கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

வரலாற்றுக் குற்றங்களும் குற்றவாளிகளும்

Monday 19 November 2012



எத்தகைய வரலாற்றுத் தவறும் மக்களையே மிகப் பாதிக்கும். சில தவறுகளின் பாதிப்பு இலேசானது. சில தவறுகளின் பாதிப்பு மோசமானது. இலங்கையின் இனப்பிரச்சினை ஒரு பெரிய தவறு. அதன் தொடர்ச்சியான போர் அதைவிடப் பெரிய தவறு. போரின்போது நடந்த போர்க்குற்றங்கள் ஆகப்பெரிய தவறு. போர்க்குற்றங்கள் நடப்பதற்கு அனுமதித்தது எல்லாவற்றையும் விடப் பெரிய தவறு. எல்லாத்தவறுகளையும் தலையில் ஏற்றனர் மக்கள்.

இப்பொழுது இந்தத் தவறுகளைப் பற்றிய விளக்கங்களும் வியாக்கியானங்களும் தாராளமாக நடக்கின்றன. ஐ.நா செயலாளர் கூட நடந்த தவறுகளைப் பற்றி விளக்கம் அளித்திருக்கிறார். போதாக்குறைக்கு மன்னிப்புவரை கேட்டிருக்கிறார். ‘என்னமாதிரியான ஒரு காலம்’ எங்களுக்கு வாய்த்திருக்கிறது!

ஆனால், இந்தத் தவறுகள் எல்லாம் பல ஆயிரக்கணக்கானோரின் வாழ்வையும் உயிரையும் அல்லவா அழித்திருக்கின்றன! ஒரு நீண்ட காலத்தை இரத்தத்தில் அல்லவா தோய்த்து எடுத்துள்ளன!! பல்லாயிரக்கணக்கானோரை நடுத்தெருவில் அல்லவா கைவிட்டுள்ளன!!!

அப்படியென்றால் இவற்றுக்கான பதில் என்ன? தீர்வு என்ன? நிவாரணம் என்ன?

வெறும் வார்த்தைகளுக்குள்ளும் வெள்ளை அறிக்கைகளுக்குள்ளும் எத்தகைய நன்மைகளும் உருவாகுவதில்லை.

மேலே சொல்லப்பட்ட தவறுகள் எல்லாம் உண்மையில் சாதாரண தவறுகளே அல்ல. அவை குற்றங்கள். பெருங்குற்றங்கள். தொடர்ச்சியான குற்றங்கள். ஒன்றிலிருந்து ஒன்றாகப் பலவாக உற்பத்தியாகிய குற்றங்கள். திட்டமிட்டு நடத்தப்பட்ட குற்றங்கள். அந்தந்தத்தரப்பின் தேவைகளின் நிமித்தமாக நடத்தப்பட்ட குற்றங்கள்.

ஒரு குற்றம் பல குற்றங்களை உருவாக்கும் என்று நன்றாகத் தெரிந்தும் அந்தக் குற்றம் தொடர்ந்தும் நடைபெற அனுமதித்த குற்றம். மாபெருங்குற்றம்.
இதில் இலங்கை அரசுக்கும் பொறுப்புண்டு. எதிர்த்தரப்பில் இருந்த தமிழ்ச்சக்திகளுக்கும் பொறுப்புண்டு. பிராந்திய சக்தியாக இருந்து இலங்கைப் பிரச்சினையை வளர்த்துக்கொண்டிருக்கும் இந்தியாவுக்கும் பொறுப்புண்டு. சர்வதேச சமூகம் என்றபெயரோடு இயங்கும் வல்லரசு நாடுகள் அத்தனைக்கும் பொறுப்புண்டு. இந்தச் சர்வதேச சமூகத்துக்குத் தொண்டு செய்து கொண்டிருக்கும் ஐ.நாவுக்கும் பொறுப்புண்டு. ஐ.நாவின் அனுசரணையோடும் ஆதரவோடும் இயங்குகின்ற பிற பொது அமைப்புகளுக்கும் மனித உரிமை அமைப்புகளுக்கும் பொறுப்புண்டு. இந்த விவகாரத்தில் ஏட்டிக்குப் போட்டியான கருத்துலகத்தைக் கட்டியெழுப்பிய ஊடகங்களுக்கும் பொறுப்புண்டு.

ஆனால், யாரும் இந்தப் பொறுப்பை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

எனவே நடந்தவை அத்தனையும் மறுக்க முடியாத, மறைக்க முடியாத குற்றங்கள். தொடர்ந்து நடந்து கொண்டிருப்பவையும் அத்தகைய பகிரங்கக் குற்றங்களே. அதிலும் பெருங்குற்றங்கள். தொடர் குற்றங்கள்.

அப்படியானால், குற்றங்களை இழைத்தோருக்கான தண்டனை என்ன?

இதுதான் இன்றைய நம் கேள்வி. இந்தக் கேள்வி அறிவுலகத்திலுள்ள அனைவரும் எழுப்ப வேண்டிய கேள்வி. சனங்களைக் குறித்து சிந்திப்போர் சகலரும் எழுப்ப வேண்டிய கேள்வி. மனித உரிமைவாதிகள் அத்தனை பேரும் கேட்க வேண்டிய கேள்வி. பாதிக்கப்பட்ட சனங்கள் எழுப்பவேண்டிய கேள்வி.

மிகச் சாதாரணமாக, ஒற்றைவரியில் மன்னிப்பு என்று சொல்லிவிட்டுக் கடந்து போகக்கூடிய குற்றங்களை இவர்கள் யாரும் செய்யவில்லை. கூட்டாகச் சேர்ந்து இழைக்கப்பட்ட கூட்டுக் குற்றங்களே இவை.
எனவே இதை எதிர்ப்பதற்கும் இதைக் கண்டிப்பதற்கும் ஒரு கூட்டு நடவடிக்கையே இன்று தேவை. இது உலகளாவிய அளவில், அந்த ரீதியில் ஏற்பட வேண்டும்.

ஏனெனில் குற்றவாளிகளாக இருப்போர் இன்னும் உயர் பீடங்களிலேயே உள்ளனர். வலுவான நிலையிலேயே உள்ளனர். அதிகாரத்தோடும் வளங்களோடுமே உள்ளனர். பாதிப்புகள் எதையும் தங்களின் தோள்களிலே உணாராமலே உள்ளனர்.

ஆகவே, இந்தக் கேள்விகளை அனைவரும் ஒன்றிணைந்து எழுப்புவதன் மூலம் நடந்த தவறுகளுக்கும் நிகழ்த்தப்பட்ட குற்றங்களுமான தண்டனையை இவர்களுக்கு வழங்க வேண்டும். அந்தத் தண்டனையைப் பெறக்கூடிய வழிகளையும் நிலையையும் உருவாக்க வேண்டும். அதற்குரிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

அப்போதுதான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். குற்றங்கள் தடுக்கப்படும். மட்டுமல்ல, குற்றவாளிகளிடமிருந்து பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணமும் கிட்டும்.

இந்த நிவாரணம் என்பது முக்கியமானது. தண்டனை என்பது குற்றவாளிகளைக் கட்டுப்படுத்திக் குற்றங்களைத் தடுப்பதற்கும் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணத்தை வழங்குவதற்குமான அடிப்படையைக் கொண்டது.

இலங்கையில் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் அமைப்புகள் என்ற பேரிலும் உதவும் நாடுகள் என்ற வகையிலும் சிறு உதவிகளை சம்மந்தப்பட்ட தரப்புகள் செய்து வருகின்றன.

இது ஒரு ஏமாற்று நடவடிக்கையே. தங்களுடைய குற்றங்களில் இருந்து தப்புவதற்கான ஒரு உபாயமே. இதிலும் மறைந்திருப்பது அதிகார நிலையே.
இயல்பாகவே வளர்ந்திருந்த ஒரு நாட்டை, சுய நிலையிலிருந்த சமூகங்களை  அழிவடைய வைத்து, கையேந்தும் நிலைக்குள்ளாக்கியது இலங்கையின் ஆட்சியாளர்களும் அரசியலாளர்களும் இந்தியாவும் சர்வதேச சமூகமும் ஐ.நாவுமே.

இன்று குட்டிச் சுவராக்கப்பட்ட நாட்டுக்கு உதவியென்றும் ஊக்குவிப்பு என்றும் கடன் என்றும் பிச்சைபோடுகின்றன இந்தத் தரப்புகள்.

போரினால் துவண்டு போயிருக்கும் சனங்களுக்கு இந்தப் பிச்சைகள் உண்மையில் அவர்களுக்குச் செய்யும் அவமானமே.

போரின்போது நடந்த குற்றங்களுக்கு இன்று மன்னிப்புக் கேட்கிறது ஐ.நா. ஆனால், போர் நடந்தபோதே போர்க்குற்றங்கள் நடக்கின்றன என்று பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் யுத்தக்குற்றங்கள் தொடர்பாக அறிக்கையிட்டன. தங்களின் கண்டனங்களைத் தெரிவித்தன.

ஏன், ஐ.நாவின் தொடர்பாளராக, அதிகாரிகளாக, பொறுப்புவாய்ந்த ஆணையாளர்களாக இருந்தோர் கூட அன்று இலங்கையின் நிலைமை தொடர்பாக, நடக்கும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக தங்களின் மதிப்பீடுகளையும் அறிதல்களையும் வெளிப்படுத்தியே வந்தனர்.

ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல், அன்று ஐ.நாவும் அதன் செயலர் பான்கி மூனும் யுத்தக் குற்றவாளிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைத்தனர்.

ஐ.நாவில் பொறுப்பான இடங்களில் இருந்தவர்களில் ஒருவரான நம்பியார் குற்றங்களுக்கு ஆதரவளித்திருக்கிறார்.

இன்னொருவரான கோடன் வைஸ் குற்றங்களைப் பகிரங்கப்படுத்துகிறார்.

ஆகவே, யுத்தத்தை எப்படி நடத்துவது? அதன் இறுதி முடிவு எப்படி அமையவேண்டும்? என்ற நோக்கத்தோடு இயங்கிய கூட்டுச் சக்திகளின் விருப்பத்துக்கு இடமளித்தது ஐ.நா. இது வெளிப்படையான உண்மை.
இன்று இன்னொரு நிலையில், பகிரங்க நெருக்கடிகள் எதிர்காலத்தில் ஏற்படலாம் என்ற நிலையில், யுத்தக் குற்றங்களை இலங்கையின் தலையில் மட்டுமே சுமத்த வேண்டும் என்ற நிலையில் தன் பக்கத்தில் தவறு நடந்து விட்டதாக ஐ.நா சொல்கிறது.

இதுவும் ஒரு அரசியலே. இதுவும் ஒரு பொறுப்பற்ற தவறே. இதுவும் ஒரு குற்றமே.

ஆனால், எல்லாக்குற்றங்களுக்கும் இறுதியில் தேவையானது தண்டனையும் நிவாரணமுமே.

இன்று இந்த இரண்டுக்காகவும் நாம் போராட வேண்டும்.

அதில் முக்கியமானது நிவாரணமாகும். அந்த நிவாரணம் சலுகை அடிப்படையிலான பொருட்களோ, உதவிகளோ அல்ல. அவற்றையும் உள்ளடக்கிய நிரந்தரத் தீர்வே.

இழப்புகளுக்கான ஈடு என்பது தீர்வே. அது அரசியல் தீர்வு. வாழ்வாதாரத் தீர்வு. நிலையான அமைதிக்கும் சமத்துவத்துக்கும் ஜனநாயக மேம்பாட்டுக்குமான தீர்வு. சுயாதிபத்தியத்துக்கான தீர்வு என அமையவேண்டும்.

இதையே ஐ.நா செய்ய வேண்டும். இதையே சர்வதேச சமூகம் செய்ய வேண்டும். இதையே இந்தியா செய்ய வேண்டும். இதையே இலங்கையும் தமிழ் அரசியற் தலைமைகளும் செய்ய வேண்டும்.

யுத்தத்தை ஆதரித்தோரும் அதை நடத்தியோரும் அதை உருவாக்கியோரும் இந்தத் தீர்வுக்கு உதவ வேண்டும். அதைப் பொறுப்பெடுத்துச் செய்ய வேண்டும்.

இல்லையென்றால் இன்னும் குற்றங்கள் பெருகும். தவறுகள் தொடரும் வரையில், குற்றங்கள் தொடரும் வரையில் யாரும் அமைதியாக இருக்க முடியாது. எங்கும் அமைதி நீடிக்க முடியாது.


00

Monday 12 November 2012




வலுவற்ற நிலையில் ஒரு சமூகம் இருக்கும்போது அது எளிதில் பிறருடைய (எவருடையதும்) காலில் வீழ்ந்து விடும் என்பது மிக எளிய உண்மை.


சமூகத்தை வலுவாக்கம் செய்யாமல், அதற்கான தயாரிப்புகளைச் செய்யாமல் வைத்துக் கொண்டு வாய்புலம்புவதிற் பயனேதுமில்லை. 

“““






போரிலே சிக்கிய பெண்களிற் சிலரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெண்போராளிகளாக முன்னர் இருந்தோரிற் சிலரும் பாலியற் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று குறிப்பிட்டு, பெண்போராளியொருவரின் நேர்காணல் ஒன்றை ‘ஆனந்த விகடன்’ இதழ் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. இதற்குப் பிரதான காரணம் வறுமையே என்றும் கூறப்படுகிறது. அதிலும் இந்தப் பெண்போராளி, தமிழர்களின் கலாச்சார மையங்களில் ஒன்றான யாழ்ப்பாண நகரத்திலே பாலியற்தொழிலைச் செய்து வருகின்றார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நேர்காணலைத் தொடர்ந்து உலகத் தமிழ்ப்பரப்பில் அதிர்ச்சி அலைகளும் கண்டனக் குரல்களும் எழுந்துள்ளன. ஊடகங்களிலும் இணைய வெளியிலும் கடந்த இரண்டு வாரங்களில் அதிக எண்ணிக்கையான வாசகர்களை ஈர்த்த விசயம் இதுதான்.

இந்த நேர்காணல் உண்மையானதா? இல்லையா? இந்த நேர்காணலில் சொல்லப்படும் விசயங்கள் உண்மையானவையா? இல்லையா? இவையெல்லாம் திட்டமிட்டுப் புனையப்பட்டவையா? என்ற மாதிரியான விவாதங்கள் சூடுபறக்கின்றன.

போராட்ட விசுவாசிகளாக நடிப்பவர்களும் ஆதரவாளர்களும் தேசியப் பற்றாளர்களும் இந்த நேர்காணலைப் படித்துக் கொதித்துப் போயிருக்கிறார்கள். இதேவேளை நியாயமாகச் சிந்திப்போர், இந்த நேர்காணலில் சொல்லப்பட்ட விசயங்கள் அனைத்தும் புறக்கணிக்கக் கூடியவை அல்ல என்று சொல்கிறார்கள்.

இந்தப் பேட்டியைக் குறித்து நடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் சில கருத்துகள் இப்படி உள்ளன.

 ‘ஆனந்த விடகனில் வெளிவந்த ஆக்கம் புனையப்பட்டதாக கூட இருக்கலாம். ஆனாலும் பல பெண் போராளிகளின் வாழ்வில் இது தானே நிஜம். பெண் போராளிகளுக்கு தங்களையும் தமது குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ள அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உத்தரவாதம் தான் என்ன? ஒரு பெண்போராளி தனது வாழ்வாதாரத்திற்காக பாலியல் தொழில் செய்வது தமிழ்க் கலாச்சாரத்தைக் கட்டிக்காப்பவர்களுக்கும் புலித் தேசியவாதிகளுக்கும் தமிழ்க் (வேட்டிக்) கலாச்சாரத்தின் புனிதம் உடைந்துவிட்டதே என அவமானமாக உள்ளதா?. இதை விமர்சித்து எதிர்வினை எழுதி தங்களுடைய வேட்டிக் கலாச்சாரத்தை காப்பாற்ற முனைகிறார்கள்’ என ஒரு கருத்துள்ளது.

 இன்னொன்று இப்படி இருக்கிறது - ‘அந்த செவ்வி மிகைப்படுத்தப்பட்டதாகவோ அல்லது தேசியவாதிகள் எனத் தம்மை குறிப்பிடுபவர்கள் சொல்வது போல புலனாய்வு வேலையாகவோ இருக்கலாம். ஆனால் அதில் குறிப்பிடப்பட்ட மூன்று விடயங்களை எவரும் மறுக்க முடியாது.

1. பெண் போராளிகள் மட்டுமல்ல போரினால் பாதிக்கப்பட்ட பெண்களும் பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்பட்டுள்ளார். இது உண்மை என்பதை எவரும் மறுக்க முடியாது. பெண் போராளிகள் மட்டுமல்ல. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களும் பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்பட்டமைக்கான காரணம் என்ன? அதற்கான பொறுப்பு யாரிடம் உள்ளது என்பதற்கு இந்த தேசியவாதிகள் பதில் சொல்ல வேண்டும். மேலும் இதற்கு புலம்பெயர் சமூகமே பொறுப்புபெடுக்க வேண்டும்.

2. தலைவர் இருக்கிறார் - போராட்டம் மீண்டும் வெடிக்கும் என முழக்கமிடும் தமிழக அரசியல்வாதிகளிடம் இந்த தேசிய வாதிகள் கேள்வி கேட்கட்டும்.

3. போராளிகளை பராமரிப்பதற்கு இந்த தேசியவாதிகள் வைத்திருக்கின்ற வேலைத்திட்டம் என்ன என்பதை அவர்கள் சொல்லட்டும்’ என்று.

இன்னொன்று இப்படியுள்ளது – ‘உலகத்தில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டமை புதிதான விடயம் அல்ல. ஆனால், பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கமுடியும். அவையாவன: ஒன்று – வறுமை. இரண்டு -  குறுகிய காலத்தில் அதிகளவு பணத்தை உழைக்கும் நோக்கம். .....போர் என்பது கொடுமையானது. போர் நடைபெறும், நடைபெற்ற ஒவ்வொரு நாட்டிலும், கற்பழிப்பும், பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும் இருந்தே வந்துள்ளது. இரண்டாவது உலகப் போரைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளில் பெருமெண்ணிக்கையான பெண்கள் தங்களது பிள்ளைகளை வளர்க்கப் பாலியல் தொழிலில் இடுபட்டு வந்துள்ளனர். போர் அற்ற காலத்திலேயே வறுமை காரணமாகப் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்கள், யாழ் குடாவின் சகல கிராமங்களிலும் இருந்துள்ளனர்! இந்த நிலையில், கொடுமையான போர் நடைபெற்ற எமது பிராந்தியத்தில், பெண் போராளிகளாயினும் சரி, சாதாரண குடும்பப் பெண்ணாயினும்சரி, கொடுமையான வறுமையில் இருந்து விடுவிக்கப்பட திட்டமிட்ட விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் கழிந்து விட்டன. ஆனால், இந்த மிகமுக்கிய காரியத்தினை எந்தத் தரப்பும் இன்றுவரை திட்டமிட்ட விதத்தில் செய்யவேயில்லை என்பதுதான் கசப்பான உண்மை’ என.

இன்னொன்று – ‘வாழ்வின் எந்தத் தருணங்களையும் இழக்காமல் கொண்டாடியபடி, படித்து, பட்டம்பெற்று, தொழில் பெற்று, கல்யாணமாகி பிள்ளை பெற்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், தங்களைப் போன்ற உணர்வுள்ள ஒரு மனிதப்பிறவியாகவே அவர்களையும் அணுக வேண்டும். அவர்களும் வாழ்வின் மீது எல்லாவிதமான தாகமுமுடையவர்கள். எல்லா தருணங்களையும் வாழ்ந்துவிட வேண்டுமென்ற துடிப்புள்ளவர்கள். ஆகவே இந்த வாழ்க்கையை – அதனை வாழ்ந்து முடிக்க சாதாரண மனிதர்களிற்கு எப்படியான சவால்களிருக்கிறதோ, அதே சவால்களை எதிர்கொண்டபடி- வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிற்கு இந்த உலகம் எந்தவிதமான சாத்தியங்களை வழங்கியுள்ளதோ, அவற்றினூடாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வேளை தவறாமல் பசியைக் கிளறும் வயிறு அவர்களிற்குமுள்ளது’ இப்படிப் பல கருத்துகள் உள்ளன.


போரிலே சிக்கிப் பாதிப்புக்குள்ளாகிய குடும்பங்களைச் சேர்ந்த பெரும்பாலான பெண்களும் விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்ட பெண்போராளிகளிற் பலரும் பொதுவெளியில் சந்தித்து வரும் வாழ்க்கை நெருக்கடிகள் மிகக் கொடுமையானவை. கணவரை இழந்த பெண்களும் உழைப்பாளரை இழந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் மிக மோசமான வறுமைச் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதுதான் அடிப்படைப் பிரச்சினை. இதுவே ஏனைய பல பிரச்சினைகளுக்கான வேராகும்.

பொருளாதாரப் பற்றாக்குறை அல்லது வறுமை, தொழில்வாய்ப்பின்மை, தொழில் செய்யமுடியாத உடல்நிலை, வாழ்க்கைத்துணை இல்லாத நிலை,  திருமணம் மற்றும் பாதுகாப்பான எதிர்காலம் குறித்த கேள்விகள் எல்லாம் இவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகளாக உள்ளன.

இதேவேளை, இவர்களிற் குறிப்பிட்டளவினருக்கான வாழ்வாதார உதவிகளை அரசாங்கமும் தொண்டு நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வழங்கியிருக்கின்றபோதும், அந்த உதவியானது இவர்களுடைய வாழ்க்கையைக் கொண்டு நகர்த்துவற்கும் அதற்கு அடித்தளத்தை அமைப்பதற்கும் போதவே போதாது.

இதைப் பற்றி ஒரு தொண்டு நிறுவன அதிகாரியிடம் கேட்டேன். அவர் சொன்னார், ‘தொண்டு நிறுவனங்களின் மூலமாக வழங்கப்படுகின்ற உதவிகள் எதுவும் மீளக்குடியேறிய மக்களுக்குப் போதாது. அதிலும் போரிலே சிக்கி, அகதி முகாம்களில் இருந்து மீண்டவர்களுக்குப் போதவே போதாது. இதை நாங்கள் அவர்களுக்கான பணிகளின் போது தெளிவாக அவதானித்திருக்கிறோம்.

சிலருக்கு உறவினர்கள் மூலமாக வெளி உதவிகள் கிடைக்கின்றன. அவர்கள்  அதை வைத்துக் கொண்டு சமாளிக்கிறார்கள். ஏனையோரின் நிலை மோசமானதே. ஆனால், எங்களாலும் ஒரு எல்லைக்கு மேலே உதவ முடியாது. அதற்குரிய நிதியும் திட்ட அனுமதியும் எங்களிடம் இல்லை.

இந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்றால் அதற்கெனத் தனியான, விசேட திட்டங்களும் மேலதிக உதவி நடவடிக்கைகளும் தேவை. இல்லையென்றால், சுயதொழிலுக்காக வழங்கப்படுகின்ற வாழ்வாதார உதவிகளை அவர்கள் அடிப்படைத்தேவைகளுக்கே பயன்படுத்துவார்கள். இதில் எனக்குத் தெரிந்த பல உதாரணங்கள் உண்டு. இங்கே ஒன்றை மட்டும் சொல்கிறேன்’ என்று தொடர்ந்த அவர், மேலும் விளக்கினார் -

‘பெண்ணொருவர் தலைமை தாங்கும் குடும்பமொன்றுக்கு வாழ்வாதார உதவியாக கோழிகளைக் கொடுத்திருந்தோம். சில வாரங்களுக்குப் பிறகு அவருடைய முன்னேற்றத்தை அவதானிக்கச் சென்றோம். அங்கே நாம் கொடுத்த கோழிகளைக் காணவில்லை. என்ன நடந்தது என்று விசாரித்தபோது, அவர் சொன்னார், ஐயா, நீங்கள் தந்த கோழிகளை நல்ல மாதிரி வளர்த்து இந்தப் பிள்ளைகளைக் காப்பாற்றலாம் எண்டுதான் நானும் பாடுபட்டன். ஆனால், பிள்ளைக்குச் சுகமில்லை. ஆஸ்பத்திரிச் செலவுக்காக கடனெல்லாம் வாங்கியும் சமாளிக்க முடியேல்ல. வேற ஆட்களிடமிருந்தும் உதவிகள் கிடைக்கவில்லை. இந்த நிலைமையில என்னால் என்ன செய்ய முடியும்? வீட்டில நிற்கிற கோழிகளை விற்றாவது பிள்ளையைக் காப்பாற்ற வேணும் எண்டு, அதுகளை வித்திட்டன். அப்பிடிக் கோழிகளை விற்றதால எனக்குத்தான் நட்டம். ஆனால், பிள்ளையைக் காப்பாற்றிறதுக்கு எனக்கு வேற வழியில்லை என்று சொன்னார் அந்தப் பெண்.

இன்னொருவர் அவருக்கு வழங்கிய நீர் இறைக்கும் இயந்திரத்தை விற்றே மனைவியின் வைத்தியச்செலவைச் செய்திருக்கிறார்’ இப்படித்தான் இந்த மாதிரிக் குடும்பங்களின் நிலைமை இருக்கிறது’ என்றார்.

கொடுக்கப்பட்ட வாழ்வாதார உதவிகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு, தங்களின் வாழ்வைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக அவற்றை விற்க வேண்டிய நிலை பல சந்தர்ப்பங்களிலும் அவர்களுக்கு ஏற்படுகிறது. இந்தப் பொருட்களை ஒரு தடவை மட்டும்தான் விற்கலாம். ஒரேயொரு தடவை மட்டுந்தான் நெருக்கடி நிலைமையையும் சமாளிக்கலாம்.

அதற்குப் பிறகு?

அதற்குப் பிறகு அவர்களிடம் கையில் எதுவும் இருப்பதில்லை. மிஞ்சியிருப்பது ஒன்றே ஒன்றுதான். அவர்களுடைய உடல். புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ கதையில் வருவதைப்போல, கணவரைக் காப்பாற்ற வேண்டும், அவருக்கு மருந்து வாங்க வேண்டும் என்றால், தன்னுடலை விற்றே அதைச் செய்ய வேண்டும். அதைத் தவிர அவளுக்கு வேறு கதியில்லை என்ற நிலை.

இங்கும் இதுதான் கதை@ இதுதான் உண்மை நிலை.

ஆகவே, போரிலே சிக்கிய பெண்களிற் சிலரும் முன்னர் போராளிகளாக இருந்தோரிற் சிலரும் இன்று இந்த நிலைக்குத்தான் வந்தடைந்திருப்பது தவிர்க்க முடியாததே. இனி இந்தக் கதைதான் தொடரப்போகிறது. இதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் இல்லையென்றால், உரிய திட்டங்கள் இல்லையென்றால், பொருத்தமான சிந்தனை இல்லையென்றால் இந்த அவல நிலை பெருகும். அது சீரழிவையே கொண்டு வரும்.

பொதுவாகப் போரினால் பலவகையான பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவதுண்டு. இதில் பெண்கள் சந்திக்கின்ற பாதிப்புகளே அதிகமானதும் தாக்கங்கள் கூடியதும். பொதுவாகவே போர் பெண்களையே கூடுதலாகப் பாதிக்கிறது.

போரினால் உழைப்பாளரை இழக்கின்ற குடும்பங்கள் பொருளாதார ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிக மோசமான சிதைவுக்குள்ளாகின்றன. வன்னியில் ஏறக்குறைய ஐயாயிரம் வரையான பெண்கள் கணவரை இழந்த நிலையில் உள்ளனர். இவர்களின் எழுபது வீதமானவர்கள் இளம்பெண்கள். 40 வயதுக்குக் குறைந்தவர்கள். இதிலும் அதிகமானவர்கள், 30 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களைப் போல இன்னொரு தொகையிலானவர்கள் கிழக்கில் உள்ளனர். ஏறக்குறைய பதின்நான்காயிரம் வரையான பெண்கள்.

ஆகவே ஏறக்குறைய பதினைந்தாயிரம் வரையான பெண்களின் நிகழ்காலமும் எதிர்காலமும் எப்படி இருக்கும் என ஒரு கணம் நினைத்துப்பாருங்கள்.

இவர்களில் இளம்பெண்களாக இருப்போருக்குப் பல பிரச்சினைகள் உள்ளன. இவர்களின் பிள்ளைகள் வளர்வதற்கு இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் செல்லும். அதுவரையிலும் பிள்ளைகளை வளர்த்தே ஆகவேணும். பிள்ளைகள் வளர்ந்து ஆளாகும் வரையில் நீண்ட காலத்துக்கு இந்தப் பொறுப்பு இவர்களுடைய தலையில் சுமையாகிறது.

எனவே இந்த நீண்ட காலச் சுமையை தொடர்ந்து தாக்குப்பிடிக்க இவர்களால் முடிவதில்லை. அதனால், தவிர்க்க முடியாமல் வேறு வழிகளில், இந்த மாதிரிப் பாலியல் தொழில்வரை இறங்குகின்றனர். பின்னர் அதுவே வாழ்வாகிப்போகிறது.

இந்தப் பெண்களின் இயலா நிலையைப் பயன்படுத்தித் தமிழர்களில் ஒரு சாராரும் படையினரில் ஒரு சாராரும் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். ஆனால் விளைவு சமூகச் சிதைவாக, சீரழிவாக மாறிவிடுகிறது.

இது தனியே குறிப்பிட்ட பெண்களையோ ஏற்கனவே பெண் போராளிகளாக இருந்தோரையோ மட்டும் பாதிப்பதில்லை. ஆனால், ஒரு மாற்றுத் தீர்வை முன்வைக்காமல், அதை நடைமுறைப்படுத்தி இவர்களை ஒரு நிலைப்படுத்தாமல் விட்டுக்கொண்டு எத்தகைய விமர்சனங்களை முன்வைப்பதும் பொருத்தமானதல்ல. அது இவர்களை மேலும் மேலும் நெருக்கடிக்குள்ளேயே கொண்டு செல்லும். அதாவது, பாலியற் தொழிலிலும் சீரழிவிலும் ஈடுபடும் பெண்களை மட்டுமல்ல, அவர்களுடைய பிள்ளைகளையும் குடும்பங்களையும் சீரழிக்கும். தொடர்ந்து அது ஒரு சமூக நோயாகிவிடும்.

இந்த அபாய நிலையைக் குறித்து தொடர்ச்சியாக ஒரு சாரார் குறிப்பிட்டே வந்துள்ளனர். அதைப் பொறுப்பானவர்கள் தங்களுடைய கடமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஊடகங்கள் கூட இதைக் கவனிக்க வேண்டிய ஒரு விவாதமாக எடுத்துச் செல்லவும் இல்லை. எல்லோருக்கும் பரபரப்புக்கும் வியாபாரத்துக்கும் இந்த மாதிரி விசயங்கள் தேவை.

புலம்பெயர் தமிழர்களிற் பெரும்பாலானவர்கள் கூட பரபரப்பான செய்திக்காக காத்திருக்கும் மனநிலைக்கு வளர்ந்துள்ளனரே தவிர ஆக்கபூர்வமான முறையில் ‘பிணிநீக்கத்தை’ச் செய்ய முன்வருவதில்லை. மிகக் குறைந்தளவு ஆட்களே ‘நன்செய்’ மனப்பாங்குடன் இயங்குகின்றனர். ஏனையோரின் மனதில் நிறுவைக் கருவியும் அடையாளப்படுத்தும் லேபிள்களுமே உள்ளன.

போரினால் பாதிக்கப்பட்ட பெண்களையும் சமூகத்தையும் வளப்படுத்தக் கூடிய திட்டங்களுடன் பொருத்தமான தொழிற்றுறையை ஆரம்பிக்க வேண்டியவர்கள் அதைச் செய்யவில்லை. இதைக்குறித்து நானே ஆரம்பத்தில் - இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியிருக்கிறேன்.

வலுவற்ற நிலையில் ஒரு சமூகம் இருக்கும்போது அது எளிதில் பிறருடைய (எவருடையதும்) காலில் வீழ்ந்து விடும் என்பது மிக எளிய உண்மை.

சமூகத்தை வலுவாக்கம் செய்யாமல், அதற்கான தயாரிப்புகளைச் செய்யாமல் வைத்துக் கொண்டு வாய்புலம்புவதிற் பயனேதுமில்லை.

வன்னியிலும் கிழக்கிலும் தொழிற்றுறை மேம்பாடுகளைச் செய்து, சனங்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி, அவர்களை உழைக்கும் மக்களாக மாற்றியிருந்தால் சமூகத்திற்கும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதார நிலையும் பலம்பெற்றிருக்கும்.

ஆனால், அதைச் செய்வதற்குப் பின்னிற்கும் நிதிவளமுடைய புலம்பெயர் சமூகம் இன்று இந்த மாதிரிச் செய்திகளைக் கண்டு கொதிக்கிறது. குமுறுகிறது. இது ஒரு முரண்நிலை மட்டுமல்ல தவறான விசயமும் கூட. அதைப்போல நிலவளமுடையோர் பலர், நாட்டை விட்டுப் பெயர்ந்திருக்கின்றனர். அவர்கள் தங்களின் நிலத்தில் ஒரு சிறுபகுதியை நிலமற்ற சனங்களுக்குக் கொடுக்கலாம். அவர்கள் தங்களுக்கென்று ஒரு வீட்டை அமைப்பதற்கும் அங்கே வாழ்வாதாரத்துக்கான தொழிலொன்றைச் செய்வதற்கும். பலருடைய அடிப்படைவ வாழ்க்கை சிதைவதற்குக் காரணம், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாமையே.

இதேவேளை இங்கே ஏதாவது வேலைகளுக்குச் செல்லலாம் என்றால், அவர்களை வேலைக்கு அமர்த்துவோர் அடிமாட்டுக் கூலியே கொடுக்கிறார்கள். போரினால் பாதிக்கப்பட்டவர்களை எப்படியும் கையாளலாம் என்ற துணிச்சலே இதற்குக் காரணம்.

கணவரை இழந்த பெரும்பாலான பெண்கள் வன்னியில் வீதி திருத்தத்தில்  கூலிகளாகியிருக்கிறார்கள். பல பெண்கள் கண்ணிவெடி அகற்றும் கடினமான பணிகளில் ஈடுபடுகிறார்கள். சிலர் கட்டுமான வேலைகளைச் செய்கிறார்கள். இன்னும் சிலர் புகையிரதப்பாதை அமைக்கிறார்கள். இவற்றில் கணிசமான அளவுக்கு போராளிகளும் உள்ளனர்.

இவர்கள் இளமையில் கல்விக்கான வாய்ப்பை இழந்தவர்கள். அப்படித்தான் படித்திருந்தாலும் தொழில் அனுபவம் இல்லாதவர்கள். சிலருக்குத் தொழில் அனுபவமும் துறைசார் அறிவும் இருந்தாலும் அதை ஒரு அங்கீகாரமாகக் கொள்வதற்கு சமூகத்தில் யாரும் தயாராக இல்லை.

இதேவேளை, போராளிகளாக இருந்த காலத்தில் சில துறைகளில் பணியாற்றியவர்களுக்கு அந்தத் துறைசார் அறிவும் அனுபவமும் உண்டு.  ஆனால், இந்தத் துறைசார் அனுபவத்தையும் அறிவையும் ஒரு தகமையாகக் கொண்டு எவரும் வேலைகளை இவர்களுக்கு வழங்கவில்லை.

அப்படி வேலைவாய்ப்பை வழங்கியவர்களும் மிகக் குறைந்த சம்பளத்துக்கே அந்தப்போராளிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு என எங்கும்  இதனைத் தாரளமாகக் காணலாம். ஏன் தமிழகத்துக்குச் சென்றுள்ள போராளிகளின் நிலையும் இதுதான். ‘எப்படித்தான் நல்லா வேலைசெய்தாலும் அடிமாட்டுக் கூலியே தருகிறார்கள். யாரும் மதிக்கிறார்களில்லை. அதற்கு மேல் கேட்டால் வேறிடத்தைப் பார் என்கிறார்கள் என்று சொல்கிறார்கள்’ என்று கவலைதெரிவிக்கின்றனர் ‘முன்னாள் போராளிகள்’.

ஆனால், இவர்கள் புலிகள் இயக்கத்தில் அந்தத்துறைகளில் இருந்தபோது இதே ஆட்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்கள்.  இப்பொழுது அந்த மதிப்பு தலைகீழாக இறக்கம் கண்டுள்ளது. ஒரு தோல்வி சமூகத்தின் மனப்பாங்கையும் மதிப்பீட்டையும் இப்படியெல்லாம் மாற்றிவிட்டுள்ளது? இதனால் இந்த ‘முன்னாள் போராளி’களுக்கு வேறு வழியோ கதியோ இல்லை.

இந்த நிலையில் வேலை வாய்ப்பைப் பெறமுடியாதவர்களின் கதி எப்படியிருக்கும்? அவர்களுடைய தெரிவுகள் பெரும்பாலும் கையறு நிலைக்குரியனவே. எனவேதான் இறுதியில் அவர்கள் தங்களின் உடலை முதலீடாக்குகின்றனர். இந்த இடத்தில் இவர்களை எவர், எப்படிக் குறை சொல்ல முடியும்?

ஆனால், குற்றவாளியாக இருக்கும் சமூகம் அதை மறைத்துக் கொண்டு தன்னுடைய கையில் அதிகாரத்தை எடுத்து தீர்ப்பை வழங்கத் துடிக்கிறது. மேலும் போதாதென்று இவர்களுடைய கதையை, நிலையை எழுதிப் பரப்பி மேலும் மேலும் தன்னுடைய பிழைப்பை வளர்த்துக்கொள்கிறது. உண்மையில் இது கண்டிக்க வேண்டியது. பதிலாக உடனடியாக இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட உதவித்திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் தேவை. அதை அரசாங்கம் பொறுப்புடன் செய்ய வேண்டும். அரசிடம் அதற்கான அமைச்சுகளும் உண்டு. அதிகாரிகளும் இருக்கிறார்கள். ஆனால், வேலைதான் நடக்கவில்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இதற்கு அரசாங்கத்துடன் தொடர்புடைய தமிழ் அரசியற் தலைமைகளும் சிங்கள முற்போக்குச் சக்திகளும் முயற்சிக்க வேண்டும்.

மறுபக்கத்தில் தமிழ்த் தேசிய அரசியல் எண்ணப்பாட்டுடன் செயற்படுவோருக்கு இதில் கூடுதல் பொறுப்புண்டு. அவர்கள் முன்சொன்னவாறு பாதிக்கப்பட்ட மக்களை மீள் நிலைப்படுத்துவதற்கான அத்தனை சாத்தியப்பாடுகளையும் உருவாக்க வேண்டும். வலுவான சமூக உருவாக்கத்துக்கு அர்ப்பணிப்புடன்; செயற்பட வேண்டும். இது ஒரு அவசியப் பணி. உடனடிப்பணி என்ற உணர்வோடு செயலாற்ற வேண்டும். இதில் புலம்பெயர் சமூகமும் தமிழகத்தின் ஆதரவாளர்களும் கூடுதற் பொறுப்புடன் பங்களிக்க வேண்டும்.

00

 

2009 ·. by TNB