கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

களைப்படைந்த இலங்கையர் அல்லது காயப்பட்ட இலங்கையர்கள்

Monday 16 July 2012





இலங்கையில் யுத்தத்துக்கு கொடுக்கப்பட்ட ஒத்துழைப்பையும் ஆதரவையும் கவனத்தையும் முயற்சிகளையும் உழைப்பையும் சமாதானத்துக்குக் கொடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. இலங்கையர்களும் முன்வரவில்லை. இலங்கைக்கு வெளியே இருப்போரும் முன்வரவில்லை. இதனால், அமைதி என்பது அபாயப்பிராந்தியத்தை நோக்கி நகர்கிறது.
யுத்தத்தின் பங்காளிகள் அனைவரும் சமாதானத்துக்கு வெகு தொலைவிலேயே நிற்கிறார்கள். யுத்தம் முடிந்தவுடன் அந்த அரங்கிலிருந்து அவர்கள் இரகசியமாக மறைந்து விட்டார்கள். பதிலாக மேலும் ஆயுதமற்ற ஒரு யுத்தத்தை இலங்கையில் நிகழ்த்தி வருகிறார்கள். முரண்பாடுகளைப் பலப்படுத்தி, அவற்றை விரிவாக்கம் செய்கிறார்கள். தங்களுடைய நலன் விஸ்தரிப்புவாத அரசியலுக்காக இத்தகைய முரண்பாட்டு விரிவாக்கத்தை அவர்கள் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.
இலங்கையில் சமாதானத்தைக் குறித்து விசுவாசமாகச் சிந்திப்போர் யார் என்று யாராலும் அடையாளப்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது. இதேவேளை இனமுரண் அரசியலை மேலும் கூர்மைப்படுத்தும் முயற்சிகள் தாராளமாக நடக்கின்றன. அதுவும் வெளிப்படையாக. என்னதான் நியாயப்பாடுகளை முன்வைத்தாலும் முரண்பாட்டை வளர்ப்பதன் மூலம் அமைதியைப் பெற முடியாது, சமாதானத்தை எட்ட முடியாது என்பது நமது அனுபவம். ஆனால், யுத்தத்தின் களைப்பு அடங்க முன்னரே இப்படியொரு விபரீதிய அரசியல் விளையாட்டு நிகழ்கிறது.
இதொன்றும் புதிய விசயமல்ல. இலங்கையில் முன்னர் நடந்ததும் இதுதான். உலகத்தின் பல திசைகளிலும் நடந்தது, நடந்து கொண்டிருப்பதும் இதுதான். பிரித்து ஆளுந்தந்திரத்தினூடே அதிகாரத் தரப்புகள் தங்கள் நலன்களைப் பெறுதல் என்பது.
ஆகவே இலங்கையின் சமாதானத்துக்கான வானம் இருண்டேயிருக்கிறது. ஆனால்,  முக்கியமாக சமாதானத்தை உருவாக்குவதற்காக ஒரு அரசியியல் ஆட்சி இருக்க வேண்டியது அவசியம். போரை நடத்துவதற்கு மட்டும்தான் பிரச்சாரம் மற்றும் சந்தைப்படுத்தல் இருக்க வேண்டும் என்பதல்ல. சமாதானத்தை காண்பதற்கும் அது தேவை. உண்மையில் யுத்தத்தை தொடர்வதற்காக அடையாளங்களை விற்பனை செய்த சமூகத்தவரிடையே சமாதானத்தை தேடுவதற்கான மிகவும் உக்கிரமான வடிவத்திலான பிரச்சாரம் மற்றும் சந்தைப்படுத்தல் என்பன அவசியம். என அண்மையில் ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
போரையும் விடச் சமாதானத்தை உருவாக்குவதற்கே அதிக உழைப்பும் முயற்சிகளும் திட்டமிடல்களும் தேவை. ஏனெனில் சமாதானத்துக்கு எதிராளிகள் அதிகம். போர் உணர்ச்சிகளின் மையத்தில் உருவாக்கப்படுவது. சமாதானம் நம்பிக்கைகளின் மையத்தில் உருவாக்கப்படுவது. பகைமையை ஒரு சொல்லின் மூலம் இலகுவாக உருவாக்கிவிட முடியும். ஆனால், சமாதானத்தை உருவாக்குவதற்கு ஆயிரம் சொற்களும் போதாது. ஆகவே அதை உருவாக்குவது மிகக் கடினம்.  
சமாதானத்தை அறைகூவல் செய்ய வேண்டியவர்கள், அதற்கு ஒத்துழைப்பும் ஆதரவும் தரவேண்டியவர்கள், சமாதானத்துக்காக உழைக்கவேண்டியவர்கள் அந்த அரங்கிற்கு வெளியே கள்ளத்தனமான நடவடிக்கைகளுடன் கூடாரம் அமைத்துள்ளனர்.
இதுதான் இன்றைய பிரச்சினையும் கடினமான முரணுமாக உள்ளது.
போருக்குப் பிந்திய நாட்களைக் கையாள்வது போர்க்காலத்தைக் கையாள்வதையும் விடக் கடினமானது. அதிலும் இலங்கை நிலவரம் முற்றிலும் வேறுபட்ட யதார்த்தத்தைக் கொண்டது.
இலங்கையில் அரசுக்கும் அதனுடைய எதிர்த்தரப்பான புலிகளுக்கும் இடையிலான போராக நடைபெற்ற யுத்தம் அமையவில்லை. அப்படியான ஒரு தோற்றப்பாட்டை உருவாக்குவதற்கு இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் முயற்சித்தன. புலிப்பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற பிரகடனத்தையே அவை செய்தன. ஆனால், நடைமுறையில் இலங்கை அரசு தமிழர்கள் அனைவரையும் புலிகள் என்று கருதியதால், சந்தேகித்ததால் புலிகள் மீதான போர் என்பது, தமிழர்களின் மீதான போராக மாறியது.
இதேபோல சிங்களச் சமூகங்களின் மீதான புலிகளின் போர்ப் பிரயோகங்கள் சிங்கள மக்களின் மனதில் தமிழ் – சிங்களச் சமூகங்களின் போர் என்ற மனப்பதிவை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அது தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையேயான போராகவே இரண்டு சமூகங்களின் உணர்வில் பரிமாணம் பெற்றுள்ளது. இதன் விளைவாக போரின் முடிவு அல்லது அதில் ஏற்பட்ட வெற்றி தோல்வி என்பன எதிர்விளைவுகளை உருவாக்கின.
அரசின் வெற்றி என்பதைச் சிங்களத் தரப்பின் வெற்றியாகவும் புலிகளின் தோல்வி என்பதைத் தமிழரின் தோல்வி எனவுமே பெரும்பாலான தமிழர்கள் உணர்கிறார்கள். இவ்வாறான ஒரு சமன்பாட்டையே சிங்கள மக்களும் கொண்டுள்ளனர்.
போர் நடைபெற்ற இடங்களுக்குப் பயணித்து வருகின்ற சிங்கள மக்களின் மனநிலையும் ஆட்சியாளரின் கூற்றுகளும் நடவடிக்கைகளும் கூட ஏறக்குறைய அப்படித்தான் உள்ளன.
வென்றவர்கள், வெற்றியின் புரிப்புடன் தோற்றவர்களையும் தோற்றவர்களின் இடங்களையும் பார்க்கும், அணுகும் நிலை இது.
இதனால், தமிழ் மக்களின் உளநிலை மேலும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. அது உளவியல் ரீதியாக எதிர்மறையான அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன்விளைவாகவே அரசாங்கமும் வெளியுலகமும் சமாதான விரும்பிகளும் சொல்லி வருகின்ற பகை மறப்பு என்ற மதிப்பார்ந்த விசயத்தை தமிழர்கள் தங்களுக்கு வெளியே வைத்துள்ளனர். பகை மறப்பு என்பதைத் தங்களின் சரணாகதி என்ற விளக்கமே பெரும்பாலான தமிழர்களிடம் காணப்படுகிறது.
பகை மறப்பென்பது, ஆதிக்கத்திலிருக்கும் சிங்களத் தரப்பிடமிருந்து முதலில் வரட்டும் என அவர்கள் சொல்வதற்கான காரணம் இந்த அடிப்படையிற்தான் பிறந்துள்ளது.
போரினால் ஏற்பட்ட காயங்கள், வடுக்களோடு வாழ்கின்ற தமிழ் மக்களை ஆற்றுப்படுத்தும் ஒரு சிறப்புப் பணியை இதயக் கதவுகளைத் திறந்து இலங்கை அரசு நடத்தியிருந்தால், சிங்கள மக்களை இந்தக் காயங்களை ஆற்றுப்படுத்தும் தர்மப் பணியில் ஈடுபடுத்தியிருந்தால், இன்று நிலைமை சற்று மாற்றமடைந்திருக்கும்.
ஆனால், இதற்கு முற்றிலும் மாறான வகையில் அது யுத்த வெற்றிகளைச் சிங்கள மக்களுக்குப் பரிசளித்து வருகிறது. தன்னுடைய அரசியல் இருப்புக்காக அந்த வெற்றியை கொண்டாடுவதன் மூலம் தமிழ் மக்களின் மனதில் எதிர்நிலை உணர்வுச் சித்திரங்களை அது ஆழமாக வரைந்துள்ளது. இதனால், நிலைமை மேலும் கடினமாகியுள்ளது. சமூகங்களுக்கிடையிலான இடைவெளியும் மேலும் அதிகரித்துள்ளது.
நேர் முகங்கொள்ள வேண்டிய அரசியற் பயணம் மீண்டும் எதிர்நிலையைக் கொண்டு பயணிக்கிறது.
இதேவேளை யுத்த முடிவுக்குப் பிறகு இலங்கை கடும்போக்கினைக் கொண்டுள்ளது. உள்ளரங்கிலும் சரி, வெளியரங்கிலும் சரி இன்றைய இலங்கை அரசாங்கத்தின் போக்கு அப்படித்தானுள்ளது.
அது யுத்தத்தின் போது நண்பர்களாக இருந்த பலரையும் கைவிட்டுள்ளது. அமைதிக்காகவும் சமாதானத்துக்காகவும் உழைப்போரையும் சிந்திப்போரையும் தூர வைத்துள்ளது. இதற்குக் காரணங்கள் பலவுண்டு. அவற்றில் முதன்மையானது, வெளிச்சக்திகளை இலங்கை தூர வைத்திருப்பது அல்லது தூர வைத்திருக்க முயற்சிப்பது.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவது, புலிகளின் அச்சுறுத்தலை நீக்குவது என்ற தேவையைப் பயன்படுத்தி இலங்கையைப் பொறிக்குள் சிக்க வைக்கும் முயற்சிகள் வெளியுலகின் மூலம் நடக்கின்றன என்பதை இலங்கை ஏற்கனவே முன்னுணர்ந்திருந்தது.
இலங்கையின் தேவை, அது எதிர்கொண்டுள்ள நெருக்கடிநிலை என்பவற்றைப் பயன்படுத்தி, இலங்கையைத் தமது பிடிக்குள் கொண்டு வருவதற்கு ஒவ்வொரு தரப்பும் போட்டியிட்டன. ஆகவே எந்த ஒரு சக்திக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் தற்காத்துக் கொள்வதற்கு ஏற்றவாறு, இலங்கை ஒரு மாற்றுப் பொறிமுறையைக் கையாண்டது.
இதன்படி அது அனைத்துத் தரப்பிடமிருந்தும் தனக்கான உதவிகளைப் பெற்றுக்கொண்டது. ஒரு சமாந்தரப்பட்ட உதவி பெறல் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி இதைச் சாதித்து வந்தது இலங்கை. ஆனால், யாருடைய பொறிக்குள்ளும் முழுமையாகச் சிக்கிவிடாதிருக்க முயற்சித்தது.
இதன்மூலம் அது இந்தியாவிடமும் நெருங்கியிருந்தது. இந்தியாவுக்கு எதிரான சீனாவுடனும் நெருக்கமாக இருந்தது. சீனாவுக்கு எதிரான அமெரிக்காவுடனும் கூட்டு வைத்திருந்தது, அமெரிக்காவுக்கு எதிரான ரஷ்யோவோடும் உறவு வைத்துக் கொண்டது. ரஷ்யாவுக்கு எதிரான இஸ்ரேலோடும் நெருக்கமாக இருந்தது.
ஆனால், யுத்த முடிவுக்காகவும் புலிகளின் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும் உதவிய நாடுகள், இன்று அந்த உதவியை வைத்துக் கொண்டு இலங்கையைத் தங்களது பிடிக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றன.
யுத்தத்திற்காக படைக்கலங்கள், ஆலோசனைகள், பயிற்சிகள், வேவுநடவடிக்கைகள், நிதியுதவி, யுத்தத்திற்கான அரசியல் ஆதரவு என எல்லாவற்றையும் தாராளமாக வழங்கிய உலகம், எதற்காக அதைச் செய்தது? சோளியன் குடுமி சும்மா ஆடுவதில்லை.
ஆகவே தாங்கள் வழங்கிய உதவிகளுக்காக அவர்கள் லாபங்களை எதிர்பார்க்கிறார்கள். அதை அரசாங்கம் கொடுக்க மறுக்கிறபோது நெருக்கடிகளை உருவாக்குகிறார்கள். இந்த நெருக்கடிகள் இன முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தும் வகையிலும் பொருளாதார இறுக்கத்தை உருவாக்குதன் மூலமும் ஏற்படுத்தப்படுகின்றன.
இதற்காக உள்ளரங்கில் உள்ளவர்களும் வெளியரங்கில் உள்ளவர்களும் சேர்ந்தியங்குகிறார்கள். அதிருப்தியாளர்களைக் கையாண்டு இந்தக் காரியத்தை வெளியுலகம் செய்கிறது. அல்லது அதிருப்தியாளர்களிடையே இருக்கின்ற இடைவெளி இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இதனால், நாடு மிக மோசமான உளவியற் சிக்கலுக்குள்ளும் பொருளாதார நெருக்கடிக்குள்ளும் பகைப் பிராந்தியத்திற்குள்ளும் தள்ளப்படுகிறது.
எனவே துரதிருஷ்டவசமாக அமைதிக்கான அத்தனை முனைகளும் மழுக்கமடைந்து விட்டன. சமாதானத்தின் ஊற்றுக்காகக் கனவு கண்ட மக்கள் மீண்டும் ஒரு கோடையைநோக்கி, நகர்த்தப்படுகிறார்கள்.
இதேவேளை யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஆற்றுவதற்கு அரசாங்கத்தின் மனவிரிவற்ற நிலையும் சிங்களச் சமூகத்தின் உறங்கு நிலை அல்லது பாராநிலை என்பதும் தமிழர்களை சந்தேகத்துக்கும் அச்சத்துக்கும் கொண்டு செல்கிறது.
தமிழ் மக்களின் விலகலை ஒரு வலுக் காரணியாகக் கொண்டு, மேலும் இன அடையாள அரசியலை விரிவாக்கம் செய்து, அதைப் பலமாக்குகிறது அரசும் அதிகாரச் சக்திகளும். மறுவளத்தில் தமிழ் அரசியற் சக்திகளின் போக்கிலும் இதுவே நடைமுறை. குறிப்பாகத் தமிழ்ப்புலம்பெயரிகளின் செயலியக்கம் அடையாள அரசியலை மேலும் வளர்த்து யதார்த்தத்துக்கு அப்பாலான பிராந்தியத்தை நோக்கித் தள்ளுகிறது.
அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்புக்கு சிங்கத் தரப்பினரிடமிருந்து ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைத்தது. இலங்கையின் வளங்களை அல்லது அதற்கான அதிகாரத்தைத் தாமே முதல் நிலையில் பெற்றுக்கொள்வது என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த ஆதரவு பெறப்பட்டது. இன அடையாளத்தை முன்னிறுத்திய அரசியல் மூலம் இதற்கான ஆதரவு திரட்டப்பட்டது.
அவ்வாறே, இதற்கெதிரான தமிழ்த் தரப்பின் யுத்த முன்னெடுப்புக்கும் அரசாங்கத்தை எதிர்க்கும் நடவடிக்கைக்கும் இன அடையாள அரசியல் பயன்படுத்தப்பட்டது. இதனால், தமிழ் ஆயுதப் போராட்டத்தின் விரிவாக்கம் இனரீதியான பிரிவிலும் வேற்றுமையிலும் தீவிரமாகத் தகவமைத்துக் கொண்டது.
இது சிங்கள மக்களை அரசின் யுத்த ஆதரவுச் சக்திகளாக்கியது. இதன் மறுபுறத்தில் அரசின் வேற்றுமை நடவடிக்கைகள் புலிகளின் யுத்த முன்னெடுப்புக்கும் பிரிவினைக் கோரிக்கைக்கும் தமிழ் மக்களை ஆதரவணியிற் சேர்த்தது.
ஆகவே, இரண்டு தரப்பிலும் இன அடையாளத்தை மையப்படுத்தி, அவற்றைப் பகைமைக்குப் பயன்படுத்தும் அரசியலே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய ஒரு யுத்த ஆதரவுச் சிந்தனைத் தூண்டிலின் படியே கடந்த காலத்தின் இருட்பரப்பு இலங்கையில் உறைந்தது. ஆனால், அதற்குப் பிறகும் யுத்தத்தினால் களைப்படைந்த மக்களைக் கொண்டே அமைதிக்கெதிராகச் சிந்திக்கும் இன்றைய இலங்கை உள்ளது. இதுவே நமது கவனத்திற்குரியது.
அமைதிக்கான ஏக்கம், சமாதானத்துக்கான விருப்பு, அதன் மீதான ஈடுபாடு எல்லாம் யுத்தத்தின் போது முன்னிலை வகித்தன. யுத்தத்தின் காய உற்பத்தியும் இரத்தப் பெருக்கும் துயர வலியும் இத்தகைய விருப்பு நிலையை உருவாக்கியிருந்தன.
இன்று இந்த நிலைமை  மாற்றமடைந்துள்ளது. அரசாங்கத்தை நெருங்கியிருந்த தமிழ், முஸ்லிம் சமூகத்தினர்கூட அதனைவிட்டுத் தூர விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கு தமிழ் அரசியற் தரப்புகள் ஒரு தூண்டற்காரணமாக இருந்தாலும் அரசிடம் காணப்படும் சமாதானத்துக்கு எதிரான, இயல்பும் அமைதியைப் பற்றிச் சிந்திக்காத அசமந்தப் போக்குமே பிரதான காரணமாகும்.
இதை எப்படி நீக்குவது என்பதே இன்றைய பிரச்சினையாகும். அமைதிக்குத் திரும்புவதைப் பற்றிச் சிந்திக்காத அரசாங்கமும் மக்களும் அதை வற்புறுத்தாத வெளியுலகமும் திரட்சி பெற்ற இலங்கையே இன்றுள்ளது. இது எதிர்காலத்தில் எதிர்விளைவுகளை உருவாக்கும் சாத்தியங்களையே கொண்டுள்ளது.
ஏற்கனவே, அறுபது ஆண்டு கால இலங்கையின் ஜனநாயக வரட்சி இரத்தக்கறைகளையும் ஒடுக்குமுறைச் சட்டங்களையும் தாராளமாக உற்பத்தி செய்திருக்கிறது.  இனப்பிளவையும் அடையாளச் சிக்கல்களையும் அமைதிக்கெதிரான கடின நிலைமைகளையும் இந்த ஜனநாயகச் வரட்சி உற்பவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி, வறுமை, வேலைவாய்ப்பின்மை, வெளியுலக அழுத்தங்கள் அல்லது நெருக்கடிகள் என்ற வலைப்பின்னல்களையும் அது தாராளமாக்கியுள்ளது. இனத்துவ அடையாளங்களை முன்னிறுத்திய அரசியல் மேலாண்மை பிளவுண்ட சமூக நிலையை வளர்த்துள்ளது. திரும்பிச் செல்ல முடியாத ஒற்றை வழிப்பாதை என்ற சிக்கலுக்குள் இலங்கையில் அரசியல் பகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று கூட இவையெல்லாம் பெரும் யுத்தத்தையும் கிளர்ச்சிகளையும் அதிருப்தி நிலைமைகளையும் கடந்த பின்னும் தொடர்கின்றன.
சுதந்திரத்துக்குப் பின்னர் செய்யப்பட்ட அரசியற் திருத்தங்கள் நாட்டைப் பாதுகாப்பதற்குப் பதிலாகச் சிதைத்துள்ளன. அதி பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஆட்சித்தலைவர்கள் பின்னோக்கிய திசையி்ல் நாட்டையும் மக்களையும் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே இருண்ட மயானத்திலேயே மக்கள் நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. வெளிநாடுகளின் உதவியும் அனுசரணையும் யுத்தத்தை வழிப்படுத்தவும் வெற்றி கொள்ளவும் மட்டுமே இருந்துள்ளன.
மக்களுடைய நிரந்தர அமைதிக்காவும் சுபீட்சத்துக்காகவும் எதுவும் முக்கியத்துவப்படுத்தப்படவி்லலை. சுயாதீனமுள்ள ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என சிங்கச் சுதேசிகள் விரும்புகிறார்கள். வெளிச்சக்திகளின் ஆதிக்கத்தை அவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இன்றைய அரசாங்கத்தின் சிந்தனையும் இதுதான்.
ஆனால், யதார்த்தத்தில் அதற்கான அடித்தளம் இலங்கைச் சமூகங்களிடையே காணப்படுகிற இடைவெளிகளைக் குறைப்பதும் பகையை நீக்குவதும் முரண்பாடுகளைக் களைவதிலுமே தங்கியுள்ளது. அதைச் செய்யாத வரையில் இலங்கையில் தீச்சுவாலையும் புகையும் இருளும் இரத்தமும் அவலப்பரப்புமே மிஞ்சும்.
களைப்படைந்த இலங்கையர்கள் இளைப்பாற விரும்புவர். ஆனால், காயப்பட்ட இலங்கையர்கள்?
00
 

2009 ·. by TNB