கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

நெருக்கடிக்குள்ளிருந்து மீளத் துடிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

Thursday 2 February 2012





















அரசாங்கத்தையும் விட தற்போது அதிக நெருக்கடிகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே சந்தித்துள்ளது.

1. கட்சிக்குள் தொடர்ந்து கொந்தளித்துக் கொண்டிருக்கும் நெருக்கடி.
2. இலங்கை அரசாங்கத்துடன் நடக்கின்ற பேச்சுகள் உருவாக்கியுள்ள நெருக்கடி.
3. தீவிரத் தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் எழுந்துள்ள நெருக்கடி.
4. ‘சிவில் சமூகம்’ என்று கூறப்படுவோரின் மூலமாக உருவாகியுள்ள நெருக்கடி.
5. அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் மாற்றுச் சிந்தனையாளர்கள் ஏற்படுத்தியுள்ள நெருக்கடி.
6. சர்வதேச சமூகத்தின் ஒரு அங்கத்தினர் (இந்தியா மற்றும் மேற்குலகம் ஆகியவை) ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி.
7. வரலாறு உருவாக்கியுள்ள நெருக்கடி.

இதில் முக்கியமான நெருக்கடி, வரலாறு உருவாக்கியுள்ள நெருக்கடியாகும். வரலாற்றின் நெருக்கடியே எப்போதும் மிகப் பெரிய சவாலாகவும் விளைவுகளின் விசையை அதிகப்படுத்துவதாகவும் அமைகிறது. இந்த நெருக்கடியே பெரும்பாலும் பிற நெருக்கடிகளுக்கும் அடிப்படையாக உள்ளது. இங்கும் அதுதான் நடந்துள்ளது.

வரலாற்றின் எச்சரிக்கையே – அது உருவாக்கியிருக்கும் நெருக்கடியே - கூட்டமைப்பைச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. எனவே, அது தன்னுள்ளும் தன்னைச் சுற்றியும் எழுந்துள்ள நெருக்கடிகளையும் சமாளித்துக்கொள்வதற்காக சில உபாயங்களைநோக்கிச் சிந்திக்கிறது. அதிலொன்றே இலங்கை அரசுடன் நடக்கின்ற பேச்சுகளுக்கு மூன்றாந்தரப்பொன்றின் மத்தியஸ்தம் வேண்டும் என்ற அறிப்பாகும்.

‘சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள். இப்போதும் அப்படி ஏமாற்றவே முயற்சிக்கின்றனர். அதிலும் மகிந்த ராஜபக்ஷ அரசு போரின் வெற்றிக்குப் பின்னர் இன்னும் அதிகார மமதையுடன் நடந்து கொள்கிறது.

‘போரில் கிடைத்த வெற்றியின் மூலமாக தான் கருதுகிற – விரும்புகிற தீர்வொன்றைத் தமிழர்களின் தலையில் கட்டிவிடுவதற்கு அது முயற்சிக்கிறது. இந்த நிலையில் மிகுந்த எச்சரிக்கையுடன், பேச்சுகளில் ஈடுபடும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நடந்து கொள்ள வேண்டும்’ என்று சிந்திக்கும் ஒரு போக்கு வரலாற்றின் எச்சரிக்கையாக முன்னிற்கிறது.

இந்த எச்சரிக்கையே கூட்டமைப்பிற்கு, தீவிரத் தமிழ்த் தேசிய உணர்வாளர்களாலும் ‘சிவில் சமூகம்’ என்று கூறப்படுவோரின் மூலமாகவும் உருவாகியுள்ள நெருக்கடியாகும். மேலும் அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் மாற்றுச் சிந்தனையாளர்கள் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியிற் பாதியும் இவ்வாறான நெருக்கடியைக் கூட்டமைப்புக்கு உருவாக்கியுள்ளன.

அதாவது, ‘போரில் வெற்றியடைந்திருக்கும் அரசு தமிழர்களுக்கான தீர்வை உரிய முறையில் முன்வைக்காமல், தான் விரும்புகின்ற ஒரு முழுமைப்படுத்தாத தீர்வைத் திணித்து விடும். இதை எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்த்தரப்புப் பெற்றுவிடக்கூடாது.

‘அப்படிப் பெற்றுக்கொண்டால், அது இதுவரையில் தமிழர்கள் நடத்திய போராட்டத்துக்கும் இதுவரை செய்த தியாகங்களுக்கும் ஈடாகாது. மேலும்  எதிர்காலத் தமிழ்ச் சமூகத்தின் அரசியற் தலைவிதியை அது பலவீனப்படுத்தி விடும்’ என்றும் இந்தத் தரப்பினர் கருதுகின்றனர்.

இதற்கு அவர்கள் மறைபொருளில் கூறுகின்ற விசயம் அல்லது நியாயம், ‘இலங்கை அரசு போரில் வெற்றியடைந்திருந்தாலும் அந்த வெற்றியை அது செய்த போர்க்குற்றங்கள் பாதிக்கின்றன. அதாவது, போரின் வெற்றியை அதனுடைய போர்க்குற்றங்கள் சமனிலைப்படுத்துகின்றன’ என்று.

மேலும், ‘இந்த நிலையில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை ஆதாரப்படுத்தி, அதை ஒரு வலுவான நெருக்கடியாக மாற்றினால், போரினால் பின்னடைந்திருக்கும் அல்லது பலவீனப்பட்டிருக்கும் தமிழ்த்தரப்புக்கான பலமாக அது மாறும். ஆகவே அப்படி இதை மாற்ற வேண்டும்.

அதற்குக் கூட்டமைப்பு தீவிர நிலையிற் செயற்பட வேண்டும். அப்படிச் செயலாற்றினால், அது தமிழ்த்தரப்பின் பலமாக மாறி, இலங்கை அரசுக்கு மாற்றான ஒரு சமனிலைப் பலத்தை தமிழ்த்தரப்புக்கு வழங்கும்’ என்பது இந்தத் தரப்பின் கணிப்பு.

இத்தகைய கணிப்பொன்றை தீவிரத் தமிழ்த்தேசியச் சக்திகள் தர்க்க பூர்வமாக இதுவரையில் முன்வைக்கவில்லையாயினும் அவர்களின் கூற்றுகளும் அணுகுமுறைகளும் இதையே மறைபொருளில் உணர்த்துகின்றன.

இதை மீறி அல்லது இதைப் பொருட்படுத்தாமல் அரசுடன் மென்தன்மையாகக் கூட்டமைப்பினர் நடந்து கொண்டால், அது நிலைமையை மோசமாக்கி விடும் என்பதே இந்தத்தரப்பினரின் எச்சரிக்கையாகவும் நிர்ப்பந்தமாகவும் உள்ளது. இதை இவர்கள் வரலாற்றின் எச்சரிக்கையாகவும் நெருக்கடியாகவும் கூட்டமைப்பின் முன் வைத்துள்ளனர்.

ஆனால், இந்த எச்சரிக்கைகளையும் நிபந்தனைகளையும் எதிர்கொள்வதில் கூட்டமைப்புக்கு இயலாத நிலையே தென்படுகின்றது. ஆகவேதான் அது வெளிப்படையாகப் பதிலளிக்க முடியாமல் தன்மீது முன்வைக்கப்படும் கண்டனங்களையும் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் கனத்த மௌனத்தின் மூலம் கடக்க முயற்சிக்கிறது. இதை அது ஒரு உபாயமாகவே கொண்டுமிருக்கிறது.

இப்படியான உத்தியொன்றை அது கடைப்பிடித்து ஒரு எல்லைவரை நகரலாம். ஆனால், தொடர்ந்தும் வெற்றிகரமாக இந்தப் பாதையிற் பயணிக்க முடியாது.
எனவேதான், கூட்டமைப்புக்கு இன்று பலவகையான நெருக்கடிகள் உள்ளும் புறமுமாகக் குவிந்துள்ளன.

அவற்றை மீளவும் இங்கே வரிசைப்படுத்தினால்,

1. கட்சிக்குள் தொடர்ந்து கொந்தளித்துக் கொண்டிருக்கும் நெருக்கடி.
2. இலங்கை அரசாங்கத்துடன் நடக்கின்ற பேச்சுகள் உருவாக்கியுள்ள நெருக்கடி.
3. தீவிரத் தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் எழுந்துள்ள நெருக்கடி.
4. ‘சிவில் சமூகம்’ என்று கூறப்படுவோரின் மூலமாக உருவாகியுள்ள நெருக்கடி.
5. அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் மாற்றுச் சிந்தனையாளர்கள் ஏற்படுத்தியுள்ள நெருக்கடி.
6. சர்வதேச சமூகத்தின் ஒரு அங்கத்தினர் (இந்தியா மற்றும் மேற்குலகம் ஆகியவை) ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி.
7. வரலாறு உருவாக்கியுள்ள நெருக்கடி.

என்றவாறாக இந்தப் பட்டியலின் சுருக்கம் அமையும்.

கூட்டமைப்பை ஒரு அமைப்பாக மாற்றுவதிலும் கட்சியாக வடிவமைப்பதிலும் அதற்கான செயற்பொறிமுறைத் திட்டமொன்றை வகுப்பதிலும் அது கொண்டுள்ள இடர்ப்பாடுகள் பெரிது.

பல அணிகளின் கூட்டாக அது இருப்பது வெளித்தோற்றத்துக்கு கவர்ச்சிகரமானதாகவும் பலம்பொருந்தியதாகத் தெரிந்தாலும் உள்ளே அதற்குள் ஏகப்பட்ட உள்விலகல்களும் நெருக்கடிகளும் செயல்முறைத் தளர்வுகளும் இருப்பதை அவதானிக்க முடியும்.

இதற்கு அண்மைய உதாரணம், கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்துள்ளதாகவும் அதற்கான முயற்சிகளில் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளதாகவும் திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளமை.

ஆனால், இதேகாலப்பகுதியில் கொழும்பிலே தமிழரசுக் கட்சியின் கிளை நிலையத்தைப் பலப்படுத்தும் முயற்சிகள் நடந்துள்ளன. கொழும்புக்கிளைக்குச் செயலாளராக ஊடகவியலாளரான திரு. வித்தியாதரன் தெரிவு செய்யப்பட்டிருப்பது.

இதைத் தவிர, மேலும் பல உள்விலகல்கள் கூட்டமைப்புக்குள்ளே உண்டு. கட்சியின் தலைமைப் பதவிகளை நோக்கிய குறிவைப்புகளோடு போட்டி நிலையில் பலர் இருப்பதும்,  எனினும், தனித்து நிற்க முடியாத நிலையில் விருப்பின்மைகளின் மத்தியில் ஒரு அமைப்பாக இவர்கள் இணைந்திருக்க வேண்டியிருப்பதும் இந்த உள்விலகல்களை அப்படியே பேணிவருகின்றன.

இதற்கான நிரந்தரப் பரிகாரத்தைக் காணுவதற்கு இதுவரையில் கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை. அதை அது செய்யப்போவதும் இல்லை என்கின்றனர் அவதானிகள். ஏனெனில் முன்னர் திரு. ஆனந்தசங்கரிக்கும் திரு.சம்மந்தனுக்கும் இடையில் நடந்த அதிகாரப்போட்டியில் பிளவு ஏற்;பட்டதை இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆகவே, உள்நெருக்கடியைத் தீர்க்கும் முயற்சிகளில் இப்போதைக்குக் கூட்டமைப்பு ஈடுபடப்போவதில்லை. இதேவேளை இந்த நெருக்கடியைத் தொடர்ந்து பேணவும் முடியாது. ஆகவே இந்தப் பிரச்சினையைத் திசைதிருப்பி வைத்துக் கொள்வதற்கு கூட்டமைப்புக்கு உள்ள ஒரு உபாயம் பேச்சுவார்த்தையாகும்.

ஆனால், பேச்சுகளின் தேக்கத்தைப் பற்றியும் அதன் போக்கைப் பற்றியும் வெளியே எழுப்பப்படும் கேள்விகளுக்கு அவரவர் தமக்கேற்றவாறு பதிலளித்து வருகின்றனர். இது அமைப்பினுள்ளே உள்விலகல்களை மேலும் அதிகரிப்பது மட்டுமல்ல, அரசுடன் பேச்சுகளைத் தொடர்வதில் சிலவேளை நெருக்கடிகளையும் உருவாக்கி வருவதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் கவலையுடன் சொல்கிறார்.

எனவே, இந்த நிலையில் மூன்றாந்தரப்பின் மத்தியஸ்தத்துடன் பேசுவதானால், முன்னர் குறிப்பிட்டதைப்போல பாவமோ பழியோ அந்த மூன்றாந்தரப்புக்கும் சேர்ந்தது. தான் மட்டும் முழுக்குற்றவாளி இல்லை என்பதாகும். இது சற்று ஆறுதலை அளிக்கும். நெருக்கடியைக் குறைக்கும் என்று கூட்டமைப்புக் கணித்துள்ளது.

அடுத்தது, இலங்கை அரசுடன் நடக்கின்ற பேச்சுகள் உருவாக்கியிருக்கும் நெருக்கடிகள்.

பேச்சுகளின்போது தீர்வை முன்வைக்கும் யோசனைகளும் சமிக்ஞைகளும் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை எனத் தெரிவிக்கும் கூட்டமைப்பு இந்த நிலையில் எப்படிப் பேசுவதென்று தெரியாமல் திணறுகிறது. ஆனால், எப்படியான நிலையிலும் பேச்சுகளிலிருந்து வெளியேற முடியாத நிர்ப்பதந்ததும் அதற்குண்டு. சர்வதேச அழுத்தம் உட்பட. பேச்சுகளை விட்டால் அதற்கு மாற்றுவழி என்ன என்ற கேள்வியை முன்வைத்தாலே இந்த நிலைமையை விளங்கிக் கொள்ள முடியும்.

தவிர, தான் உருவாக்க முயற்சிக்கும் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பும் பங்கெடுக்க வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது கூட்டமைப்புக்கு ஒரு நெருக்கடி நிலையே. பேச்சுகளைத் தொடருமாறும் தீர்வொன்றைக் காணுமாறும் வலியுறுத்தி வருகின்ற இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றன ஜனநாயக மயப்படுத்தப்பட்ட நிலையிலான பேச்சுகளையும் அணுகுமுறைகளையுமே ஆதரிக்கிறது. இதன்படி இலங்கை அரசின் தெரிவுக்குழு முறைமையை இவை நிராகரிக்காது. இந்த நிலையில் தெரிவுக்குழுவில் பங்கேற்கும்படியா ஒரு அழுத்தம் கூட்டமைப்புக்கு ஏற்படுகிறது. ஆனால், தெரிவிக்குழுவில் பங்கேற்பது காலத்தைக் கடத்தும் செயல் என்ற வரலாற்றனுபவங்களும் அதை நிபந்தனையாக்கும் பிறதரப்பின் அழுத்தங்களும் கூட்டமைப்பைத் தெரிவுக்குழுவுக்கு வெளியே நிறுத்துகின்றன. இது ஒரு நெருக்கடி நிலையே.

இதைத் தவிர்த்து, அரசாங்கம் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையை அல்லது தீர்வை இழுத்தடிக்குமானால், அடுத்த கட்ட நிலை என்ன என்ற கேள்வியும் நெருக்கடியாக எழுகின்றது.

அடுத்த நெருக்கடியானது, சர்வதேச சமூகத்தின் ஒரு அங்கத்தினராக விளங்கும் இலங்கை அரசியலில் தாக்கத்தை விளைவிக்கும் தரப்பினராகிய இந்தியா மற்றும் மேற்குலகம் ஆகியவை ஏற்படுத்தும் நெருக்கடி.

இந்தத் தரப்புக்கு இலங்கை அரசும் தேவை. சிங்களச் சமூகத்தின் ஆதரவும் அவசியம். தமிழர்களின் அபிப்பிராயத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே, இவை இவற்றுக்கமைவான ஒரு மென்போக்கு – நழுவல் நிலை - இரண்டுக்கும் நடுவிலான ஒரு அணுகுமுறை – சமாளித்து ஓடுதல் என்றவாறான ஒருவகை அரசியல் உபாயத்தைக் கையாள்கின்றன. இந்த உபாயத்துக்கு இடமளிப்பதா இல்லையா என்ற நெருக்கடி இப்பொழுது கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது. (சரி பிழைகளுக்கு அப்பால், புலிகள் இந்த மாதிரி இடத்தில் வெட்டொன்று துண்டு இரண்டு என்ற மாரியாகக் கறாராக முடிவெடுத்து விடுவர்). இந்த இடத்தில் கூட்டமைப்பின் நிலை தர்மசங்கடமானது.

தீவிர நிலைப்பாட்டைக் கூட்டமைப்பு எடுப்பதையும் பேச்சுமேசையில் இருந்து  அது வெளியேறுவதையும் இந்தத் தரப்புகள் விரும்பவில்லை. ஆகவே ஒரு அழுத்த நிலையில் இருந்து இந்த நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அழுத்தத்துக்கு இணங்கினால், தீவிரத் தமிழ்த் தேசியவாதிகளாலும் ஊடகங்களாலும் கடுமையான எதிர்ப்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாக வேண்டிய நிலை. இணங்காது விட்டால், இந்தத் தரப்பின் அறிவுறுத்தல்களுக்குப் பதிலளிக்க முடியாத நிலை. ஆகவே, இரண்டுபக்க அழுத்தங்களுக்குட்பட்டுத் தவிக்கின்றது கூட்டமைப்பு.

எனவே இந்த நெருக்கடிகளில் இருந்தெல்லாம் விடுபட்டுக்கொள்வதற்கே அது மூன்றாந்தரப்பொன்றின் மத்தியஸ்தத்தைக் கோருகிறது. அதேவேளை சேர்த்துக்கொள்ளப்படும் மூன்றாந்தரப்பின் மூலம் இலங்கை அரசையும் மேற்கூறிய சர்வதேசத் தரப்பையும் நெருக்கடிக்குள்ளாக்கி விடலாம் என்றும் அது கருதுகிறது. இது ஒப்பீட்டளவில் புத்திசாதுரியமான ஒரு நடவடிக்கையே.

ஆகவே, மூன்றாந்தரப்பொன்றைக் களத்திற்குக் கொண்டு வருவதன் மூலம் எல்லா நெருக்கடிகளிலும் அந்த மூன்றாந்தரப்பைப் பொறுப்பாளியாகவும் பங்காளியாகவும் ஆக்கிவிடலாம். இதன்மூலம் தன் மீது வைக்கப்படும் குற்றச் சாட்டுகள், நம்பிக்கையீனங்கள் போன்றவற்றைப் பகிர்ந்தளித்து, வெற்றிக்கும் தோல்விக்கும் தான் மட்டும் பொறுப்பாளியல்ல - இத்தகைய நிலைமைகளுக்கு பிற சாட்சியமும் உண்டு என்று கூறிவிடலாம் என்பதே இன்றைய தெரிவாகக் கூட்டமைப்புக்கு உள்ளது.

ஆனால், என்னதானிருந்தாலும் அரசுக்கு தற்போதிருக்கும் நெருக்கடிகளையும் விடக் கூட்டமைப்புக்கிருக்கும் நெருக்கடிகளே அதிகமாக உள்ளன. அரசு போர்க்குற்ற விசாரணைகளை அழுத்தப் பிராந்தியத்திற்கு அப்பால் தள்ள முயன்று கொண்டிருக்கிறது. அதற்கான சர்வதேச வியூகமொன்றை அது வகுத்துமுள்ளது. இதன்படி அது இந்தியா, சீனா, மேற்கு என்ற விசைநிலையைச் சமாந்தரப் புள்ளியை நோக்கித் தற்காலிகமாக நகர்த்தியுள்ளது.



00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB