கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

கிழக்கில் தேர்தல் முடியவில்லை - ஹக்கீமின் தீர்ப்பு எப்படி?

Sunday 16 September 2012





















கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் முடிவுகளை அடுத்து, புதிர் நிறைந்த முடிச்சொன்றை வைத்துக்கொண்டிருக்கிறார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம். இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் 2012. 09.14 காலைவரையில் இந்த முடிச்சை ஹக்கீம் அவிழ்க்கவில்லை. ஹக்கீம் அவிழ்க்கவுள்ள முடிச்சில்தான் மாகாணசபையின் கதையும் விதியும் உள்ளது. ஆகவேதான் அதற்கு இந்தப் புதிர்த்தன்மை அதிகம். கவர்ச்சியும் அதிகம்.

நடந்த தேர்தலில் மூன்றாம் நிலையில் இருக்கும் கட்சி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ். அந்தக் கட்சியில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆக ஏழு மட்டுமே.

ஆனால், கிழக்கு மாகாணசபையின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடிய நிலையில் மு.காவும் ஹக்கீமும் பெற்றிருப்பதே இங்கே கவனத்தை ஈர்ப்பது. இதற்குக் காரணம், அந்தக் கட்சி தேர்தலுக்கு முன்னர் எடுத்த தீர்மானந்தான்.  மிகக் கடினமான ஒரு நிலையில் அந்தத் தீர்மானத்தை மு.கா எடுத்தது.
அரசாங்கத்துடன் சேர்ந்திருந்து கொண்டே அரசாங்கத்தரப்பின் கூட்டிற்குள் அடங்காமல், விலகித் தேர்தலில் தனித்து நின்றமை இதில் முக்கியமான ஒன்று. இது ஒரு புத்திபூர்வமான, துணிச்சமல் மிக்க முடிவு. ஆனால், நெருக்கடிகள் நிறைந்தது.

இதற்காக ஒரு கட்டத்தில் அந்தக் கட்சியின் முக்கிய நிலையில் இருக்கும் பஷீர் சேகுதாவூத், தன்னுடைய பிரதி அமைச்சர் பதவியையே துறந்தார்.
அதேவேளை மறுபக்கத்தில் ஹக்கீமையும் மு.காவையும் வளைத்துப் போடுவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் சம்மந்தனும் கடுமையாக முயற்சித்தனர். தமிழ்பேசும மக்கள் என்ற அடிப்படையிலும் சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் என்ற வகையிலும் ஒரு கூட்டிணைவு தேவை என்ற வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மு.காவுக்கு அழைப்பு விடுத்தது.

இதிலும் மு.காவும் ஹக்கீமும் சிக்கக்கொள்ளவில்லை.
அதாவது தேர்தற்காலத்தில் வழமையாக ஏற்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பவாதக் ‘கூட்டு’ என்ற பொதுவிதியை அது கடந்தது.

இதற்கான வெகுமதியாக இன்று மு.காவுக்கு ஒரு வலுவான ஸ்தானம் கிடைத்துள்ளது@ ஒரு சிறந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது.
அரசாங்கத்துடன், இணைந்து தேர்தலில் மு.கா நின்றிருந்தால், அரசின் தீர்மான வளையத்துக்குட்பட்டே இருந்திருக்க வேண்டும். அதாவது அரசாங்கம் தீர்மானிக்கும் எல்லைப் பரப்புக்குள்ளும் அதனுடைய நிபந்தனைகளுக்குட்பட்டும் நின்றிருக்க வேண்டும்.
அப்படி நின்றிருந்தால், இன்றிருக்கும் வலுநிலை மு.காவுக்குக் கிடைத்திருக்காது.

அதைப்போலவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் நின்றிருந்தாலும் அதற்கு இத்தகைய ஒரு நிலை வாய்த்திருக்காது. கூட்டமைப்புடன் ஆட்சியைப் பகிர்ந்து கொண்டிருக்க முடியுமே தவிர, அதற்கப்பால் வலுவைப் பிரயோகிக்கும் ஒரு நிலை ஏற்பட்டிருக்காது.

இந்த இடத்தில்தான் மு.கா பலருடைய கவனிப்பையும் பெற்றிருக்கிறது.
அரசியலில் உபாயங்களும் தந்திரோபாயங்களும் முக்கியமானவை. பலவீனமான நிலையிலும் பலத்தைக் கொடுப்பதிலும் நெருக்கடிச் சந்தர்ப்பங்களில் நெருக்கடி வளையத்தைத் தகர்ப்பதிலும் உபாயங்களுக்கும் தந்திரோபாயங்களுக்கும் முக்கிய பங்குண்டு.
மு. கா தெரிந்தோ தெரியாமலோ நல்லதொரு உபாயத்தைக் கையாண்டுள்ளது.

ஒரு சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற கட்சியும் அதனுடைய தலைமையும் எடுக்கின்ற தீர்மானத்தைப் பொறுத்தே அந்தச் சமூகத்தினுடைய பாதுகாப்பும் எதிர்கால முன்னேற்றமும் அமையும்.

மு.கா எடுத்த முதற்கட்டத் தீர்மானம் அதற்கு ஒரு கட்ட வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால், இந்த வெற்றி இன்னும் முழுமைப்படுத்தப்படவில்லை. இதற்கு அந்தக் கட்சியும் அதனுடைய தலைமையும் இன்னும் போராட வேண்டியுள்ளது. இன்னும் நிதானமாகவும் புத்திபூர்வமாகவும் இயங்க வேண்டியுள்ளது. இதுதான் இன்று மு.காவுக்கும் அதனுடைய தலைமைக்கும் உள்ள பெருஞ்சவால்.

அப்படிப் பார்த்தால், இன்னொரு நெருக்கடிச் சூழலுக்குள்தான்  மு.காவும் அதனுடைய தலைமையும் உள்ளது எனலாம்.

இந்த நிலையில் இந்தச் சவாலை எதிர்கொள்ளவும் இந்த நெருக்கடியை முறியடிப்பதற்காகவும் மு.கா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
எனவே, அடுத்ததாக ஹக்கீம் என்ன சொல்லப்போகிறார், எந்தப் பக்கும் திரும்புவார், யாருக்குப் பச்கைக் கொடியைக் காட்டுவார் என யாருக்குமே ஒன்றும் தெரியவில்லை. ஏன் அவருக்கே அதைப்பற்றி இன்னும் தெரியாதிருக்கலாம். ஏனெனில் அந்த அளவுக்குக் கட்சிக்குள்ளே குழப்பங்களும் அபிப்பிராய பேதங்களும் விவாதங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

எனவே இந்த இடைநிலையில் ஊகங்கள் பலவிதமாகக் கிளம்பித் தாராளமாக  அலைகின்றன.

அரசாங்கம் சொல்கிறது, தனக்கே மு.காவின் ஆதரவு கிடைக்கும் என்று.
சம்மந்தனும் அவருடைய சகாக்களும் சொல்கிறார்கள், தமிழ்பேசும் மக்களின் உணர்வுகளை மு.கா புறக்கணிக்காது எனத் தாம் நம்புவதாக.

மு.கா அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்து கொள்ளக்கூடிய சாத்தியங்களே அதிகமாக உள்ளதாக சில ஆய்வாளர்கள் ஆருடம் சொல்கின்றனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பக்கம் மு.கா வரவேண்டும் எனச் சில இணையத்தளங்கள் கருத்துக் கணிப்புச் செய்துள்ளன.

ஆனால், மு.கா எல்லாவற்றுக்கும் பதிலாக இன்னும் கதவைத்திறக்காமல், சத்தத்தை எழுப்பாமல், வெளியே பூட்டை மட்டும் தொங்க விட்டுள்ளது.
இதனால், (ஹக்கீமின் பதில் வரும்வரையில்) பதற்றத்தோடிருக்கிறது அரசாங்கம்.

அதே பதற்றத்தோடிருக்கிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.
மேலும் மு.காவுக்கு வாக்களித்த மக்கள்.

மேலும் அதனுடைய ஆதரவாளர்கள்.

மேலும் ஊடகங்கள்.

மேலும் அரசியல் அவதானிகள்.

எல்லாவற்றுக்கும் அப்பாலான உச்ச பதற்றத்திலிருக்கின்றன அமெரிக்காவும் இந்தியாவும்.

இப்படி எல்லோரையும் எல்லாத்தரப்பையும் பதற்றத்துக்குள் வைத்திருப்பவர் நிச்சயமாக ஒரு ‘கிங் மேக்கரா’கவே இருக்க முடியும்.

ஆம், ஹக்கீம் இன்று கிழக்கில், இலங்கையின் அரசியலில் ஒரு ‘கிங் மேக்கராகவே’ மாறியிருக்கிறார்.

எனவே இந்தக் ‘கிங் மேக்கர்’ என்ன சொல்லப்போகிறார்? என்ன செய்யப்போகிறார்? யாரை அணைத்துக் கொள்ளப்போகிறார்? என்ற கேள்விகள் புதிராகவே உள்ளன.

ஆகவே ஒரு வகையில் இந்த மாதிரியான நிலை என்பது வெளித்தோற்றத்துக்கு பெரும் வாய்ப்பாகத் தெரிந்தாலும் உள்ளே நெருக்கடிகளும் சிக்கல்களும் நிறைந்த ஒன்றாகவே இருப்பதுண்டு.
வரலாற்றில் எல்லோருக்கும் வாய்ப்புகள் கிட்டுவதுண்டு. சில வாய்ப்புகள் அபூர்வமானவை. எதிர்பார்த்திராதவை. எதிர்பார்த்திராத அளவுக்கானவை.

இப்பொழுது மு.காவுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பும் அத்தகைய ஒன்றே.
மு.கா தனியாக அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருந்தாற்கூட இத்தகைய ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்காது. அது தனியே அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுத் தனியாக ஆட்சியமைத்திருந்தாலும் அதிகாரப் பகிர்விலும் வள ஒதுக்கீடுகளிலும் பிற விசயங்களிலும் அரசாங்கத்துடன் இழுபறிப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்த மாதிரிப் பேரம் பேசும் நிலையொன்றினூடாக ஆட்சியில் பங்குபற்றும்போது அதனுடைய மதிப்பும் லாபங்களும் அதிகம். இது பின்னர் இலகுவான வழிமுறை ஒன்றும் கூட. இந்த ஆட்சிப் பகிர்வென்பது இரண்டு தரப்பையும் மனதிற்கொண்டே அணுகப்படுகிறது.

இதேவேளை, இன்னும் மு.காவின் முடிவுகள் வெளிவராத நிலையில் முன்னனுமானங்களை இங்கே நாம் அடுக்கிக் கொண்டிருக்க முடியாது. அது பொருத்தமானதும் அல்ல.

முஸ்லிம் காங்கிரஸ் அடைந்திருக்கும் முதற்கட்ட வெற்றியை அல்லது பாதி வெற்றியை முழுவெற்றியாக மாற்ற வேண்டுமானால், அது அடுத்ததாக எடுக்கவுள்ள தீர்மானமும் அதைச் செயற்படுத்துவதற்கு அது கையாளப்போகும் தந்திரோபாயங்களும் உறுதிப்பாடும் முக்கியமானவை.
இல்லையெனில் கைக்கெட்டியது வாய்க்குக் கிடைக்கவில்லை என்ற கதையாகிவிடும்.

இங்கேதான் நாம் இந்தப் பிரச்சினையைப் பற்றி ஆராயவேண்டியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் முதலில் தன்னுடைய தரப்பு மக்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. அப்படிச் சிந்திக்கும்போதே கட்சியின் நலனும் அதனுடைய எதிர்காலமும் ஒரு எல்லைவரையில் பேணப்படும். இதைக்குறித்த விவாதங்கள் கட்சிக்குள் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன என அறிய முடிகிறது.

இதேவேளை கட்சியின் நலனும் எதிர்காலமும் தனியே முஸ்லிம் மக்களுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு நிற்பதில்லை. அது அவர்களையும் உள்ளடக்கிக்கொண்டு, அரசியலுடன் தொடர்புடைய ஏனைய தரப்புகளையும் சேர்த்து இயங்குவது.

அப்படிப் பிற தரப்புகளையும் சேர்த்துக்கொண்டு இயங்கும்போதே கட்சியின் நலனும் அதனுடைய எதிர்காலமும் உறுதிப்படுத்தப்படும். இது அந்தக் கட்சி பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களையும் அது இயங்குகின்ற அரசியற் தளத்தையும் முன்னேற்றும்@ பாதுகாக்கும்.

எனவே முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள், அவர்களுடைய பிரச்சினைகள் என்பவற்றுடன் கிழக்கில் உள்ள ஏனைய சமூகத்தினரைப் பற்றியும் மு.கா சிந்திக்க வேண்டியுள்ளது.

அத்துடன், இலங்கையில் ஆட்சியை நடத்தும் தரப்பையும் கவனத்திற் கொள்ள வேண்டியிருக்கிறது.

சிறுபான்மைத் தரப்பினர் என்ற அடிப்படையில் சவால்களையும் நெருக்கடிகயைம் சந்திக்கும் தமிழ்த்தரப்பைப் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.

மேலும் இலங்கை அரசியல் மற்றும் சமூக நிலைமைகளில் நேரடி மற்றும் மறைமுகத் தலையீடுகளையும் உள்நுழைவுகளையும் மேற்கொள்ளும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் நிபந்தனைகளைப் பற்றியும் மு.கா கவனிக்க வேண்டியிருக்கிறது.

எனவே இத்தகைய பல தரப்பின் எதிர்பார்க்கைகள், நிபந்தனைகள், இழுபறிகளின் மத்தியிலேயே தன்னுடைய கப்பலைப் பாதுகாப்பாக ஒரு துறைமுகத்தில் நிறுத்த வேண்டிய பொறுப்பில் மு.கா வின் தலைவர் ஹக்கீம் உள்ளார்.

ஒரு காலத்தில் கப்பற்துறை அமைச்சை வழிப்படுத்தியது மு.கா. பல கப்பல்கள் நங்கூரமிடுவதற்கும் அவை துறைமுகத்தைச் சேர்வதற்கும் அன்றைய மு.கா தலைவர் வழிப்படுத்தியாக இருந்தார்.
இப்போது நீதி அமைச்சுப் பொறுப்பில் இருந்து நீதித்துறையின் பொறுப்பை வழிப்படுத்துகிறார் ஹக்கீம்.

ஹக்கீமின் தராசு, அவருடைய தீர்ப்பு, அவருடைய நியாயம், அவருடைய வழிகாட்டல், அவருடைய தீர்மானம் எப்படி இருக்கப்போகிறது?

அது கிழக்கில் மேலும் கொந்தளிப்புகளை ஏற்படுத்துமா? அல்லது புதிய சகாப்தத்தை உருவாக்குமா? அல்லது கிடைத்த வாய்ப்பையே ஹக்கீம் கை நழுவ விடுவாரா?

அவருடைய மனம் எங்கே திருப்பப்போகிறது? எங்கே நங்கூரமிடப்போகிறது?
00

இலங்கையைப் பாதுகாக்க எவ்வளவோ போராட வேண்டியுள்ளது

Friday 7 September 2012



இலங்கையின் பெரும்பாலான ஊடகங்களில் (தமிழில் அல்ல) அண்மையில் வெளியான கார்ட்டூன்கள் பல்கலைக் கழகங்களை அரசாங்கம் கையாளும் முறைமை தொடர்பாகவே இருந்தன. இவற்றில் ஒரு கார்ட்டூன் மிக உச்சமாக ரசிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால், அது சொல்கின்ற யதார்த்தத்தையும் உண்மையையும் ஏற்கக் கடினமாக உள்ளது.

மூடப்பட்ட பல்கலைக்கழகத்தின் கேற்றுக்கு முன்னால் நின்று ஒரு நாய் காலை உயர்த்தி அந்தக் கேற்றுக்கே சலம் அடிக்கிறது. காலை உயர்த்திச் சலம் அடிக்கும் அந்த முகம் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவினுடையது.

பல்கலைக்கழகங்களை அரசாங்கம் எத்தகைய நிலையில்  அணுகுகிறது, புரிந்து வைத்திருக்கிறது என்று உணர்ந்து கொள்வதற்கு இதை விடச் சிறந்த வேறு வார்த்தைகள் தேவையில்லை.

ஒரு நாட்டின் அறிவையும் ஆற்றலையும் வளர்ப்பதில் கல்வியும் அதன் உச்சச் செயற்களமாகப் பல்கலைக் கழகங்களும் இயங்குகின்றன.

இலங்கையின் கல்வி முறைமை தொடர்பாகக் கடுமையான விமர்சனங்கள் நீண்டகாலமாக உள்ளன. அந்த விமர்சனங்களையும் புதிய சிந்தனைகளையும் இலங்கை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. அப்படி இலங்கை அவற்றை ஏற்றுக்கொண்டாலும் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு உலக வங்கியோ உதவும் நாடுகளோ முழுமையாக ஒத்துழைக்கப்போவதுமில்லை. ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை.

இலங்கையின் கல்வித்துறைக்கு மட்டுமன்றி, இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளிலும் ஆட்சிக்கும் கூட இவையே அனுசரணை வழங்குவதால் இந்தத் தரப்புகளின் கட்டுப்பாடுகளை அரசாங்கம் எடுத்தெறிந்து விடவும் முடியாது. மீறி விடவும் முடியாது.

இதைவிட இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் சிந்திப்போரிடம் நீண்டகாலமாக உண்டு. ஆனால் இதைக் குறித்தும் அரசாங்கம் எதையும் செய்வதாக இல்லை.

இப்பொழுது எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை முழுவதிலுமுள்ள பல்கலைக் கழகங்கள் கால எல்லையின்றி மூடப்பட்டுள்ளன. பல்கலைக் கழகங்களை மூடுவதென்ற தீர்மானத்தை அரசாங்கமே எடுத்திருக்கிறது.

தொடக்கத்தில் பல்கலைக்கழகங்களின் கல்வி சாராத ஊழியர்கள் தங்களுடைய போதாக்குறைகளை முன்வைத்துப் போராட்டங்களை நடத்தினார்கள். இதனால், சில வாரங்கள் பல்கலைக்கழகங்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறவில்லை.

அடுத்த கட்டமாக, விரிவுரையாளர்கள் தங்களின் குறைபாடுகளை முன்னிறுத்திப் பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களை ஆரம்பித்தார்கள். இந்தப் போராட்டம் வாரங்களைக் கடந்து மாதங்களாகிக் கொண்டிருக்கிறது.

ஆனால், அரசாங்கத் தரப்பில் இருந்து எந்த நல்ல சமிக்ஞையும் கிடைக்கவில்லை. பதிலாக அங்கிருந்து அபாய விளக்குகளே எரிகின்றன.
இன்றைய பொது அபிப்பிராயம் மற்றும் பொது அச்சம் இலவசக் கல்விக்கு நெருக்கடியைக் கொடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறதா என்பதே.

இந்த அறிவிப்பைப் பகிரங்கமாகவே கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் (தமிழ்ப்பகுதிகளில் இது குறைவு அல்லது இந்த உணர்கை இல்லை எனலாம்) இலங்கையின் சிந்தனையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மட்டுமல்ல, அரச கல்வியைப் பாதுகாப்போம், தனியார் மயப்படுத்தப்படும் கல்வியை எதிர்ப்போம் என்ற குரல்களோடு போராட்டங்களையும் இந்தச் சிந்தனையாளர்கள் நடத்தி வருகிறார்கள். கடந்த 23.08.2012 வியாழக்கிழமை கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் ‘அரச கல்வியைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் பெரியதொரு ஆர்ப்பாட்டமும் பொதுக்கூட்டமும் நடந்துள்ளது.

ஆனால், அரசாங்கம் எல்லாவற்றுக்கும் மௌனத்தையே – புறக்கணிப்பையே கடைப்பிடிக்கிறது. அதேவேளை அது தன்னுடைய கள்ளத்தனங்களின் வழியிலேயே தன்னிச்சையான முடிவுகளை எடுத்துச் செயற்படுகிறது.

தனியார் பல்கலைக் கழகங்களின் வருகை, அல்லது உருவாக்கும், அவற்றின் பெருக்கம் என்பன எதிர்காலத்தில் நாட்டின் கல்வியை, நாட்டுக்கான கல்வியை அழித்து விடும்.

அத்தகைய கல்வி ஒன்று பெருக்கமடையுமானால் பிறருக்கான கல்வியும் சிந்தனைமுறையும் அவர்களுக்கான கருவியாக்கலுமே இலங்கையில் நிகழும் என சிலர் அபிப்பிராயப் படுகிறார்கள். இது வெறும் அபிப்பிராயமாக அல்லாமல் கலக்கமாகவும் உள்ளது.

தனியார் பல்கலைக்கழகங்களின் வருகை என்பது அல்லது அவற்றின் உருவாக்கம் என்பது அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ், நிபந்தனைகளின் கீழ் இருக்குமானால் அதை வரவேற்கலாம்.

தனியார் பல்கலைக்கழகங்களின் கல்வியானது வழமையை விட அகன்ற பரப்பைக் கொண்டதாக இருக்கும். அது போட்டியை அடிப்படையாகக் கொண்டதால் போட்டிக்கான சிறப்பியல்புகள் அதைத் தரமுயர்த்திக் கொண்டே இருக்கும். ஒரு சர்வதேச முகத்தைக் கொண்டதான கல்வியை இலங்கையிலும் பெறக்கூடியதாக இருக்கும் என்கின்றனர் இன்னொரு சாரார்.

அரச பல்கலைக் கழகங்களும் அவற்றின் கல்வி முறைமையும் பெரும்பாலும் சம்பிரதாய பூர்வமானதாக மாறிவிட்டன. சில மாற்றங்கள் அதில் நிகழ்ந்தாலும் அது மிக மிகத் தாமதம் கொண்டதாகவே இருக்கிறது. அதிலும் பல்கலைக்கழகங்களில் அவற்றை நடைமுறைப்படுத்துவதும் அவற்றை பல்கலைக் கழகங்கள் கையாளும் விதமும் மந்த நிலைக்குரியன என்று வாதிடுகின்றனர் மற்றொரு தரப்பினர்.

தனியார் பல்கலைக்கழகங்களின் வருகையை ஆதரிப்பதென்பது, அரச பல்கலைக்கழங்களைச் சுறுசுறுப்பாக்குவதற்கான ஒரு விசேட ஏற்பாடே என ஒரு நண்பர் குறிப்பிடுகிறார்.  தூசி படிந்து போயிருக்கின்ற அரச பல்கலைக்கழங்களைத் துப்புரவாக்கிப் புதுமைப்படுத்தும் ஒரு காரியமே இது என்கிறார் மேலும் அவர்.

இப்படி விவாதங்களை உருவாக்கியுள்ள அரசாங்கம் வெளிப்படையாகத் தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை.

அதேவேளை அது அரச பல்கலைக் கழகங்களின் செயற்பாட்டை முடக்கும் விதமாக நடந்து கொள்கிறது.

இந்த அடிப்படையிலேயே பல்கலைக் கழகம் சார்ந்தோரின் கோரிக்கைகளை அது பொருட்படுத்தவில்லை. இதற்கான ஒரு குறியீடாகவே இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் கூறப்பட்டது போல உயர் கல்வி அமைச்சரின் கார்ட்டூன் அமைந்துள்ளது.

மூடப்பட்டிருக்கும் பல்கலைக் கழகத்தை திறப்பதற்குப் பதிலாக அதற்குச் சலம் அடிக்கும் எண்ணத்திலும் செயற்பாட்டிலும் இருக்கின்றது அரசாங்கம் என்தே இதன் அர்த்தம்.

காலவரையின்றிய அளவுக்குப் பல்கலைக் கழகங்களை மூடி நாட்டின் கைநாடியைப் பிடித்துப் பார்க்கிறது அரசாங்கம் என்று சொல்லப்படுகிறது.

அதாவது, மூடப்பட்டுள்ள பல்கலைக் கழகங்களைத் திறக்கச்சொல்லி நடக்கும் கோரிக்கையின் வலுவையும் அந்தக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுவோரின் வலுவையும் அரசாங்கம் பரிசோதித்துப் பார்க்கிறது.

இப்படிப் பார்ப்பதன் மூலமாக அது தனக்கெதிராக உள்ள எதிர்ப்பு மனநிலையையும் எதிர்ச்செயற்பாட்டு வலுவையும் கணக்கெடுக்க முயற்சிக்கிறது. தன்னுடைய எதிர்கால அரசியற் தேவைகளுக்காக இவ்வாறு இந்த அரசாங்கம் செயற்படுகிறது என்று சில விமர்சகர்கள் இந்த நிலை தொடர்பாக அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழங்களில் கைவைத்தால் அது நாடு தீப்பற்றி எரிவதற்குச் சமம் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், இலங்கையில் அந்த நிலைமை ஏற்படுமா என்று தெரியவில்லை.

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை பலவீனப்படுத்தியும் ஒடுக்கியும் வந்த ஒரு பாரம்பரியமே இலங்கையில் உள்ளது. ஆட்சியில் எந்த அரசாங்கம் இருந்தாலும் இதுதான் கதை. போராட்டங்களிலுள்ள நியாயங்களை அவை ஒரு போதும் உணர்ந்து கொண்டதோ ஏற்றுக்கொண்டதோ இல்லை.

ஒரு தரப்பை இன்னொரு தரப்புக் குற்றம் சாட்டினாலும் அனைத்துத் தரப்பினதும் அடிப்படை இயல்புகளும் நோக்கங்களும் ஒன்றே.

இதையே மக்கள் எப்போதும் விளங்கிக் கொள்ள வேண்டியதாக உள்ளது. மக்கள் மட்டுமல்ல, மக்களைச் சிந்திக்கத் தூண்டும் சமூகச் செயற்பாட்டாளர்களும் சிந்தனையாளர்களும் இதைத் தாமும் விளங்கிப் பிறருக்கும் விளக்க வேண்டும்.

நாட்டுக்கு ஏற்படுகின்ற நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அதை ஏற்படுத்தத் தகுதியுடையோரைச் சேர்ந்தது.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதரைக் கடிப்பது என்று சொல்வார்கள். ஏறக்குறைய அத்தகைய ஒரு நிலையில்தான் இன்றைய இலங்கைச் சூழல் உள்ளது.

இனங்களுக்கிடையிலான நெருக்கடிகள், மத நெருக்கடி, அனவருக்குமான பொருளாதார நெருக்கடி, ஜனநாயக நெருக்கடி, அரசியல் நெருக்கடி என விரிந்து சென்று கொண்டிருக்கும் நெருக்கடியில் இப்போது பல்கலைக்கழங்களும் அவற்றின் கல்விச் செயற்பாடுகளும் சிக்கியுள்ளன.

ஒரு அரசாங்கமானது தான் பிரதிநிதித்துவப் படுத்துகிற மக்களையும் நாட்டையும் பாதுகாத்து முன்னோக்கிப் பயணிக்க வழிகாண வேண்டும். அது மக்களுக்கான அடிப்படைகளை உருவாக்க வேண்டும். குறைந்த பட்சம் ஏற்கனவே இருக்கின்ற அடிப்படைகளையேனும் பாதுகாக்க வேண்டும்.

ஆனால், இலங்கையில் இந்தத் தன்மைகள் குறைவு. ஆட்சியில் இருந்த அரசாங்கள் ஒவ்வொன்றும் ஏற்கனவே இருந்த அடிப்படைகளையே தகர்த்துத்தான் வந்துள்ளன.

இதில், இன்றைய அரசாங்கமானது, அடிப்படைகளைத் தகர்ப்பதில் மிகக்கடுமையாகத் தொழிற்படுகிறது.

நாட்டின் நலன்கள் மற்றும் மக்களின் நலன்கள் என்று சிந்திப்பதற்குப் பதிலாக ஆட்சியில் அங்கம் வகிக்கின்ற சிலரின் அல்லது ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் நலன்களுக்காக மட்டுமே அது இயங்குகிறது. அதிலும் வெளிச்சக்திகளின் நலன்களுக்காக நாட்டையும் மக்களையும் பலியிட்டுத் தன்னுடைய வயிற்றை நிரப்பிக் கொள்கிற அரசாங்கமாக இது உள்ளது.

இப்படி இயங்கும் அரசை தரகு அரசாங்கம் என்று அழைப்பதே பொருத்தமானது.

இங்கேதான் மீண்டும் நாம் கவனிக்க வேண்டிய விசயங்கள் இருக்கின்றன. அரசாங்கத்தை விமர்சிப்பது (மேற்குறிப்பிட்ட கார்ட்டூன் உட்பட) அதைக் கண்டிப்பது, அதைக் குற்றம் சாட்டுவது என்பதற்கப்பால், விழிப்புணர்வோடு அதை எதிர்த்துப்போராடுவது என்பது இன்று அவசியமானது.

ஆனால், இந்தப் போராட்டங்கள் மறுபடியும் இன்னொரு அதிகாரத் தரப்பைப் பலப்படுத்துவதாகவோ, அல்லது பிற சக்திகளுடைய நலன்களைப் பாதுகாப்பதாகவே அமைந்து விடக்கூடாது. ஆனால், பிற சக்திகள் இதற்காகவே காத்திருக்கின்றன.

அவை அரசாங்கத்தைத் தமக்குச் சார்பாக இயங்க வைக்கும். அதேவேளை அரசாங்கத்தை எதிர்க்கின்ற தரப்பையும் அவை தமக்குச் சாதமாகக் கையாளும். எந்தத் தரப்புப் பலம்பெறுகிறதோ அல்லது எந்தத் தரப்பு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுகிறதோ அந்தத் தரப்பைத் தமது கால்களுக்கிடையில் வைத்துக் கொள்வதே இவற்றின் நோக்கம்.

எனவே உச்சமான விழிப்புணர்வுடைய செயற்பாடுகளின் மூலமே ஒரு நாட்டின் அடிப்படைகளையும் அதனுடைய கல்வியையும் மக்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பானவை. ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஆகவே, பல்கலைக் கழகங்கள் இன்று எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளும் சவால்களும் முழு நாட்டுக்கும் முழு அடிப்படைகளுக்கும் எதிரான நெருக்கடிகளும் சவால்களுமாகும்.

இங்கே நாம் இன்னொரு முக்கியமான விசயத்தையும் கவனிக்க வேண்டும்.

நாட்டினுடைய புத்திஜீவிகளின் மையமாக இருக்கின்ற பல்கலைக்கழகத்தினர் சிந்திப்போரைப் பெருமளவுக்குக் கொண்ட பல்கலைக்கழகங்கள், போராடும் ஆற்றலையும் பொறுப்பையும் உடைய பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் இந்தச் சவால்களையும் நெருக்கடிகளையம் எதிர்நோக்கிப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பைக் கொண்டுள்ளனர்.

இந்தப் பொறுப்பை அவர்கள் முழு நாட்டு மக்களுக்கும் மாற்றி ஒரு எழுச்சியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இலங்கையைப் பாதுகாப்பதற்கு எவ்வளவோ போராட வேண்டியுள்ளது. அதாவது இலங்கையர் ஒவ்வொருவரும் இலங்கையில் வாழ்வதற்கு நிறையப் போராட வேண்டியுள்ளது.

ஏனெனில் அந்தளவுக்கு இலங்கை நெருக்கடிகளாலும் சவால்களாலும் அபாயங்களாலும் நிரப்பிப் போயுள்ளது.

00

கிழக்குத் தேர்தல் - வெற்றி யாருக்கு?

Thursday 6 September 2012




-  

இலங்கையில் மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் நடந்தாலும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலே பெரும்பாலான தமிழ் ஊடகங்களிலும் மையப்படுத்திப் பேசப்பட்டது. இணைய வெளியிலும் இதுதான் நிலை. புலம்பெயர் தமிழர்களில் பெரும்பகுதியினரும் இலங்கையில் இருக்கும் தமிழர்களில் அநேகரும் கூட கிழக்குத் தேர்தலைக் குறித்தே சிந்தித்தார்கள். அதைப் பற்றியே கதைத்தார்கள்.

இதனால், தவிர்க்க முடியாமல் இந்தப் பத்தி கூட கிழக்குத் தேர்தல் முக்கியப் படுத்தப்பட்டதைப் பற்றியும் அதன் முடிவுகளைப் பற்றியுமே எழுதப்படுகிறது.

கிழக்குத் தேர்தலில் தமிழ்த்தரப்பு போட்டியிடக்கூடாது என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. இதற்காக தமிழ்ப் புத்திஜீவிகள் என்று சொல்லிக்கொள்ளும் அமைப்பொன்று அறிக்கை கூட வெளியிட்டது. தமிழ்த்தேசிய விடுதலை முன்னணி என்ற கட்சியும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. ஆனால் இந்த மாதிரியான விருப்பங்கள், கோரிக்கைகள் எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்டது.

தேர்தல் என்று வந்த விட்டால் வெற்றியடைய வேண்டும் என்ற வெறியும் கூடவே வந்து விடும். இந்த வெற்றியைப் பெற வேண்டும் என்றால், எதைச் சொல்லியும் யாரைப் பிடித்தும் எதைச் செய்தும் அதைப் பெற வேண்டும் என்பதே விதி. இதில் வெட்கப்படுவதற்கோ, மனச்சாட்சிப்படி நடந்து கொள்வதற்கோ அறிவு பூர்வமாகச் செயற்படுவதற்கோ எதுவும் இருப்பதில்லை.

ஆளாளுக்கு ஒரு நியாயத்தைச் சொல்லிக்கொண்டாலும் அடிப்படையில் எல்லோருக்கும் தங்கள் நலமே முதன்மை. நிச்சயமாக மக்களின் நலன் இல்லை. தத்தம் கட்சிகள் வெல்ல வேண்டும் என்று தொண்டர்களும் அபிமானிகளும் விரும்புகிறார்கள். தொண்டர்களை தங்களின் ‘அடிப்பொடி’களாகக் கட்சிகளும் தலைவர்களும் வைத்திருப்பது ஒரு பாரம்பரிம்.

போதாக்குறைக்கு இனவாத அடிப்படையில் கட்சிகள் தங்கள் பாரம்பரியத்தைப் பேணுவதால் இனவாதச் சிந்தனையில் ஊறிப்போன சனங்களும் அந்த அடிப்படையிலேயே சிந்திக்கத் தலைப்படுகிறார்கள். யாருக்கும் நீதி, நியாயம், சரி, பிழை எதுவும் புலப்படுவதில்லை.

எனவே தேர்தற் பரப்புரையும் தேர்தல் முடிவுகளும் அந்த அடிப்படையில்தான் அமையும். இதில் வேறு மாற்றங்களைக் காணவே முடியாது.

சனங்கள் எல்லாவற்றையும் இனவாதம் என்ற கண்ணாடியினூடாகத்தான் பார்க்கிறார்கள். அவ்வாறே அவர்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்குத் தோதாக கட்சிகளும் தலைவர்களும் பொருத்தமான“ வாதங்களைக்“ கண்டு பிடித்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். சற்று வித்தியாசமாகச் சிந்திப்பதற்கு இடைவெளியை – மாற்றங்களை யாரும் விட்டு வைப்பதில்லை.

ஆகவே, எல்லாக் கட்சிகளும் தங்கள் தங்கள் சாத்தியப்பாடுகளுக்கு ஏற்றமாதிரி, குத்துக்கரணங்கள், கோமாளித்தனங்கள், அயோக்கியத்தனங்கள், தகிடு தித்தங்கள் என்று என்னென்னவெல்லாவற்றையுமோ செய்து, தேர்தல் திருவிழாவை நடத்தியுள்ளன.

கிழக்குத் தேர்தலில் மட்டும்தான் இந்த மாதிரியான சீர்கேடுகள் நடந்தன என்றில்லை. இலங்கையில் எங்கே தேர்தல் நடந்தாலும், யார் அதிலே போட்டியிட்டாலும் அதில் அயோக்கியத்தனங்களுக்கும் பொய்களுக்கும் எந்தக் குறையும் இருப்பதில்லை.

2004 இல் பாராளுமன்றத் தேர்தல் நடந்தபோது வடக்குக் கிழக்கிலே போட்டியிட்ட த.தே.கூட்டமைப்பை வெற்றியடைய வைப்பதற்காக விடுதலைப் புலிகளே ஏராளம் தகிடுதித்தங்களைச் செய்தார்கள். அந்த நாட்களில் வாக்களிக்கச் சென்ற பலரும் ஐந்துக்கு மேற்பட்ட வாக்குகளையே போட்டிருந்தார்கள். அந்த நாட்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்த ஒவ்வொருவரும் தலா பத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் போட்டதாக இன்னும் பெருமையோடு சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அப்போது தேர்தல் உத்தியோகத்தர்களும் இதற்குத் தோதாகத்தான் நடந்தார்கள். 

வன்னியில் புலிகளின் நகைக்கடைகளுக்கு கொழும்பில் இருந்தே ஆட்கள் வருவார்கள். சிலர் வெளிநாடுகளில் இருந்து வந்து தங்களுக்கான நகைகளை வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள். அந்த அளவுக்கு தரமான தங்கத்தை, கலப்படமற்ற தங்கத்தை வியாபாரம் செய்த புலிகள் தேர்தல் என்று வந்தபோது தலைகீழாகிப் போனார்கள்.

இந்த நிலையில் மற்றவர்களின் கதையையும் கதியையும் சொல்ல வேணுமா?

இப்போது கிழக்குத் தேர்தலில் வெற்றிக்கான வாக்குகளைத் தேடி, வாய்ப்பைத்தேடி  அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒரு சுற்றுப் பயணம் நடத்தியிருக்கிறார்.

தேர்தலுக்கு முன்னரே செய்ய வேண்டியதைச் செய்திருந்தால், தேர்தற்காலத்தில் சிரமங்களைப் படவேண்டியதில்லை என்பதே என்னுடைய கருத்து. தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலைத் தாக்கல் செய்து விட்டு மக்களிடம் வருவதெல்லாம் பொய். வீண் வேலை. இதை நான் அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொதுவாகவே கூறுவேன். 

கிழக்கில் அரசாங்கம் பல முன்னேற்ற நடவடிக்கைகளைச் செய்திருக்கலாம்;. அதைப் பற்றிய பெரும் பட்டியல்கள் தேர்தல் மேடைகளில் சொல்லப்பட்டன. என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் பிள்ளையான் என்ற சந்திரகாந்தனை கிழக்கில் மறக்கமுடியாது என்று சொல்வோரும் உள்ளனர். பார்ப்போருக்கும் இதைப் பற்றித் தெரியும். ஆனால், அதற்கும் அப்பால், முக்கியமான காரியங்கள் செய்யப்பட்டிருக்க வேணும்.

இனரீதியாகப் பிளவுண்ட சமூகங்களை ஒருங்கிணைப்பதில் அரசாங்கம் இன்னும் வெற்றியடையவில்லை. பதிலாக இன்னும் அது முரண்பாடுகளை அதிகரிக்கும் விதமாகவே நடந்து கொள்கிறது.

இதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமலே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. இனவாதத்தை ஏட்டிக்குப் போட்டியாக வளர்ப்பதில், வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதையும் விட இலகுவாக தமிழ்ச்சனங்களின் இதயங்களில் விசமுள்ளை ஏற்றுவதில் தமிழரசுக் கட்சித் தலைகள் பலே கில்லாடிகள். இதனால், தமிழ் மக்களின் வாக்குகளை மட்டும் பெறக்கூடிய அளவுக்கே வீட்டுச் சின்னம் இன்று மாறியிருக்கிறது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதே வீட்டுச் சின்னத்துக்கு முஸ்லிம் மக்களும் வாக்களித்தார்கள். இப்போது அவர்கள் மரச் சின்னத்துக்கு வாக்களிக்கிறார்கள். வீட்டுச் சின்னத்துக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கப்போவதில்லை என்பதைப்போல மரச்சின்னத்துக்கு தமிழர்கள் வாக்களிக்கப்போவதில்லை. 

இதுதான் கிழக்குத் தேர்தலின் உண்மையான நிலைவரம்.

ஆனால், அரசாங்கம் முன்னிறுத்தியிருக்கும் வெற்றிலைச்சின்னத்துக்கு தமிழர்களில் ஒரு தொகுதியினரும் (இவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பினும்) முஸ்லிம்களில் ஒரு சாராரும் (இவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும்) சிங்கள மக்களும் வாக்களிக்கப்போகிறார்கள். இவர்கள் இனவாதத்தைக் கடந்தவர்கள் என்று சொல்ல முடியாது விட்டாலும் ஒரு பொதுநிலையில் ஒன்றிணைகிறார்கள் என்பது கவனித்திற்குரிய ஒன்று.

ஆனால், இந்த மக்களை அரசாங்கமும் ஏனைய கட்சிகளைப் போலவே பயன்படுத்தி விட்டுவிடும். அதற்கப்பால், இந்த மக்களை சமாதானத்தின் அடித்தளத்தைக் கட்டுவோராகவோ, நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான வழிமுறையாளர்களாகவோ வளர்த்தெடுக்கப்போவதில்லை. இந்த மாதிரி ஐக்கியப்படும் ஒரு சமூக சக்திகளாக இவர்கள் கவனிக்கப்படப்போவதும் இல்லை.

இதேவேளை இந்த மூன்று தரப்பின் வாக்குகளும் அரசாங்கத் தரப்பை வெற்றியடைய வைக்குமா என்பதும் வலுவான சந்தேகத்துக்குரிய ஒன்று.

மறுவளத்தில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்தத் தடவை கிழக்கில் அதிகூடிய வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்த்தேசியப் பற்றுடன் மக்கள் தேர்தற்களத்துக்கு நிச்சயம் செல்லவேண்டும் எனவும் சர்வதேசத்துக்கு தமிழ் மக்கள் இன்னொரு தடவை தங்களை நிரூபிக்க வேண்டும் எனவும் தமிழரசுக்கட்சி மன்னிக்கவும் த.தே.கூ சொல்லியிருக்கிறது.

தொடக்கத்தில் தந்திரமாக முஸ்லிம்களின் வாக்குகளை எப்படியாவது கறந்து விடவேண்டும் என்று முயற்சித்தார் சம்மந்தன். ஆனால், பிடிவாதமாகவே முஸ்லிம் கட்சிகள் சம்மந்தனை நிராகரித்து, அவரைப் பகிரங்கமாக அவமதித்து விட்டன. (ஆனால், இன்னும் முஸ்லிம்களின் ஆதரவைக் கோரியவாறே சம்மந்தன் நிற்கிறார். இது அவருக்குத் தவிர்க்க முடியாத ஒன்று. தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் த.தே.கூ வுக்கு முஸ்லிம்களின் ஆதரவு தேவைப்படும் நிலையுண்டு).
 
இறுதியில் தமிழ் மக்களையே நம்ப வேண்டியதாகிவிட்டது சம்மந்தனுக்கு. எனவே அவர், இது இறைவன் தந்த இறுதிச் சந்தர்ப்பம் என்று மனமுருகி கண்ணீர் சிந்தியிருக்கிறார். போதாக்குறைக்கு அந்தக் கட்சி வழமையைப்போல தமிழர்கள் யார் என்று காட்ட வேண்டும், சிங்களவர்களுக்குத் தமிழர்கள் அடிமையில்லை என்று தெரிவிக்க வேண்டும். சர்வதேசத்துக்கு தமிழர்களின் உணர்வு எத்தகையது என்று சொல்ல வேண்டும் என்றெல்லாம் பழைய  நாடகத்தை ஒரு முறை ஆடி முடித்திருக்கிறது.

என்னதான் நரம்பு சிலிர்க்க துடித்தெழும் தமிழ்த் தேசியவாதிகள் எல்லாம் ஒன்று திரண்டு த.தே. கூவை வெற்றியடைய வைப்பர் என எதிர்பார்க்கப்பட்டாலும் கூட்டமைப்பினரால் சுமுகமான ஒரு ஆட்சியை கிழக்கில் ஏற்படுத்த முடியாது என்பதே உண்மையானதாகும்.

பதிலாக கொந்தளிப்பும் சீர்கேடுமான ஒரு ஆட்சியே கிழக்கில் நடைமுறையில் இருக்கும். இது நிச்சயமாகக் கிழக்கின் அமைதியைக் குலைக்கும். அரச தரப்பு ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நிலை. கிழக்கில் வலுவான இணைச் சமூகமாக இருக்கும் முஸ்லிம்தரப்புடன் நீதியான – வெளிப்படையான உறவுக்கு தமிழ்கூட்டமைப்புச் செல்லாத வரையில், அல்லது அரசு செல்லாத வரையில் அங்கே அமைதியை ஏற்படுத்தவும் முடியாது. நீதியை நிலைநிறுத்தவும் இயலாது.

தமிழ்க்கூட்டமைப்பு கிழக்கில் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டுமானால் அது தவிர்க்க முடியாமல் முஸ்லிம் தரப்பின் ஆதரவைப் பெற்றே தீரவேணும். ஆனால், அந்த ஆதரவை இலகுவில் பெற்றுவிட முடியாது. இலவசமாகவும் பெறமுடியாது.

அதற்கான விலைகள் அதிகம். ஆதரவளிக்கும் முஸ்லிம்தரப்பு முதலில் தமக்கே முதலமைச்சர் பதவி என்றுகூடக் கோரலாம். அல்லது அமைச்சரவையில் வலுவான பங்கைக் கேட்கலாம். அத்தோடு, ஆட்சிக் காலத்தில் பல தேவைகளையும் உதவிகளையும் பங்குகளையும் கோரலாம். இதெல்லாம் அவர்களைப் பொறுத்தவரையில் தவிர்க்க முடியாதவை.

இதற்குக் கூட்டமைப்பினால் எந்த அளவுக்கு நெகிழ்ந்து கொடுக்க முடியும்? என்பது முக்கியமான கேள்வி. மற்றவர்களை இணைத்துப் பயணித்த அனுபவம் தமிழர்களுக்குப் பொதுவாகவே குறைவு. அவர்கள் எப்போதும் தம்மை முன்னிலைப்படுத்தியே பழக்கப்பட்டவர்கள். சிங்களத் தரப்பிலும் இதுதானே குறைபாடு. ஆனால், தமிழர்கள் மிகச் சிறுபான்மையினராக இருப்பதாலும் பலவீனமான நிலையில் இருப்பதாலும் சி்ங்களவர் தமிழரை ஆட்டிப்படைக்கிறார்கள். ஆனால், இங்கே முஸ்லிம்களின் நிலை அவ்வாறல்ல.  இங்கே முஸ்லிம்கள் பலமான அல்லது வலுவான நிலையில் இருக்கும்போது கூட்டமைப்புக்கு அது நெருக்கடியாக அமையலாம். ஆகவே தமிழ்த் தரப்போடு நிச்சயமாக முஸ்லிம்களுக்கு மோதல்களே ஏற்படும்.

இதேவேளை இன்னொரு வலுவான தரப்பைப் பற்றியும் நாம் பார்க்க வேண்டும். முஸ்லிம் முதலமைச்சர் கனவோடு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் களமிறங்கியது. அதற்காக அது கடுமையான போராட்டங்கள், முயற்சிகளின் பின்னர் அரசாங்கத்தை விட்டுத் தனியே களத்தில் இறங்கியது. ஒரு கட்டத்தில் - இந்த நாடகத்தின் உச்சக் கட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தரான பஸீர் சேகுதாவூத்தே தன்னுடைய துணை அமைச்சர் பதியைத் துறந்திருந்தார்.

போதாக்குறைக்கு அரசாங்கத்தை முடிந்தவரையில் குற்றம்சாட்டித் தேர்தற்காலப் பகைமை உணர்வை வெளிப்படுத்தினார் ஹக்கீம் . இந்த நிகழ்ச்சிகளின் உச்சக்கட்டமாக அவர் அரசாங்கம் வேறு, முஸ்லிம் காங்கிரஸ் வேறு என்று வெளிப்படுத்தினார்.

இதன்மூலம் ஹக்கீமும் முஸ்லிம் காங்கிரசும் வெற்றியடைந்துள்ளன என்றே சொல்ல வேணும். அரசாங்கத்தில் இன்னும் பொறுப்பான அமைச்சுப் பதவியில் ஹக்கீம் இருக்கிறார். அரசாங்கத்துக்கு எதிராக அவருடைய கட்சி தேர்தல் களத்தில் நிற்கிறது. அவர் அரசை எதிர்த்துப்பேசுகிறார். அப்பப்பா... என்ன சாகஸம். பஸீர் நாளை கூட இழந்த பதவியையோ அல்லது அதற்கும் கூடுதலான பதவியையோ பெறலாம். அதற்கான நிகழ்தகவு அதிகம்.

அதேவேளை தன்னுடைய தனித்துவத்தை முஸ்லிம் கொங்கிரஸ் இழக்கவில்லை. அது அரசாங்கத்தை எதிர்த்து, தனித்து தேர்தலில் நின்றது. அண்மையநாட்களில் முஸ்லிம்களின் மீதான சிங்களக் கடும்போக்காளர்களின் எதிர்ப்புகளைக் கண்டும் காணாதிருக்கும் அரசாங்கத்துக்கு அது தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறது என்ற தோற்றப்பாட்டை உருவாக்கியும் விட்டது. 

மேலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும் அது தேர்தற் கூட்டை வைத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் தேர்தலில் யார் ஆட்சியை அமைப்பதாக இருந்தாலும் அவர்களுக்கு முஸ்லிம் கொங்கிரசின் உதவி, ஆதரவு தேவை. இதை வலுவான நிலையில் இருந்து நிபந்தனையுடன் வழங்கும் நிலையில் முஸ்லிம் கொங்கிரஸ் உள்ளது. இதன்மூலம் அது தனக்கானவற்றைப் பெற்றுக்கொள்ளும். தன்னுடைய தனித்துவத்தையும் முடிந்தவரையில் காத்துக்கொள்ளும்.

மற்றவர்களை விடவும் இப்போது அதிக நன்மைகளைப் பெறும் நிலையில் இருப்பதும் பாதுகாப்பாகவும் இருப்பதும் மு.காவே.

இதேவேளை தமிழர்கள் யாருக்கு வாக்களித்தாலும் - தமிழ்க் கூட்டமைப்புக்கோ அல்லது அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கோ அல்லது மு.காவுக்கோ யாருக்குத்தான் வாக்களித்தாலும் அவர்களுக்கு அதிகமாக எதுவும் கிட்டப்போவதில்லை.

தமிழர்கள் எதிர்பார்ப்பதைப் போலச் சர்வதேச சமூகம் என்ற பொய்யர்கள் இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்போவதும் இல்லை. சர்வதேச சமூகத்துக்கு யார் பயன்படுத்தக் தக்க நிலையிலும் யார் லாபத்தை அதிகமாகத் தரக்கூடியவாறும் உள்ளனர் என்பதே அக்கறைக்குரிய ஒன்று. ஆனால், தேர்தல் வியாபாரிகள் சிலர் மட்டும் இதில் லாபம் பெறுவர். வெற்றியடையமுடியாத அரசாங்கம் மேலும் வன்மத்தையே பிரயோகிக்க முயலும். இதுதான் வழமையும் யதார்த்தமும் உண்மையும். 

எப்படியோ கிழக்கின் இந்தத் தேர்தலும் சகல மட்டத்திலும் இடைவெளிகளையே அதிகரிக்கும் ஏது நிலைகளே அதிகமாகக் காணப்படுகின்றன. அவ்வாறெனில்  முரண்நிலைகள் மேலும் கூடத்தான் போகின்றன. பிரிவினை வாதிகள் மக்களை ஒன்று சேர என்றும் விடுவதேயில்லை.

00 


 

2009 ·. by TNB