கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

கலங்கும் அரசும்...

Sunday 4 March 2012

















ஒரு அரசையும் அதனுடைய தலைமைத்துவத்தையும் காப்பாற்றுவதற்குப் போராட்டங்கள், மதநிலையங்களில் வழிபாடுகள், பிரார்த்தனைகள், ஊர்வலங்கள் என்று மக்கள் நிலைப்பட்ட நிகழ்ச்சிகளை அரசே முன்னின்று செய்ய வேண்டிய ஒரு நிலை உருவாகியிருக்கிறது வரலாற்றில்.

போதாக்குறைக்கு அரசையும் நாட்டையும் இயக்கும் அரச இயந்திரத்தைச் சேர்ந்த அதிகாரிகளையும் உத்தியோகத்தர்களையும் கூட அது பயன்படுத்த விளைகிறது.

மேலும் இரவு பகல் என்றில்லாமல், ஓய்வில்லாமல், அது தனக்குச் சார்பாக இயங்கக் கூடிய வெளிநாடுகளையெல்லாம் வளைத்துப் போடுவதற்காகப் பாடுபடுகிறது. இதற்காக அமைச்சர்களும் பிரதானிகளும் எண்திசையும் பறந்து திரிகிறார்கள்.

பேரங்கள், கெஞ்சல்கள், வேண்டுதல்கள் என்று படாத பாடெல்லாம் படுகின்றனர் அரச பிரதானிகள்.

இதெல்லாவற்றுக்கும் காரணம் கலக்கமே.

மனிதன் நிம்மதியை இழப்பதும் அரசு நிம்மதியை இழப்பதும் நாடு நிம்மதியை இழப்பதும் கலக்கத்தினாலேயே.

இந்தக் கலக்கம் எதனால்?

விட்ட தவறுகள். செய்த தவறுகள். விட்டுக் கொண்டும் செய்து கொண்டுமிருக்கும் தவறுகளே இந்தக் கலக்கத்தின் ஊற்றவாய்.

முன்செயல்கள் பின் விளைவைத் தருமென்பர். சனங்கள் கலங்கினால் அரசும் கலங்கும் என்பது முதுமொழி. அரசு கலங்கினால்...?

ஆனால், அந்த அரசே இப்போது கலங்கிக் கொண்டிருக்கிறது.

அதுவும் அம்பலத்தில்.

நாட்டைக் காப்பதற்கு எந்தப் படையும் எந்தப் போராயுதமும் போதாது. இதை நானே சில வாரங்களுக்கு முன்னே எழுதியிருந்தேன். (பார்க்கவும் ‘நிரந்தரப் படைமுகாம்கள்’).

கடவுளே! அது இவ்வளவு சீக்கிரம் உணரக்கூடியதாக மாறிவிடும் என்று நானே நம்பவில்லை.

ஆனால் அது நடந்திருக்கு.

எந்தப் படையினனும் இப்போது நாட்டைக் காப்பாற்றுவதற்குத் தேவையில்லை. எந்தத் தளபதியும் படை நடத்தத் தேவையில்லை. எந்த ஆயுதப்படைகளாலும் நாட்டையோ அரசையோ காப்பாற்ற முடியாது.

மட்டுமல்ல, அரசையும் அதனுடைய தலைமையையும் படைகளையும் அவற்றின் தளபதிகளையும் பாதுகாப்பதற்கு இப்போது மக்களே தேவை என்ற நிலை வந்துள்ளது.

மக்களின் காலடியில் வந்து நிற்கிறது அரசு.

இப்போது நாட்டைப் பாதுகாப்பது, அரசைப் பாதுகாப்பது, தலைமையைப் பாதுகாப்பது எல்லாமே சனங்கள்தான். ஆமாம் சனங்களே பாதுகாக்கிறார்கள்.

சனங்களின் தயவையே அரசு இன்று எதிர்பார்க்கிறது. அதையே அதன் தலைமையும் நம்பியிருக்கிறது.

மக்களின் தயவில்லையேல், அவர்கள் எதிர் முகம் கொண்டால், அரசில்லை@ ஆட்சியில்லை@ அதன் தலைமையில்லை என்ற நிலை இன்று வந்திருக்கிறது.

சனங்களின் ஆதரவை, அவர்களின் தேசிய உணர்வை நம்பியே அரசு இன்று தன்னுடைய இயங்குநிலையைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது.

மக்களை அதிகம் மதியாத அரசுகளின் வரலாறு இப்படித்தான் அமையும்.

எதிரிகளாகவே நடத்தப்பட்ட மக்களின் கால்களிலேயே மண்டியிடும் விதி ஒரு நாள் தானாகவே வந்து சேரும்.

அந்த விதியே இப்பொழுது வந்துள்ளது.

இதைத்தான் உயிர்ப்பிச்சை கேட்பது என்று சொல்வதா?

இதைத்தான் மன்னிப்பும் மறப்பும் என்று கொள்வதா?

வரலாறு விசித்திரங்கள் நிறைந்த ஒரு சக்கரந்தான். அது மிகக் குரூரமானதும்கூட.

இதெல்லாம் இதிகாச காலத்துச் சம்பவங்களல்ல. வரலாற்றின் பழைய பக்கங்களைப் புரட்டித்தான் இதையெல்லாம் அறிய வேண்டும் என்றும் இல்லை.

இதை வாசிக்கும் போது உங்கள் எல்லோருக்கும் எல்லாமே புரியும். ஏன், இதை உரிய தலைகள் வாசித்தாலே தங்களின் நிலையைப் புரிந்து கொள்ள முடியும்.

இப்போது உண்மையில் யார் தலைவர்கள்? யாரிடம் அதிகாரம் உள்ளது?

மக்களே! மக்களே இன்று தீர்மானிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்.

கலக்கத்திலிருக்கும் அரசுக்கு மக்களே ஆறுதற் பிச்சையிடுகிறார்கள். அவர்களே பாதுகாப்புக் கவசமாக இருக்கிறார்கள். அவர்களே பசித்த வயிற்றோடு ஆட்சிக்கான அருளை வழங்குகிறார்கள். அவர்களே ஆறாத காயங்களோடும் தீராத வலிகளோடும் மன்னிப்பை அளிக்கிறார்கள். மரணக் குழியில் வீழ்த்தப்பட்ட மக்கள். சாவிலிருந்து மீண்டு வந்த மக்கள் அவர்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டின் தெருக்களில் அரசைக் காப்பாற்ற வேண்டும் என்ற குரலோடு நின்ற சனங்களைப் பார்த்தேன்.

கடவுளே! கடவுளே!!

இருளிற் புதைக்கப்பட்ட மனிதர்கள். ஏழ்மையிலும் துயரத்திலும் வீழ்த்தப்பட்ட மனிதர்கள்.

எல்லாவற்றையும் மறந்து வந்து நின்றார்களா? அல்லது எல்லாவற்றையும் மன்னித்து விட்டு வந்து நின்றார்களா?

உலகத்திலே கொடுமையானது மன்னிப்புத்தான். அதேயளவுக்குக் கொடுமையானது மன்னிப்பின்மையும்.

எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டு யாராலும் மன்னிப்பை வழங்கிவிட முடியாது.

மறப்பதே மன்னிப்புக்கான முதற்படி. ஆனால், மறப்பதொன்றும் அவ்வளவு கடினமானதல்ல.

சாவரங்கை, மரணக்குழிகளை, ஆறாத காயத்தை, தீராத வலியை, மறைக்க முடியாத அவமானத்தை எல்லாம் இலகுவில் மறந்து விட முடியாது.

அவ்வாறெனில் அதற்கு மாண்புடைய மனம் வேணும். அல்லது காயங்கள்  ஆற்றப்பட்ட ஒரு நிலை வேண்டும்.

மறக்கவே முடியாத கடந்த காலமொன்றை ஒவ்வொருவரும் வைத்திருக்கும்போது அதை எப்படிக் கடக்க முடியும்? அதை எப்படி மறக்க முடியும்?

காயங்களும் வலிகளும் இன்னும் ஆற்றப்படாதிருக்கும்போது எப்படி மறதி வரும்?

ஆனால், விதி வலியது. அது கோணங்களை மாற்றி, நிறங்களை மாற்றி, வடிவங்களை மாற்றி தன்னுடைய கோலங்களைக் காட்டும்.

மறக்க முடியாத சனங்களை அது மறதிக்குக் கோருகிறது. கடக்கவே முடியாத காலத்தைக் கடக்கக் கோருகிறது.

ஆகவே இன்னொரு யுத்த அரங்கில் நிறுத்தப்பட்டதைப்போல அவர்கள் வெற்றிக்கும் தோல்விக்குமிடையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

எல்லாவற்றையும் மறவுங்கள். எல்லாவற்றையும் மன்னியுங்கள். என்ற கோரிக்கைகளை விடுகின்ற குரல்கள் எல்லாவற்றையும்

அவர்களின் நினைவுகளோடு வழிநடத்துவதற்கும் யாருமில்லை. (தமிழ்க்கட்சிகள் தொடக்கம் எதிர்க்கட்சிகள் வரையில்) அவர்களை மறதிகளோடு வழிநடத்துவதற்கும் யாரும் இல்லை. (புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் பகை மறப்பையும் உருவாக்கி, நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் கொண்டு வரக்கூடிய சக்திகள்).

ஆனால் அவர்களை வைத்தே அவரவர் பயன்களைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில் ஒன்றை மட்டும் மீண்டும் நினைவூட்டலாம்.

வரலாறு கண்டிப்பான ஒரு தாய்.

எத்தகைய தவறுகளையும் அது நீடிக்க விடுவதில்லை.

முன்செயல்கள் பின் விளைவைத் தந்தே தீரும்.

வரலாற்றுச் சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கிறது.

0




0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB