியிருக்கிறது. இந்த நிலையிற்தான் போர்க்குற்றம் தொடர்பான நடவடிக்கைகள் அமையப்போகின்றன.

ஆனால், இந்தியாவை நேரடியாகப் பகைத்துக் கொள்ளாமல், இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்குவதன் மூலம் தென்னாசியப் பிராந்தியத்தில் பலவீனமடைந்திருக்கும் தன்னுடைய செல்வாக்கை மீண்டும் பலப்படுத்துவதற்கு மேற்கு – அமெரிக்க அணி – முயற்சிக்கிறது.

ஆகவேதான் இலங்கையின் மீதான நெருக்கடிகள் மேலும் மேலும் தீவிரமடைந்து வரும் தோற்றம் பெரிதாக்கப்படுகிறது. இந்த மாதிரி நிலைமைகளில் சர்வதேச அபிப்பிராயம் என்ற ஒரு தோற்றமே பெரிதும் எதையம் தீர்மானிப்பது. ஆகவே, இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் என்ற அபிப்பிராயம் பொதுமைப்படுத்தப்படும்போது அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது சற்றுச் சிந்திக்கக் கூடியதே.

ஆனால், சிங்கள இராச தந்திரமானது, இந்த இடத்தில் மிக நுட்பமாகச் செயற்படக்கூடியது. அது அதிக சாகசங்களைக் காண்பித்து விட்டு, தீடீரெனச் சாதுவாகி விடும் ஒரு இயல்பைத் தன்னகத்திலே கொண்டது.

ஏறக்குறைய இப்போது இலங்கைக்கு மேற்கிலிருந்து ஏற்பட்டுள்ள நெருக்கடியைப்போல 1980 களில் இந்தியாவினால் ஏற்பட்டிருந்தது. 1987 இல் வெளிப்படையாகவே இந்தியா தன்னுடைய கயிற்றால் இலங்கையை இறுக்கியது.

அப்பொழுது தமிழர்கள் உட்படப் பலரும் சிங்கள அரசியலைக் குறித்து சிரித்துக்கொண்டேயிருந்தனர். அன்று அதிகாரத்திலிருந்த ஜே.ஆரின் மூக்குடைபடுகிறது என்றே பலரும் கருதினர்.

ஆனால், அந்த நெருக்கடியிலிருந்து குறுகிய காலத்திலேயே மீண்ட இலங்கை – சிங்கள அரசியல் - தனக்குச் சேதாரங்களில்லாமல் பிற தரப்புக்கான சேதாரங்களையே ஏற்படுத்தியது.

இதில் இந்தியா ராஜீவ் காந்தியையும் பல நூறு படையினரையும் பெருமளவு நிதியையும் இழந்தது. தமிழர்களின் இழப்புக்குக் கணக்கில்லை.

பின்னர், இலங்கைக்குச் சேவகம் செய்யும் நிலையில் இன்றுவரை இந்தியாவைக் கொண்டு வந்து நிறுத்தியது சிங்கள இரசதந்திரம்.

ஆகவே, இப்போதைய நெருக்கடி நிலையிலும் அது எத்தகைய தீர்மானங்களை எடுக்கும். எப்படியான காய்களை நகர்த்தும் என்று யாருக்குமே தெரியாது. அது எப்போதும் நேரடியான பகை முரணுக்குப் போவதில்லை. தன்னை மீறக்கூடிய சக்திகளுடன் அது ஒரு போதுமே நேரடியாக மோதிக் கொள்வதில்லை. ஆகையால் அடுத்து வரும் நாட்கள் எப்படியான அணுகுமுறைகள், காய் நகர்த்தல்களின் மத்தியில் நகரப்போகின்றன என்பதை அறிவதே உலகிலுள்ள அரசியல் அவதானிப்பாளர்களுக்குச் சுவாரஷ்யமான விசயம்.

ஆனால், நிலைமைகள் ஒரு திலூட்டும் திரைப்படத்தைப் பார்ப்பதைப்போல புதிர்த்தன்மைகள் நிறைந்தனவாகவே உள்ளன.

உண்மையில் இந்த நிலையானது கம்பியின் மேல் நடப்பதைப்போன்றதே. தவறினால், கீழேயிருக்கும் கத்தியின்மேல் வீழ்வதற்குச் சமம்.

இதேவேளை இன்னொரு முக்கியமான விசயத்தையும் நாம் கணக்கிற் கொள்ள வேண்டியுள்ளது.

போர்க்குற்றங்களை வலுவாக்கக் கோரும்போது அதையிட்டுச் சிங்களவர்கள் தமிழர்களைப் பகையாளிகளாவே பார்க்கும் ஒரு யதார்த்தம் உண்டு. அதேவேளை போர்க்குற்றங்களைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாத நிலை தமிழர்களுக்குண்டு.

எனவே இப்பொழுது நெருக்கடிக்குள் சிக்கியிருப்பது தமிழ் மக்கள், இலங்கை அரசு, இந்தியா ஆகிய மூன்று தரப்புகளே!

ஆனால், இருப்பக்க நெருக்கடிக்குள் தமிழ்த்தரப்பு இன்று சிக்கியுள்ளது. ஒன்று இந்தியாவை அது எப்படி முகங்கொள்வது என்பது. இரண்டாவது, வெளிச்சக்திகளுடன் கைகோர்த்து விட்டு எப்படிச் சிங்களவர்களுடன் சமாதானத்துக்குப்போவதென்பது.

அNவேளை இது சிங்களத்தரப்புக்கு உடனடி நெருக்கடிக் காலமாகவும் நீண்ட கால அடிப்படையில் அவர்கள் பிராந்திய நாடுகளையும் சர்வதேச நாடுகளையும் மோதவிட்டுவிட்டுத் தங்களின் நலன்களைப்பாதுகாத்துக் கொள்வதாகவும் அமையப்போகிறது.

எப்படிப் பார்த்தாலும் தமிழர்களுக்கே நீண்ட கால அடிப்படையில் இது நெருக்கடியாக அமையப்போகிறது.

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB