.jpg)
-
இலங்கையில் மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் நடந்தாலும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலே பெரும்பாலான தமிழ் ஊடகங்களிலும் மையப்படுத்திப் பேசப்பட்டது. இணைய வெளியிலும் இதுதான் நிலை. புலம்பெயர் தமிழர்களில் பெரும்பகுதியினரும் இலங்கையில் இருக்கும் தமிழர்களில் அநேகரும் கூட கிழக்குத் தேர்தலைக் குறித்தே சிந்தித்தார்கள். அதைப் பற்றியே கதைத்தார்கள்.
இதனால், தவிர்க்க முடியாமல் இந்தப் பத்தி கூட கிழக்குத் தேர்தல் முக்கியப் படுத்தப்பட்டதைப் பற்றியும் அதன் முடிவுகளைப் பற்றியுமே எழுதப்படுகிறது.

தேர்தல் என்று வந்த விட்டால் வெற்றியடைய வேண்டும் என்ற வெறியும் கூடவே வந்து விடும். இந்த வெற்றியைப் பெற வேண்டும் என்றால், எதைச் சொல்லியும் யாரைப் பிடித்தும் எதைச் செய்தும் அதைப் பெற வேண்டும் என்பதே விதி. இதில் வெட்கப்படுவதற்கோ, மனச்சாட்சிப்படி நடந்து கொள்வதற்கோ அறிவு பூர்வமாகச் செயற்படுவதற்கோ எதுவும் இருப்பதில்லை.
ஆளாளுக்கு ஒரு நியாயத்தைச் சொல்லிக்கொண்டாலும் அடிப்படையில் எல்லோருக்கும் தங்கள் நலமே முதன்மை. நிச்சயமாக மக்களின் நலன் இல்லை. தத்தம் கட்சிகள் வெல்ல வேண்டும் என்று தொண்டர்களும் அபிமானிகளும் விரும்புகிறார்கள். தொண்டர்களை தங்களின் ‘அடிப்பொடி’களாகக் கட்சிகளும் தலைவர்களும் வைத்திருப்பது ஒரு பாரம்பரிம்.
போதாக்குறைக்கு இனவாத அடிப்படையில் கட்சிகள் தங்கள் பாரம்பரியத்தைப் பேணுவதால் இனவாதச் சிந்தனையில் ஊறிப்போன சனங்களும் அந்த அடிப்படையிலேயே சிந்திக்கத் தலைப்படுகிறார்கள். யாருக்கும் நீதி, நியாயம், சரி, பிழை எதுவும் புலப்படுவதில்லை.
எனவே தேர்தற் பரப்புரையும் தேர்தல் முடிவுகளும் அந்த அடிப்படையில்தான் அமையும். இதில் வேறு மாற்றங்களைக் காணவே முடியாது.
சனங்கள் எல்லாவற்றையும் இனவாதம் என்ற கண்ணாடியினூடாகத்தான் பார்க்கிறார்கள். அவ்வாறே அவர்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்குத் தோதாக கட்சிகளும் தலைவர்களும் பொருத்தமான“ வாதங்களைக்“ கண்டு பிடித்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். சற்று வித்தியாசமாகச் சிந்திப்பதற்கு இடைவெளியை – மாற்றங்களை யாரும் விட்டு வைப்பதில்லை.
ஆகவே, எல்லாக் கட்சிகளும் தங்கள் தங்கள் சாத்தியப்பாடுகளுக்கு ஏற்றமாதிரி, குத்துக்கரணங்கள், கோமாளித்தனங்கள், அயோக்கியத்தனங்கள், தகிடு தித்தங்கள் என்று என்னென்னவெல்லாவற்றையுமோ செய்து, தேர்தல் திருவிழாவை நடத்தியுள்ளன.
கிழக்குத் தேர்தலில் மட்டும்தான் இந்த மாதிரியான சீர்கேடுகள் நடந்தன என்றில்லை. இலங்கையில் எங்கே தேர்தல் நடந்தாலும், யார் அதிலே போட்டியிட்டாலும் அதில் அயோக்கியத்தனங்களுக்கும் பொய்களுக்கும் எந்தக் குறையும் இருப்பதில்லை.
.jpg)
வன்னியில் புலிகளின் நகைக்கடைகளுக்கு கொழும்பில் இருந்தே ஆட்கள் வருவார்கள். சிலர் வெளிநாடுகளில் இருந்து வந்து தங்களுக்கான நகைகளை வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள். அந்த அளவுக்கு தரமான தங்கத்தை, கலப்படமற்ற தங்கத்தை வியாபாரம் செய்த புலிகள் தேர்தல் என்று வந்தபோது தலைகீழாகிப் போனார்கள்.
இந்த நிலையில் மற்றவர்களின் கதையையும் கதியையும் சொல்ல வேணுமா?
இப்போது கிழக்குத் தேர்தலில் வெற்றிக்கான வாக்குகளைத் தேடி, வாய்ப்பைத்தேடி அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒரு சுற்றுப் பயணம் நடத்தியிருக்கிறார்.
தேர்தலுக்கு முன்னரே செய்ய வேண்டியதைச் செய்திருந்தால், தேர்தற்காலத்தில் சிரமங்களைப் படவேண்டியதில்லை என்பதே என்னுடைய கருத்து. தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலைத் தாக்கல் செய்து விட்டு மக்களிடம் வருவதெல்லாம் பொய். வீண் வேலை. இதை நான் அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொதுவாகவே கூறுவேன்.
கிழக்கில் அரசாங்கம் பல முன்னேற்ற நடவடிக்கைகளைச் செய்திருக்கலாம்;. அதைப் பற்றிய பெரும் பட்டியல்கள் தேர்தல் மேடைகளில் சொல்லப்பட்டன. என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் பிள்ளையான் என்ற சந்திரகாந்தனை கிழக்கில் மறக்கமுடியாது என்று சொல்வோரும் உள்ளனர். பார்ப்போருக்கும் இதைப் பற்றித் தெரியும். ஆனால், அதற்கும் அப்பால், முக்கியமான காரியங்கள் செய்யப்பட்டிருக்க வேணும்.
இனரீதியாகப் பிளவுண்ட சமூகங்களை ஒருங்கிணைப்பதில் அரசாங்கம் இன்னும் வெற்றியடையவில்லை. பதிலாக இன்னும் அது முரண்பாடுகளை அதிகரிக்கும் விதமாகவே நடந்து கொள்கிறது.
இதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமலே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. இனவாதத்தை ஏட்டிக்குப் போட்டியாக வளர்ப்பதில், வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதையும் விட இலகுவாக தமிழ்ச்சனங்களின் இதயங்களில் விசமுள்ளை ஏற்றுவதில் தமிழரசுக் கட்சித் தலைகள் பலே கில்லாடிகள். இதனால், தமிழ் மக்களின் வாக்குகளை மட்டும் பெறக்கூடிய அளவுக்கே வீட்டுச் சின்னம் இன்று மாறியிருக்கிறது.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதே வீட்டுச் சின்னத்துக்கு முஸ்லிம் மக்களும் வாக்களித்தார்கள். இப்போது அவர்கள் மரச் சின்னத்துக்கு வாக்களிக்கிறார்கள். வீட்டுச் சின்னத்துக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கப்போவதில்லை என்பதைப்போல மரச்சின்னத்துக்கு தமிழர்கள் வாக்களிக்கப்போவதில்லை.
இதுதான் கிழக்குத் தேர்தலின் உண்மையான நிலைவரம்.
ஆனால், அரசாங்கம் முன்னிறுத்தியிருக்கும் வெற்றிலைச்சின்னத்துக்கு தமிழர்களில் ஒரு தொகுதியினரும் (இவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பினும்) முஸ்லிம்களில் ஒரு சாராரும் (இவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும்) சிங்கள மக்களும் வாக்களிக்கப்போகிறார்கள். இவர்கள் இனவாதத்தைக் கடந்தவர்கள் என்று சொல்ல முடியாது விட்டாலும் ஒரு பொதுநிலையில் ஒன்றிணைகிறார்கள் என்பது கவனித்திற்குரிய ஒன்று.
ஆனால், இந்த மக்களை அரசாங்கமும் ஏனைய கட்சிகளைப் போலவே பயன்படுத்தி விட்டுவிடும். அதற்கப்பால், இந்த மக்களை சமாதானத்தின் அடித்தளத்தைக் கட்டுவோராகவோ, நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான வழிமுறையாளர்களாகவோ வளர்த்தெடுக்கப்போவதில்லை. இந்த மாதிரி ஐக்கியப்படும் ஒரு சமூக சக்திகளாக இவர்கள் கவனிக்கப்படப்போவதும் இல்லை.
இதேவேளை இந்த மூன்று தரப்பின் வாக்குகளும் அரசாங்கத் தரப்பை வெற்றியடைய வைக்குமா என்பதும் வலுவான சந்தேகத்துக்குரிய ஒன்று.
மறுவளத்தில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்தத் தடவை கிழக்கில் அதிகூடிய வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்த்தேசியப் பற்றுடன் மக்கள் தேர்தற்களத்துக்கு நிச்சயம் செல்லவேண்டும் எனவும் சர்வதேசத்துக்கு தமிழ் மக்கள் இன்னொரு தடவை தங்களை நிரூபிக்க வேண்டும் எனவும் தமிழரசுக்கட்சி மன்னிக்கவும் த.தே.கூ சொல்லியிருக்கிறது.
தொடக்கத்தில் தந்திரமாக முஸ்லிம்களின் வாக்குகளை எப்படியாவது கறந்து விடவேண்டும் என்று முயற்சித்தார் சம்மந்தன். ஆனால், பிடிவாதமாகவே முஸ்லிம் கட்சிகள் சம்மந்தனை நிராகரித்து, அவரைப் பகிரங்கமாக அவமதித்து விட்டன. (ஆனால், இன்னும் முஸ்லிம்களின் ஆதரவைக் கோரியவாறே சம்மந்தன் நிற்கிறார். இது அவருக்குத் தவிர்க்க முடியாத ஒன்று. தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் த.தே.கூ வுக்கு முஸ்லிம்களின் ஆதரவு தேவைப்படும் நிலையுண்டு).
இறுதியில் தமிழ் மக்களையே நம்ப வேண்டியதாகிவிட்டது சம்மந்தனுக்கு. எனவே அவர், இது இறைவன் தந்த இறுதிச் சந்தர்ப்பம் என்று மனமுருகி கண்ணீர் சிந்தியிருக்கிறார். போதாக்குறைக்கு அந்தக் கட்சி வழமையைப்போல தமிழர்கள் யார் என்று காட்ட வேண்டும், சிங்களவர்களுக்குத் தமிழர்கள் அடிமையில்லை என்று தெரிவிக்க வேண்டும். சர்வதேசத்துக்கு தமிழர்களின் உணர்வு எத்தகையது என்று சொல்ல வேண்டும் என்றெல்லாம் பழைய நாடகத்தை ஒரு முறை ஆடி முடித்திருக்கிறது.
என்னதான் நரம்பு சிலிர்க்க துடித்தெழும் தமிழ்த் தேசியவாதிகள் எல்லாம் ஒன்று திரண்டு த.தே. கூவை வெற்றியடைய வைப்பர் என எதிர்பார்க்கப்பட்டாலும் கூட்டமைப்பினரால் சுமுகமான ஒரு ஆட்சியை கிழக்கில் ஏற்படுத்த முடியாது என்பதே உண்மையானதாகும்.
பதிலாக கொந்தளிப்பும் சீர்கேடுமான ஒரு ஆட்சியே கிழக்கில் நடைமுறையில் இருக்கும். இது நிச்சயமாகக் கிழக்கின் அமைதியைக் குலைக்கும். அரச தரப்பு ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நிலை. கிழக்கில் வலுவான இணைச் சமூகமாக இருக்கும் முஸ்லிம்தரப்புடன் நீதியான – வெளிப்படையான உறவுக்கு தமிழ்கூட்டமைப்புச் செல்லாத வரையில், அல்லது அரசு செல்லாத வரையில் அங்கே அமைதியை ஏற்படுத்தவும் முடியாது. நீதியை நிலைநிறுத்தவும் இயலாது.
தமிழ்க்கூட்டமைப்பு கிழக்கில் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டுமானால் அது தவிர்க்க முடியாமல் முஸ்லிம் தரப்பின் ஆதரவைப் பெற்றே தீரவேணும். ஆனால், அந்த ஆதரவை இலகுவில் பெற்றுவிட முடியாது. இலவசமாகவும் பெறமுடியாது.
அதற்கான விலைகள் அதிகம். ஆதரவளிக்கும் முஸ்லிம்தரப்பு முதலில் தமக்கே முதலமைச்சர் பதவி என்றுகூடக் கோரலாம். அல்லது அமைச்சரவையில் வலுவான பங்கைக் கேட்கலாம். அத்தோடு, ஆட்சிக் காலத்தில் பல தேவைகளையும் உதவிகளையும் பங்குகளையும் கோரலாம். இதெல்லாம் அவர்களைப் பொறுத்தவரையில் தவிர்க்க முடியாதவை.
இதற்குக் கூட்டமைப்பினால் எந்த அளவுக்கு நெகிழ்ந்து கொடுக்க முடியும்? என்பது முக்கியமான கேள்வி. மற்றவர்களை இணைத்துப் பயணித்த அனுபவம் தமிழர்களுக்குப் பொதுவாகவே குறைவு. அவர்கள் எப்போதும் தம்மை முன்னிலைப்படுத்தியே பழக்கப்பட்டவர்கள். சிங்களத் தரப்பிலும் இதுதானே குறைபாடு. ஆனால், தமிழர்கள் மிகச் சிறுபான்மையினராக இருப்பதாலும் பலவீனமான நிலையில் இருப்பதாலும் சி்ங்களவர் தமிழரை ஆட்டிப்படைக்கிறார்கள். ஆனால், இங்கே முஸ்லிம்களின் நிலை அவ்வாறல்ல. இங்கே முஸ்லிம்கள் பலமான அல்லது வலுவான நிலையில் இருக்கும்போது கூட்டமைப்புக்கு அது நெருக்கடியாக அமையலாம். ஆகவே தமிழ்த் தரப்போடு நிச்சயமாக முஸ்லிம்களுக்கு மோதல்களே ஏற்படும்.
இதேவேளை இன்னொரு வலுவான தரப்பைப் பற்றியும் நாம் பார்க்க வேண்டும். முஸ்லிம் முதலமைச்சர் கனவோடு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் களமிறங்கியது. அதற்காக அது கடுமையான போராட்டங்கள், முயற்சிகளின் பின்னர் அரசாங்கத்தை விட்டுத் தனியே களத்தில் இறங்கியது. ஒரு கட்டத்தில் - இந்த நாடகத்தின் உச்சக் கட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தரான பஸீர் சேகுதாவூத்தே தன்னுடைய துணை அமைச்சர் பதியைத் துறந்திருந்தார்.
போதாக்குறைக்கு அரசாங்கத்தை முடிந்தவரையில் குற்றம்சாட்டித் தேர்தற்காலப் பகைமை உணர்வை வெளிப்படுத்தினார் ஹக்கீம் . இந்த நிகழ்ச்சிகளின் உச்சக்கட்டமாக அவர் அரசாங்கம் வேறு, முஸ்லிம் காங்கிரஸ் வேறு என்று வெளிப்படுத்தினார்.
இதன்மூலம் ஹக்கீமும் முஸ்லிம் காங்கிரசும் வெற்றியடைந்துள்ளன என்றே சொல்ல வேணும். அரசாங்கத்தில் இன்னும் பொறுப்பான அமைச்சுப் பதவியில் ஹக்கீம் இருக்கிறார். அரசாங்கத்துக்கு எதிராக அவருடைய கட்சி தேர்தல் களத்தில் நிற்கிறது. அவர் அரசை எதிர்த்துப்பேசுகிறார். அப்பப்பா... என்ன சாகஸம். பஸீர் நாளை கூட இழந்த பதவியையோ அல்லது அதற்கும் கூடுதலான பதவியையோ பெறலாம். அதற்கான நிகழ்தகவு அதிகம்.
அதேவேளை தன்னுடைய தனித்துவத்தை முஸ்லிம் கொங்கிரஸ் இழக்கவில்லை. அது அரசாங்கத்தை எதிர்த்து, தனித்து தேர்தலில் நின்றது. அண்மையநாட்களில் முஸ்லிம்களின் மீதான சிங்களக் கடும்போக்காளர்களின் எதிர்ப்புகளைக் கண்டும் காணாதிருக்கும் அரசாங்கத்துக்கு அது தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறது என்ற தோற்றப்பாட்டை உருவாக்கியும் விட்டது.
.jpg)
மற்றவர்களை விடவும் இப்போது அதிக நன்மைகளைப் பெறும் நிலையில் இருப்பதும் பாதுகாப்பாகவும் இருப்பதும் மு.காவே.
இதேவேளை தமிழர்கள் யாருக்கு வாக்களித்தாலும் - தமிழ்க் கூட்டமைப்புக்கோ அல்லது அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கோ அல்லது மு.காவுக்கோ யாருக்குத்தான் வாக்களித்தாலும் அவர்களுக்கு அதிகமாக எதுவும் கிட்டப்போவதில்லை.
தமிழர்கள் எதிர்பார்ப்பதைப் போலச் சர்வதேச சமூகம் என்ற பொய்யர்கள் இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்போவதும் இல்லை. சர்வதேச சமூகத்துக்கு யார் பயன்படுத்தக் தக்க நிலையிலும் யார் லாபத்தை அதிகமாகத் தரக்கூடியவாறும் உள்ளனர் என்பதே அக்கறைக்குரிய ஒன்று. ஆனால், தேர்தல் வியாபாரிகள் சிலர் மட்டும் இதில் லாபம் பெறுவர். வெற்றியடையமுடியாத அரசாங்கம் மேலும் வன்மத்தையே பிரயோகிக்க முயலும். இதுதான் வழமையும் யதார்த்தமும் உண்மையும்.
எப்படியோ கிழக்கின் இந்தத் தேர்தலும் சகல மட்டத்திலும் இடைவெளிகளையே அதிகரிக்கும் ஏது நிலைகளே அதிகமாகக் காணப்படுகின்றன. அவ்வாறெனில் முரண்நிலைகள் மேலும் கூடத்தான் போகின்றன. பிரிவினை வாதிகள் மக்களை ஒன்று சேர என்றும் விடுவதேயில்லை.
00
0 comments:
Post a Comment