கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

எல்லைகடந்த அதிகாரம் = ஜனநாயக நெருக்கடி

Sunday 5 February 2012
















அதிகாரத்தின் வரம்புகளே மக்களையும் வரலாற்றையும் சேதமற்ற முறையில் பாதுகாக்கின்றன. எல்லையற்ற அதிகாரம் எல்லாற்றையும் சிதைத்து விடுகிறது.

உலக அரசியல் வரலாற்றில் இந்தப் பாடம் பெரும்போதனைகளைத் தந்துள்ளது. ஆனால், அதேயளவுக்கு இந்தப் பாடத்தை எள்ளி நகையாடி நிராகரித்த வரலாறும் உண்டு.

இலங்கை அரசியலில் தமிழ், சிங்களத் தரப்புகள் என்ற பேதங்களின்றின்றி அதிகாரத்தின் எல்லைகளை உச்சமாகக் கடந்த நிகழ்ச்சிகள் தாராளமாக உண்டு. அதிலும் சிங்களத்தரப்பின் எல்லைகடத்தல் கட்டற்றது. இடையறாத தொடர்ச்சியைக் கொண்டது.

இத்தகைய கட்டற்ற, தொடர்ச்சியான, எல்லைகடந்த அதிகாரப் பிரயோகத்தின் போதே ஜனநாயகமும் சுதந்திரமும் கேள்விக்குள்ளாகும் நிலை ஏற்படுகின்றது. இந்தச்சந்தர்ப்பத்திற்தான் மக்கள் மிகப் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கிறார்கள்.

இலங்கையின் நெருக்கடிகள் இன்னமும் தீரவில்லை. முன்னர் இருந்த நெருக்கடிகளுக்குப் போர் காரணமாகக் காட்டப்பட்டது. இப்போது போர் முடிந்த பிறகு, காரணங்களைக் காட்ட முடியாது விட்டாலும் தேசிய பாதுகாப்பு என்றொரு காரணமும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கமே ஆட்சியிலிருக்கிறது என்பதும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை தனிநபருக்கான அதிகாரத்தைச் செறிவாக்கியுள்ளது என்ற காரணமும் பெரும்பாலான கட்சிகள் அங்கத்துவம் செய்யும் அரசாங்கமாக அது இருக்கிறது என்பதும் அதிகாரத்தை அரசுக்குக் குவித்துள்ளன.

இதன்காரணமாக ஆட்சியின் மையப்பகுதியில் இருக்கும் தலைவர்கள் தங்களின் சக்தியை மிகவலுவுடையதாக்கியிருக்கின்றனர்.

வீதியிலே ஓடுகின்ற பஸ் வண்டிகளில் இருந்து அரசாங்கத்தின் உயர் பீடங்கள் வரையில் இந்த அதிகாரத்தின் அடையாளங்களைக் காணமுடியும்.

எங்கும் ஒரே அடையாளம் என்ற வகையில் நாட்டின் தலைவரும் அவருடைய குடும்பத்தினரும் காட்சிப்படுத்தப்படுகின்றனர்.

இதற்கு யாரும் சில நியாயங்களைக் கற்பிக்கலாம். ஆனால், இதெல்லாம் நிச்சயமாக ஒரு ஜனநாயக நாட்டுக்கு அழகானவையே அல்ல. இது மன்னராட்சிக் காலமோ குடும்ப ஆட்சிக்கான சட்டங்கள் இயற்றப்பட்ட நாடோ அல்ல.

பிறருக்கு இடமளித்தல், பிறருக்கும் பிறவற்றுக்கும் விட்டுக்கொடுத்தல், ஏனையவற்றையும் முன்னிலைப்படுத்தல், சமமாக நடந்து கொள்ளுதல் என்ற அம்சங்களை வளர்ப்பதே போருக்குப் பிந்திய நாட்டின் அவசியத் தேவைகள்.

கடப்பாடுகளைப் பற்றிய அக்கறையற்ற மீறல்களாலும் உச்சகட்ட அடக்குதல்களாலும் மோசமாகக் காயடிக்கப்பட்ட ஜனநாயகச் சூழலை மீண்டும் உருவாக்க வேண்டியுள்ளது. மக்களுக்கு ஜனநாயகத்தைப் பற்றிய புரிதலையும் அதன் மீதான நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும்.

அதிலும் இனரீதியான போர் நடைபெற்றதொரு நாட்டில் நல்ல சமிக்ஞைகள் காண்பிக்கப்பட வேண்டும். மக்களின் நம்பிக்கையை அந்தச் சமிக்ஞைகள் உருவாக்க வேண்டும்.

மக்கள் பல எதிர்பார்ப்புகளுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நம்பிக்கையளிப்பதன் மூலமாக அவர்களின் மனதில் நிரந்தரமாகவே குடியேற முடியும். இதற்கொன்றும் கடினமாக வேலை செய்ய வேண்டியதில்லை.

சனங்களுக்கு விசுவாசமாக நடந்தாற் போதும். யாருடையதையும் யாருக்கும் எடுத்துக் கொடுக்க மாட்டோம் என்ற உறுதிப்பாட்டுடன் காரியங்களைச் செய்தால், அவற்றைப்பற்றி மக்களுக்கு முறையாக எடுத்துச் சொன்னால், இன ஐக்கியத்தின் அத்திபாரத்தை உருவாக்க முடியும்.

ஆனால், இதற்குப் பதிலாக தான்தோன்றித் தனமாகப் பேசுவதும் எழுந்தமானமாக நடந்து கொள்வதும் கேள்விகளுக்கு அப்பாலான பிராந்தியத்தில் தங்களை வைத்துக்கொள்வதும் எதிர்விளைவுகளையே உருவாக்கும்.

இன்றைய இலங்கை அச்சத்தினால் உழன்று கொண்டிருக்கிறது. வெளிநாடுகளின் அழுத்தங்கள் ஒரு பக்கம் இலங்கையைக் கலங்கடிக்கின்றன. உள்நாட்டுச் சக்திகளின் கொந்தளிப்பான மனநிலையை இட்டும் அரசாங்கம் கலங்கிக் கொண்டிருக்கிறது.

ஆகவே, அரசாங்கத்தின் உளநிலை அமைதியில் இல்லை. இந்த நிலையில் அதனால் எப்படி நாட்டின் சுபீட்சத்தைப் பற்றிச் சிந்திக்க முடியும்? என்று கேட்கிறார் ஒரு மூத்த சிங்கள ஊடகவியலாளர்.

உளநிலையில் அச்சத்தின் பாரம் அதிகரித்தால் குழப்பமும் பதற்றமும் சந்தேகமும் ஏற்படும். இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிந்திய காலம் என்பது இலங்கையைப் பதற்றமான சூழலுக்குள்தான் தொடர்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களும் சிந்தனையாளர்களும் நாட்டை இந்த நிலையில் இருந்து மீட்பதற்காகப் பாடுபடவில்லை.

நாட்டின் பிரதான மதங்களாக இருக்கின்ற பௌத்தமும் கிறிஸ்தவமும் சைவமும் இஸ்லாமும் கூட இரத்தத்தில் தோய்ந்தனவாகவோ இரத்தத்தில் தோய்க்கப்பட்டதாகவோதான் இருக்கின்றன.

இரண்டாம் உலகப் போரின் பொழுது ஜேர்மனியில் ஹிட்லருக்கு ஆதரவளித்ததைப் போன்ற ஒரு மனநிலையிலும் நியாய உருவாக்கத்திலுந்தான் இலங்கையின் மக்கள் இருக்கின்றனர்.

ஒருவரின் மீது ஒருவர் பழிதீர்ப்பதற்காக அவர்கள் வெட்கப்படவேயில்லை. ஒரு சமூகத்தின் வாழ்வின் மீது இன்னொரு சமூகம் நஞ்சை ஊற்றுவதற்கும் பின்னிற்கவில்லை. இதெல்லாம் தவறு என்று அவை கருதவும் இல்லை.

இல்லையெனில், அமைதியும் வளமும் நீண்ட பாரம்பரியமும் மதக் கட்டுப்பாடுகளை அடியொற்றித் தமது பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் வகுத்துக்கொண்ட இலங்கையின் சமூகங்கள் இவற்றுக்கெதிராக வன்முறையில் ஈடுபட்டதை என்னவென்பது?

சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையின் வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட இனவன்முறைகளுக்கான அடிப்படைகள் எப்படி உருவாகின? இந்த வன்முறைகளின்போது ஒருவரின் மீது ஒருவர் பழிதீர்ப்பதற்காக யாரும்  வெட்கப்படவேயில்லை. ஒரு சமூகத்தினுடைய வாழ்வின் மீது இன்னொரு சமூகம் நஞ்சை ஊற்றுவதற்குப் பின்னிற்கவில்லையே. இதெல்லாம் தவறு என்று அவை கருதவும் இல்லையே.

இந்த இடத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடும் விசயத்தை மீள்பதியலாம். அது இரண்டாம் போரின்போது யூதர்களின் மீது, நாஜிகள் உச்ச வன்முறையை நிகழ்த்திக்கொண்டிருந்த காலம்.

அந்தச் சூழலைப் பற்றிய தன்னுடைய கேள்விகளை ஜெயமோகன் எழுப்புகிறார்.

‘சாதாரண மக்கள் எப்படி இந்தக் கொலைகளை ஒத்துக்கொண்டு ஹிட்லரின் அணியில் திரண்டார்கள்? எளிய படைவீரர்கள் எப்படி இந்த படுகொலைகளைச் செய்தார்கள்? அதைவிட நாஜிகளை ஆதரித்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் எப்படி இப்படுகொலைகளை ஏற்றுக்கொண்டார்கள்?

நாஜிகளின் படுகொலை அமைப்பில் மருத்துவர்களும் அறிவியலாளர்களும் இணைந்திருந்தார்கள். யூதர்களைக் கொல்ல சான்றிதழ் வழங்கியது மருத்துவர்களே. அறிவியலாளர்கள் யூதர்களை தங்கள் ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை மிருகங்களாக பயன்படுத்திக் கொண்டார்கள்’.

இதெல்லாம் எப்படி நிகழ்ந்தன?

காலம் மாறியிருக்கிறது. இது இரண்டாம் உலகப்போர் முடிந்து அறுபது ஆண்டுகளுக்குப் பிந்திய காலம். அந்த நூற்றாண்டு முடிவுற்று இன்னொரு புதிய நூற்றாண்டு பிறந்து விட்டது. மனிதனின் அறிவியல் வளர்ச்சிகள் மிகப் பெரும் எல்லையை நோக்கி விரிந்துள்ளது.

தவறுகளில் இருந்தும் குற்றங்களில் இருந்தும் போதாமைகளில் இருந்தும் மனிதனையும் அவனுடைய சமூகத்தையும் விடுவித்துக்கொள்வதற்கான சிந்தனையும் தத்துவங்களும் தொழில் நுட்பமும் அறிவும் விஞ்ஞானமும் உழைப்பும் பண்பாடும் உருவாகியுள்ளன.

ஆனால், இவையெல்லாவற்றையும் நிராகரித்து விட்டு அல்லது இவற்றின் இடுக்குகளுக்குள்ளால் அதிகாரத்தைக் கைப்பற்றும் மனோபாவம் மட்டும் அதே விலங்குநிலையில் இன்னும் உள்ளது.

இதுதான் மானுட குலத்தின் துயரவிதியா? இப்படி எண்ணும்படியே நிலைமைகள் உள்ளன. அரசியல் என்பது எதையும் எவரையும் பாதுகாப்பது, உருவாக்குவது, மேம்படுத்துவது என்ற அர்த்தத்துக்கு அப்பால், எல்லாவற்றையும் சிதைப்பது என்ற முறைமையில் - பழைய சுவடுகளின் தடத்தில் பயணிப்பது பொருத்தமானதே அல்ல.

இத்தகைய அரசியலின் பலவீனங்களை முதலீடாக்கிக் கொண்டு மேற்குலகின் எஜமானர்களும் ஏகாதிபத்தியர்களும் தங்களின் மூக்கை நுழைத்துக் கால்களைப் பதித்துக் கொள்கிறார்கள் உலகெங்கும்.

இத்தகைய நிலையிற்தான் இன்றைய இலங்கையின் நிலைவரமும் உள்ளது. பதற்றமும் அந்நியச் சக்திகளுக்கான வாய்ப்புகளைத் திறந்து விடக்கூடிய நிலையும் அதிகரித்துள்ள சூழலில்தான் இலங்கை அரசியலும் ஆட்சியம் நடந்து கொண்டிருக்கின்றன.

வெளியாரின் தலையீட்டினால் வெளியாரைத் தவிர வேறு யாருக்குமே நன்மைகள் கிட்டாது. இதை மக்கள் புரிந்து கொள்வதும் குறைவு. மக்களுடன் உரையாடலைச் செய்வதற்கு யாருக்கும் நேரம் இல்லை. அதை யாரும் விரும்பிக் கொள்வதும் இல்லை.

மக்களின் கேள்விகள் தங்களைக் காயப்படுத்தி விடக்கூடும். அல்லது நிர்வாணப்படுத்தி விடக்கூடும் என்று ஆட்சியாளர்களும் அரசியல் செய்வோரும் அஞ்சுகின்றனர்.

ஆனால், அரசியலைப் பொறுத்து மக்களின் கேள்விகளே அரசியலைச் சுத்தப்படுத்தும் மருந்தாகவும் பயிருக்கு ஊற்றப்படும் நீரைப் போன்றும் இருக்கிறது.

சனங்களின் கேள்வி அரசியலாளர்களை யதார்த்தத்துடனும் உண்மையுடனும் இணைத்து வைத்திருக்கின்றன. இப்படியான ஒரு நிலைமை ஏற்படும்போது சனங்களின் மனங்களில் அந்த அரசியலாளர்களும் அவர்களுடைய கொடிகளும் இடையறாது பறந்து கொண்டிருக்கும்.

ஆனால், இது மக்களுக்கும் தங்களுக்கும் இடையிலான வெளியைக் குறைத்து ஒன்றாக்கி விடும் என்று ஆட்சியாளர்களும் அரசியலாளர்களும் கருதுகிறார்கள். இடைவெளியொன்றில் இருக்கும் அதிகாரப் படிநிலையில் இருக்கின்ற சுவை மற்ற ருஸிகளைச் சுவையற்றதாக்கி விடுகிறது.

அதிகாரத்தின் ருஸியைச் சுவைத்த நாக்கு, ஒரு போதுமே பிற சுவைகளை விரும்புவதில்லை. அது மரணத்தின்வரையிலும் அதற்காகவே ஏங்கிக் கொண்டிருக்கும்.

வரலாறு என்னதான் மகத்தான பாடங்களைக் கற்றுக் கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வதற்கான மனம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. பேராழுமைகள் என்று சொல்லத்தக்க மனிதர்கள் தங்களைத் தாங்களே உருவாக்காத வரையில் - ஒவ்வொரு மனிதரும் தன்னை மனிதராக, மனச்சாட்சியின் பாற்பட்டவராக, தன்னைத் தானே உணர்ந்து கொள்ளும்வரையில் அரசியலும் அறமும் வாழ்க்கையும் நாடும் பிழைத்தேயிருக்கும்.

மறுபடியும் திரும்பச் சொல்வதானால், அதிகாரத்தின் வரம்புகளே மக்களையும் வரலாற்றையும் சேதமற்ற முறையில் பாதுகாக்கின்றன. எல்லையற்ற அதிகாரம் எல்லாற்றையும் சிதைத்து விடுகிறது.

உலக அரசியல் வரலாற்றில் இந்தப் பாடம் பெரும்போதனைகளைத் தந்துள்ளது. ஆனால், அதேயளவுக்கு இந்தப் பாடத்தை எள்ளி நகையாடி நிராகரித்த வரலாறும் உண்டு.

இலங்கை அரசியலிலும் தமிழ் சிங்களத் தரப்புகள் என்ற பேதங்களின்றின்றி அதிகாரத்தின் எல்லைகளை உச்சமாகக் கடந்த நிகழ்ச்சிகள் தாராளமாக உண்டு. அதிலும் சிங்களத்தரப்பின் எல்லைகடத்தல் கட்டற்றது. இடையறாத தொடர்ச்சியைக் கொண்டது.

இத்தகைய கட்டற்ற, தொடர்ச்சியான, எல்லைகடந்த அதிகாரப் பிரயோகத்தின் போதே ஜனநாயகமும் சுதந்திரமும் கேள்விக்குள்ளாகும் நிலை ஏற்படுகின்றது இந்தச்சந்தர்ப்பத்திற்தான் மக்கள் மிகப் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கிறார்கள்.

இலங்கையின் நெருக்கடிகள் இன்னமும் தீரவில்லை. இந்த நிலை நீடிக்குமானால், தொடருமானால் எந்த நெருக்கடியும் தீராது@ வளரும்.

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB