கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

‘புத்திமான் பலவான்’

Saturday 26 May 2012











டிப்படைகளை உருவாக்க முடியாத எத்தகைய செயல்களும் நல்விளைவுகளைத் தரவே மாட்டாது. குழப்பம், முரண்பாடு, தெளிவற்ற நிலை, உறுதியின்மை, செயற்றினில் போதாமை, நேர்மையீனம், அர்ப்பணிப்பின்மை, அல்லது அதிதீவிரம், மேலாதிக்கப்போக்கு, யதார்த்தத்தைக் கடந்த கற்பனாவாதம் போன்ற குறைபாடுகளின் மத்தியில் அல்லது இவற்றை வைத்துக் கொண்டு எந்தச் சிறு நன்மையையும் பெற முடியாது.

ஈழத்தமிழர்களின் அரசியலில் இவ்வளவு குறைபாடுகளும் உள்ளன. பலவீனமானவர்களைத் தோற்கடிப்பது எளிது. எனவேதான் அவர்கள் எளிதிற் தோற்கடிக்கப்படுகிறார்கள்.

குழப்பம், முரண்பாடு, தெளிவற்ற நிலை, உறுதியின்மை, செயற்றினில் போதாமை, நேர்மையீனம், அர்ப்பணிப்பின்மை, அல்லது அதிதீவிரம், மேலாதிக்கப்போக்கு, யதார்த்தத்தைக் கடந்த கற்பனாவாதம் போன்ற குறைபாடுகள் நிறைந்திருக்கும் ஒரு சமூகமாக இன்றைய தமிழ்பேசும் சமூகமும் உள்ளது.

விடுதலைப் புலிகளின் காலத்தில் பலமாக இருந்ததாக ஒரு தோற்றம் பலரிடம் உணரப்படுகிறது. புலிகள் ஆயுதரீதியாகவும் போர் புரிவதில் பலமாகவும் இருந்தாலும் அவர்களிடம் இருந்த அரசியற் பலவீனமும் ஜனநாயகக் குறைபாடுகளும் சிந்தனைப் பலவீனமும் இறுதியில் அவர்களின் பலமாக இருந்த அம்சங்களையே பலவீனமாக்கின.

இப்போது சர்வ தேச ரீதியாக (புலம் பெயர்ந்த தமிழர்கள் உட்பட) தமிழர்களின் செயற்பாடுகள் பரந்த தளத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் மிக எளிதிற் தோற்கடிக்கப்படும் நிலையிலேயே அவை உள்ளன.

பலம் என்பது வளம், ஆளணி, நிலப்பரப்பின் விஸ்தீரணம் போன்றவற்றினால் வருவதல்ல. அதன் அடிப்படைகள் வேறானவை.

ஆசியாவின் நிலப்பரப்பையும் ஆளணியையும் விட அமெரிக்காவின் நிலப்பரப்பும் ஆளணியும் குறைவானதே. ஆனால், உலகத்தின் தலைமைப் பொலிஸ் பாத்திரத்தில் இருப்பது அமெரிக்காவே.

‘ஐரோப்பியர்களின் காலம்’ என்ற அடையாளத்தை வரலாற்றில் உருவாக்கிய போர்த்துக்கல், ஒல்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அந்த நாட்களில் கண்டம் கடந்து தங்களின் ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் எப்படி உருவாக்கின?

இதற்கு அவற்றின் நிலப்பரப்போ, ஆளணித்தொகையோ, வளங்களோ காரணம் அல்ல.

அவற்றிடம் இருந்த வேட்கையே, தேவைகள் ஏற்படுத்திய அவசியமே அவற்றின் வெற்றிக்குக் காரணம். அதற்காக இந்த நாடுகள் மேற்கொண்ட தேடல்களும் அரசியல் நடவடிக்கைகளும் கவனத்திற்குரியவை. இதையொட்டியே வீரர்களும் அரசியற் தலைவர்களும் மதகுருக்களும் அறிஞர்களும் தொழிற்பட்டனர்.

ஐரோப்பிய ஆதிக்கம் அந்த ஆதிக்கத்துக்குக் கீழ்க்கட்டுப்பட்டவர்களுக்கு மிகப் பெரிய அநீதிதான். ஆனால், ஐரோப்பியர்களைப் பொறுத்தவரை அது அவர்களுக்குத் தவிர்க்க முடியாத ஒன்று. தேவையான ஒன்று.

ஐரோப்பாவின் வரலாற்றில் முடியாட்சிகள் எப்படி இருந்தன என்று தெரிந்தவர்களுக்கு, அங்கே மக்களுடைய வாழ்க்கை எந்தளவுக்குக் கடுமையாக இருந்தது என்று புரியும். பொருளாதார நெருக்கடிகளும் ஒடுக்கு முறையும் உச்ச வரியும் மக்களை வாட்டி வதைத்தன.

இன்று வேலையற்றோருக்கே உதவிப் பணத்தை வழங்கும் நிலையில் இருக்கின்ற மேற்கு நாடுகள் அன்று உழைப்பவருக்கான ஊதியத்தைக் கொடுப்பதற்கே பிரச்சினைப்பட்டுக் கொண்டிருந்தன.

இன்றைக்கு நாம் பார்க்கின்ற ஐரோப்பாவாக அன்றைய ஐரோப்பா இருக்கவில்லை. அன்று கொந்தளிப்புகளும் ஒடுக்கு முறையும் ஜனநாயக மறுப்புகளும் தாராளமாக இருந்தன.

யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் இருந்து பொருளாதாரத் தேவைகள், நிலத் தேவைகளுக்காக கடந்த நூற்றாண்டில் தீவக மக்கள் வேறு இடங்களை நோக்கிப் பெயர்ந்ததைப்போலவே, கண்டங்களைக் கடக்க முற்பட்டனர் ஐரோப்பியர்.

அமெரிக்காவுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் ஆசியாவுக்கும் ஆபிரிக்காவுக்கும் என உலகத்தின் திசைகள் எங்கும் அவர்கள் புறப்பட்டனர்.

போனவர்கள் போரிட்டார்கள், நாடுகளைக் கைப்பற்றினார்கள். ஆட்சிகளை அமைத்தார்கள். வளங்களைத் தராளமாக எடுத்தார்கள். அந்தந்த நாடுகளின் மக்களை வைத்தே தங்களுக்குத் தேவையானதையெல்லாம் செய்து கொண்டார்கள்.

போதாக்குறைக்குத் தங்களுடைய பண்ணைகளுக்குத் தேவையான பணியாட்களை அடிமையாகக் கொண்டு செல்லுமளவு உச்ச நிலையில் அவர்களுடைய செயல்கள் இருந்தன.

இப்படியெல்லாம் செய்தே ஐரோப்பாவை – தங்களுடைய நாடுகளை, தங்களுடைய வாழ்க்கையை, தங்களை வளப்படுத்தினார்கள். அவர்களுடைய வெற்றிகள் இப்படித்தான் அமைந்தன. ஐரோப்பாவின் இன்றைய அடையாளம் இப்படித்தான் உருவாக்கப்பட்டது.

இன்றைய மேற்குலகத்தின் வளர்ச்சியும் மேலாண்மையும் அங்குள்ள மக்களின் வளமான வாழ்க்கையும் உருவாகிய பின்னணி இப்படித்தான் உள்ளது. இதற்காக அவர்கள் அன்றும் வெட்கப்பட்டதில்லை. இன்றும் வெட்கப்பட்டதில்லை என்பது தனிக்கதை.

மேற்குலகத்தினரின் வெற்றிகளுக்கும் ஆதிக்கத்துக்கும் அவர்களுக்குப் பயன்பட்டது முதலில், நிலைமைகளைப் பற்றிய தெளிவே. பொருளாதார நெருக்கடிகளும் மோதலும் குழப்பங்களும் வாழ்க்கைப் பிரச்சினைகளும் தொடர்ந்து ஏற்படுவதற்கான காரணங்களை எப்படி எதிர்கொள்வது என்ற சிந்தனை அவர்களை வெளிப்பரப்பு நோக்கிப் பயணிக்க வைத்தது. பிற தேசங்களை நோக்கிப் பயணிக்க வைத்தது. அந்தப் பயணங்களுக்கான சிந்தனையே அவர்களுடைய முதற்படியாகும். (இப்போது கிரகங்களை நோக்கி அவர்கள் பயணிப்பதும் வெளியை ஆள்வதும் இந்த அடிப்படையின் இரண்டாம் கட்டமே.

இந்தப் பயணங்களை எப்படிச் செய்வது? இந்தப் பயணங்களின் விளைவாக எவற்றைப் பெறலாம்? அவற்றை எப்படிப் பெறலாம்? அப்படிப் பெற முற்படும்போது எத்தகைய எதிர்விளைவுகள் ஏற்படும்? அல்லது எவ்வாறான எதிர்விளைவுகள் ஏற்படக்கூடும்? அவற்றை எப்படியெல்லாம் முறியடிப்பது? அடுத்த கட்டங்கள் என்ன? என்ற ஆயிரக்கணக்கான தொடர் கேள்விகளுக்கான பதில்களைத் தயார்ப்படுத்திக் கொண்டமை இந்த வெற்றியின் அடுத்த படியாகும்.

பின்னர் அவர்கள் மேற்கொண்ட பயணங்களும் படையெடுப்புகளும் பிறவும். இவை அதற்கடுத்த படிகளாகும்.

இதற்கெல்லாம் அவர்களுக்குப் பயன்பட்டது, தேவைகளைப் பற்றிய தெளிவு, சுயமதிப்பீடு, வெளி மதிப்பீடு, தங்களுடைய செயற்பாடுகளைப் பற்றிய தெளிவு, முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ளும் ஆற்றல், ஒருங்கிணைவு, உறுதி, செயற்றிறன், தங்களின் செயலைச் செய்வதில் உள்ள நேர்மை, வெற்றியைக் குறித்த நம்பிக்கை, அந்த வெற்றியைப் பெற வேண்டும் என்ற முனைப்புக்கு வழங்கிய அர்ப்பணிப்பு, யதார்த்த நிலைமைகளை விளங்கிக் கொள்ளல், ஒருங்கிணைந்து செயற்படுவதில் பேணவேண்டிய விட்டுக்கொடுத்தல் மற்றும் செயற்பாட்டாளர்களிடையே பேணப்பட்ட அனுசரித்துப் போதல் போன்றவையே.

எனவேதான் அவர்களால் வெற்றிகளைப் பெற முடிந்தது. நீடித்த நெருக்கடிகளைத் தீர்த்துக் கொள்வதற்கான பொருளாதாரப் பிடிமானத்தை – அறிவு மற்றும் அனுபவ வளத்தை எல்லாம் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
இங்கே ஐரோப்பியர்களின் பலம் என்பது அவர்களிடம் இருந்த சிந்தனையே. வெல்வதற்கான மூலோபாயத்தையும் தந்திரோபாயத்தையும் அவர்கள் வகுத்துக் கொண்டமையே அவர்களை நிரந்தர வெற்றியாளர்களாக வைத்திருக்கிறது.

அதற்காக ஐரோப்பிய நாகரீகத்தையும் ஐரோப்பிய அரசியலையும் இங்கே நாம் முழுமனதோடு அங்கீகரிக்கவில்லை. ஆனால், மேற்குலகம் எப்படி எழுச்சியடைந்தது என்பதையும் அதனுடைய இன்றைய நிலை எப்படி உருவாகியது என்பதையுமே இங்கே நாம் பார்க்கிறோம்.

இதற்கு இன்னொரு உதாரணம். ஆனால் பலரும் பயன்படுத்திய ஒரு மோசமான உதாரணம், இஸ்ரேலின் உருவாக்கமும் அதனுடைய ஸ்திரத்தன்மையும்.

மேற்குலகத்தின் தேவையோடு இணைந்த உருவாக்கமே இஸ்ரேலின் நிலை என்றாலும் அது ஒரு சிறிய நாடு, அந்தப் பிராந்தியத்தில் தொகையிற் குறைவானவர்களையே அது தனது சனங்களாகக் கொண்டிருக்கிறது என்பதும் கவனத்திற்குரியவை.

இங்கே இஸ்ரேலுக்குப் பயன்பட்டதும் இன்றுவரை அது பயன்படுத்துவதும் மூளையைத்தான்.

யூதர்களுடைய மூளைப் பலமே இன்றுவரை இஸ்ரேலின் பலம் என்பார்கள்.
அதிகம் ஏன், தாவீது, கோலியாத் கதையில் நாம் கற்றுக்கொள்வதென்ன புத்திசாலித்தனத்தையும் அர்ப்பணிப்பையும்தான் அல்லவா!

ஆனால், நடைமுறையில் தமிழர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
தமிழர்கள் ஒன்றில் தமது பழம்பெருமைகளைப் பெருமிதமாகப் பேசுவார்கள். அல்லது பெருங்குரலெடுத்து தங்களுடைய குறைகளையும் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும் சொல்லி அழுவார்கள்.

இந்த இரண்டும் யாருக்கும் எரிச்சலூட்டுவது. இந்த இரண்டையும் யாரும் விரும்புவதில்லை. ஓயாத புளுகும் ஓயாத புலம்பலும் எப்படியிருக்கும் என்று யாருக்கும் சொல்லித்தரவேண்டுமா என்ன?

எப்போதும் புலம்பிக் கொண்டிருப்பவர், உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்@  செயல் ரீதியாகப் பலவீனமானவர்.

ஏறக்குறைய இந்த நிலையிற்தான் ஈழத்தமிழர்கள் இன்றிருக்கின்றனர். இந்த நிலைக்கு இத்தப் பத்தியாளரும் விதிவிலக்காக இல்லை. ஆனால், இதைக் கடக்க வேண்டும்.

யாரைக் கண்டாலும் புலம்புதல் - குறைகளைச் சொல்லுதல், மற்றவர்களைப் பற்றியே குற்றம் கூறுதல்...

இந்தப் பழக்கம் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வைப் பெற்றுத்தராது.
உலகம் என்பது பல கோடுகளாலும் பல பின்னல்களாலும் ஆன போட்டிக்களம். மின்னற் பொழுதில் ஒன்றையொன்று வெட்டிச் செல்லும் ராஜதந்திரப் போர்க்களம் அது.

எந்தப் பெரிய வல்லரசுக்கும் கூட ஏராளம் பிரச்சினைகளும் நெருக்கடிகளும் சவால்களும் அச்சுறுத்தல்களும் அபாயங்களும் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கின்றன.

தலைமைப் பொலிஸ்காரனாக ராஜாங்கம் செய்கின்ற அமெரிக்காவுக்கே இந்த உலகத்தில் அதிகமான எதிரிகள்.

செப்ரெம்பர் 11 இல் அமெரிக்கா கலங்கியதும் இப்போது வரையில் தன்னை நோக்கி வரக்கூடிய எதிர்ப்புகளுக்காக அது கலங்குவதும் பகிரங்கமானது.
இதைப் போலவே எந்த நாட்டுக்கும் எந்தச் சமூகத்துக்கும் எப்போதும் நெருக்கடிகளும் அபாயங்களும் சவால்களும் இருந்து கொண்டேயிருக்கின்றன.

ஆனால், பல நாடுகளும் பல சமூகங்களும் தங்களைக் கண்டறிந்து, தங்களுடைய சூழலைக் கண்டுணர்ந்து, தங்களின் தேவைகளையும் அவசியத்தையும் பிரித்தறித்து, அவற்றை எட்டுவதற்கான வழியறிந்து, அதற்காகச் செயலாற்றும் முறையறிந்து செயற்படுகின்றன.
இதற்காக அவை தேவைகளைப் பற்றிய தெளிவு, சுயமதிப்பீடு, வெளி மதிப்பீடு, தங்களுடைய செயற்பாடுகளைப் பற்றிய தெளிவு, முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ளும் ஆற்றல், ஒருங்கிணைவு, உறுதி, செயற்றிறன், தங்களின் செயலைச் செய்வதில் உள்ள நேர்மை, வெற்றியைக் குறித்த நம்பிக்கை, அந்த வெற்றியைப் பெற வேண்டும் என்ற முனைப்புக்கு வழங்கிய அர்ப்பணிப்பு, யதார்த்த நிலைமைகளை விளங்கிக் கொள்ளல், ஒருங்கிணைந்து செயற்படுவதில் பேணவேண்டிய விட்டுக்கொடுத்தல் மற்றும் செயற்பாட்டாளர்களிடையயே பேணப்பட்ட அனுசரித்துப் போதல் என்ற அடிப்படை விசயங்களை ஒழுங்கு படுத்திச் செயலாற்றுகின்றன.

அதிகம் ஏன், இலங்கை அரசுக்கே எவ்வளவு நெருக்கடிகள் கடந்த 30 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டுள்ளன. ஆனால், அவற்றையெல்லாம் அது எப்படி எதிர்கொண்டு வெற்றியடைந்திருக்கிறது?

‘யானைக்கு துப்பிக்கை பலம் என்றால், எலிக்கு வளை பலம்’ என்பார்கள். இது எதைச் சொல்கிறது?

ஆனால், ஈழத்தமிழர்கள் இவற்றுக்கு எதிர்த்திசையிலேயே தங்களுடைய தோணிகளை – கப்பல்கள் என்று நினைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

‘புத்திமான் பலவான்’ என்று தெரியாமலா சொன்னார்கள்?

அந்தப் புத்திசாலித்தனத்தை மக்கள் மயப்படுத்திச் செயலாற்றும்போதே விழிப்பும் விடுதலையும் கிட்டும்.

முள்ளை முள்ளால் எடுப்பது, காற்றுள்ள போதே தூற்றிக் கொள், சிறு துரும்பும் பல்லுக்குத்துவதற்கு உதவும் என்றெல்லாம் தமிழில் முன்னோர் சொல்லித்தான் வைத்திருக்கிறார்கள்.

ஆனால், அமெரிக்காக்காரனின் மூத்திரமும் தீர்த்தமாக இனிக்கிறது சிலருக்கு. இந்தப் புத்திசாலித்தனத்தை என்னவென்றுரைப்பது?

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB