கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

இலங்கையில் இந்தியாவும் சீனாவும்

Sunday 5 February 2012


















இலங்கையில் இந்தியா. இலங்கையில் இன்று இந்தியா. இலங்கையில் சீனா. இலங்கையில் இன்று சீனா. இலங்கையில் (இன்று) இந்தியாவும் சீனாவும்.

இவற்றைத் தனித்தனியாக ஆராய்ந்து பார்த்தால், இலங்கையின் உள்நாட்டு அரசியலையும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையையும் இலங்கை தொடர்பான சர்வதேச நாடுகளின் வெளியுறவுக்கொள்கைகளையும் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும்.

இதன்மூலம் இலங்கையின் சமகால அரசியலைக் குறித்த விளக்கத்தைப் பெறலாம். மேலும் தமிழ்பேசும் மக்களின் அரசியற் பிரச்சினைகளுக்கான தீர்வைக் குறித்தும் அறிந்து கொள்ள முடியும். இதன் அடிப்படையில் முதலில் நாம் இலங்கையில் இந்தியா, இலங்கையில் இன்று இந்தியா என்பதைப் பார்க்கலாம்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பிற தொடர்புகள், உறவுகள் எல்லாம் நீண்ட பாரம்பரியத்தை உடையவை. உலகின் வேறெந்த நாடுகளுடனும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவத்தையும் நீண்ட தொடர்ச்சியையும் உடையது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்த உறவும் தொடர்பும்.

இந்தப் பிராந்தியத்தை ஐரோப்பியர் ஆட்சி செய்த காலத்திலும்கூட இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மானசீகமான ஒரு உணர்வோட்டம் நெருக்கமாகவே இருந்துள்ளது.

ஆனால், கடந்த நூற்றாண்டில் உலக அரங்கில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நிகழ்ச்சிகளின் விளைவாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அதிகார நிகழ்ச்சி நிரல் ஒரு புதிய வடிவத்தை எடுத்தது.

இது இந்தப் பிராந்தியத்தில் நிலவிய அந்நியர் ஆட்சிக்காலத்தின் நிகழ்ச்சி நிரலையும் அதற்கு முன்னர் தொன்மைக் காலத்தில் நிலவிய நிகழ்ச்சி நிரலையும் விட வேறு பட்டிருந்தது.

உலக அரங்கில் ஏற்பட்ட அதிகார வலுப்போட்டிகள், பூமிப்பந்தை வேறு விதமாக வகைப்படுத்தியிருந்தன. இதன் தாக்கத்தை இந்து சமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இந்தியா ஆகிய நாடுகளும் எதிர்கொண்டன. அல்லது இந்த வகைப்படுத்தல் விசையில் இந்த நாடுகளும் உள்ளீர்த்துக்கொள்ளப்பட்டன. ஆகவே, இந்த விசைக்கமையவே இலங்கையின் வெளியுறவுக்கொள்கையும் உள்நாட்டரசியலும் பெருமளவுக்கும் அமைந்தது. அவ்வாறே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் அதனுடைய உள்நாட்டரசியலும் அமைந்தது. மட்டுமல்ல, இலங்கை - இந்திய உறவும் அவற்றின் நிகழ்ச்சி நிரலும் கூட இந்த அடிப்படையிலேயே நிகழ்ந்தது.

இதை மேலும் விளங்கிக் கொள்வதானால், சுதந்திரத்துக்குப் பின்னர், இலங்கையில் ஏற்பட்ட அரசியற் தலைமைகளின் போக்குகளுக்கும் கொள்கைகளுக்கும் ஏற்ப இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட்டது. அல்லது அமைந்தது எனலாம்.

ஐ.தே.க ஆட்சிக்கு வரும்போது அது மேற்குலகைச் சார்ந்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வரும்போது ஆசிய மண்டலத்தைச் சார்ந்தும் நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட்டது. என்றபோதும் இந்தியாவுடனான உறவை இலங்கை பகை நிலைக்குக் கொண்டு சென்றதில்லை.

ஆனால், இந்தியா இலங்கையை ஒரே விதமாக நோக்கவில்லை. குறிப்பாக இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் அல்லது இலங்கையில் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் காலத்தில் (1977 க்குப் பின்னர்) இருந்து இந்தியா சற்றுக் கடினமான ஒரு நிலைப்பாட்டை இலங்கை தொடர்பாக எடுத்தது. 1990 வரையில் இந்தக் கடினப் போக்கு நிலவியது.

ஜே.ஆர். வெளிப்படையாகவும் சற்றுத் தூக்கலாகவும் மேற்கைச் சார்ந்து இயங்கினார். அன்று நிலவிய பனிப்போர்க் கால அரசியலில் - இரு துருவ அரசியலில் - ஜே.ஆரின் இத்தகைய நிலைப்பாடு இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

ஆகவே, இந்தியா – அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் அணுகுமுறை - இலங்கையின் உள்நாட்டரசியலில் ஒரு தீர்மானகரமான சக்தியாக மாறியது.

இன்றுவரை இந்தியா தன்னுடைய இந்தப் பிடியைத் தளர்த்தவேயில்லை. அது தனக்கேற்றவாறு தமிழர்களையும் சிங்களவர்களையும் கையாள்கிறது. அல்லது இனமுரண்பாட்டைக் கையாள்கிறது. அல்லது இலங்கையின் உள்நாட்டு முரண்களைப் பயன்படுத்திக் கொள்கிறது.

இதன்விளைவாக இந்தியா இன்று இலங்கையில் அரசியல் ரீதியாக நேரடித் தன்மைவாய்ந்த ஒரு முக்கிய தலையீட்டைச் செய்கிறது. மட்டுமல்ல, உள்முரண்பாடுகளின் விளைவாக அழிவடைந்திருக்கும் இலங்கையில் பொருளாதாரப் பிரச்சினைகளின் - பலவீனங்களின் - வழியே அது முதலீடுகளையும் செய்கிறது.

இலங்கையின் சந்தையை இந்திய உற்பத்திகளே பெருமளவுக்கும் நிறைக்கின்ற ஒரு நிலையை இந்த முப்பது ஆண்டுகாலத்துக்குள் இந்தியா பெற்றுள்ளது. இன்னும் இதைச் சற்று விளக்கமாகச் சொல்வதாயின், இந்தியாவை விட்டு விலகி மேற்குலகைச் சார்ந்த ஜே.ஆரின் அணுகுமுறை ஒருவாக்கிய விளைவே இதுவாகும்.

ஆகவே, இன்று இந்தியா இந்தப் பின்னணியினூடாக இலங்கையில் செல்வாக்குச் செலுத்தும் ஒரு வலுவான சக்தியாக மாறியுள்ளது.

இதேவேளை இதன் மீதியாக, இன்றுள்ள சர்வதேச அரசியல் இந்தியாவை மேலும் இலங்கையில் தலையிடவும் ஆதிக்கம் செலுத்தவும் வைக்கிறது.

இலங்கையில் இந்தியாவுக்குப் போட்டியாகச் சீனா மாறியிருக்கும் சூழல் இந்தியாவுக்குப் பெரும் பிரச்சினை. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும் பாத்திரத்தையும் கேள்விக்குள்ளாக்கும் ஒரு நடவடிக்கையைச் சீனா முன்னெடுத்து வருகிறது. இதை இந்தியாவினால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. எனவே அது இலங்கையை பிறர் தட்டிப்பறித்து விடக்கூடாது என்பதற்காக அழுத்திப் பிடிக்கிறது. இவ்வாறு இலங்கை என்ற குழந்தையை இந்தியா அழுத்திப்பிடிக்கப் பிடிக்க குழந்தைக்கே பாதிப்பு அதிகமாகிறது.

இலங்கை என்ற குழந்தையை யார் சொந்தம் கொண்டாடுவது என்ற ஒரு நிலையில் இந்தியாவும் சீனாவும் இன்றுள்ளன.

இலங்கை இந்தியாவுக்குப் பதிலாக வெளியே செல்லச் செல்ல இந்தியாவின் பிடி மேலும் அழுத்தமாகும். ஆனால், இப்போது மேற்குலகின் பக்கம் இலங்கை சாய்ந்தால் இந்தியா முன்னரைப்போல அதிக அழுத்தத்தைக் கொடுக்காது. அப்படி அதனால் மேற்குலகத்துக்கு எதிராகச் செயற்படவும் முடியாது. இப்போது மேற்கின் கூட்டாளியான ஒரு பாத்திரத்தையும் ஒரு எல்லைவரையில் இந்தியா கொண்டுள்ளதே இதற்குக் காரணமாகும்.

ஆனால், இப்போது இந்தியாவின் ஆதிக்கத்தைச் சமனிலைப்படுத்த சீனாவுடனான உறவையும் தொடர்புகளையும் இலங்கை கையாள்கிறது. சீனாவின் பக்கம் இலங்கை அதிக சாய்வைக் கொள்ளுமானால் இந்தியாவின் பிடி நிச்சயமாக அழுத்தம் பெறும். (இதை மிக நன்றாக உணர்ந்துள்ளது சிங்களத்தரப்பு அல்லது மகிந்த ராஜபக்ஷ அரசு).

ஆகவே, இந்தியா இன்று சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் அவசியத்திலும் மேற்குலகின் அசைவைச் சமனிலைப்படுத்துவதிலும் தன்னுடைய சந்தையை வலுப்படுத்துவதிலும் என்ற முக்கோண அணுகுமுறையில் இலங்கையில் தன்னுடைய செயற்களத்தை விரித்துள்ளது.

இதன் அடிப்படையிலேயே இந்தியத் தலைவர்கள், பிரதானிகளின் வருகைகள் அமைகின்றன. உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படுகின்றன. இலங்கையின் உள்நாட்டரசியல் பற்றிய கேள்விகளை இந்தியா எழுப்பும் அளவுக்கு இலங்கையின் நிலையும் இந்தியாவின் செல்வாக்கும் உள்ளது. இதன் விளைவு இன்று இந்தியாவைக் கடந்து எதையும் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

இனி நாம் இலங்கையில் சீனா, இலங்கையில் இன்று சீனா என்பதைப் பார்க்கலாம். இலங்கையில் சீனா என்றால், வரலாற்றில் சீனாவுக்கும் இலங்கைக்குமான தொடர்புகளைப் பற்றியும் அதன் வழியான செல்வாக்கு மண்டலத்தைப் பற்றியும் பார்ப்பதாகும்.

சீனாவிலும் பௌத்தம் முதன்மை மதம். இலங்கையிலும் பௌத்தமே முதன்மையான மதம். ஆனால், இரண்டு பௌத்தங்களுக்குமிடையில் வேறுபாடுகள் உண்டு. என்றபோதும் இலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் நீண்டகாலத் தொடர்ச்சியான உறவுண்டு. ஆனால், அது இந்தியாவைப் போல நெருக்கமும் பண்பாட்டு ஒற்றுமைகளும் கொண்டதல்ல.

சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையில் சீனாவுக்கும் இலங்கைக்கும் செழிப்பான உறவெழுச்சியுடைய காலமாக இருந்தது சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்திலேயாகும். ஐ.தே.க கடைப்பிடித்த மேற்குச் சார்பை மாற்றிச் சீனாவுடன் நெருக்கத்தைக் கொண்டார் சிறிமாவோ.

பிறகு மீண்டும் ஐ.தே.க ஆட்சியைக் கைப்பற்றி மேற்குக்குச் சார்பாக இலங்கையை நகர்த்தினாலும் பின்னர் நாட்டில் நிலவிய யுத்தம் சீனாவை நோக்கித் திரும்ப வேண்டிய நிலைக்குள்ளாக்கியது. இன்று சீனா இலங்கையில் தீவிரமாகச் செல்வாக்கைச் செலுத்தும் நாடாக மாறியுள்ளது.

ஆனால், இதைச் சீனா மிக நுட்பமாகச் செய்கிறது. இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களிலோ வேறு விசயங்களிலோ தான் சம்மந்தப்பட்டுக்கொள்ளாமல் தூர நிற்பதைப்போன்ற ஒரு தோற்றத்தைக் காண்பித்துக் கொண்டு தன்னுடைய கால்களை மிக நிதானமாக உள்ளே வைத்துக்கொண்டிருக்கிறது.

இந்தியத் தலைவர்களின் வருகைகளைப் போல, அமெரிக்கத் தரப்பின் விஜயங்கள், அறிவிப்புகளைப் போல சீனப் பிரதிநிதிகளும் தலைவர்களும் இலங்கைக்கு அடிக்கடி படையெடுப்பதும் இல்லை@ விஜயங்களைச் செய்வதும் இல்லை@ அறிவிப்புகளை விடுப்பதும் இல்லை.

அபூர்வமாகச் சிலவேளைகளில் இலங்கைக்கு வரும் சீனத்தலைவர்களோ பிரதானிகளோ இலங்கையின் அரசியற் தலைவர்களையும் கட்சிகளையும் சந்திப்பதில்லை. மேலும் இலங்கையின் அரசியலைப் பற்றி வாய் திறப்பதும் இல்லை. அறிக்கைகள் விடுவதும் இல்லை.

ஆனால், சீன முதலீடுகளும் உதவிகளும் சீனப் பொருட்களுக்கான சந்தையும் இலங்கையில் தாராளமாகியுள்ளன.

இதேவேளை, சீனா இலங்கையை இந்தியாவிடமிருந்தும் மேற்குலகத்திடமிருந்தும் நகர்த்தி தனக்கும் பொதுவான முக்கோணத்தன்மையுடைய ஒரு பொது – சமநிலை அரங்கில் நிறுத்தியுள்ளது.

ஆகவே, இன்று சீனா இலங்கையின் நிராகரிக்கவே முடியாத ஒரு பாத்திரமாகத் தன்னை நிலைப்படுத்தியுள்ளது.

சீனாவின் இத்தகைய நிலைப்படுத்தலைச் சமாளிப்பதற்கும் இதைச் சிதைப்பதற்கும் இந்தியா நிச்சயமாக இலங்கையின் உள்விவகாரங்களையே நிச்சயமாகக் கையாளும். இதையே நாம் முன்னரும் பார்த்திருக்கிறோம்.

எனவே, இன்று இலங்கையில் இந்த இரண்டு நாடுகளின் ஆதிக்கப்போட்டி பகிரங்கமாக நடைபெற்று வருகின்றது. இரண்டு யானைகள் மோதும்போது செடிகளே சேதமடைவது என்று சொல்வார்கள். ஏறக்குறைய அத்தகைய ஒரு நிலையே இந்தப் பிராந்திய நாடுகளுக்கிடையிலான பிராந்திய ஆதிப்போட்டியாகி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்தப் போட்டியில் - அல்லது இந்த மோதுகையில் எப்படி இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மையும் பொருளாதார மேம்பாடுகளும் அமைதியும் இனங்களுக்கிடையிலான பிணக்குகள் தீர்வதும் சாத்தியமாகும்?

பிராந்தியச் சக்திகளின் பின்னணியில் மேலும் சர்வதேச வல்லரசுகளின் ஆதிக்கப்போட்டியும் நலன் சார்ந்த நிகழ்ச்சி நிரல்களும் உள்ளன.

இவற்றையெல்லாம் வென்று நாட்டைப் பாதுகாக்கக்கூடிய சாணக்கியம் யாருக்குண்டு? இந்த நிகழ்ச்சி நிரல்களுக்குச் சமதையான நிகழ்ச்சி நிரல்களை உருவாக்கிக் காய்களை நகர்த்தி இலங்கை மக்களைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் எவரிடம் இருக்கிறது?  அல்லது, உள்நாட்டரசியலை தமது நலன்களுக்காகக் கையாள அனுமதிக்காத ஒரு நிலையை ஏற்படுத்தக்கூடிய செயற்றிறன் யாரிடம் உள்ளது?

இவையெல்லாம் இல்லாத பட்சத்தில் எதிர்காலத்தில் இலங்கையில் இன்னும் பல ஆதிக்கச் சக்திகள் தங்களின் செல்வாக்கு மண்டலத்தை விரிவாக்கம் செய்வது தவிர்க்க முடியாமற்போகும்.

வெளியாரின் கொல்லைக் களமாக உங்களின் முற்றம் இருந்தால் அது எப்படி இருக்கும் என்பதை இதற்கு மேல் இங்கே விவரிக்கத் தேவையில்லை என நினைக்கிறேன்.

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB