கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

‘நாங்கள் யுத்தகாலத்தில் நடந்து செல்வதற்கே பாதைகள் இருக்கவில்லை

Tuesday 28 August 2012
















இலங்கையின் கொந்தளிப்புகள் இன்னும் நீங்கவில்லை. பதிலாக அவை வெவ்வேறு வடிவங்களை எடுத்துள்ளன. இதன் விளைவாக முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. நிரந்தரத்தன்மையைப் பெற்று வருகிறது பகைமை. இனங்களுக்கிடையிலும் சமூகங்களுக்கிடையிலும் ஒரு தொற்றுநோயைப் போலப் பரவி வருகிறது அச்சமும் சந்தேகமும். பல தரப்புகளாலும் திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது இந்த நிலை.

அரசியலுக்குத் தேவை எரியும் பிரச்சினைகள். மேலும் பிரச்சினைகள். கொந்தளிப்புகள். நெருப்பை ஒத்த சூடு. சனங்களின் அவலம், கண்ணீர், இரத்தம் எல்லாம்.

ஊடகங்களுக்கும் தேவை இவையெல்லாம். சனங்களுடைய உளவியலும் இதை நோக்கியே கட்டமைக்கப்பட்டுள்ளது. வன்முறைச்செய்திகள், கொந்தளிப்பான தகவல்கள், பரபரப்பு.

போர் முடிந்திருக்கிறது என்பது உண்மை. ஆனால், யுத்த அபாயத்துக்கு அப்பால் மக்களுடைய பிரச்சினைகள் தீரவில்லை. மக்களுடைய எண்ணங்களும் மாறவில்லை. குற்றச்சாட்டுகள் ஏவுகணைகளை விடவும் உச்சமாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றன.

எல்லோரும் யுத்த காலத்தை ஒத்த மனநிலையில்தான் உள்ளனர். அல்லது அத்தகைய ஒரு நிலையைப் பராமரிக்கின்றனர்.

அமைதிக்காகச் சிந்திப்போர் பரிகசிக்கப்படுகிறார்கள். அல்லது சந்தேகிக்கப்படுகிறார்கள். பல வேளைகளிலும் புறக்கணிப்பப்படுகிறார்கள். சிலசமயங்களில் தண்டிக்கவும் படுகிறார்கள்.

மீண்டும் நெருப்புத் துண்டங்களைத் தின்பதற்கே பலரும் விரும்புகின்றனர். கொழுந்து விட்டு எரிந்த தங்களுடைய கடந்த காலத்தை இவ்வளவு எளிதாகப் பலரும் மறந்து வருவதே கவலையளிப்பது.

‘நீ எதை விரும்புகிறாய்? யுத்தத்தையா அல்லது சமாதானத்தையா?’ எனக் கேட்டேன் ஒரு நண்பரிடம்.

‘சமாதானத்தையே’ என்றார் அவர் உடனடியாக.

‘ஆனால், நிரந்தர சமாதானத்தை’ என்றார் பின்னர், சற்று அழுத்தி.

‘சமாதானம் என்ற வெறும் சொல்லை அல்ல’ என்று சற்று நேரத்தின் பின்னர் நிதானமாகச் சொன்னார்.

அவர் சொன்னதின் பின்னாலுள்ள அர்த்தத்தை நீங்கள் நன்றாகவே உணர்வீர்கள்.

அமைதி என்பதும் சமாதானம் என்பதும் எவ்வளவு சந்தேகத்திற்குரிய ஒரு விசயமாக, ஒரு சொல்லாக மாறியுள்ளது என்பதை.

அமைதியைப் பற்றியும் சமாதானத்தைப் பற்றியும் கதைக்கும் போது மக்களும் அதைப் பற்றி அதிகம் பொருட்படுத்துவதில்லை.

அரசியல்வாதிகளும் தரப்புகளும் ஊடகங்களும் சர்வதேச சமூகமும் இந்தச் சொற்களின் அர்த்தத்தை, இவற்றின் உண்மைத்தன்மையைப் பாழாக்கி விட்டன.

எனவே சனங்கள் நம்பிக்கையற்ற ஒன்றின் பின்னால் நிற்பதற்குத் தயங்குகிறார்கள்.

ஆனால், மிகச் சவாலான விசயமே இதுதான்.

மிக முக்கியமான விசயமும் இதுதான்.

அமைதியைப் பற்றிச் சிந்தித்தல் அல்லது அமைதிக்குத் திரும்புதல் அல்லது அமைதியை உருவாக்குதல் என்பது.

என்றபோதும் கொந்தளிக்கும் நிலையை மாற்ற வேண்டுமானால் இதைத் தவிர வேறு வழியில்லை.

முரண்பாடுகளையும் அழிவையும் பாதகமான விளைவுகளையும் தவிர்க்க வேண்டுமானால், சமாதானத்தை நடைமுறைப் படுத்துவதைத் தவிர, வேறு மார்க்கமேயில்லை.

ஆனால், சமாதானத்தை உருவாக்குவதொன்றும் அத்தனை எளிதான காரியமில்லை.

அது யுத்தத்தைப் போன்றதல்ல. யுத்தத்தை உருவாக்குவதற்கான பொறிகள் மிக எளியவை. அவை அதிகமாகவும் உண்டு. மட்டுமல்ல அவற்றின் எரிபற்று நிலையும் மிக உச்சமானது.

ஒரு கணம், ஒரு சொல் போதும் மாபெரும் யுத்தத்தை மூட்டிவிடுவதற்கு. திரௌபதியின் ஒரு சொல், ஒரு சபதமே மகாபாரத யுத்தம்.

அதைப்போல கைகேயிக்கு வழங்கப்பட்ட ஒரு சொல்லே இராமாயணத்துக்கு அடிப்படை.

இதிகாசங்களில் மட்டுமல்ல உலகம் முழுவதுமுள்ள நடைமுறையும் அப்படித்தான்.

ஒரு தீக்குச்சியில் இருக்கும் தீயை மூட்டும் தன்மையையும் விட யுத்தத்தை மூட்டுவதற்கான சொல்லில் இருக்கும் எரிபற்று நிலை அதிகம்.

ஆனால், அமைதிக்குத் திரும்புவதென்பது மிக மிகக் கடினமான ஒன்று.

அது ஏராளம் சொற்களைக் கொண்டு உருவாக்கப்படும் நம்பிக்கையின் அத்திவாரம். ஏராளம் நடைமுறைகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட வேண்டிய ஒரு நிர்மாணம். ஒரு சிறு கவனப் பிசகு எல்லாவற்றையும் சிதறடித்து விடும். அவ்வளவு மென்மையான இழைகள் சமாதானத்தினுடையவை.

சமாதானத்துக்கான அடிப்படையாக இருக்கும் பரஸ்பர புரிந்துணர்வொன்றை உருவாக்குவதற்கான முன் முயற்சிகளுக்கே ஏராளம் விசயங்கள் தேவை. ஏராளம் நடைமுறைகள் அவசியம்.

அவை இல்லாத போது ஒரு சிறு அசைவைக் கூட நிகழ்த்தி விட முடியாது.

குறிப்பாக சமாதானத்தைக் குறித்த செயற்பாடுகளை நோக்கிய அதிக அர்ப்பணிப்பும் தியாக மனப்பாங்கும் உறுதியும் அவசியம்.

அமைதியை நோக்கிய உயரிய சிந்தனையும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு செய்ய வேண்டிய விட்டுக் கொடுப்புகளும் ஏற்றுக்கொள்ளல்களுமான ஒரு நடைமுறையும் வேண்டும்.

இதற்கு விரிவாகச் சிந்திக்கக் கூடிய மேதமைத்தன்மையும் அதை நடைமுறைப்படுத்தும் துணிச்சலும் அரசியல் லாபங்களுக்கு அப்பாலான மக்கள் விசுவாசமும் தேவை.

இவை சாதாரணமாக அமைந்து விடுவதில்லை. மிகப் பெரிய ஆளுமையுடன் கூடிய, ஆற்றல் நிரம்பிய ஒரு செயற்பாட்டினாலேயே இவற்றை நாம் உருவாக்க முடியும்.

முரண்பாட்டு உருவாக்கத்தின் மூலம், பகை அரசியலின் வழியாக லாபங்களைப் பெற்ற தரப்புகள் எவையும் கடினமும் சவால்களும் நிரம்பிய வழிகளைப் பின்பற்ற மாட்டா.

அவற்றின் வழிமுறைகளே வேறு. அவை இந்தப் பெரிய சோதனைகள் நிரம்பிய வழிமுறையை, மக்களுக்கான அர்ப்பணிப்பைத் தேர்வதைப் பற்றிச் சிந்திக்கவே விரும்பாது.

எல்லாவற்றையும் விடப் பகை அரசியலில் லாபங்களும் அதிகம். அவற்றை எட்டுவதும் சுலபம். அபாயங்கள் நிறைந்த வழிமுறை அது என்றாலும் அது ஒரு சதுரங்கப் பலகையைப் போன்றிருப்பதால், போதைத் தன்மையுடன் அதில் இறங்கி ஈடுபடலாம்.

கத்திகளை லாவகமாகச் சுற்றக் கூடிய ஒரு பயிற்சி இருந்தாற் போதும் தாரளமாக வெற்றிகளைப் பெற்று விட முடியும்.

எனவேதான் எல்லோரும் முரண்பாட்டு அரசியலை – பகை அரசியலைத் தேர்ந்து கொள்கிறார்கள்.

இதில் இன்னொரு லாபமும் உண்டு. பகை அரசியலில் மக்களுக்கு வேண்டியவற்றை அதிகம் செய்யத் தேவையும் இல்லை. மக்களை எப்போதும் தங்களை நோக்கித் தங்கியிருக்கும் நிலையில் வைத்திருக்க வேண்டுமானால், அவர்களைப் பற்றாக்குறைகளுடன் வைத்திருக்க வேண்:டும்.

பற்றாக்குறைகளுடன் இருப்போருக்கே எஜமான்கள் தேவை. எல்லாம் நிறைந்திருப்போருக்கு எஜமானன்கள் அவசியப்படுவதில்லை.

ஆகவே, சனங்களைப் பற்றாக்குறைகளுடன், அவலப்படுவோராகவும் அல்லற்படுவோராகவும் வைத்திருக்க வேண்டும். அதற்குப் பகை அரசியலே கை கொடுக்கும்.

பகை அரசியலில் இன்னொரு நன்மையும் உண்டு. அதில் குற்றச் சாட்டுகளை பரஸ்பரம் சுமத்திவிட்டுப் பேசாதிருந்து விடலாம். எதையும் மக்களுக்குச் செய்யத் தாம் தயாராக இருப்பதாகவும் ஆனால், எதிர்த்தரப்பு அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றும் சுலபமாகப் பழியை எதிர்த்தரப்பிடம் சுமத்திவிட்டுப் பேசாதிருந்து விட முடியும்.

சனங்களும் அதை நம்பி விடுவர், மிக எளிதாக.

அத்துடன் பகை அல்லது முரண்பாட்டு அரசியலில் எப்போதும் இருக்கின்ற சுவாரஷ்யம், சனங்களுக்குக் கவர்ச்சியானது. அவர்கள் தங்களுடைய நிலைமையை மறந்து விட்டே இந்த முரண்பாட்டில் இருக்கும் சூட்டையும் அதனுள்ளிருக்கும் போதைத் தன்மையையும் ரசிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

கதாநாயகன் வில்லன், கறுப்பு வெள்ளை, எதிரி, தியாகி என்ற எளிய சூத்திரம் மனதில் எளிதாகவே தங்கி விடுகிறது.

மிக எளிய ஒரு சினிமாவைப் பார்ப்பதைப் போல தங்களின் முன்னே இருக்கின்ற போதையூட்டும், கிளர்ச்சிகளின் ஊற்றாக இருக்கும் முரண்பாட்டு அரசியலை ரசிக்கிறார்கள்.

இந்தப் பலவீனமான உளவியலை அரசியல்வாதிகளும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மிகச் சுலபமாகக் கையாள்கின்றனர்.

வெளித்தோற்றத்துக்கு நியாயத்தன்மை உடையதாகத் தெரியும் முரண்களின் உள்ளே எத்தகைய வழிகளுக்கான ஒளியும் நன்மைகளுக்கான வித்துகளும் இருப்பதேயில்லை.

பதிலாக முரண்பாட்டு அரசியலில், பகை அரசியலில், எதிர் அரசியலில் இருப்பது அத்தனையும் நச்சு விதைகள்.

என்றபடியாற்தானே கடந்த காலம் தீயில் கருகியது. ஆனால் யாருடைய கடந்த காலம் தீயிற் கருகியது என்பதே இங்கே உள்ள முக்கியமான அவதானமாகும்.

சனங்களின் கடந்த காலமே தீயில் கருகியது. அவர்களே இன்னும் மீள முடியாத அவலப்பரப்பில் உள்ளனர்.

ஆகவேதான் அவர்கள் விழிப்போடு இருக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். இந்தப் பத்தி கூட அவர்களை நோக்கியே சிந்திக்கவும் எழுதவும் படுகிறது. முரண்பாட்டு அரசியலை, முரண்பாட்டு நிலைகளை உருவாக்கும் வியாபாரிகளை நோக்கியல்ல.

மெய்யான ஊழியம் செய்வோரைக் கனம்பண்ணியே இந்தச் சொற்கள் இங்கே நிர்மாணிக்கப்படுகின்றன.


உண்மையில் சனங்களை நோக்கிய அரசியல் என்பதும் ஊடகப் பணி என்பதும் நன்மைகளை உருவாக்குவதாகவே அமைய வேண்டும்.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு சொல்லும் பயன்படுத்தப்பட வேண்டும். தீர்வை நோக்கிய, பிரச்சினைகளிலிருந்து விடுபடுதலை நோக்கிய, பிரச்சினைகளை இல்லாதொழிப்பதை நோக்கிய  செயற்பாடுகளை உருவாக்குவதே அவசியமானது.

ஆனால், நடந்து கொண்டிருப்பது என்ன?

பிரச்சினைகளை உருவாக்கும் காரியங்களே கணமும் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நொடியிலும் முரண்களைக் கூர்மைப்படுத்தும் செயற்பாடுகளே மேற்கொள்ளப்படுகின்றன.

இது யாருக்காகச்  செய்யப்படுகிறது?

இலங்கைத் தீவில் இன்று சமூகங்களுக்கிடையிலான - இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை யார் செய்கிறார்கள்? அவர்கள் எதற்காகச் செய்கிறார்கள்?

லாபங்களைப் பெறும் நோக்கோடு, நலன்களைப் பேணும் நோக்கோடு சர்வதேச சமூகம் என்ற ஆதிக்கச் சக்திகளும் உள்ளுர் அரசியல் ஊடக அதிகாரத் தரப்புகளும் இந்த பிரச்சினைகளை உருவாக்கும் அரசியலை – முரண்பாட்டு அரசியலைச் செய்கின்றன.

ஆகவே இந்தத் தரப்புகளுக்கு உதவும் முகமாகவே பல உள்ளுர் சக்திகளும் தங்களை அறியாமலே செயற்படுகின்றன.

இந்த முரண் அரசியலுக்கு, பகை உணர்வரசியலுக்கு இன்னொரு சிறிய உதாரணம்.

விஜய், விஜயகாந்த், விக்ரம், அர்ஜூன், ரஜினி போன்றோரின் அதிரடிப் படங்களில் வருகின்ற வில்லன் - கதாநாயகன் பாத்திரங்களைப் போன்றதே, அந்தப் படங்களில் மையப்படுத்தப்படும் கதைகளைப் போன்றதே இந்த அரசியலும்.

அங்கேயும் தொடர்ந்து வில்லன் - கதாநாயகன் நிகழ்ச்சி இருந்து கொண்டிருக்கும். அதுதான் அதன் கவர்ச்சிமையம்.

பார்வையாளருக்கு இந்த கதாநாயகன் - வில்லன் கவர்ச்சி குறைவதில்லை. அதைப்போல அதிலே வருகின்ற வில்லன்களும் ஒரு போதுமே இல்லாமற் போய்விடுவதில்லை. பார்க்கின்றவர்களுக்கு ஒரு கணநேர இன்பம் கிட்டுகிறது. அதற்கப்பால் எதுவும் அதிலே நிகழ்வதில்லை.

அவற்றிலே வருகின்ற நாயகர்களைப் போல அசாத்தியமான துணிச்சலோடு யாரும் போரிடுவதும் இல்லை. நியாயங்களை நிலைநிறுத்துவதற்காகப் போராடுவதும் இல்லை.

அத்தகைய படங்களைப் பார்ப்பதன் மூலம் அல்லது அந்தப் படங்களில் பேசப்படும் விசயங்களின் மூலம் எந்தப் பிரச்சினையும் தீர்ந்து விடுவதில்லை.
ஆனால், பதிலாக அந்தப் படங்களை உற்பத்தி செய்வோரும் அதில் நடிப்போரும் தாராளமாக உழைத்து விடுகிறார்கள். அவர்களுடைய கதாநாயக அந்தஸ்து, பிரமுகர் நிலை, புகழ் எல்லாம் அந்தச் சினிமாவையும் விட உச்சமாக உயர்ந்து விடுகிறது. அதிலும் நிஜத்தில். அவர்கள் லட்சாதிபதிகளாக, கோடீஸ்வரர்களாக மாறிவிடுகிறார்கள்.

இவர்களுக்கு ஊடகங்களிலும் பெரும் செல்வாக்கு மண்டலம் உண்டு. ஊடகங்கள் இவர்களை வைத்தே, இவர்களுடைய இந்தப் போக்கை வைத்தே தங்கள் உழைப்பைச் செய்கின்றன. அதுவும் பகிரங்கமாக.

ஏறக்குறைய இதே தன்மைதான் முரண்பாட்டு அரசியலில் ஈடுபடுவோரிடமும் உண்டு. அவர்களும் லட்சாதிபதிகளாக, புகழாழர்களாக, செல்வாக்குடையோராக, ஊடகங்களில் கொண்டாடப்படுவோராக, ஊடகங்களுக்குத் தேவைப்படுவோராக உள்ளனர்.

(இப்பொழுது உங்களில் பலருக்கு யார் விஜய், யார் எம்.ஜி.ஆர், யார் விஜயகாந், யார் அர்ஜூன், யார் விக்ரம் என்று விளங்கியிருக்கும்.

ஆகவே இத்தகைய (தன்) நலன்விரும்பிகள் எப்படி சமாதானத்துக்கான அடித்தளத்தை நிர்மாணிக்க முனைவர்? எவ்வாறு அமைதிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்வர்?

மக்களிடம் இறங்கி, அவர்களோடு வாழ்ந்து, அவர்களுக்காக அரசியற் பணியாற்றுவது என்பது, மக்களோடு அவர்களைக் கரைத்து அவர்களை ஒன்றிணைக்க விரும்புவது. அங்கே பிரமுகர்த்தனத்துக்கும் அதிகாரத்தனத்துக்கும் இடமிருக்காது.

இதிலேதான் நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் பற்றுறுதியும் உருவாகும். ஆனால், அதற்கான சூழ்நிலைகள் தென்படவேயில்லை.

பதிலாக கொந்தளிப்ப நிலையே உருவாக்கப்படுகிறது. அதுவே தொடர்ந்து பேணப்படுகிறது.

ஆனால், நாம் ஒன்றை நினைவிற்கொள்ள வேண்டும். அதை மறந்து விடவே முடியாது.

எல்லாப் பாதைகளும் அடைக்கப்பட்டே யுத்த நிலை உருவாக்கப்பட்டது.

அல்லது யுத்தம் எல்லாப் பாதைகளையும் அடைத்து விடும்.

முரண்பாட்டு அரசியலில் பாதைகளே இருப்பதில்லை.

முரண்பாட்டு அரசியலை வளர்க்கும் சக்திகள் பாதைகள் திறக்கப்படுவதை ஒரு பொழுதும் விரும்புவதுமில்லை.

அவை எப்போதும் பாதைகளை அடைப்பதையே அடிப்படையாகக் கொண்டவை. அவற்றின் நோக்கமும் அதுதான். பாதைகளின்றி பயணங்கள் நிகழாது.

மீண்டும் இன்னொரு நண்பர் சொன்ன ஒரு கூற்றை இங்கே நினைவு படுத்துவது பொருத்தமாகும்.

‘நாங்கள் யுத்தகாலத்தில் நடந்து செல்வதற்கே பாதைகள் இருக்கவில்லை. அவர்கள் (அரசியல்வாதிகள்) பறந்து சென்று கொண்டிருந்தார்கள். (விமானங்களில் நாடு நாடாகப் பறந்து திரிந்தார்கள்)’ என்று.

எனவே சமாதானத்துக்கான பாதை பொதுவாகவே மிகக் கடினமானது. அது பலமான மிகப் பெரிய எதிர்ப்புகளின் மத்தியில் உருவாக்கப்பட வேண்டியது.

வெறும் அபிலாஷைகளினாலும் பிரார்த்தனைகளாலும் எதிர்பார்ப்புகளாலும் உருவாக்கப்பட முடியாதது. அதை உருவாக்கக் கூடியவர்களை அடையாளம் காண்பது, அல்லது அதற்கு நாம் தயாராவதே இன்றுள்ள முதன்மைப் பணியாகும்.

00



நாலு வார்த்தை பேச

Sunday 26 August 2012

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலவரங்கள் திருப்தியளிக்கும் நிலையில்  இருப்பதாக அரசாங்கம் அடித்துச் சொல்கிறது. ஆனால், அரசாங்கத்துக்கு அப்பாலான அனைத்துத் தரப்பினரும் இது தொடர்பாக மாற்று அபிப்பிராயத்தையே கொண்டுள்ளனர்.

யுத்தத்துக்குப் பிந்திய இலங்கையை அமைதியை நோக்கியும் சமாதானத்தை நோக்கியும் கொண்டு செல்வதில் குறிப்பிடத்தக்க பணியை யாருமே செய்யவில்லை. எந்தத்தரப்பும் இதற்காக அர்ப்பணிப்போடு செயற்பட வில்லை.

ஆகவே இனவாதக் கட்சிகளும் அதை ஊக்குவிக்கின்ற தலைவர்களும் மீண்டும் பலமடைந்து விட்டனர்.

இத்தகைய நிலைமையைத்தான் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் ஊக்குவிக்கின்றன. அல்லது தோற்றுவிக்க முயற்சிக்கின்றன.

இலங்கையர்களாக இருப்போருக்கு இது மிகக் கவலை தருகின்ற ஒரு விசயமே.

வாழ்க்கையை இந்தக் களத்தினுள்ளே வைத்திருப்போருக்கு இத்தகைய நிலை மிகக் கவலைககுரிய ஒன்று.

ஆனால் தனியாட்களால் இவற்றை மாற்றமுறச் செய்வது மிகக் கடினமானது. ஆனால் அவர்களால் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

அரசியல்வாதிகளும் ஊடகங்களும் மிகமிகத் தாழ்நிலைக்குச் சென்றுள்ள நிலையே இன்றைய யதார்த்தம்.

ஆனால் சனங்கள் இவற்றினால் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.

அவர்களுக்கு இந்தத் தரப்புகளின் போதையுட்டல்கள் தேவைப்படுகின்றன.

இத்தகைய ஒரு நெருக்கடிக்குள்தான் மாற்றுச் சிந்தனையைக் குறித்து யாரும் சிந்திக்க முடியும்.

எனவே இதைக்குறித்து இந்தப் பக்கத்தில் தொடர்நது எழுதி வரும் பக்கங்கள் விவாதங்களை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டவையாக உள்ளன.

இந்த விவாதங்களிலும் முன் வைப்புகளிலும் உங்களுக்கும் பொறுப்பும் பங்கும் உண்டு.

எழுதுங்கள்.



4 பக்கம் 4 வார்த்தை

Friday 24 August 2012












நாலு பக்கத்தைச் சில நாட்களாக பதிவிட முடியாமற் போய் விட்டது. இதன் மூலம் வாசகர்களுக்கு ஏற்பட்ட தடங்கல்களுக்கு பொறுப்போடு மன்னிக்க வேண்டுகிறேன். இனித் தொடர்ந்து பதிவிடப்படும். பேசப்படும் விசயங்கள் குறித்து நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். பேசவேண்டியவை குறித்தும் கூறுங்கள். சாத்தியமானதை, தெரிந்து கொள்ள முடிந்ததை எழுதலாம்.

பதிவுகளின் முறையை மாற்றலாமா என்று ஒரு யோசினையும் உண்டு. உரையாடல், தகவல் பரிமாறல் என்ற வகையில் புதிய பதிவுகளைச் செய்யலாமா என்று சிந்திக்கிறேன். சாத்தியமானால் அப்படி முயற்சிக்கலாம்.

சிலவேளை குறுந்தகவல்களாகவும் சில பதிவுகளைச் செய்யலாம் என்ற எண்ணமுண்டு. இது உங்களை மேலும் சிந்திக்கத் தூண்டும்.

பல நண்பர்களுடைய அபிப்பிராயங்களை மனதிற் கொண்டு இந்த மாதிரியான ஒரு அணுகுமுறைக்கும் செயல்முறைக்கும் தயாராகியிருக்கிறேன். இது ஒரு முயற்சிதான்.

சரி பிழைகள், வெற்றி தோல்விகள், போதாமைகள், நிறைவுகள் என இருக்க வாய்ப்புண்டு. அதையும் நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

நன்றியுடன்,

கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்










 

2009 ·. by TNB