கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

கூரை ஏறிக் கோழி பிடிக்க மாட்டாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.

Saturday 28 April 2012













அரசியலில் எப்பொழுதும் நகைச்சுவையான விசயங்களுக்குக் குறையிருப்பதில்லை. இதற்கென்று ஆட்களுமிருப்பார்கள்.

இலங்கையில் இப்பொழுது இந்தப் பாத்திரத்தை வகிப்பவர் அமைச்சர் மேர்வின்.

மேர்வினைப் பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு எப்படியோ தெரியாது, ஆனால், சனங்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு கோமாளி. அதாவது சிரிப்புக்கிடமான மனிதர். (சிரிக்க வைக்கும் மனிதர் அல்ல).

ஆனால், நாங்கள் இங்கே பார்க்கப்போவது மேர்வினைப் பற்றி அல்ல.

நகைச்சுவையான விசயமொன்றை. வன்னி யுத்தத்தின் போது கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

கொத்துக்குண்டுகளின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் சார்பாக கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைக்குப் பொறுப்பான இலங்கைக்கான பிரதிநிதி அலன் பொஸ்ரர் சொல்லியிருக்கிறார்.

கொத்துக்குண்டுகளை தாம் பயன்படுத்தவில்லை என்று இராணுவம் சொல்லியிருக்கிறது. கொத்துக்குண்டுகள் எப்படிப் பாதிப்புகளை உண்டுபண்ணின என்று சனங்களுக்கு நன்றாகத் தெரியும். இப்படியே வரலாற்றில் நகை முரண்கள் தொடர்கின்றன.

இதைப் பற்றிக்கூட இங்கே நாங்கள் பேசவில்லை. இதற்கெல்லாம் அப்பால் தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. ரீ.ஆர். பாலுவும் திரு. தாமரைச்செல்வனும் அதன் தலைவர் திரு. மு. கருணாநிதியும் தெரிவித்து வரும் விசயங்களைப் பற்றியே பார்க்கிறோம். சிரிப்பதற்குச் சங்கதிகள் வேண்டுமல்லவா?

கடந்த புதன்கிழமை (25.04.2012) இந்திய நாடாளுமன்றத்தில் பாலு சொன்னார் - ‘தமிழீத் தனிநாட்டை உருவாக்குவதற்கு ஐ.நா. வை இந்தியா இணங்கச் செய்ய வேண்டும்’ என்று.

தாமரைச்செல்வன் சொன்னார் - ‘பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட வீடுகள் பல சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாத் தகவல்கள் கிடைக்கின்றன’ என.

திரு. மு. கருணாநிதி இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்லியுள்ளார் ‘உயிரைத் துறப்பதற்கு முன்னர் ஈழம் மலர்வதைக் காண்பேன்’ என்று.

இதற்கு மேல் நாம் அதிகம் விளக்கத் தேவையில்லை. உங்களுக்குச் சிரிப்பு வந்திருக்கும். அல்லது இதெல்லாம் என்ன பெரிய விசயங்கள் என்று நீங்கள் தூக்கிப் போட்டுவிட்டு உங்களுடைய வேலைகளைப் பார்க்கப்போய்விடுவீர்கள்.

ஆனால், இந்தப் பேச்சையெல்லாம் யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகளும் பெரும்பாலான ஈழத்தமிழ் இணையங்களும் பிரதான செய்திகளாக்கிப் பிரசுரித்து வருகின்றன. இதற்குத் தனியாக ஆசிரிய தலையங்கள் கூட எழுதப்படுகின்றன. அதிலும் யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் பத்திரிகை ஒன்று ரீ.ஆர்.பாலுவின் செய்தியை தலைப்புச் செய்தியாக்கி அவரைக் கௌரவித்தேயிருக்கிறது. கருணாநிதியின் செய்திக்குக் கட்டம் கட்டப்பட்டு, கவனக் குவிப்பைச் செய்திருக்கிறது.

ஆகவே இதையெல்லாம் எளிதில் நீங்கள் கருதி விட முடியாது.
நகைச்சுவையான விசயங்களுக்கு இத்தகைய முக்கியத்துவத்தை வழங்கும் இந்த ஊடகக் கலாச்சாரம் வளர்ந்தால் அரசியல் ரீதியாகப் பின்னடைவில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்குச் சற்று றிலாக்ஸாக இருக்கும்.

தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் ஈழத்தமிழரின் விசயத்தில் அல்லது இலங்கை இனப்பிரச்சினையின் விசயத்தில் இந்த மாதிரி நகைச்சுவையாகவே நடந்து கொள்வதுண்டு.

இதில் ஈழ ஆதரவுச் சக்திகள், எதிர்ப்புச் சக்திகள், ஆட்சி அதிகாரத்திலிருப்போர், ஆட்சியை விட்டு இறங்கியோர் என்ற பேதங்களெல்லாம் இருப்பதில்லை. சீமான், வை.கோ, நெடுமாறன், சுப்பிரமணியம் சுவாமி, திருமாவளவன், ஜெயலலிதா, மு.கருணாநிதி, சோ என்று யாரும் விலக்கில்லை. எல்லோரும் ஒரே மாதிரியே கதைக்கிறார்கள். அல்லது ஒரே விதமாகவே நடந்து கொள்கிறார்கள். உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் வெகு தொலைவிலேயே இவர்கள் இருக்கிறார்கள்.

இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்க்கும் உபாயங்களைக் குறித்து இலங்கையர்களுக்கே இன்னும் தெளிவில்லை. அதிலும் ஈழத்தமிழர்களே இந்த விசயத்தில் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் தடக்குப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆளுக்கொரு கட்சி, கட்சிக்கொரு தலைவர் என்றெல்லாம் இருந்துங்கூட ஒரு வழிமுறையைக் கண்டு பிடிப்பதற்கு முடியாமலே இருக்கின்றனர். இந்த நிலையில் வெளியே – பிரச்சினைக்கும் அதனுடைய வலிக்கும் அப்பால் நின்று கொண்டே மருந்தைக் கண்டு பிடிக்க முண்டியடிக்கும் இந்த மருத்துவர்களை என்னவென்பது?
முதலில் ஒரு விசயத்தைப் பார்ப்போம்.

தமிழகத்தில் ஏராளம் பிரச்சினைகள் இருக்கின்றன. கூடங்குளம் அணுமின்னிலையம் பற்றிய விவகாரம். காவேரி நீர்ப்பிரச்சினை, முல்லைப்பெரியாறுப் பிரச்சினை, சீரான மின் வினியோகம் இன்மை, வேலைவாய்ப்புப் பிரச்சினைகள், ஊழல், என ஆயிரம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள்.

இதைவிட மீனவர் விவகாரம் என்ற தலையாய பிரச்சினை வேறு இருக்கிறது. இதையெல்லாம் இவர்கள் தீர்ப்பதற்கு முயற்சிப்பதில்லை. இவற்றை இவர்கள் தீர்க்க வேண்டும். இவர்கள்தான் இவற்றுக்குத் தீர்வு காணவும் வேணும்.

ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு இலங்கையின் இனப்பிரச்சினைக்கு கடந்த முப்பது ஆண்டுகளாக மாறிமாறி சீசனுக்குத் தக்கமாதிரி ‘விளம்பர வைத்தியம்’ பார்க்க முயற்சிக்கிறார்கள். தங்களின் ஆட்சிப் பரப்பிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக சனங்களின் கவனத்தைத் திசை திருப்பும் காரியமாகவும் இதைத் தமிழகத்து அரசியற் தலைமைகள் ஈழப் பிரச்சினையைக் கையாள்கின்றன.

இது ஒரு புறமிருக்க, இப்பொழுது ‘தனித்தமிழ் ஈழத்துக்காக’ ஆதரவைத் தேடும் தி.மு.க. அல்லது அதனுடைய தலைவர்கள் தங்களுடைய ஆட்சிக்காலத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

தி.மு.க. ஆட்சியிலிருந்தபோதே – தி.மு.க. பங்கேற்ற கூட்டரசு டில்லியில் ஆட்சியிலிருந்தபோதே ஈழப்போரின் இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கானவர்கள் பலியானார்கள். அப்பொழுது இதற்கெதிராக இந்தியா தலையிட்டு இந்தப் பலியைத் தடுப்பதற்கு தி.மு.கவினால் முடியாமற் போய்விட்டது. அல்லது இந்தியாவைக் கொண்டு ஐ.நா. மூலம் இந்தப் பலியை தடுக்க அதனால் முடியவில்லை.

அந்த நாட்களில் திரு. மு. கருணாநிதியும் அவருடைய கட்சியும் அவருடைய குடும்பத்தினரும் ஆடிய நாடகங்களை எல்லாம் இந்த உலகமே அறியும். உண்ணாவிரதம், மனித சங்கிலிப்போராட்டம் என்ற செல்லாக்காசு நடவடிக்கைகளை எல்லாம் கருணாநிதி அரங்கேற்றிக் கடைசியில் கோமாளியாகினார்.

இலங்கையின் நடந்த படுகொலைக்கெதிராக அவருடைய கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கூட அன்று பதவியைத் துறக்கவில்லை. அப்போது அவருடைய செல்ல மகள் கனிமொழி கூட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

யுத்தம் முடிந்த பிறகு, இலங்கை அரசு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்தபோது அந்தக் குழுவில் இதே ரீ.ஆர்.பாலுவும் இதே கனிமொழியும் கூட வந்திருந்தார்கள். (அந்தக் குழுவில் திருமாவளவனும் வந்திருந்தார்).
வந்தவர்கள் யாழ்ப்பாணத்துக்கு, வவுனியாவில் இருந்த அகதிகளின் முகாம்களுக்கு எல்லாம் விஜயம் செய்திருந்தார்கள்.
வந்தவர்களிடம் கண்ணீர்மல்க, உருக்கமான வேண்டுகோள்களை ஈழத்தமிழர்கள் விடுத்தனர்.

எதற்காக?

உணர்வாலும் உறவினாலும் தொடர்புள்ளவர்கள் என்ற காரணத்திற்காகவே.
ஆனால், என்ன நடந்தது?

இதன் பிறகு, தி.மு.க. நடந்து கொண்ட முறைகள் தொடர்பாக திரு. மு. கருணாநிதியிடம் மதிப்பும் மரியாதையும் தொடர்பும் உள்ள ஈழத்தமிழர் ஒருவர் - நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் அவர், அந்த நாட்களில் தன்னுடைய அதிருப்தி கலந்த கவலைகளை வெளியிட்டபோது கருணாநிதி அவருக்குச் சொன்னாராம், ‘ஈழத்தில் படுகொலை நடந்தபோது அங்கே இருந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் அரசியற் தலைவர்களும் ஏன் பதவிகளைத் துறக்கவில்லை? நீங்கள் அதனைப் பற்றிக் கேட்டுவிட்டு பிறகு என்னிடம் இதைப் பற்றிக் கேளுங்கள்’ என்று.

ஆகவே, ஈழத்தமிழர் சிந்திய கண்ணீரையும் செந்நீரையும் அவர்களுடைய உருக்கமான குரல்களையும் அரசியல் ஆதாயமாக்கியதே தி.மு.க செய்த வேலை. இந்த வேலையைத்தான் தமிழகத்தின் பிற தரப்பினரும் செய்கிறார்கள். இன்று ஜெயலலிதா செய்வதும். பத்திரிகைகள் செய்வதும்.

மனச்சாட்சிக்கும் வெட்கத்துக்கும் அப்பால் இந்தக் காரியங்களை அவர்கள் செய்கின்றனர். இதுதான் இங்கே கவனத்திற்குரியது@ பெரும்பாலான ஈழத்தமிழர்களின் வேதனைக்குரியது.

ஈழத்தமிழர்களுடைய துயரங்களைத் துடைப்பதற்கும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதற்கும் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் தமிழக அரசும் அங்குள்ள கட்சிகளும் தலைவர்களும் தொண்டர்களும் விசுவாசமாகவும் புத்திபூர்வமாகவும் இயங்கினால் அதனை முழுமனதோடு வரவேற்பதில் யாருக்கும் எந்தத் தயக்கமும் இல்லை. கேள்விகளும் இல்லை.
ஆனால், இவர்கள் எல்லாம் இலங்கை அரசின் இனவாத அணுகுமுறைக்கு மேலும் உதவுகிறார்கள் என்பதே இங்கே கவனிக்க வேண்டியது.

தமிழகத் தலைவர்களின் வீராவேச முழக்கங்களையெல்லாம் சிங்கள இனவாதத் தலைவர்களும் ஊடகங்களும் பெரு மகிழ்;ச்சியோடும் மனம் நிறைந்த புன்னகையோடும் வரவேற்கிறார்கள்.

தமிழகத்தில் வீர முழக்கங்கள் நிகழ நிகழ அது சிங்கள இனவாதத்தை மேலும் தீவிரப்படுத்தி வளர்ப்பதற்கான உரமாகவே மாறுகிறது. சிங்கள மக்களை இனவாத மயப்படுத்துவதற்கு – ‘சிங்கள மக்களுக்கு எதிரான தமிழ்ச் சக்திகளின் செயற்பாடுகளின் அபாய நடவடிக்கைகள்’ எனச் சிங்கள இனவாதச் சக்திகள் ஆதாரப்படுத்துவதற்கு இவை தாராளமாக உதவுகின்றன.

ஏனெனில் தமிழகத்தின் படையெடுப்புகளால் 22 தடவைகள் சிங்கள மக்கள் பேரழிவுகளைச் சந்தித்தனர் என்று வரலாற்றுச் சான்றுகள் சொல்கின்றன. அதாவது, ஈழத்தமிழர்கள் சந்தித்த ஒரு முள்ளிவாய்க்காலைப்போல சிங்களவர்கள் முன்னர் 22 முள்ளிவாய்க்கால்களைச் சந்தித்திருக்கின்றனர்.

எனவே இந்தப் பகையுணர்வை வளர்த்துக் கொள்வதற்கு, இந்த அச்ச நிலையைத் தொடர்ந்து பேணுவதற்கு தமிழக வீரர்களின் முழக்கங்கள் இன்றைய சிங்கள இனவாதிகளுக்குப் பெரும் வாய்ப்பைக் கொடுக்கின்றன.

தமிழகக் கட்சிகளின் வீர முழக்கங்கள் தமிழ் நாட்டு மக்களிடையே அவற்றுக்குத் தாராளமான ஆதரவைப் பெற்றுக் கொடுக்கலாம். அதைப்போல இலங்கையில் சிங்கள இனவாதக் கட்சிகளுக்கும் இனவாதத்தின் அடிப்படையில் செயற்படுவதற்கான தளத்தைத் தாராளமாக வழங்குகின்றன. இந்தச் செய்திகளைப் பிரசுரிக்கின்ற ஈழத்தமிழ் ஊடகங்களும் பிழைத்துக் கொண்டு விடுகின்றன.

ஆனால், ஈழத்தமிழர்களின் நிலையோ மிகமிக நெருக்கடிக்குள்ளாகிறது.
‘பூனைக்கு விளையாட்டு எலிக்குச் சீவன் போகிறது’ என்று சொல்வார்கள். ஏறக்குறைய அந்த நிலையில்தான் ஈழத்தமிழர்களுக்கான தமிழகத்தலைவர்களின் ஆதரவுக்குரல்கள்(?) இருக்கின்றன. மெய்யான அர்த்தத்தில் இந்தக் குரல்கள் எதிர்க்குரல்களே.

இவர்களைப் பொறுத்தவரையில் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்கப்படவே கூடாது. அது ஒரு சுவையான பண்டமாக – தமது அரசியற் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதற்கு அது எப்போதும் இருக்க வேண்டும்.

நாம் முன்னர் ஒரு பத்தியிற் குறிப்பிட்டதைப்போல ‘இரத்தத்திற் தோய்த்தெடுக்கப்படும் இறைச்சி’ யாக ஈழத்தமிழருடைய துயரங்களும் பிரச்சினைகளும் அவர்களுக்கு உள்ளது.

கருணாநிதி பல சினிமாக்களுக்கு வசனம் எழுதிப் பேர் எடுத்தவர். ‘பஞ்ச் டயலாக்’ மூலம் தொண்டர்களையும் அபிமானிகளையும் மயக்கி வைத்திருப்பவர். அதற்கெனவே ஒரு பாரம்பரியத்தை உருவாக்கி வெற்றி கண்டவர்.

ஆனால் அவர் பிறத்தியாரின் கண்ணீரில் சுவை காணக்கூடாது. இது அவருக்கு மட்டுமல்ல வரலாற்றுக்கு எதிராகச் சிந்திக்கும் அனைவருக்கும் பொதுவானது. பெருந்தக் கூடியது.

பயங்கரவாதம் ஒரு குற்றச் செயலைப்போல தவறுகளை மட்டுமே உள்ளடக்கியது அல்ல“

Sunday 22 April 2012




















‘பயங்கரவாதம் ஒரு குற்றச் செயலைப்போல தவறுகளை மட்டுமே உள்ளடக்கியது அல்ல.அது அரசியற் பிரச்சினைகளை உள்ளடக்கியது. அந்தப் பிரச்சினைகளை செவிமடுக்கும் உரையாடலைச் செவிமடுக்காமல், வெறும் இராணுவ பலத்தால் பயங்கரவாதத்தை அழித்து விட முடியாது’- மீனா. (தீராநதி)

போரிலே வெற்றி பெற்றவர் மகிந்த ராஜபக்ஷ. போரிலே வெற்றியீட்டிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் இன்றைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம். போரின் வெற்றிக்காக உழைத்த முக்கியமானவர்களில் முதன்மையானவர் ஜெனரல் சரத் பொன்சேகா. 2009 மே மாதத்தில் வெற்றிப் பெருமிதத்தில் மிதந்தவர்கள் இவர்கள் அனைவரும்.

ஆனால் இன்று?

இன்று அதிகமதிகம் நிம்மதியிழந்தவர்களாக, பதற்றத்துக்குள்ளாகியுள்ளவர்களாக இருப்பது மேற்குறிப்பிட்டோரே. ஒருவர் சிறையினுள்ளே இருக்கிறார். போர்க்குற்றங்களை ஆதாரப்படுத்தி ஏனையோரைச் சிறை குறித்துச் சிந்திக்க வைத்திருக்கிறது சர்வதேச சமூகம்.

ஆகவே, இன்றைய அரசாங்கமே அதிக நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

சர்வதேச நெருக்கடிகள், பிராந்திய சக்தியாகிய இந்தியாவுடனான முறுகல் நிலை, உள்நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் எனப் பலமான இறுக்க நிலையில் இலங்கை அரசும் நாட்டின் தலைமைப் பீடத்தினரும் சிக்குண்டுள்ளனர்.

இந்த நெருக்கடி நிலை அவர்களைப் பதற்றத்துக்குள்ளாக்குகிறது. மடியிற் கனமில்லை என்றால் வழியிற் பயமில்லை என்பார்கள். அரசாங்கத்துக்கு உள்ளடக்குகளிலும் வெளியடுக்குகளிலும் ஏகப்பட்ட அச்சநிலைகள் இருப்பது தெளிவாகவே தெரிகிறது. என்றபடியாற்தான் அது உச்சநிலையிலான அச்சத்திற்குள்ளாகியிருக்கிறது.

புலிகள் வெளிநாடுகளில் எழுச்சியடைகிறார்கள், புலிகளுக்கும் ஜே.வி.பி மற்றும் ஜே.வி.பி.யின் மாற்றுக் குழுவினருக்கும் இடையில் தொடர்புகள் இருக்கலாம், இந்தச் சக்திகளுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் உள்ள தொடர்புகள் என்ன? என்றெல்லாம் அரசாங்கம் அதீதமாகச் சிந்திப்பதற்குக் காரணம் அதனுடைய அச்சங்களே.

கடந்த வாரம் திமுது ஆட்டிக்கல மற்றும் சோமரட்ண ஆகிய இருவரும் கடத்தப்பட்டமையும் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் விசாரணையும் இவற்றைத் தெளிவாக்குகின்றன.

இதற்கு முன்னர் லலித், குகன் போன்றோர் காணாமற்போனமையைக் குறித்துச் சிந்திக்கும்போதும் இத்தகைய புரிதலே ஏற்படுகிறது.

ஆகவே இதையிட்டு உச்ச நிலையில் கண்காணிப்பைக் கொண்டுள்ளது படைத்தரப்பு. தூக்கத்திலும் பதற்றத்தோடிருக்கிறார்கள் அமைச்சர்களும் அதிகாரிகளும். பெருமளவு நிதியை பாதுகாப்புக்காகவே இன்னும் ஒதுக்கிக் கொண்டிருக்க வேண்டிய நிலையில் உள்ளது அரசாங்கம்.

இதெல்லாம் எதற்காக?

போரிலே வெற்றியடைந்த ஒரு அரசாங்கம் இவ்வாறு குறுகிய காலத்திற்குள் கலக்கமடைவது ஏன்?

அப்படியாயின் அது பெற்ற வெற்றியின் பெறுமதிகள் என்ன? அதன் அர்த்தமென்ன?

மீண்டும் ஒரு கிளர்ச்சி அல்லது ஆயதப்போராட்டம் எழலாம் என்ற எதிர்பார்க்கையோ அல்லது அச்சமோ அரசாங்கத்திடம் உள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.

உள்நாட்டில் இதற்கான சூழலோ மன நிலையோ இல்லை என்றாலும் வெளிச் சக்திகளின் தூண்டுதலில் ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழலாம் என்ற அச்சம் அரசாங்கத்துக்கு உள்ளது போலுள்ளது.

உள்நாட்டிற் காணப்படும் அதிருப்தியான அம்சங்களைப் பிரதானப்படுத்தி, இத்தகைய குழப்பங்களை அல்லது கிளர்ச்சிகளை உருவாக்குவதற்கு வெளிச்சக்திகள் முயற்சிக்கலாம் என்பது அரசாங்கத்தின் சந்தேகமாக இருக்கலாம்.

அதாவது, பயங்கரவாதம் மீண்டும் தோற்றம் கொள்ளலாம் என்ற அச்சம்.

ஆனால், இது அநாவசியமான பதற்றமும் சிந்தனையும் தேவையற்ற அச்சமுமாகும்.

ஏனெனில், போரினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்களும் நாடும் இன்னும் மீளவில்லை. ஆயுதப்போராட்டங்களின் வீழ்ச்சியும் அவை ஏற்படுத்திய கசப்பான அனுபவங்களும் மக்களை விட்டு இன்னும் நீங்கவில்லை.

மக்கள் நிம்மதியான – அமைதியான – சுபீட்சமான ஒரு வாழ்வையும் எதிர்காலத்தையுமே விரும்புகிறார்கள்.

போரின் முடிவை சமாதானத்துக்கான தொடக்கமாக, அமைதிக்கான ஆரம்பமாக, நல்லிணக்குத்துக்கும் புரிந்துணர்வுக்கும் உரிய சந்தர்ப்பமாக, புதிய சகாப்தத்துக்கான ஒரு சூழலாகவே எண்ணினார்கள். போரின் பாதிப்புகள் மிகக் கடினமானவையாக இருந்தாலும் அதன் வடுக்கள் சக்திக்கு மீறியவையாக இருந்தாலும் புதிய தொடக்கம் சீராக இருக்குமானால் அது எல்லாக் காயங்களையும் மாற்றிவிடும் என்றே நம்பிக்கை கொண்டிருந்தனர்.

ஆனால், மக்களின் எதிர்பார்ப்பும், விருப்பமும் நம்பிக்கையும் கனவும் இன்று கேள்விக்குறியின் மீதே நிறுத்தப்பட்டுள்ளன. சாதாரண பிரச்சினைகளுக்குக் கூடத் தீர்வைக் காண முடியாத ஒரு நிலை உருவாகி வருவதாக அவர்கள் எண்ணுகின்றனர்.

முக்கியமாக பொருளாதார நெருக்கடிகளும் இனப்பிரச்சினையும் தீர்க்க முடியாத கணிதங்களாக உருப்பெருத்துக் கொண்டே செல்வதைக் கண்டு மக்கள் மீண்டும் கலக்கமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மக்களின் நம்பிக்கைகளை வெற்றியடைய வைத்துத் தானும் வெற்றியைப் பெறுவதற்குப் பதிலாக அது எதிர்க்கணிதத்தில் சிந்திக்கக் கூடாது.

ஏனென்றால், ‘வெளித்தோற்றத்தில் அரசாங்கம் கலர் மயமாகித் தெரிந்தாலும் இன்று உள்ளே அது வெளிறிக் கொண்டேயிருக்கிறது’ என்று ஒரு ஆய்வாளர் தெரிவித்திருப்பது நமது கவனத்திற்குரியது.

எதற்கும் முதலில் யதார்த்தம், உண்மை என்பவற்றை ஒருவர் உணர்ந்து கொள்ள வேண்டும். இது அரசுக்கும் பொருந்தும். சாதாரணக் குடிமகனுக்கும் பொருந்தும். அரசியற் கட்சிக்கும் அரசியற் தலைவர்களுக்கும் நாட்டின் தலைமைப் பீடத்தினருக்கும் பொருந்தும்.

இலங்கையின் யதார்த்த நிலைமை என்பது மிகச் சவாலுக்குரியது. இன முரண்பாடுகளுக்குத் தீர்வு காண வேண்டிய யதார்த்தம். பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணவேண்டிய யதார்த்தம். ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மீள் நிலைப்படுத்த வேண்டிய யதார்த்தம். சர்வதேச உறவுகளைச் சீர்ப்படுத்த வேண்டிய அவசியம் எனப் பல யதார்த்தமான விசயங்களில் கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது.

இதையெல்லாம் அரசாங்கத்தின் உயர் பீடத்திலுள்ளவர்கள் எந்த அளவுக்குப் புரிந்துள்ளனரோ தெரியவில்லை. அரசாங்கத்துடன் நெருங்கிய உறவைக்கொண்டுள்ளோர், நாட்டின் நன்மைகளைக் குறித்துச் சிந்திப்போர், மதபீடாதிபதிகள், சமாதான விரும்பிகள் போன்றோர் நிச்சயமாக இவற்றையிட்டுக் கவனத்தைச் செலுத்த வேண்டும். அத்துடன் இவர்கள் அரசாங்கத்துக்கும் இவற்றைக் குறித்து எடுத்துரைப்பது அவசியமானது.

உண்மை நிலைமையைக் குறித்தும் யதார்த்த நிலைமையைக் குறித்தும் அரசாங்கத்தையும் தலைவர்களையும் அழைத்து வருவது இன்றைய நிலையில் அவசியமான பணியாகும்.

போரின் வெற்றி என்பது மிகையான உணர்ச்சிகளையும் மிகையான விளங்குதல்களையும் ஏற்படுத்தியிருக்கலாம். எப்போதும் வெற்றி – தோல்விகளில் சமநிலைக்கு அப்பாலான உணர்ச்சிகளே ஏற்படுவது வழமை. ஏறக்குறையக் கொந்தளிப்பான நிலைமையே வெற்றி – தோல்விகளின்போது ஏற்படுவதுண்டு.

இதைக் கடந்து, நாட்டினதும் மக்களினதும் யதார்த்த நிலைமை என்ன? தேவைகள் என்ன? அவற்றை எட்டுவதற்கான வழிகள் என்ன? என்று பார்க்க வேண்டிய பக்குவத்தை வளர்த்துக் கொள்வதே பாதுகாப்பானதாகும்.

இதற்காகவே மேற்படி மேற்கோள் விளக்கப்பட்டுள்ளது. ‘பயங்கரவாதம் ஒரு குற்றச் செயலைப்போல தவறுகளை மட்டுமே உள்ளடக்கியது அல்ல. அது அரசியற் பிரச்சினைகளை உள்ளடக்கியது. அந்தப் பிரச்சினைகளை செவிமடுக்கும் உரையாடலைச் செவிமடுக்காமல், வெறும் இராணுவ பலத்தால் பயங்கரவாதத்தை அழித்து விட முடியாதுஎன.


எந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கும் வெற்றியும் சந்தர்ப்பத்தை வழங்கும். தோல்வியும் சந்தர்ப்பத்தை வழங்கும். வெற்றி தோல்வியற்ற சமனிலையும் சந்தர்ப்பத்தை வழங்கும். ஆனால், இவற்றைக் கையாள்வதில்தான் தீர்வுக்கான வழிகள் பிறக்கின்றன. இதற்கான அர்ப்பணிப்பும் திடமான சிந்தனையும் இருந்தால் இதைச் சாத்தியப்படுத்த முடியும்.

இலங்கையின் துயரம் நீடிக்க வேண்டுமா அல்லது அது முடிவுக்கு வரவேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு இன்று எல்லோருடைய மூளைக்கும் உரியது.

இலங்கையின் துயரம் என்பதே இன்று இந்தப் பிராந்தியத்தில் சர்வதேசத் தரப்பின் அரசியல் பொருளாதார முதலீடாக மாறியுள்ளது என்பதைப் புரிந்து கொண்டால் நமது மூளையின் கதவுகள் தானாகவே திறபடும்.

இதையெல்லாம் உணர்ந்து கொள்வதும் உணர்த்துவம் எப்படி என்பதே இன்றும் என்றுமுள்ள சவால்.

இந்தச் சவாலை வெற்றி கொள்ளாதவரையில் துயரமும் பதற்றமும் அரசுக்கு மட்டுமல்ல மக்களுக்குந்தான். ஏனைய தலைவர்களுக்குந்தான். அதேபோல மக்களுக்கு மட்டுமல்ல, பிற தலைவர்களுக்கும் அரசுக்குந்தான்.

ஆகவே, இதைக் குறித்துச் சிந்திப்பதே பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் வழியாகும்.

ஆனால், அதற்கு முதலில் மனதில் மாண்புடைய தன்மைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசியல் நலன் என்பது துணிச்சலும் சரியான வழிமுறையும் உள்ள செயற்பாட்டிலேயே கிட்டுகிறது என்ற அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்டால் நிம்மதியும் வெற்றியும் நலனும் தாராளமாகக் கிட்டும்.

இலங்கை வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் கிடந்து இன்னும் தளம்பத்தேவையில்லை.

மறுபடியும் நினைவூட்ட வேண்டியது,
‘பயங்கரவாதம் ஒரு குற்றச் செயலைப்போல தவறுகளை மட்டுமே உள்ளடக்கியது அல்ல. அது அரசியற் பிரச்சினைகளை உள்ளடக்கியது. அந்தப் பிரச்சினைகளை செவிமடுக்கும் உரையாடலைச் செவிமடுக்காமல், வெறும் இராணுவ பலத்தால் பயங்கரவாதத்தை அழித்து விட முடியாது’ 
என்பதையே.

000

புதிய தமிழ்த் தேசியத் தலைமை?



ஜெயலலிதா இலங்கையின் இனப்பிரச்சினைக்கு எத்தகைய அரசியற் தீர்வை முன்மொழிகிறார்? அதைச் செயற்படுத்துவதற்காக அவர் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்? அந்த நடவடிக்கைகளைச் செயற்படுத்துவதற்கான பொறிமுறைகளை அவர் எவ்வாறு உருவாக்குவார்? அதற்காக அவர் முழுமையான அளவில் விசுவாசமாக உழைக்கத்தயாரா?இதெற்கெல்லாம் அவரிடம் பதிலில்லை. 










போகிற போக்கைப் பார்த்தால் எதிர்காலத்தில் சுப்பிரமணியம் சுவாமி, சோ, ஹிந்து ராம் போன்றவர்கள் கூட தமிழ்த் தேசியவாதிகளாகக் கருதப்படக்கூடிய நிலை உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளுக்கும் ஈழப்போராட்டத்துக்கும் எதிர்த்திசையில் நின்ற தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதா இன்று ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினையில் முன்னணிப்போராளியாக பெரும்பாலான தமிழ் ஊடகங்களாற் கொண்டாடப்படுகிறார். நெடுமாறன், சீமான், திருமாவளவன், வைகோ, கொளத்தூர் மணி போன்ற நீண்டநாள் ஈழப் போராட்ட ஆதரவாளர்களையெல்லாம் பின்வரிசைக்குத் தள்ளி விட்டார் ஜெயலலிதா.

ஈழப் பிரச்சினையில் இன்று ஜெயலலிதா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இவர்கள் மட்டுமல்ல, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் திரு. மு.கருணாநிதி கூடத் திணறிக் கொண்டிருக்கிறார். சற்று உன்னிப்பாக இதைப் பற்றிச் சொன்னால், ஈழ ஆதரவாளர்களையும் விட, மத்திய அரசையும் விட ஜெயலலிதா குறிவைத்திருப்பது வழக்கம்போல அவர் எதிரியாகக் கருதும் திரு. மு.கருணாநிதியையே.

ஆகவேதான் இலங்கையின் அரசியற் பிரச்சினைகளைக் குறித்து ஜெயலலிதா எடுக்கும் முடிவுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் - தனித்துத் தீர்மானமெடுக்க முடியாமல் திரு. கருணாநிதி ஜெயலலிதாவின் அறிவிப்புகளுக்குப் பின்னே இழுபடுகிறார். அந்த அளவுக்கு செல்வி ஜெயலலிதான் அதிரடிகள் விசைகூடியவையாக உள்ளன.

கடந்த மாதம் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, ஜெனிவாவில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று ஓர் இரவு அதிரடி அறிவிப்பைக் கொடுத்து டில்லியைக் கலங்க வைத்தார் ஜெயலலிதா. ஆனால், ‘அவர் டில்லியைக் கலக்கவில்லை. திரு. கருணாநிதியையும் தி.மு.க.வையுமே கலங்க வைத்தார்’ என்று சொல்கிறார் தமிழ்நாட்டிலுள்ள ஒரு ஊடகத்துறை நண்பர். நண்பரின் கூற்றில் உண்மையுண்டு. அதுவரையும் மதில் மேற் பூனையாக இருந்த தி.மு.க. ஜெயலலிதாவின் அறிவிப்பை அடுத்து தானும் அதேமாதிரியான ஒரு அறிவிப்பை விடுத்தது.

அதற்கு முன்னர் மத்திய அரசின் தீர்மானம் எப்படி அமையப்போகிறது என்று தெரியாத நிலையில் தடுமாறிக்கொண்டிருந்த திரு. கருணாநிதி, ஜெயலலிதாவின் அறிவிப்பை அடுத்து துடித்தெழுந்தார். உடனடியாகவே இலங்கை விசயத்தில் இந்தியா விட்டுக்கொடுக்க முடியாது என்றும் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றும் ஒரு அறிக்கையை விடுத்தார். ஏறக்குறைய ஜெயலலிதாவின் அறிவிப்பைச் சமனிலைப்படுத்திக் கொள்ளவும் அதன் மூலம் தன்னுடைய செல்வாக்கைச் சரியவிடாமற் பார்த்துக்கொள்ளவும் முயன்றார்.

இப்பொழுது இந்திய நாடாளுமன்றக் குழுவின் இலங்கை விஜயத்தை ஜெயலலிதா பகிஸ்கரித்தபோது விழுந்தடித்துக் கொண்டு தி.மு.க.வும் தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கான விஜயத்தைப் பகிஸ்கரிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஆகவே ஜெயலலிதாவின் முடிவுகளைப் பார்த்துத் தன்னுடைய தீர்மானங்களை எடுப்பவராகவே கருணாநிதி மாறியுள்ளார்.

கருணாநிதி ஈழ விசயத்தில் மட்டுமல்ல பொதுவாகவே ஏனைய விசயங்களிலும் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளையும் அறிவிப்புகளையும் பார்த்து, அதற்கு மறுப்பாகவோ போட்டியாகவோ தீர்மானங்களை எடுப்பவராகவும் அறிவிப்புகளை எடுப்பவராகவும் உள்ளார்.

கருணாநிதியின் இத்தகைய அணுகுமுறையானது நீண்ட பாரம்பரியத்தையுடையது. எம்.ஜி.ராமச்சந்திரன் காலத்திலிருந்தே அவர் இந்த மாதிரியான வழிமுறையைத்தான் கடைப்பிடித்து வருகிறார்;. ஆகவே இதுவொன்றும் புதியதல்ல. என்பதால் இங்கே நாம் கவனிக்க வேண்டியது கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்றோரின் அரசியல் அணுகுமுறைகளைப் பற்றியதல்ல. பதிலாக ஈழப்பிரச்சினையில், இவர்கள் எப்படியான நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள், அந்த நிலைப்பாடுகளின் உண்மைத்தன்மை என்ன? அவற்றின் பெறுமதி என்ன? என்பவற்றையே.

மெய்யாகவே ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினையிலும் அதற்கான போராட்டத்திலும் பொருத்தமான தீர்மானங்களை ஜெயலலிலதாவும் எடுக்கவில்லை. கருணாநிதியும் எடுக்கவில்லை. அப்படி ஒரு எண்ணம்கூட இவர்கள் இருவரிடத்திலும் கிடையாது. அதற்கான உணர்வோ விருப்பமோ அவசியமோ கூட இருவருக்கும் இல்லை.

ஆனால், ஈழ அரசியற் பிரச்சினை இருவருக்கும் தேவைப்படுகிறது. ஒரு சுவைமாறாத பண்டமாக தமிழக மக்களுக்கும் அங்குள்ள ஊடகங்களுக்கும் ஈழப்பிரச்சினை இருக்கும் வரையில், ஜெயலலிதா, கருணாநிதி போன்றோருக்கு மட்டுமல்ல சுப்பிரமணியம் சுவாமி, சோ, திருமாவளவன், சீமான் தொடக்கம் குஷ்பு, ரீமா சென்வரை எல்லோருக்கும் அது தேவைப்படும். ஆகவே அவர்கள் அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இலங்கையின் இனப்பிரச்சினை அந்தளவுக்கு இன்று உலகம் முழுவதுக்கும் சுவையான ஒரு பண்டமாகியுள்ளது. அது இலங்கை அரசுக்கு மட்டுமன்னி, தமிழ் - சிங்கள இனத்துவ அரசியலாளர்களுக்கு மட்டுமன்றி, பிராந்திய நாடுகளுக்கு, சர்வதேச சமூகத்துக்கு, மனித உரிமைகள் அமைப்புகளுக்கு, ஆய்வாளர்களுக்கு, ஊடகங்களுக்கு, எழுத்தாளர்களுக்கு எனப் பலருக்கும் அது பயன்படுகிறது. ‘பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகிறது’ என்று ஊர்வழக்கிற் சொல்வார்கள். அதேபோல இவர்களுக்கெல்லாம் இனப்பிரச்சினை  விவகாரம் விளையாட்டுப் பொருளாக, லாபந்தரும் விசயமாக இருக்கிறது.

ஆனால்,  இனப்பிரச்சினை என்ற நெருப்பின் மத்தியில் வாழ்கின்ற (இலங்கை) மக்களுக்கு – குறிப்பாகத் தமிழர்களுக்கு இதெல்லாம் உயிரோடு விளையாடுவதைப்போலவே அமைகிறது.

காயங்களோடும் வலியோடும் உள்ள மக்களை இது மேலும் அவமானப்படுத்தும் சங்கதியாகும். அவர்களின் வலியை மேலும் அதிகரிப்பதாகவே அமையும்.

இலங்கையின் இனப்பிரச்சினை என்பது புதிய ஒரு விசயமுமல்ல, புதிய விவகாரமுமல்ல. இன்னும் அதைப் புதிதாக யாரும் ஆய்வு செய்ய வேண்டிய தேவையுமில்லை. போரினாற் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை, அவர்களுக்கான தேவைகள், அவர்களுடைய விருப்பங்கள், அவர்கள் எதிர்பார்க்கின்ற சங்கதிகள் கூடப் பகிரங்கமானவை.

இவற்றை அறிவதற்கு யாரும் புதிய பூதக்கண்ணாடிகளைத் தேடவேண்டியதில்லை. ஆனால், உலகம் இதையெல்லாம் விட்டுவிட்டு கண்ணாமூச்சியாடிக் கொண்டேயிருக்கிறது. இந்தக் கண்ணாமூச்சியாட்டத்தில் ஆளாளுக்கு தங்கள் பங்கு ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

உன்னிப்பாக அவதானிக்கும் எவருக்கும் இந்தச் சங்கதிகள் எல்லாம் சினத்தையே ஏற்படுத்தும். அல்லது சிரிப்பையூட்டும். அதிலும் ‘இனத்தாலும் பண்பாட்டாலும் ஒன்று பட்டவர்கள்’, ‘ரத்தத்தின் ரத்தங்கள்’, ‘உடன்பிறப்புகள்’ என்றெல்லாம் உணர்ச்சி பொங்கப் பேசும் தமிழகத்தினரின் இந்த மாதிரியான கீழ்த்தரமான அரசியல் அணுகுமுறைகள் வெட்கத்துக்குரியவை என்பது பொதுவான ஈழத்தமிழர்களின் கருத்தாகும்.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில், அவர் தன்னுடைய அதிரடித் தீர்மானங்களின் மூலமாகத் தன்னைச் சுற்றி ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவதில் வல்லவர். அதேபோல அவருடைய அதிரடி நடவடிக்கைகளே அவரைப் படு பாதாளத்திலும் தள்ளுவன. ஆனால், தன் முன்னே உள்ள நிலைமையைக் கையாள்வதில் அவர் வல்லவர், அசாத்தியமானவர் என்று சொல்லப்படுவதுண்டு.

இதை நிரூபிக்குமாற்போல, இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தை இன்று அவர் கையாண்டு வருகிறார். சமநேரத்திலேயே அவர் மத்திய அரசுக்கும் தி.மு.க.வுக்கும் தனக்கு எதிரான சக்திகளுக்கும் சவாலை விடுமளவுக்கு இந்த விவகாரத்தைப் பயன்படுத்துகிறார்.

இதன்மூலம் தமிழகத்தில் அவருக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளைச் சமாளித்துக் கொள்ள அவரால் முடிகிறது. எந்த அளவுக்கு ஜெயலலிதா கொழும்புடன் பகைத்துக்கொள்கிறாரோ அந்த அளவுக்கு அவர் தமிழகத்திலும் ஈழ ஆதரவாளர்களாலும் தமிழ்த் தேசிய சக்திகளாலும் கொண்டாடப்படுகிறார். அப்படிக் கொண்டாடப்படுவதையே ஜெயலலிதாவும் விரும்புகிறார்.

இப்பொழுது கொழும்பு ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சிக்கிறது. கொழும்புடன் பகைக்கும்போது அது தமிழர்களிடம் ஏகப்பெரும் மரியாதையை ஜெயலலிதாவுக்கு வழங்குகிறது. யார் கொழும்புடன் பகைக்கிறார்களோ அவர்கள் தமிழர்களின் கொண்டாட்டத்துக்குரியவர்களாகிறார்கள். எனவே கொழும்பைப் பற்றிக் கடுமையாக விமர்சிப்பதன் மூலம் தமிழர்களிடம் பேரபிமானத்துக்குரிய இடத்தை அவர் பெற்றுக் கொள்கிறார். இதன்மூலம் அவர் தமிழ்நாட்டின் ஏனைய உதவிகளைச் செய்யும் பொறுப்பிலிருந்தும் அதற்கான பொருளாதார இழப்பிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொண்டார். ஆனால், வெளிப்படையாகப் பார்க்கும்போது தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பது போலத் தோன்றும். அதே வேளை இழப்புகளோ பொறுப்புகளோ இல்லாத ஒரு நிலையையும் பெற்றுக்கொள்ளலாம். இதையே ஜெயலலிதா எதிர்பார்த்தார். அதுவே நடக்கும்போது அவருக்கு இரட்டு மகிழ்ச்சியும் ஏகப்பட்ட நன்மையும் கிடைத்திருக்கிறது.

ஆனால் ஜெயலலிதா இலங்கையின் இனப்பிரச்சினைக்கு எத்தகைய அரசியற் தீர்வை முன்மொழிகிறார்? அதைச் செயற்படுத்துவதற்காக அவர் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்? அந்த நடவடிக்கைகளைச் செயற்படுத்துவதற்கான பொறிமுறைகளை அவர் எவ்வாறு உருவாக்குவார்? அதற்காக அவர் முழுமையான அளவில் விசுவாசமாக உழைக்கத்தயாரா?

இதெற்கெல்லாம் அவரிடம் பதிலில்லை. இதற்கான பதிலையோ விளக்கத்தையோ தமிழ்ப் பொதுவெளியினர் எதிர்பார்ப்பதும் இல்லை. பதிலாக எழுகின்ற அலையில் சேர்ந்த முழங்கிக்கொள்வதே பெரும்பாலானவர்களின் கதியாக உள்ளது.

வெளித்தோற்றத்துக்கு தமிழகக் கட்சிகளின் அல்லது தமிழக அரசின் இத்தகைய செயற்பாடுகள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானவை போலத் தெரியலாம். ஆனால், இவை எத்தகைய அடிப்படைகளையும் கொண்டிராதவை என்பதைக் கடந்த கால, நிகழ்கால அவதானங்களைக் கொண்டே மதிப்பிட முடியும். எனினும் தமிழ் மனதுக்கு அதை ஏற்றுக்கொள்ளவும் நம்பவும் கடினமாகவே உள்ளது.

தமிழ் மனம் என்பது பெரும்பாலும் உணர்ச்சிகளால் கட்டமைக்கப்பட்டது. அதற்கு உணர்ச்சிகரமான விசயங்கள் எது நடந்தாலும் அதன்பால் அது சுலபமாக ஈர்க்கப்பட்டு விடும். இந்த அடிப்படையைத் தமிழ் அரசியலாளர்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர்.

எனவே அதற்குத் தகுந்த மாதிரி, அவர்கள் கவர்ச்சிகரமாக உணர்ச்சிகரமான விசயங்களை - இரத்தத்தில் தோய்த்த இறைச்சியாக - அடிக்கடி போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். புதிய இறைச்சிகளை மணந்தறியாத வரைக்கும் பழைய இறைச்சியே புதிய சரக்காக இருக்கும்.

ஆகவே, தற்போது ஜெயலலிதா தமிழ்நாட்டுக்கு மட்டும் “அம்மா“ என்ற அடையாளமாக அல்லாமல், மெல்ல மெல்ல ஈழத்தமிழர்களிடமும் அவர் “அம்மா“ என்ற அபிமான அடையாளத்தைப் பெறக் கூடிய நிலையை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதா எந்த அளவுக்கு இந்தக் கோணத்தில் - புனிதப் பாத்திரமேற்று விஸ்வரூபம் எடுக்கிறாரோ அந்த அளவுக்குக் கருணாநிதி சிறுத்து தமிழர்களுக்கு எதிரானவர் என்ற சிறுமைப் பாத்திரத்தை ஏற்கவேண்டும்.

இதுவே தமிழர்களின் அளவு கோலின் முறைமையாகும். இதை உருவாக்கியதில் கருணாநிதிக்கும் பங்குண்டு.

அவரவர் உருவாக்கிய வகைமைகளுக்குள் அவர்களே சிக்கிக்கொள்ளும் அரசியல் விதியிற்தான் இன்றைய தமிழர்களின் அரசியல் எதிர்காலமும் நிகழ்காலமும் சிக்கியிருக்கிறது. ஏன் அவர்களுடைய கடந்த காலமுந்தான்.

00

யுத்தத்துக்குப் பிந்திய நாட்கள் என்பது...

Sunday 8 April 2012








யுத்தகால நிலைமைகளை விட யுத்தத்துக்குப் பின்னான நிலைமைகள் மிகக் கடினமானவையாக இருக்கும் என்பது பொதுவிதி.

யுத்தத்தில் கேள்விகளுக்கு இடமிருப்பதில்லை. யுத்தத்தின்போது கட்டளைகளே முதன்மையானவை. கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே அங்கே நடைமுறை. கீழ்ப்படியாதவர்களின் தலைகளை யுத்தம் தின்று விடும். யுத்த களத்திலிருந்து சனங்களின் பதுங்குகுழி வரையில் இதுதான் நடைமுறை. இதுதான் யதார்த்தம்.

அங்கே யாரையும் யாரும் கேள்வி கேட்கமுடியாது. யுத்த அரங்கிலாயினும் சரி, யுத்த அரங்கிற்கு வெளியேயும் சரி, கேள்விகள் துப்பாக்கிக் குண்டுகளையும் விட அபாயகரமானவையாகவே கருதப்படுகின்றன.

என்பதாற்தான் அங்கே நீதியும் உணர்வுகளும் குரல்களும் செத்துவிடுகின்றன. யுத்தத்தில் முதலில் பலியாவது உண்மையே என்று சொல்வதும் இதனாற்தான். கேள்வி கேட்க அனுமதிக்கப்படாத இடத்தில், பதில் சொல்லப்பட வேண்டிய கடப்பாடு இல்லாமற் போகிறது. பதிலளிக்க வேண்டிய கடப்பாடில்லாத சூழலில் எதுவும் நடக்கலாம். எப்படியும் நடக்கலாம். அங்கே எதற்கும் மதிப்பில்லை. எவருக்கும் மதிப்பில்லை.

யுத்த விதி, யுத்த தர்மம் என்பதையெல்லாம் யார், எப்போது, எங்கே ஒழுங்காகக் கடைப்பிடித்தார்கள்? யுத்தத்தின் உருவாக்கமே நீதி மறுப்பிலிருந்துதானே நிகழ்கிறது? நீதியும் நியாயமும் அறமும் பேணப்படுமானால் யுத்தத்திற்கே இடமில்லை. அவை மீறப்படும்போதுதானே யுத்தம் முளைவிடுகிறது. ஆகவே, நீதி மறுப்பிலிருந்து உருவாகும் யுத்தத்தத்தினால் எப்படி விதிகளையும் அறத்தையும் பேணமுடியும்? எனவே யுத்த தர்மம், யுத்த விதி என்பதெல்லாம் மிகப் பெரிய கண்கட்டு வித்தைதான்.

என்பதாற்தான் கேள்விகளே இல்லாத, கேள்விகளுக்கு இடமேயில்லாத  பரப்பொன்றை யுத்தம் தன்முன்னே உருவாக்கி வைத்திருக்கிறது என்கிறேன்.

ஆனால், யுத்தத்திற்குப் பின்னான நிலைமை அப்படியானதல்ல. அது கேள்விகளால் நிரம்பிய பரப்பு. எல்லாவற்றுக்கும் கேள்விகள். எந்த நிலையிலும் கேள்விகள். கேள்விகளால் சுற்றிவளைக்கப்பட்டதொரு காலச் சூழலே யுத்தத்துக்குப் பின்னான நாட்கள் என்பது.

யுத்தத்திற்குப் பின்னான காலத்தை எதிர்கொள்வதில் யுத்தத்தத்தை நடத்திய நாடுகளும் யுத்தத்தை எதிர்கொண்ட நாடுகளும்; பேரிடர்ப்பட்டிருக்கின்றன. நாடுகளுக்கப்பால் சமூகங்களுக்கிடையிலான, இனங்களுக்கிடையிலான யுத்தமும் கூட இத்தகைய பேரிடரையே சந்தித்துள்ளன. யுத்தம் என்பது எப்போதும் நெருக்கடியிலிருந்தே உருவாகிறது. நெருக்கடிகளைத் தீர்க்க முடியாத உச்ச நிலையிலேயே யுத்தம் உருவாகிறது. அப்படி உருவாகிய யுத்தம் தொடர்ந்து நெருக்கடிகளையே விதைத்துக் கொண்டும் செல்கிறது. இந்த நிலை யுத்தத்திற்குப் பின்னரும் உடனடியாக நின்று விடுவதில்லை. யுத்தத்துப் பின்னரும் அது பல விதங்களில் நெருக்கடிநிலையாக, கேள்விகளை உற்பத்தி செய்தபடியே இருக்கிறது.

முக்கியமாக யுத்தத்தினால் சிதைந்தவற்றை மீள் நிலைப்படுத்துவது மிகப்பெரிய சவால். அதை விட அழிந்து போனவற்றை உருவாக்குவதும் இழப்புகளை  ஈடுசெய்வதும் மிகக் கடினமானது. மேலும் காயங்களை ஆற்றுவது, வலிகளைத் தீர்ப்பது எல்லாமே சிரமமான காரியங்கள். ஆனால், எல்லாவற்றையும் சீர்ப்படுத்த வேண்டும். இல்லையெனில் மிகப் பெரிய அவலத்திலிருந்து மீளவே முடியாது. நிலைமைகளைச் சீர்ப்படுத்த முடியாத. ஆகவே இந்த இடத்தில் ஏராளம் கேள்விகள் எழுகின்றன. எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள். எதற்கும் கேள்விகள்.

இப்பொழுது அந்த மாதிரியான ஏராளம் கேள்விகள் இலங்கையில் எழுந்துள்ளன.

யுத்தகாலத்திற் காணாமற்போனவர்களைப் பற்றிய கேள்விகள். யுத்தத்தின் போது சரணடைந்தவர்களைப் பற்றிய கேள்விகள். அரசியற் கைதிகளாகத் தடுத்து வைத்திருப்போரைப் பற்றிய கேள்விகள். அவர்களுடைய விடுதலையைப் பற்றிய, விடுதலையைப் பற்றிய கேள்விகள். யுத்தக் குற்றங்களைப் பற்றிய கேள்விகள். யுத்தக் குற்ற விசாரணையைப் பற்றிய கேள்விகள். யுத்தத்துக்குப்பின்னரான நிலைமைகளைக் குறித்த கேள்விகள். மீள்குடியேற்றம் பற்றிய கேள்விகள். புனர்வாழ்வுப் பணிகளைப் பற்றிய கேள்விகள். பாதிக்கப்பட்டோரைப் பற்றிய கேள்விகள். பாதிக்கப்பட்டோருக்கான உதவிகளைப் பற்றிய கேள்விகள். புனரமைப்புப் பற்றிய கேள்விகள். சீராக்கல் நடவடிக்கைகளைப் பற்றிய கேள்விகள். யுத்தத்தில் பலியாகிய ஜனநாயகத்தை மீள்நிலைப்படுத்துவதைப் பற்றிய கேள்விகள். இயல்பு நிலை உருவாக்கத்தைப் பற்றிய கேள்விகள். இயல்பு நிலைக்குத் தடையான காரணிகளைப் பற்றிய கேள்விகள். சிவில் தன்மையை நோக்கி நிலைமைகள் நகர்கின்றனவா என்ற கேள்விகள். போருக்குப் பிந்திய நிலையிலும் முரண்பாடுகளை நீக்குவதற்கான நடவடிக்கைiளைப் பற்றிய கேள்விகள். அமைதியைக் குறித்து, சமாதானத்தைக் குறித்து விசுவாசமாகச் சிந்திப்பதைப் பற்றிய கேள்விகள்... இப்படிப் பல.

இந்தக் கேள்விகளையெல்லாம் பதில்களால் சீர்ப்படுத்துவதற்குச் சீரான பொறிமுறைகள் அவசியம். உச்சநிலையிலான மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் விசயங்கள் அணுகப்பட வேண்டும். சிதைவடைந்த நிலையிலிருக்கும் உளநிலை தொடக்கம், இழப்புகள், பாதிப்புகள் எல்லாவற்றையும் மீள்நிலைப்படுத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட பொறிமுறைகளும் நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பும் செயற்றிறனும் அவசியம்.

குறிப்பாக படைத்தரப்பை யுத்தத்தை ஒத்த சூழலிலிருந்து – மன நிலையிலிருந்து, ஆதிக்கத்திலிருந்து விலக்கிக் கொள்வதற்கு உச்சமான திட்டங்கள் அவசியம். இதைக் கையாள்வதே கடினம் என்று சொல்லப்படுகிறது. காரணம், யுத்தத்தில் வெற்றியைப் பெற்ற படைகள் அந்த வெற்றிக்கான தகுதியைத் தாமே பெற்றுக்கொடுத்ததாகவே சிந்திக்கும். ஆகவே அந்தச்சிந்தனையிலிருந்தே அவை தங்களுக்கான அந்தஸ்தையும் உரிமைகளையும் வளங்களையும் வசதிகளையும் எதிர்பார்க்கும்.

ஆனால், அரசைப் பொறுத்தவரையில் அது அரசியல் நிலைமைகளுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டிய யதார்த்தத்திலிருக்கும். அரசியல் அம்சங்களுக்கு முன்னுரிமை வழங்கத் தவறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அது உள்ளேயும் வெளியேயும் கண்டனங்களையும் நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். அதேவேளை அது அரசியல் அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்க முற்படுகையில் அது படைத்தரப்பையே முதலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் படைத்தரப்பின் அதிருப்தியைச் சந்திக்க வேண்டியிருக்கும். படைத்தரப்பின் அதிருப்தியைச் சந்திப்பது யுத்தத்தில் வெற்றியைப் பெற்ற ஒரு அரசினால் முடியாத காரியம். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

1. யுத்தத்தில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த உரிமையைப் படைத்தரப்பு கொண்டுள்ளது. ஆகவே வெற்றியில் அரசுக்கிருக்கும் உரிமையிலும் அந்தஸ்திலும் படைகளுக்கும் பங்குண்டு என்பது. வெற்றியைப் பெற்றுத்தந்து விட்டு ஓரங்கட்டப்படுவதை படைகள் ஒருபோதுமே விரும்புவதில்லை. அதை அவை அனுமதிக்கவும் மாட்டா. அதேவேளை வெற்றியைக் குறித்த பெருமிதங்களிலும் புகழிலும் அவை பங்கெடுக்கவே முனையும். எனவே யுத்தத்தில் வெற்றியடைந்த அரசொன்றின் படைகள் தமது ஸ்தானத்தைக் குறித்து விட்டுக்கொடுப்பற்ற நிலையிலேயே இருக்கும். அதற்குக் காரணமாக யுத்த வெற்றிக்காக தாம் செயற்பட்ட திறன்களையும் தமது தரப்பின் அர்ப்பணிப்பையும் அவை முன்னிறுத்தும்.

2. யுத்தத்தின் தேவைக்காக அரசு படையைப் பெருக்கி விடுகிறது. அப்படியொரு தேவை அதற்கு தவிர்க்க முடியாமல் ஏற்பட்டுள்ளதால் இந்தப் பெருக்கத்தை அது செய்கிறது. யுத்தத்தின் முடிவுக்குப் பிறகு பெருகிய படைகளை ஒரே நாளில் வீட்டுக்குப் போகும்படி எந்த அரசினாலும் சொல்ல முடியாது. அப்படி அரசு கட்டளையிட்டால் அரசின்மீதே படைகள் பாயும். யுத்தத்தின் வெற்றியை எடுத்துக்கொண்டு அரசு தங்களை வீதியில் விட்டதாக படைகள் கருதக்கூடிய அபாயம் இதிலுண்டு. எனவே யுத்த காலத்தையும் விட யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் படைகளைக் கையாள்வதே கடினமானது என்கிறார் எட்வேர்ட் சைமன். இவர், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய சூழலைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட ஒரு அரசியற் பகுப்பாளர்.

இரண்டாம் உலகப் போருக்காகப் பெருக்கிய படைகளை வீட்டுக்கு அனுப்பவும் முடியாமல் பணிகளிலும் வைத்திருக்க முடியாமல் அவஸ்தைப்பட்டன யுத்தத்தில் ஈடுபட்ட நாடுகள். தோற்றுப்போன நாடுகளின் கதை வேறு. அவர்கள் எல்லாப் பிரச்சினைகளையும் தோல்வியில் போட்டுவிடுவார்கள். அதைவிட தோற்றுப்போனவர்களிடம் யாரும் அதிகமாகப் பொறுப்புகளைப் பற்றிக் கேட்க மாட்டார்கள். கேள்விகளையும் எழுப்ப மாட்டார்கள். ஆனால், வென்றவர்களின் நிலை அப்படியல்ல. அவர்கள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர். எல்லாவற்றுக்கும் அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்கிறார் சைமன்.

இயற்கையினால் ஏற்படும் இடர்களையும் அழிவுகளையும் சந்திக்கும் மனம் சமனிலை அடைவதற்கும் யுத்தத்தினால் ஏற்படும் அழிவுகளையும் இடர்களையும் சந்திக்கும் மனம் சமனிலை கொள்வதற்கும் வேறுபாடுகளுண்டு. இயற்கையின் இடரில் யாரையும் கோவித்துக்கொள்வதற்கு இடமில்லை. அங்கே குற்றவாளியாக - இடருக்குக் காரணமாக -  இருப்பது இயற்கையே. இயற்கையை எப்படிக் கோவித்துக் கொள்ள முடியும். அப்படிக் கோவித்துக் கொண்டாலும் அது வானத்தைப் பார்த்துக் கர்ச்சிப்பதற்கு அப்பால் வேறெதுவாகவும் ஆவதில்லை. ஆகவே இயற்கையினால் ஏற்படும் பாதிப்பைப் பற்றிய கோபம் சடுதியாகவே வடிந்து காணாமற் போய்விடும்.

சுனாமி அலைகளாற் பாதிக்கப்பட்ட மக்கள் அந்தக் கணத்தில் கடலைத் திட்டித்தீர்த்தார்கள். ஆனால், சற்றுக் காலத்துக்குப் பிறகு அவர்கள் கடலின் மடியில் மீண்டும் தவழத் தொடங்கி விட்டனர். கடல் மீண்டும் அவர்களுக்கு வரமளிக்கும் - அரவணைக்கும் தாயாகிவிட்டது. இனிய தோழனாகிவிட்டது.

இயற்கையின் இடருக்குப் பிறகு ஏற்படுகின்ற கோபம் சற்றுக்காலம் நீடித்தாலும் பின்னர் அது அந்த இடருக்குப் பிறகு செய்யப்படும் நிவாரணப்பணிகள், உதவித்திட்டங்கள், மீளுருவாக்கச் செயற்பாடுகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகளினால் உருமாற்றம் பெற்றுவிடும். இந்தப் பணிகளில் நடக்கின்ற பாரபட்சங்கள், குறைபாடுகள், திருப்தியின்மைகள் போன்றன அடிப்படைக் கோபத்தை மாற்றிவிடுகிறது.

ஆனால் யுத்தகாலப் பாதிப்புகளும் அவை உருவாக்குகின்ற உள நெருக்கடிகளும் மிகப் பயங்கரமானவை. யுத்தம் அரசியற் காரணங்களினால் ஏற்படுவது என்பதால், அந்த அரசியற் காரணிகளின் காயங்கள் ஆறாத நிலையிலேயே இருக்கும். இந்த அரசியற் காரணங்கள் மக்களிடையே கொந்தளிப்பான மனநிலையை ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கின்றன. யுத்தத்தில் இது இன்னும் அதிகமாக வளர்ந்திருக்கிறது. யுத்தத்தில் மக்களின் குரல் மேலெழுவதற்கு வாய்ப்புகள் குறைந்திருப்பதால், இது உள்ளே அடங்கி, உள்ளே கொதித்துக் கொண்டிருக்கிறது. வெளிப்பட முடியாக் கோபம் உள்ளே அடங்கும்போது அது கொந்தளிப்பாக, கொதிநிலைக்குப் பரிமாற்றமடைகிறது.

யுத்தத்திற்குப் பின்னரான சூழலில், ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டிருக்கும் சூழலில் பொத்துக்கொண்டு அவை மேற்கிளம்புகின்றன. அதுவரையிலும் மௌனமாக இருந்த சனங்கள் யுத்தத்துக்குப் பிறகு பேசத் தொடங்குகிறார்கள். அதுவரை பேசாதிருந்த, பேசுவதற்கு அனுமதிக்காதிருந்த எல்லாவற்றையும் இந்தச் சூழலிற் பேசத் துடிக்கிறார்கள். அதுவரையில் கேட்க முடியாதிருந்த கேள்விகளையெல்லாம் கேட்கத் தவிக்கிறார்கள்.

யுத்தத்தை நடத்திய அரசை, யுத்தத்திற்கு இடமளித்த சூழலை, யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை எல்லாம் அவர்கள் கேள்விக்குட்படுத்துகிறார்கள். போதாக்குறைக்கு யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள், சிதைவுகள், இழப்புகளைக்குறித்தும் அவர்கள் கேள்விகளை எழுப்புகிறார்கள். கேள்விகளைக் கேட்பதற்கான ஒரு தார்மீக நிலையும் யுத்தத்திற்குப் பின்னர் அவர்களுக்குக் கிடைத்து விடுகிறது. இதற்குக் காரணம், யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளும் அழிவுகளும். இந்த அழிவுகளும் இழப்புகளும் பாதிக்கப்பட்ட சனங்களைக் குறித்த ஒரு அனுதாபத்தை வெளியுலகில் உருவாக்குகிறது. ஆகவே அவர்கள் அந்த அனுதாப அலை உருவாக்குகின்ற ஆதரவு அலையின் துணையைக் கொண்டு தங்களின் கேள்விகளை இன்னும் அழுத்தமாக முன்வைக்கிறார்கள்.

அத்துடன், யுத்தகாலத்தில் மட்டுமன்றி, யுத்தத்துக்குப் பின்னரான சூழலை எதிர்கொள்வதிலும் மக்கள் பெரிதும் சிரமமடைகிறார்கள். யுத்தத்தில் எல்லாவற்றையும் இழந்திருக்கும் மக்கள் வாழ்வதற்கு, வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு மிகமிகச் சிரமப்படுவது இந்தக் கழிவிரக்கத்தைப் பிறரிடம் இரண்டு மடங்காக ஏற்படுத்துகிறது. ஏனெனில், அவர்கள் எதிர்ப்பாயுதங்கள் எதுவுமில்லாத பலியாடுகள். எனவே இந்தக் கழிவிரக்கம் பிறரைக் குற்றவுணர்ச்சிக்குள்ளாக்குகிறது. வெற்றி தோல்விகளுக்கு அப்பால் இந்தக் கழிவிரக்கம் குற்றவுணர்ச்சியைக் கிளப்புகிறது.

இந்தக் குற்றவுணர்ச்சி மக்களைக்குறித்து விசுவாசமாகச் சிந்திப்போருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் அரசும் அடக்கம். மனிதாபிமானப் பணியாளர்களும் அடக்கம். மக்களுக்காகக் குரல் கொடுக்கும் அனைவரும் சேர்த்தி.

00

இலங்கையின் பயணம்?

Saturday 7 April 2012




யுத்தத்திற்குப் பிறகு அதிக நெருக்கடிகளைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது இலங்கை. உள்நாட்டு யுத்தத்தை முறியடித்த அரசாங்கம், வெளி நெருக்கடிகளை முறியடிக்க முடியாமற் தவிக்கிறது. யுத்தத்தினால் பெற்ற வெற்றியைப்பாதுகாக்க முடியாத ஒரு நிலையை நோக்கிக் கொழும்பு சென்று கொண்டிருக்கிறது. 

அதனால் சமாதானத்தை எட்டவும் முடியவில்லை. புதிய பொருளாதாரத் திட்டங்களை உருவாக்கவும் முடியவில்லை. அரசியற் தீர்வை முன்வைக்கவும் இயலவில்லை. எந்தப் பாதையிலும் பயணத்தைத் தொடர முடியாத நிலையில் இறுகித் தேங்கிப்போயுள்ளது அரசாங்கம்.

கடந்த இரண்டாண்டுகளில் கொழும்பு கொண்டாடிய விழாக்களையும் அது அடைந்த பெருமிதங்களையும் நினைத்துப் பாருங்கள். இன்றைய நிலையையும் அவதானியுங்கள். 

இன்று முன்னாள் நண்பர்களுக்கு எதிராக மக்களை வைத்து ஆர்ப்பாட்டங்களைச் செய்யும் நிலைக்கு அரசாங்கத்தின் கொள்கை அமைந்திருக்கிறது. யுத்தத்தில் முக்கிய பங்கை ஆற்றிய – அன்று தோழமை கொண்டாடிய அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கு எதிரான முழக்கங்கள் கொழும்பில் அதிர வைக்கப்பட்டுள்ளன. 

மேலும் முக்கியமான அமைச்சர்களே பதற்றத்துக்கும் நிதானமிழப்புக்கும் உள்ளாகியிருக்கின்றனர். கடந்த வாரத்தில் ஜீ.எல்.பீரிஸின் கூற்றையே அரசாங்கம் மறுத்துரைத்த நிகழ்ச்சிகூட நடந்தது. இவ்வளவுக்கும் ஜீ.எல். ஒரு மூத்த அமைச்சர். வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பானவர். பேராசிரியர். சர்வதேச அபிப்பிராயங்களை உருவாக்கவேண்டிய பொறுப்பான பணியில் உள்ளவர். 

இந்த நிதானமிழப்பிற்கெல்லாம் காரணம், அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளே. இந்த நெருக்கடிகளுக்கு முக்கிய காரணம் அரசாங்கத்தின் அணுகுமுறைகளும் தவறான நடைமுறைகளும் என்பதே பெரும்பாலானோரின் அபிப்பிராயம். எதிர்க்கட்சிகளின் அபிப்பிராயமும் இதுதான். ஏன், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றவர்களில் சிலர் கூட இத்தகைய அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கின்றனர். 

யுத்த வெற்றியானது தனியே கொழும்பின் செயற் திறனால் பெற்ற வெற்றியோ அல்லது இந்த அரசாங்கத்தின் விசேட திட்டங்களினால் பெற்ற வெற்றியோ அல்ல. அது இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல சக்திகளின் ஆதரவோடு கொழும்பு பெற்ற, இந்த அரசாங்கம் பெற்ற வெற்றி. 

கொழும்பு யுத்தத்தில் தனியே வெற்றிபெறக்கூடிய திட்டமிடலையும் விவேகத்தையும் கொண்டிருந்தால், அது யுத்தத்திற்குப் பின்னர் சமாதானத்தையும் பொருளாதார சுபீட்சத்தையும் பெறக்கூடிய வகையில் முன்னோக்கிய அடிவைப்புகளைச் செய்யக்கூடியதாக இருந்திருக்கும். அந்த தனித்த ஆளுமையும் அதற்கான அர்ப்பணிப்பும் இல்லை என்பதே உண்மையானது. 

ஆனால், ஜனாதிபதியும் அரசாங்கத்தின் தலைமைக் குழுவும் தங்களின் குறுகிய நிலைப்பாட்டில் விடாப்பிடியாகவே நிற்கின்றனர். அவர்கள் உள்ளுர் அபிப்பிராயங்களையும் பொருட்படுத்தத் தயாராக இல்லை. வெளி அபிப்பிராயங்களையும் பொருட்படுத்தக் கூடிய நிலையில் இல்லை. குறிப்பாக இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வரும் சீனா போன்ற நாடுகளின் அபிப்பிராயங்களையும் செவிகொள்ளத் தயாரில்லை.

அவர்களைப் பொறுத்தவரையில் பலவீனமான எதிர்க்கட்சிகளின் மத்தியில், பலமான பீடமொன்றைத் தாம் நிர்மாணித்துள்ளதாக நம்புகிறார்கள். உள்நாட்டில் உறுதி மிக்க அரசாங்கமாக, பெரும்பான்மை பலத்தைக் கொண்ட அரசாங்கமாக தாம் உள்ளோம் என்ற எண்ணத்தோடு இருக்கிறார்கள். இதில் உண்மையுண்டு. ஆனால், அரசியலில் எதுவும் நடக்கும் எந்தச் சந்தர்ப்பத்திலும் நடக்கும், எஎந்த வடிவிலும் அது நடக்கும் என்ற இன்னொரு உண்மையுமுண்டு.

இதன்படி எதிர்பாராத கோணமொன்றிலிருந்து ஒரு புதிய சக்தியை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஒன்று கூட உருவாகலாம். முக்கியமாக உள்நாட்டில் மக்களிடமுள்ள அதிருப்தியைப் பயன்படுத்தி, வெளிச் சக்திகளோ அல்லது உள்ளுர்ச் சக்திகளோ ஒரு புதிய தரப்பை அல்லது தலைமையை களமிறக்கலாம். 

பதிnனேழு ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுகட்டுவதற்கு யாருமே எதிர்பார்த்திராத ஒரு திசையிலிருந்து 1994 இல், சந்திரிகா குமாரதுங்க வந்து சேர்ந்ததை – அவரை இப்போதைய ஜனாதிபதி உட்பட்ட அணியினர் அரங்கிற்குக் கொண்டு வந்ததை இந்த இடத்தில் நினைவு கூரலாம். 

சந்திரிகா குமாரதுங்கவைக் கொண்டு வருவதற்காக அன்று விக்டர் ஐவன், பி.பி.ஸியில் ஊடகவியலாளராகப் பணியாற்றிப் பின்னர் ரூபவாகினியின் தலைவராக இருந்த வசந்தராஜா உள்ளிட்ட பலர் அணிசேர்ந்து உழைத்ததையும் இங்கே சேர்த்து நினiவு கூரவேண்டும். 

எனவே எதிர்ப்புகள் எப்படி வரும், எந்த நேரத்தில் வரும், எப்படி வரும் என்று சொல்லமுடியாது. அவை மக்களிடமுள்ள அதிருப்தியைத் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்பது மட்டும் கவனிக்க வேண்டிய உண்மை. 

ஒரு சுயாதிபத்தியமுள்ள நாடு, ஆளுமையுள்ள தலைமை, அரசியற் பலத்தை கொண்டிருக்கும் அரசாங்கம் எப்பொழுதும் இப்படித்தான் சிந்திக்கும். அது எதற்கும் அஞ்சாது என்று சொல்வோரும் இந்த இடத்தில் உள்ளனர். 

ஆனால், எதற்கும் யதார்த்தம் என்ற ஒன்றுண்டு. நாடு என்பதும் தலைமை என்பதும் அரசாங்கம் என்பது மக்களுக்கானதே அன்றி, அது தனியே ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கானதல்ல. 

பலம் என்பது கையில் இருக்கும் அதிகாரம் அல்ல. அது மக்களின் மனங்களில் உள்ள நம்பிக்கையே. 

ஆகவே, மக்களைக் குறித்து, மக்களின் எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திப்பதே ஒரு தலைமையினுடைய பொறுப்பாகும். ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் இந்த அடிப்படையில் நின்றே சிந்திக்கும்@ செயற்படும். 

இதற்கப்பால், அது தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு அதிக இடமளிக்குமானால் அதனுடைய விளைவுகள் குறிப்பிட்ட தரப்புக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்தி, நாட்டுக்கும் அதனுடைய மக்களுக்கும் நெருக்கடிகளையே தரும். 

இலங்கையின் இன்றைய நிலைவரம் குறித்து மக்களிடம் திருப்தி இல்லை. வெளிச் சமூகத்திற்கும் திருப்தி இல்லை. இந்த வெளிச் சக்திகள் நல்நோக்கமுடையவையா என்ற கேள்வி ஒரு புறமிருந்தாலும், கடப்பாடுகள், பொறுப்புக்கூறுதல்கள், மனித உரிமைகளை நிலைநாட்டுதல், ஜனநாயகத்தைப் பேணல், அதிகாரத்தைப் பகிர்தல் என்ற விசயங்களில் எழுப்பப்படும் கேள்விகள் தொடர்பில் அரசாங்கம் உறுதிப்பாட்டைக் காட்டவேண்டுமே. அது இல்லை என்றால், அது அரசாங்கத்தின் பலவீனத்தையே காட்டும்.

உள்நாட்டில், யுத்த முடிவிற்குப் பிறகு அமைதியும் சமாதானமும் கிட்டும் என்று எதிர்பார்த்த மக்கள் இன்று புதியவகையான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

பொருளாதார நெருக்கடிகள் தீவிரமாகியுள்ளன. விலைவாசிகள், வரிகள் கட்டுப்பாட்டை மீறி உச்சநிலையை எட்டியுள்ளன. அரசியற் பிரச்சினைகள் தீரவில்லை. அமைதியின் மீது சந்தேகப்படுமளவுக்கு நிலைமைகள் மாறிச் செல்கின்றன. அரசாங்கம் பதற்றத்துக்குள்ளாகியுள்ளது. ஆகவே மக்கள் நம்பிக்கையிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

யுத்தத்தில் தாம் வெற்றிபெற்றதாகக் கூறிய ஜனாதிபதி, அதற்குப் பின்னர் எந்த வெற்றியையும் பெரிதாகக் கொண்டாடவில்லை. அப்படி எதையும் பெரிதாகக் கொண்டாடக்கூடிய நிலையிலும் இப்பொழுது நிலைமைகளில்லை. 

ஆனால், அவர் விசுவாசமாகவே நாட்டிற்கான நன்மைகளைக் குறித்துச் சிந்தித்திருந்தால், பல நெருக்கடிகளைத் தவிர்த்திருக்கலாம். முக்கியமாக அவரே நெருக்கடிகளிலிருந்து தன்னைப் பாதுகாத்திருக்கலாம். 

இப்போது மக்களையும் விட அதிக நெருக்கடிக்குள்ளாகியிருப்பது அரசாங்கமும் ஜனாதிபதியுமே. 

இதில் அயல் நாடான இந்தியாவுடன் உருவாகியுள்ள நெருக்கடி இன்னும் மோசமானது. இந்திய மேலாதிக்கம் என்பது ஒரு புறம் இருந்தாலும் 

இலங்கைக்கான பொருளாதார உதவிகள், பிராந்திய ரீதியிலான அரசியல் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான விவகாரங்கள், மனிதாபிமான உதவிகள் என்ற வகையில் இந்தியாவைப் பகைத்துக்கொள்ள முடியாத ஒரு நிலை இலங்கைக்குண்டு.

இந்த அடிப்படையில் சிங்கள இராசதந்திரம் இலங்கை - இந்திய உறவைப் பல நெருக்கடிகளின் மத்தியிலும் எதிர்பாராத வகையிலான அரசியல் விளைவுகளின் மத்தியிலும் பேணிவந்தது. 

இடையில் 1980 களின் மத்தியிலிருந்து நெருக்கடிக்குள்ளாகியிருந்த உறவைக்கூடச் சீர்ப்படுத்தி வென்றிருந்தது. 

ஆனால் இன்று?

இன்றைய நிலையில் இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பாளர்கள் சற்றுத் திகைப்புக்குள்ளாகியுள்ளனர் என்றே தோன்றுகிறது. 

வெளியுலகுடன் மோதுவது வேறு. அதை வென்றெடுப்பது வேறு. சிங்கள இராசதந்திரம் எப்பொழுதும் மோதுவதையும்விட வென்றெடுப்பதிலேயே தன்னுடைய பாரம்பரியத்தைக் கொண்டது. 

ஆனால், இன்றைய அரசாங்கத்தின் தலைமையானது, போர் வெற்றியைப் பெற்றதைப்போல இந்த நெருக்கடியையும் விட்டுக்கொடுக்காத நிலைப்பாட்டின் மூலமாக இறக்கமாக நின்ற வெற்றியைப் பெறலாம் எனச் சிந்திக்கின்றது.

இதனால், எதையும் அரசாங்கத்திற்கு எடுத்துரைக்க முடியாத ஒரு நிலையில் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் தடுமாறுகின்றனர். இத்தகைய இறுக்கமான - மூடப்பட்ட ஒரு நிலைமை உருவாகும்போதே நாட்டில் தளம்பல் நிலை உருவாகின்றது. 

இத்தகைய தளம்பல் நிலையே அரசாங்கத்திற்கும் தலைமைக்கும் மக்களுக்கும் பாதகத்தைத் தருவதுண்டு. உள்நாட்டில் அதிருப்திக்கான அம்சங்களும் வெளி நெருக்கடிகளும் ஒரு சேர அமைந்தால் அந்த நாடு சடுதியாகவே ஆட்டம்காணத் தொடங்கிவிடும். இது பொதுவான விதி.

அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தியை ஒரு கருவியாக்கியே வெளிச்சக்திகள் தலையீடுகளைச் செய்கின்றன. அல்லது தங்களுக்குச் சாதகமான சக்திகளை உள்ளரங்கில் வளர்க்கின்றன. 

இன்றைய இலங்கையில் இந்த இரண்டுக்கும் தாராளமான வாய்ப்புகள் உள்ளன. 

இலங்கையில் இன்று நிலைப்படுத்த முடியாத அளவுக்குப் பொருளாதாரப் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இதற்கு என்னதான் சாட்டுகளையும் காரணங்களையும் அரசாங்கம் சொன்னாலும் மக்களிடம் அவை எடுபடாது. 

இதனால் மக்கள் அரசாங்கத்தின் மீது நிச்சயமாகக் கோபம் கொண்டுள்ளனர். இந்தக் கோபத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம், எவ்வாறு எரிபற்று நிலைக்குக் கொண்டு செல்லலாம் என்றே வெளியார் சிந்திக்கின்றனர். 

இந்தக் கோபத்தை எப்படித் தணித்துக் கொள்ளலாம் என்று இந்த இடத்தில் அரசாங்கம் சிந்திக்க வேண்டும். இதிற்தான் இலங்கையின் இன்றைய நிலைவரமும் அணுகுமுறைகளும் தங்கியுள்ளன. 

இந்த இடத்தில் ஒரு சிறிய விசயத்தைச் சொல்லவேண்டும். 

இலங்கை மக்களின் இன்றைய நிலை என்ன? அவர்களுடைய எதிர்காலம் எப்படி அமையப்போகிறது? இலங்கை எத்தகைய சவால்களையெல்லாம் எதிர்கொள்ளவுள்ளது? என்ற கேள்விகளுக்கும்....

இன்றைய அரசாங்கத்தின் அணுகுமுறைகள் எப்படி அமைகின்றன? இதன் விளைவுகள் எப்படி அமையும்? இந்த அரசாங்கம் எதையெல்லாம் சாதிக்கப்போகிறது? இந்த அரசாங்கத் தலைமையின் எதிர்காலம்? என்ற கேள்விகளுக்கும்...

யாரும் விசேடமாக அரசியற் கணிப்புகளைச் செய்ய வேண்டியதும் இல்லை@ சோதிடம் சொல்லவும் தேவையில்லை.

தன்னிடமுள்ள எதிர்மறைக்கூறுகளைப் புறந்தள்ளாத எத்தகைய ஆட்சியும் எந்தத் தலைமையும் தன்னுடைய எதிர்காலத்தைத் தானே குறுக்கிக் கொள்கிறது. 

இலங்கையின் அரசியலில் முக்கியமான ஒரு அம்சமாக இருப்பது சோதிடம். அதிலும் தென்னிலங்கையின் அரசியற் தலைமைகளில் இது அதிக செல்வாக்கைச் செலுத்துகிறது. 

யுத்தம் தீவிரமாக நடைபெற்ற காலத்தில் சோதிடத்தின் மீது முழுமையான நம்பிக்கையைக் கொண்டிருந்தனர் கொழும்புத் தலைவர்கள். போதாக்குறைக்கு, திருப்பதிக்கும் கதிர்காமத்துக்கும் சாயிபாபாவிடமும் எனத் திரிந்து கொண்டிருந்தனர்.

இன்றைய தலைமையும் அப்படியான ஒரு கட்டத்திற்குச் செல்லத்தான் போகிறது. 

ஆனால், கடந்த கால அரசியற் தலைவர்கள் எவரும் புகழுடன் பதவியிறங்கிச் செல்லவில்லை. புகழுடன் தங்களின் இறுதிக் காலத்தைக் கழிக்கவும் இல்லை. 

‘மனிதாபிமானி’யின் கண்களில் பாதிக்கப்பட்ட மக்களின் முகங்களே தெரியும்

Wednesday 4 April 2012

நேர்காணல் -


கனடாவிலிருந்து வன்னிக்கு வந்து மனிதநேயப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார் ‘சரா மாஸ்ரர்’ என்றழைக்கப்படும் எஸ். சரத்சந்திரன். இவர் எஸ்.பொ. என்று இலக்கிய உலகத்தினராற் கூறப்படும் ஈழத்தின் முக்கிய எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையின் சகோதரர். அண்மையில் விபத்துக்குள்ளாகி, இன்னும் சீராக நடமாட முடியாத நிலையில் ஊன்றுகோலின் உதவியுடன் நடமாடும்; சரா, வன்னியின் புழுதித்தெருக்களில் உற்சாகமாகத் திரிந்து, தொண்டுப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முத்தையன்கட்டுப் பகுதியில் இயங்குகின்ற ‘புனித பூமி’ என்ற அன்புச்சோலை சிறுவர் பராமரிப்பு இல்லத்தின் சிறார்களுக்கான பணிகளில் தன்னை முழுமையாகவே இணைத்துள்ளார் சரா.


இது ஒரு மாறுதலான விசயம். போருக்கு அளித்த உற்சாகத்தைப் போர் முடிந்த பின்னர் உருவாகியிருக்கும் உதவிக்கான சூழலில் புலம்பெயர் சமூகத்தினர் அளிக்கவில்லை என்று கூறப்படும் நிலையில், சரத்சந்திரனின் முயற்சி நிச்சயமாக வித்தியாசமான ஒன்றே.


தான் மட்டுமில்லாமல், புலம்பெயர் தேசத்திலிருந்து இன்னும் பலரும் வன்னிக்கு வர வேண்டும், அவர்களுடைய பணிகளையும் பங்களிப்பையும் அதிகரிக்க வேண்டும் என்று அழைத்துக் கொண்டிருக்கிறார் சரா. ‘உதவி செய்வதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருப்பதற்கும் எதற்கு விவாதங்கள்? மனிதாபிமானத்தை விவாதப்பொருளாக்கும் சமூகமாகத் தமிழ்ச் சமூகம் மாறியிருப்பது வருத்தத்திற்குரியது’ என்கிறார் சரத்சந்திரன். முப்பது ஆண்டுகாலப்போரின்போது சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் ஆற்றிவரும் பணிகளைப் பெற்ற தமிழ்ச் சமூகம் அந்த உதவிப் பணிகள் பிற நாடுகளிலுள்ள பிற இனத்தவர்களின் பங்களிப்பாகும். அவர்கள் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த இழுபறிகள் - சிக்கல்களின் மத்தியில் தங்களுடைய பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். அவர்களுடைய கண்களுக்குத் தெரிந்ததெல்லாம் அதிகார அமைப்புகளல்ல. பதிலாக பாதிக்கப்பட்ட – நெருக்கடி நிலையிலிருந்த மக்களே. ஆகவே ஒரு மனிதாபிமானியின் கண்ணில் பாதிக்கப்பட்ட மக்களின் முகங்களே தெரியும் என்று சொல்லும் சரா வை சந்தித்தேன்.

நீங்கள் கனடாவிலிருந்து வன்னிக்கு அல்லது இலங்கைக்கு வந்த நோக்கம்? எப்போது வந்தீர்கள்?

நான் கடந்த ஆண்டில் இலங்கைக்கு வந்திருந்தேன். போர் முடிந்த பிறகு, அங்கே என்ன நிலைமை? மக்கள் என்ன செய்கிறார்கள்? யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சந்தித்திருக்கும் மக்களுக்கு எங்களால் என்னவகையான உதவிகளைச் செய்ய முடியும்? என்று அறிவதற்காக சில நண்பர்கள் வந்திருந்தார்கள். அவர்களுடன் நானும் வந்திருந்தேன். முக்கியமாக முல்லைத்தீவு மாவட்டத்தில், முத்தையன்கட்டு என்ற இடத்தில் ஆதரவு தேவைப்படும் சிறார்களைப் பராமரிக்கும் ‘புனித பூமி – அன்புச்சோலை’ என்ற சிறுவர் இல்லத்தின் மீளாரம்ப நிகழ்வில் கலந்து கொள்வதும் எங்களுடைய நிகழ்ச்சி நிரலில் இருந்தது.

வந்து இங்குள்ள (வன்னியிலுள்ள) நிலைமைகளைப் பார்த்தேன். அதை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு எங்களுடைய மக்கள் சிதைந்து போயிருக்கிறார்கள். பிரதேசங்கள் அழிந்து போயுள்ளன. சமூக அடிக்கட்டுமானமே தகர்ந்து போயிருக்கிறது. அடையாளங்களை பிரதேசங்கள் மட்டும் இழந்து விடவில்லை. மக்களும் இழந்திருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை இழந்து விட்டது. மக்கள் மிகவும் சிரமங்களோடு, சலிப்போடு காணப்பட்டனர். இந்த நிலையில் நம்பிக்கையையும் எதிர்காலம் பற்றிய கனவையும் ஒரு சமூகம் இழக்கவே கூடாது என எண்ணினேன். அப்படியென்றால், அவர்களுக்கு நாங்கள் ஆதரவாக இருக்க வேணும். உதவியாக இருக்க வேணும் என்று யோசித்தோம். என்னுடன் வந்திருந்த ஏனைய நண்பர்களின் நோக்கமும் இதுதான். எனவே நாங்கள் இதைப் பற்றி எங்களுக்குள் கதைத்தோம். அதிலும் சிறார்களின் கல்வியைப் பற்றியே நாங்கள் அதிக கவனமெடுத்துக் கதைத்தோம். நான் ஒரு ஆசிரியனாக என்னுடைய வாழ்வில் தொழில் செய்தவன் என்ற வகையில் இளம்பிராயத்தினர் நிச்சயமாகக் கல்வி அறிவைப் பெற வேண்டும் என்று விரும்பினேன். இளமையிற் கல்வியை இழந்தவர்கள் பின்னர் அதைப் பெறுவது மிகக் கடினமானது. கல்வியை இழந்தவர்களால் சமூகத்தில் போட்டியிடுவதும் நிலைப்படுத்திக் கொள்வதும் பெரும் சிரமத்துக்குரிய விசயம். எனவே இதைக் குறித்துச் சிந்தித்தேன். ஏனையவர்களின் விருப்பமும் நிலைப்பாடும் அதுவாகவே இருந்தது. ஆகவே நாங்கள் ‘புனித பூமி – அன்புச்சோலைச் சிறுவர் இல்லத்தை’ மையப்படுத்தி எங்களுடைய முதற்கட்டப்பணிகளை மேற்கொள்வது, அதற்கு முழுமையான ஆதரவை வழங்குவது என்று தீர்மானித்தோம்.

நாங்கள் புனிதபூமி – அன்புச் சோலைச் சிறார் இல்லத்தின் மீள் திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டபோது 48 பிள்ளைகள் அங்கே இணைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் நிலைமையை நேரிற்பார்த்தேன். போர் தின்ற சமூகத்தின் எச்சங்களாக, தங்களைக்குறித்து எதையுமே சிந்திக்க முடியாதவர்களாக, இதயத்தைப் பிழியும் வகையில் அவர்களிருந்தனர். அந்த நிகழ்வில் ஒரு மாணவர் உரையாற்றினார். அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே படித்துக் கொண்டிருந்தார் என்று சொன்னார்கள். ஆனால், அவர் முன்னர் - யுத்தகாலத்தில் இந்தப் புனித பூமி அன்புச்சோலை சிறார் இல்லத்திலே தங்கிப் படித்தவர். எனவே மீண்டும் அந்தச் சிறார் இல்லத்தை, தன்னைப்போல ஆதரவு தேவைப்படும் சிறார்களுக்காக ஆரம்பிப்பதற்காக பாடுபட்டுக்கொண்டிருந்தார். இந்த நிலையில் அந்தச் சிறார் இல்லம் வடக்குக் கிழக்கு அபிவிருத்திப் புனர்வாழ்வு மையத்தினால் மீளவும் ஆரம்பிக்கப்படுவது, அவருக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது. எனவே, அவர் இந்தச் சிறார் இல்லத்தின் பங்களிப்பைப் பற்றியும் அதனால் தங்கள் அடைந்த நன்மைகளைப் பற்றியும் அங்கே எடுத்துச் சொன்னார். குறிப்பாக போரின் இறுதி நாட்களில் தாங்கள் பட்ட சிரமங்களையெல்லாம் அவர் சொன்னபோது அங்கே, அந்த ஆரம்ப நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் கண்ணீர் சிந்தினார்கள். அந்த அளவுக்கு அந்தப் பிள்ளைகளின் இறுதிக் கணங்கள் இருந்தன. இதையெல்லாம் பார்த்தபோது நான் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்திருந்தேன்.

ஏனென்றால், நாங்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்தவர்கள். இதற்காக என்னுடைய குடும்பமே ஒரு காலத்தில் முழுமையாகப் பங்களித்தது. அப்படிப் பங்களித்தவர்கள், இந்தப் போராட்டத்தையும் போரையும் ஆதரவளித்தவர்கள் நிச்சயமாக இன்றைய நிலையில் அதனால் பாதிக்கப்பட்ட மக்களையும் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவளித்து அவர்களுடைய வாழ்க்கையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று தீர்மானித்தேன். இந்த எண்ணத்துடன் நான் மீண்டும் கனடாவுக்குத் திரும்பிச் சென்றேன். அங்கே என்னுடைய குடும்பத்துக்கு நிலைமைகளைத் தெளிவு படுத்தினேன். பிறகு சில நண்பர்களுடனும் பேசினேன். அங்குள்ள சில ஊடகங்களிலும் இந்த நிலைமைகளைக் குறித்து வெளிப்படுத்தினேன். குறிப்பாக கனடாவிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகையில் இந்த நிலைமைகளைப் பற்றி, வன்னியிலுள்ள மக்களின் தேவைகளைப் பற்றியெல்லாம் தொடராக எழுதினேன். அதற்கு உரிய வரவேற்புக் கிடைத்தது. கனடாவில் இந்த விசயத்தை அறிந்த பலர் உதவ முன்வந்தனர். மக்களிற் பலருக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மனமுள்ளது. ஆனால் அவர்களுக்கு வழிகளைத் தெரியவில்லை. அத்துடன் புலம்பெயர் நாடுகளிலுள்ள இன்னொரு சாபக்கேடு. பொய்களையும் வதந்திகளையும் பரப்புகின்ற சிலரும் சில ஊடகங்களும் மக்களுக்குக் குழப்பமான செய்திகளைப் பரப்புகின்றனர். இதனால், உதவும் விருப்பத்தோடு உள்ள மக்கள் குழப்பத்துக்குள்ளாகின்றனர்.

எனவே, அங்கேயிருந்து எம்மைப்போன்ற சிலர், அங்கிருந்து வரக்கூடியவர்கள் இங்கே நேரில் வந்து நின்று சேவையாற்றும்போது அது அங்குள்ள மக்களுக்கு ஒரு நம்பிக்கையையும் தெளிவையும் தரும் என்றும் சிந்தித்தேன். இதனால் இங்கே வந்து இப்போது பணிகளைச் செய்து கொண்டிருக்கிறேன்.

உங்களுடைய இந்தத் தீர்மானத்தை உங்களுடைய குடும்பத்தினர் எப்படி எடுத்தார்கள்? உங்களுடைய தொழில் மற்றும் வருமானம் போன்ற விசயங்களை இது பாதிக்கவில்லையா?

பாதிப்புத்தான். ஆனால், என்னையும் விடப் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கே (வன்னியில்) இருக்கிறார்கள். ஆகவே இதுதான் என்னைப் பாதித்தது. இதுவே எனக்கு முக்கியமாகப் பட்டது. அங்கே (கனடாவில்) என்னுடைய குடும்பம் நிலைமைகளைச் சமாளித்துக் கொள்ளக்கூடிய அளவுக்குள்ளது. பிள்ளைகள் ஓரளவுக்கு வளர்ந்துள்ளனர். இதனால் என்னுடைய நிலைப்பாட்டைப் புரிந்து கொண்டு என்னுடைய தீர்மானத்துக்கு ஆதரவைத்தந்தார்கள். அவர்கள் அங்கே தங்களுடைய தேவைகளைச் சமாளித்துக் கொள்வதாகச் சொன்னார்கள். ஆகவே நான் இங்கே (வன்னிக்கு) வந்தேன்.

இதேவேளை அங்கே இருந்து பணத்தை அனுப்பலாம். ஆனால், அது மட்டும் போதாதென்று உணர்ந்தேன். என்னைப்போல எல்லோருக்கும் இங்கே வந்து சேவையாற்றுவது சாத்தியப்படாது. அப்படியானவர்கள் பொருளாதார உதவிகள், பிள்ளைகளின் கற்றலுக்கும் பராமரிப்புக்கும் தேவையான உதவிகள் போன்றவற்றைச் செய்யலாம்.


உங்களுடைய குடும்பத்தினருக்கு இந்த இடத்தில் நன்றிகளைச் சொல்ல வேணும். ஏனென்றால், அவர்களுடைய ஒத்துழைப்பில்லாமல் நீங்கள் இந்தப் பங்களிப்பை முழுமையாகச் செய்ய முடியாது. அதேவேளை நீங்கள் முதற்தடவை இங்கே வந்ததற்கும் பின்னர் இப்போது வந்துள்ளதற்கும் இடையில் என்னவகையான மாற்றங்களை – வளர்ச்சிகளை உணர்கிறீங்கள்?

அன்புச்சோலையைப் பொறுத்தவரையில் முன்னர் இருந்த நிலைமைக்கும் இப்போதுள்ள நிலைமைக்கும் இடையில் பெரும் வேறுபாடுகள் உண்டு. இப்பொழுது 100 பிள்ளைகள் வரையில் உள்ளனர். பிள்ளைகளுக்குத் தேவைப்படும் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான பண்ணை இயங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த போகத்திற் பண்ணையில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை மிகப் பயனைத்தந்துள்ளது. மரக்கறிப் பயிர்ச்செய்கை நடக்கிறது. மாடுகள் வளர்க்கிறோம். இது பிள்ளைகளுக்கான பாலையும் ஓரளவு வருமானத்தையும் தரக்கூடியதாக உள்ளது. மேலும் இரண்டு மாடுகளை வாங்கித்தருவதாக இதைப் பார்த்த லண்டன் வாழ் நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.

கோழிப்பண்ணையையும் அமைத்துள்ளோம். பிள்ளைகளுக்குத் தேவையான முட்டையை இதிலிருந்து பெறுவதுடன் இறைச்சித்தேவையையும் பூர்த்தி செய்து கொள்கிறோம். இல்லையென்றால் ஒரு நாள் உணவுக்கான கோழியை வெளியே இருந்து பெறுவதாக இருந்தால் அறுபது ஆயிரம் ரூபாய் தேவைப்படும். எதிர்காலத்தில் கோழியையும் முட்டையையும் நாம் வருவாயை நோக்கிச்  சந்தைப்படுத்தவும் முடியும். இந்தப் பண்ணைத்திட்டத்தில் பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. இதில் நீங்கள் ஒன்றைக் கவனிக்கலாம். இந்தப் பண்ணைகளில் வேலைசெய்யும் மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்குரிய வேலைவாய்ப்பையும் நாங்கள் வழங்கியுள்ளோம். அப்படியே சிறார் இல்லத்தைப் பராமரிப்பதிலும் பலர் வேலைவாய்ப்பைப் பெற்றுச் சேவை செய்கின்றனர்.

நிரந்தர உதவியாளர்கள், சிறப்பு உதவியாளர்கள், பருவகால உதவியாளர்கள் என ஒவ்வொரு வகையிலும் பலரும் அன்புச்சோலைக்கு உதவி வந்தாலும் பிள்ளைகளுக்கான நிரந்தர வருமானத்திட்டத்தைப் பற்றியும் இதனுடைய நிர்வாகிகள் சிந்தித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது பிள்ளைகளுடைய அனுபவத்துக்கும் நல்லது.

இதேவேளை அன்புச்சோலையில் இப்பொழுது 30 வரையான பெண்பிள்ளைகளும் கற்கின்றனர். பெண்களுக்கான விடுதி – விரைவில், அநேகமாக எதிர்வரும்  ஏப்ரல் மாதத்தில், பாரதி இல்லம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அவர்கள் அங்கே சென்றபின்னர் இன்னும் பல ஆண் சிறார்கள் அன்புச்சோலையில் இணையமுடியும். சமூகத்தில் ஏராளம் பிள்ளைகள் பராமரிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளனர். இதேவேளை புதிய கட்டிடங்கள் தேவை. பிற வளங்களும் அவசியமாக உள்ளன. சில நண்பர்களின் உதவியினால் ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும் நிறையத் தேவைகள் உள்ளன. குழந்தைகள் வளரும் இடமல்லவா! அவர்களுடைய மகிழ்ச்சிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் பல காரியங்களைச் செய்ய வேணும்.

இதேவேளை முன்னர் நான் வந்த பார்த்ததையும் விட இப்பொழுது நிலைமைகள் சற்று மாற்றமடைந்துள்ளன. ஆனால், இந்த மாற்றங்கள் மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்குப் போதாது. நிறையப் பங்களிப்புகள் தேவைப்படுகின்றன. நான் முன்னரே சொல்லியிருப்பதைப்போல முற்றாகவே சிதைந்த சமூகத்தையும் பிரதேசங்களையும் நினைத்த மாத்திரத்தில் சீர்ப்படுத்தி விட முடியாது.

வன்னி மக்கள் மிகுந்த உழைப்பாளிகள். எந்தச் சிரமத்தையும் தாங்கிக் கொண்டு முன்னே செல்லக்கூடியவர்கள். அன்புச்சோலை என்ற இந்த இல்லத்தைக்கூட அவர்கள் கட்டியெழுப்புவதற்காகப் பாடுபடுகிறார்கள்.

இந்த மக்களுக்கு நாங்கள் உதவிகளைச் செய்தால், எங்களுடைய ஆதரவை ஒரு குறிப்பிட்ட காலம்வரையில் வழங்கினால் அவர்கள் மிக விரைவாகத் தங்களை நிலைப்படுத்திக் கொள்வார்கள். அரசாங்கத்தின் உதவிகளும் நிறையத்தேவைப்படுகின்றன. இலங்கை அரசுக்கு இந்த விசயத்தில் கூடுதற் பொறுப்புண்டு. ஆகவே, அதற்கான ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்டவர்கள் செய்ய வேண்டும்.

கனடாவில் அதிகளவு புலம்பெயர் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய பங்களிப்பு இந்த விசயத்தில் எப்படியுள்ளது? அவர்களுடைய நிலைப்பாடுகள் எப்படியிருக்கின்றன?

கூடுதலான புலம்பெயர் தமிழர்கள் கனடாவிற்தான் இருக்கிறார்கள். தமிழர்களிடம் இருக்கிற குறைபாடு அவர்களிற் பெரும்பாலானவர்கள் சுயமாகச் சிந்திப்பது குறைவு. யாராவது எதையாவது சொன்னால், அதைக் கண்மூடித்தனமாக நம்பிவிடுவார்கள். இதற்குக் கனடா வாழ் தமிழர்களும் விதிவிலக்கல்ல. இதனால், அங்கே தவறான அபிப்பிராயங்களை உருவாக்குவோருக்கும்  ஊடகங்களுக்கும் பின்னால் இழுபடுகின்ற ஒரு நிலை இன்னும் உள்ளது. இந்தநிலை மாறவேண்டும்.

மக்கள் சுயமாகச் சிந்திக்கப் பழக வேண்டும். எதையும் ஆராய்ந்து அறியும் பண்பு வளரவேணும். பாதிக்கப்பட்ட மக்கள் யார்? அவர்கள் எதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? இப்போது இந்தப் பாதிப்பிலிருந்து அவர்கள் எப்படி மீள்வது? அதற்கு யார் உதவுவது? எங்களுக்கு அந்தப் பொறுப்புகளில்லையா? நாங்கள் உதவாமல் இருந்து கொண்டு, பிறரை உதவும்படி கேட்பது எவ்வளவுக்கு நியயமானது? பிற உதவிகளின் அளவு போதுமானதா? இப்படியான கேள்விகளை ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளே கேட்கவேண்டும்.

இங்கே பாதிக்கப்பட்டுள்ள மக்கள் போராட்டத்துக்காக முழுமையாகப் பங்களித்தவர்கள். அதேவேளை அவர்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுமிருக்கிறார்கள். ஆகவே இவர்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு நிச்சயமாக உள்ளது. மற்றது இவர்கள் வேறு யாருமல்ல. எங்களுடைய உறவினர். எங்களுடைய அயலவர்கள்.

அடுத்தது, நீங்கள் கேட்டதைப்போல அங்குள்ள மக்களின் பங்களிப்பைப் பொறுத்தவரையில் நாம் எதிர்பார்க்கிற புள்ளிவிபரத்தில் உதவிகள் கிடைக்கவில்லை என்பது உண்மை. ஆனால், தெளிவுள்ளவர்கள், நிலைமைகளைக் கூர்ந்து அவதானிப்போர் உதவுகிறார்கள். மகிழ்ச்சியளிக்கும் விதமாக இந்தப் புள்ளிவிபரம் அதிகரித்து வருகிறது. ஆனால், இன்னும் படித்த மட்டத்திலேயே – அங்கே மருத்துவர்களாக, மேல் நிலைப்பதவிகளில் இருப்போர் - குழப்பமானவர்கள் அதிகமாக உள்ளனர். இவர்கள் உதவ முன்வருவோரைக் குழப்பித் திசைதிருப்பி விடுகின்றனர்.

முப்பது ஆண்டுகாலப்போரின்போது சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் ஆற்றிவரும் பணிகளைப் பெற்றது தமிழ்ச் சமூகம். அந்த உதவிப் பணிகள் பிற நாடுகளிலுள்ள பிற இனத்தவர்களின் பங்களிப்பாகும். அவர்கள் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த இழுபறிகள் - சிக்கல்களின் மத்தியிலும் தங்களுடைய பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். அவர்களுடைய கண்களுக்குத் தெரிந்ததெல்லாம் அதிகார அமைப்புகளல்ல. பதிலாக பாதிக்கப்பட்ட – நெருக்கடி நிலையிலிருந்த மக்களே. ஆகவே ஒரு மனிதாபிமானியின் கண்ணில் பாதிக்கப்பட்ட மக்களின் முகங்களே தெரியும். இதை நாங்கள் புரிந்து கொள்வது அவசியம்.

உதவும் மக்களுக்குத் தொலைபேசி எடுத்து அவர்களுக்கு இல்லாத செய்திகளை எல்லாம் சொல்வோரும் அங்கே உள்ளனர். ஆனால் இவ்வாறான எதிர்ப்புகளின் மத்தியிலும் பலரும் உதவ முன்வருகிறார்கள். சிலருக்கு தாங்கள் எப்படி, யார் மூலமாக உதவுவதென்று தெரிவதில்லை. அதற்குத்தான் எம்மைப்போன்றவர்களின் இத்தகைய முன்மாதிரியான பங்களிப்புகள் தேவைப்படுகின்றன.

இதைச் சற்றுத் தெளிவாகச் சொல்லுங்கள்?

நான் இந்த அன்புச்சோலை சிறார் இல்லத்துக்கு வந்து வேலைசெய்கிறேன். இதேவேளை என்னுடைய மகன் அமெரிக்கச் சட்டத்துக்குக்கு மாறாக, சட்டவிரோதமாகச் செயற்பட்டார் என்று குற்றச்சாட்டின் பேரில் - இந்தப் போராட்டத்துக்கு உதவிசெய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் - அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுச் சிறையிலிருக்கிறார். அப்படியிருக்கும்போதும், குடும்பத்தின் நிலை, அதனுடைய பொருளாதாரப் பிரச்சினை போன்றவற்றுக்கு அப்பாலும் நான் இங்கே வந்திருப்பதை அறிந்தவர்கள் இந்தப் பணியையும் என்னுடைய நோக்கத்தையும் மதித்துத் தாங்களும் உதவ வேண்டும் என்று முன்வந்திருக்கிறார்கள். இது அங்குள்ள மக்களிடம் ஒருவிதமான விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இதேவேளை நீங்கள் செய்கின்ற உதவிகள் அப்படியே அன்புச்சோலையில் உள்ள பிள்ளைகளுக்கு நேரடியாகவே செல்கிறது. அதற்கான வழிமுறைகளும் ஏற்பாடுகளும் உள்ளன. இதற்கிசைவான ஒரு நிர்வாக ஏற்பாட்டை அன்பு இல்லத்திற் செய்திருக்கிறார்கள்.

அதைப்போல பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்கான வழிகளும் உள்ளன என்பதைத் தெளிவு படுத்தி வருகிறோம். அதற்கான ஆதாரங்களையும் வெளிப்படுத்தியுள்ளோம். இங்கே வந்து செல்கின்றவர்கள் நிலைமைகளையும் உண்மைகளையும் நேரிற் கண்டுகொண்டு செல்கிறார்கள். இங்குள்ள பணியாளர்களுடன் வருவோர் உரையாடுகிறார்கள். பிள்ளைகளுடன் கதைக்கிறார்கள். படங்களை எடுத்துச் செல்கிறார்கள். நிலைமைகளையும் தேவைகளையும் அறிந்து செல்கிறார்கள். விரைவில் பெண் பிள்ளைகளுக்கான பாரதி இல்லத்தை(செஞ்சோலை இல்லத்தை) ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த இல்லம் முள்ளியவளையில் முன்னர் இயங்கி வந்த இடத்திலேயே இயங்கவுள்ளது. பிள்ளைகளைப் பராமரிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் சிறுவர் நன்னடைத்தைச் சட்டவிதிமுறைகள் உள்ளன. அதன்படியே – நீதிமன்றப் பதிவுகள் செய்யப்பட்டே பிள்ளைகள் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும்.

ஆனால், உங்களுடைய இந்த உதவிகளையும் இந்தச் செயற்பாடுகளையும் அங்கே வேறு தரப்பினர்கள் விமர்சனத்துக்குட்படுத்தவில்லையா? ஏனென்றால் இன்றைய புலம்பெயர் சூழல் என்பது அணிகளாகவும் பிரிவுகளாகவும் பிரிந்திருந்து போட்டி நிலைக்குள்ளாகியிருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. என்பதால் இவ்வாறு கேட்கிறேன்.

எல்லாவற்றுக்கும் விமர்சனங்கள் இருக்கும். அல்லது அப்படி விமர்சனங்கள் வரும். ஆனால், நான் ஒரு அரசியல்வாதியல்ல எல்லாவற்றுக்கும் போட்டி போடவும் மறுப்பு அறிக்கைகளை விடவும்.

நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வந்து உதவுகிறோம். அதுவும் பாதிக்கப்பட்ட குடும்பச் சூழலிலிருந்து. இதற்கு மேல் நான் எதைச் சொல்வது?



நீங்கள் வந்து செல்வதைப்போல வேறு எப்படியானவர்கள் வருகிறார்கள்?

வேறு பல நண்பர்களும் பிற நாடுகளில் இருந்து நேரில் வந்து உதவிகளைச் செய்து செல்கிறார்கள். நிறையப்பேர். ‘ஒரு நாள் உணவை வழங்குவதற்கான செலவை நான் பொறுப்பேற்கிறேன்’, ’30 பிள்ளைகளுக்கான விசேட உடைகளை நாங்கள் இருவர் பொறுப்பேற்கிறோம்’ என்றெல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேவைகளைப் பொறுப்பேற்க முன்வருகிறார்கள். இதெல்லாம் மேலும் பலருக்கும் நம்பிக்கையையும் விழிப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்தச் செய்திகளை நாங்கள் பரவலாக்க வேண்டியுள்ளது.


அன்புச்சோலையில் நீங்கள் இருக்கும்போது எத்தகைய உணர்வைப் பெறுகிறீர்கள்?

நான் இந்த நாட்டிலே நீண்டகாலமாக ஆசிரியனாகத் தொழில் செய்தவன். பிள்ளைகளுடன், பாடசாலைகளுடன் நெருங்கிய உறவையும் பழகிய அனுபவத்தையும் கொண்ட ஒருவன். ஆனால், இன்று அதையெல்லாம் கடந்து இங்கே இந்தப் பாதிக்கப்பட்ட நிலையில், ஆதரவும் உதவியும் தேவைப்படுகின்ற இந்தப் பிள்ளைகளுடன் வாழ்வது என்பது என்வாழ்வில் எனக்குக் கிடைத்த கொடை என்றே சொல்வேன். இந்தப் பிள்ளைகளுடன் வாழ்வதிலும் இவர்களுக்கு உதவிகளைச் செய்வதிலும் நான் முழுமையான ஆன்ம திருப்தியை அடைகிறேன். என்னுடைய தேவை என்பது இந்தத் திருப்தியே.

இந்த உண்மையை - இந்த உணர்வை அனுபவிக்கும்போதுதான் தெரியும் அதனுடைய மகத்துவமும் மாண்பும். மக்கள் சேவை என்பது மகேசன் தொண்டு என்பதை உணர்ந்தே சொல்லியிருக்கிறார்கள். வேண்டுமானால் நேரிலேயே இங்கே வந்து பாருங்கள். உங்கள் மனக்கதவுகள் தானாகவே திறந்து கொள்ளும். உங்களின் கைகள் உதவுவதற்காக நீளும். உங்களின் கால்கள் ஆதரவு தேவைப்படுவோரை அரவணைக்க நகரும். அகவிழி திறக்கும்போதே மனிதன் மாண்படைகிறான் என்பார்கள். ஆனால், எங்களுடைய பெரும்பாலான உறவுகள் இணைய ஊடகங்களிற் சிக்குண்டுபோய்ச் சிறைப்பட்டிருக்கிறார்கள். விடுதலைக்காகப் போராடிய ஒரு சமூகம் இப்படி அறியாமைச் சிறையில் சிக்கியிருப்பது வேதனைக்குரியதே.


கனடாவில் நீண்டகாலம் வாழ்ந்து பழக்கப்பட்ட நீங்கள் இங்கே வந்து, இப்படி சீராக நடக்கவே முடியாத நிலையில் - ஊன்று கோலுடன் எப்படிச் செயற்படக்கூடியதாக உள்ளது?

கனடாவுடன் ஒப்பிடும்போது இங்கே ஐந்த வீத வசதிகள் கூட இல்லை. வசதி என்று பார்த்தால் மிகக்கடினம்தான். ஆனால், மற்றவர்களின் மகிழ்ச்சியில் தன்னை நிறைவாக்கிக்கொள்ளும் ஒரு இயல்பை வளர்த்துக்கொண்டால் இந்தச் சுமைகளும் வசதிக்குறைபாடுகளும் பெரிதாகத் தெரியாது.

மனிதனுக்கு இரண்டு விதமான ருஸிகள் உண்டென்பது என்னுடைய அவதானிப்பு. ஒன்று சேவையினால் ஏற்படுகின்ற ருஸி. மற்றது அதிகாரத்தினால் ஏற்படுகிறது ருஸி. சேவையாற்றுவதற்கு ஒருவர் முன்வந்தால் வசதிகளைத் துறக்க வேண்டும். அல்லது அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. அதிகாரத்தின் ருஸியை விரும்புவோர் வசதிகளைக் கைவிட முடியாது. வசதியின் ருஸியே அதிகாரத்தின் ருஸியை விரும்புகிறது.

சரி இந்த நிலையில் நீங்கள் பொதுவாக என்ன சொல்ல விரும்புகிறீங்கள்?

இன்னும் உதவுவதைப் பற்றிச் சிந்திக்காதவர்கள் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். இங்கே மக்களுக்கு ஏராளம் தேவைகளிருக்கின்றன. முக்கியமாக ஆறுதல் தேவைப்படுகிறது. இந்த மக்களின் நிலைமைகளை உணராமல் அங்கே இன்னொரு வகையான கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது இந்த மக்களுக்கும் உண்மை நிலைக்கும் இடையில் வேறுபடுத்தியே அவர்களை வைத்திருக்கும். அது எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

சுயநலப்போக்கையும் தப்பிக்கும் மனப்பாங்கையும் கைவிட்டு, உதவுவதற்கு முன்வரவேண்டும். உருவாக்கப்பட்டிருக்கும் பொய்யான திரைகளைக் கிழித்து உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல ஒரு கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும். அங்குள்ள மக்களிற் பலர் மிக நல்ல மனப்பாங்கைக் கொண்டவர்கள். ஆனால், அவர்கள் திசைதிருப்பப்பட்டுள்ளார்கள். பொய்யான பரப்புரைகளால். உண்மையை வெளிப்படுத்துவது ஆரம்பத்திற் கடினமாக இருந்தாலும் அது இலகுவானது. ஆனால், பொய்யுங்கு ஆயிரமாயிரம் அலங்காரங்கள் செய்ய வேண்டும். நாங்கள் உண்மையோடு நிற்பதால் எங்களின் பணிகள் வெளிப்படையானவையாக இருக்கின்றன. தெளிவாக உள்ளன.

புலம்பெயர் மக்களாக இருப்போரிற்பலர் இந்தியாவுக்குச் சென்று தல யாத்திரை எல்லாம் செய்கிறார்கள். அந்தப் பணத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கொடுத்தாற் போதும் அன்புச்சோலையைப்போல இந்த மண்ணில் இருக்கும் எத்தனையோ இளஞ்சிறார்களின் எதிர்காலத்திற்கான பாதைக்கு ஒளியூட்டலாம்.

ஆகவே முடிந்தவரையில் எல்லோரும் வாருங்கள். வீழ்ந்து கிடக்கும் இந்த மக்களைத் தூக்கி விடுங்கள். கண்ணீருடன் நடுத்தெருவில் நிற்கும் இந்தப் பிள்ளைகளின் கண்ணீரைத் துடைத்து ஆதரவு கொடுங்கள் என்று கேட்கிறேன்.

முக்கியமாக சிறு பெண்பிள்ளைகள் இன்று மிகப் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பிள்ளைகளின் மீதான கொடுமைகளைப் பற்றியும் இவர்கள் படுகின்ற அவலங்களைப் பற்றியும் தினமும் செய்திவழியே அறிந்து கொண்டிருக்கிறோம். பெற்றோரை இழந்த நிலையிலிருக்கும் இந்தப் பிள்ளைகளைப் பராமரித்து ஆளாக்குவது மிகப் பொறுப்புவாய்ந்த பணி. இது மிக முக்கியமான பணியும்கூட. பெண்களையும் சிறார்களையும் சிதையவிட்ட எந்தச் சமூகமும் முன்னோக்கி வளரமுடியாது. தன்னுடைய பண்பாட்டின் அடையாளத்தை அது இழந்தும் விடும். ஆகவே இந்த அபாயநிலையிலிருந்தெல்லாம் நாம் மீண்டெழவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் அவலப்பரப்பிலிலிருந்து மீளாதவரையில் நாம் யுத்தச் சூழலை ஒத்த நிலைமையிற்தான் இருப்போம்.

00

பொறுப்புக்கூறல் : திரைகளை விட்டு வெளியே வருவது எப்போது?

Sunday 1 April 2012















இலங்கை அரசியலில் ‘பொறுப்புக்கூறுல்’ என்ற பதம் இன்று அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது மிக ஆழமான அர்த்தமுடைய ஒரு பதம். இந்தப் பதத்தின் உட்பொருளை அதன் பரிமாணங்களோடும் ஆழத்தோடும் புரிந்து கொண்டால், அந்தப் புரிதலின் வழியாக நடைமுறைகளை உருவாக்கினால், இலங்கையின் நீடித்த துக்கங்களையும் தீராப் பிரச்சினைகளையும் கடந்து விட முடியும்.

வரலாறு இத்தகைய சில தருணங்களை – புதிய வழிகளை எதிர்பாராத விதமாகத் தருவதுண்டு. அத்தகைய ஒரு தருணம் இப்போது, இந்தப் பதத்தின் வழியாக இலங்கைக்குக் கிடைத்துள்ளது. இது தனியே ஒரு சொல் அல்ல. இது ஒரு வழி@ ஒரு நிவாரணி. முரண்பாடுகளைத் தணித்துச் சமனிலைப்படுத்தும் ஆற்றலை வழங்கும் ஒரு திறவுகோல்.

இந்தப் பதத்தை அதன் அர்த்தத்தில் விளங்கிக் கொள்ள வேண்டுமானால், வரலாற்றுக்குப் பொறுப்புக்கூறல், காலத்துக்குப் பொறுப்புக்கூறல், காலங்கடத்தலுக்குப் பொறுப்புக் கூறல், நம்பிக்கைகளுக்குப் பொறுப்புக்கூறல், நம்பிக்கைத் துரோகங்களுக்குப் பொறுப்புக் கூறல், நடந்த அனர்த்தங்களுக்கு, நீதி மறுப்புக்கு, கொலைகளுக்கு, பழிக்குப் பாதகத்துக்கு, பாதிக்கப்பட்டோருக்கு, உலகத்துக்கு என எல்லாவற்றுக்கும் எல்லாத் தரப்புக்கும் பொறுப்புக் கூறல் என்று இது பல நிலைகளில் விரிந்து செல்வதை உணர முடியும்.

பொறுப்புக்கூறல் என்பது பொறுப்பை ஏற்றல், நடந்தவற்றுக்குரிய பொறுப்பை ஏற்றுக்கொள்ளுதல் என்ற ஒரு அடிப்படை அம்சத்தை ஏற்படுத்துகிறது. இது குற்றங்களையும் தவறுகளையும் விளைவுகளுக்கான பொறுப்புகளையும் தார்மீக அடிப்படையில் ஏற்றுக்கொள்வது என்று அமையும்.

கடந்த காலத்துக்குப் பொறுப்புக் கூறுவதன் மூலம் நடந்த நிகழ்ச்சிகளுக்கும் நிலைமைகளுக்கும் பொறுப்புக் கூறும் ஒரு நிலை ஏற்படுகிறது. இத்தகைய பொறுப்புக்கூறல் மறு அர்த்தத்தில் பொறுப்பேற்றல் என்று இன்னொரு விளக்கத்தையும் பெறுகிறது.

பொறுப்புக் கூறலும் பொறுப்பேற்றலும் என்பது உண்மையில் மிகப் பெரிய மாண்புடைய செயலாகும். தவறுகளையும் குற்றங்களையும் பொறுப்பேற்றல், காயங்களுக்கும் வலிகளுக்கும் வேதனைக்கும் கண்ணீருக்கும் பொறுப்பேற்றல் என்பது சாதாரணமானதல்ல. இவற்றைப் பொறுப்பேற்பதன்மூலமாக பிறரிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடிகிறது.

மட்டுமல்ல, இத்தகைய பொறுப்பேற்றல் தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் தாமதங்களுக்கும் நம்பிக்கையீனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான முதற்புள்ளியாகவும் அமைகிறது. இனி எதையும் சீராகச் செய்வதற்கு, பொறுப்போடு செய்வதற்கு, தவறுகளற்றுச் செய்வதற்குரிய நிலையொன்றை இது உருவாக்குகிறது.

பொறுப்புக்கூறல் என்பதன் இன்னொரு அர்த்தம் நடைமுறையை நோக்கி, அமூலாக்கத்தை நோக்கி நகரத் தொடங்கிவிட்டதாக அமையும். மேலும் இது உண்மையை – நம்பிக்கையை நிரூபிக்க வேண்டிய ஒரு நிலையையும் உண்டாக்குகிறது.

இத்தகைய செயல்களும் நிலையும் மாண்புடையவை. மாண்புக்குரிய செயல்களிலிருந்தே புதிய தொடக்கங்களை ஏற்படுத்த முடியும். மாண்புடைய செயல்களின் மூலமாகவே உலகத்தின் மாற்றங்களும் திருப்பங்களும் நிகழ்ந்திருக்கின்றன. வரலாற்று இயக்கமே மாண்புறு நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டதுதான்.

கடந்த காலத்தின் இருண்ட பக்கங்களிலிருந்து ஒளியுடைய புதிய திசைகளை நோக்கிப் பயணிப்பதற்கு, சுமையும் தடைகளும் நிரம்பிய மேடுபள்ளங்களிலிருந்து சமதளத்தில் சுமையற்றுப் பயணிப்பதற்கு இத்தகைய மாண்புடைய நிலை அவசியம்.

ஆகவே பொறுப்புக்கூறல் என்பது வெறுமனே வாய்ப்பாட்டுக்குரிய பதம் அல்ல. ஆனால், இலங்கையின் அரசியலில் பொறுப்புக்கூறல் என்பது கடினமானதாகவும் பலவந்தத்திற்குரிய ஒன்றாகவுமே உணரப்பட்டுள்ளது. குறிப்பாக சிங்களத்தரப்பு பொறுப்புக்கூறலை நிர்ப்பந்தத்தின் விளைவு என்றும் வெளித்தரப்பின் தலையீடும் நெருக்கடியும் என்ற உணர்ந்துள்ளது.

இதேவேளை தமிழ்த்தரப்போ இந்தப் பொறுப்புக் கூறல் என்பது முற்று முழுதாக பிறருக்கானது, எதிர்த்தரப்புக்கு, சிங்களத்தரப்புக்கானது என்றே கருதுகிறது. கடந்த காலத்தின் அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் நிலைமைகளுக்கும் நிகழ்காலத்தின் இறுக்கங்களுக்கும் சிதைவுக்கும் மறுதரப்பே, எதிர்த்தரப்பே, சிங்களத்தரப்பே என்று கருதுகிறது.

மேலும் தான் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களையும் புனிதங்களையும் இந்தப் பொறுப்புக்கூறல் சிதறடித்துவிடும் என்றும் அது அச்சப்படுகிறது.

அதனால் இந்தப் பொறுப்புக்கூறலைச் சிங்களத் தரப்பே செய்ய வேண்டும் என்று அது கருதுகிறது. அல்லது இந்த நிலைப்பாட்டில் அது பிடிவாதமாக நிற்கிறது.

சிங்களத் தரப்போ பொறுப்புக்கூறல் என்பதை தோல்வியின் ஒப்புக்கொள்ளலாக, குற்றங்களில் அமிழ்வதாக, தூக்குமேடைக்கொப்பானதாக எண்ணுகிறது. மேலும் தன்னுடைய அதிகாரத்தின் பிடி தளர்ந்து விடும் என்றும் அது அச்சமடைகிறது.

இத்தகைய உளவியற் சிக்கலுக்குள்ளும் தவறான புரிதல்களுக்கும் உள்ளாகியுள்ளது பொறுப்புக்கூறல் என்ற இந்தப் பதம்.

பலவீனங்களைக் களைவதற்கான – தவறுகளையும் குற்றங்களையும் திருத்திக் கொள்வதற்கான ஒரு நல்வாய்ப்பாக அமைந்திருக்கும் இந்தப் பொறுப்புக்கூறல் என்ற நிலை இவ்வாறான தவறான புரிதல்களில்களினாலும் அணுகுமுறையினாலும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

இந்த இடத்தில் சற்றுப் பின்னோக்கிச் சென்று நாம் சில உண்மைகளைப் பார்க்க வேண்டும்.

இலங்கையில் இன ஒடுக்குமுறை என்பது பகிரங்கமாகவே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இந்த இனஒடுக்குமுறையின் காரணமாக ஒரு பெரிய யுத்தமே நடந்துள்ளது. இந்த இனஒடுக்குமுறையில் தாராளமாகவே வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போதாக்குறைக்குத் தாராளமாகவே யுத்தக்குற்றங்கள் நடந்துள்ளன.

இதைவிட இலங்கையின் அரசியலமைப்பு, அரசாட்சி முறை மற்றும் பொருளாதார அசமத்துவம், ஜனநாயக நெருக்கடி போன்ற காரணங்களினால் கிளர்ச்சிகளும் அதற்கெதிரான ஒடுக்குமுறையும் நடந்துள்ளது. வடக்குக் கிழக்கில் மட்டுமின்றி பல ஆயிரக்கணக்கான மக்களும் இளைஞர்களும் பத்திரிகையாளர்களும் ஜனநாயக விரும்பிகளும் அரசியற்தலைவர்களும் போராட்டத்தலைவர்களும் தெற்கிலும் கொல்லப்பட்டுள்ளனர்.

இதைப்போன்று இலங்கை அரசாங்கத்தினால் மட்டுமன்றி, சிங்களத் தரப்பினால் மட்டுமன்றி தமிழ்த்தரப்பில் ஏராளம் வன்முறைகளும் உள்மோதல்களும் அவற்றின் விளைவான உட்காயங்களும் சிதைவுகளும் கண்ணீரும் குற்றங்களும் தவறுகளும் தாராளமாகவே உண்டு.

இயக்கங்களின் மோதல், ஜனநாயக மறுப்பு, படுகொலைகள், நீதியற்ற தண்டனைகள், தவறான வழிமுறைகள் என எண்ணற்ற குற்றங்களும் குறைபாடுகளும் தமிழ்த்தரப்பிலும் உண்டு. முஸ்லிம்களின் மீதான அதிகாரப் பிரயோகத்திலிருந்து சாதி ஒடுக்குமுறை வரை ஏராளம் குற்றங்களுக்கும் தவறுகளுக்கும் பின்னடைவுகளுக்கும் தமிழ்ச் சமூகமும் தன்னுடைய பொறுப்புக்கூறலைச் செய்ய வேண்டும்.

குற்றங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் விடுபட வேண்டுமாயின் முதலில் அவற்றைப் பொறுப்பெடுக்கும் மனப்பாங்கும் பண்பும் உருவாக வேண்டும். அதையே பொறுப்புக்கூறல் வலியுறுத்துகிறது. குற்றங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் விடுபட்டாலே – பொதுவெளியொன்றுக்கு வந்தாலே புதியனவற்றைப் பற்றிச் சிந்திக்கலாம். புதிதாக எதையும் செய்யலாம்.

ஆகவே, அமைதிக்கும் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான வாசலை பொறுப்புக்கூறல் என்ற சாவியே திறக்கிறது.

ஆனால், இதுவரை அப்படியான நிகழ்வுகள் எதுவும் நடந்திருக்கிறதா?

இலங்கையில் எந்தக் கட்சி தன்னுடைய அரசியற் தவறுகளுக்காக – நடைமுறைப் பிறழ்வுகளுக்காகப் பகிரங்கமாகவே மன்னிப்பைக் கேட்டுள்ளது? வரலாற்றின் முன்னே தன்னுடைய குறைபாடுகளை எந்தத் தரப்பு ஒத்துக் கொண்டிருக்கிறது.

பாரம்பரிய அரசியற்கட்சிகளிடம் இதை எதிர்பார்க்க முடியாது. அவை சீரழிவுக் கலாச்சாரத்திலேயே தமது அரசியல் அடித்தளத்தை நிர்மாணித்திருப்பதால் அவற்றிடம் இதை எப்படி நீங்கள் எதிர்பார்க்க முடியும்? என ஒரு நண்பர் கேட்கிறார்.

நண்பருடைய வாதத்தில் நியாயமுண்டு. ஆனால், பொதுத்தளமொன்றிற் செயற்படும் எவரையும் வரலாறு அதற்குரிய அடிப்படையில் விசாரணைக்குட்படுத்தும். அந்த விசாரணைக்கான பதிலைச் சொல்ல வேண்டிய பொறுப்பிலிருந்து தப்பிவிட யாரும் முடியாது. வேண்டுமானால், இந்த விசாரணைக்காலத்தை ஒத்தி வைக்கலாம். அல்லது நீடித்துச் செல்லலாம். ஆனால், அதற்கும் ஒரு எல்லையுண்டு.

இதேவேளை புரட்சிகர இயக்கங்கள், இயக்கங்களின் வழியாக வந்த அரசியற்தரப்புகள், அவற்றின் தலைமைகள் எவையும் இதுவரையில் தமது தவறுகளைக் குறித்துப் பொறுப்புச் செல்லும் மனநிலைக்கு வந்துள்ளனவா?

அல்லது இலங்கை இனப்பிரச்சினையிலும் அதன் விளைவான போரிலும் இலங்கையின் அரசியலிலும் தலையீடுகளையும் செல்வாக்கினையும் செலுத்திய இந்தியா தொடக்கம் அமெரிக்கா வரையான சிறிதும் பெரிதுமான நாடுகள் தங்களின் செயற்பாடுகளினால் ஏற்பட்ட விளைவுகளுக்குப் பொறுப்புக்கூறத் தயாரா?

மேலும் ஊடகங்கள், மதபீடங்கள், மதத்தலைவர்கள், கலைஞர்கள், படைத்தளபதிகள், அரச அதிகாரிகள் எனப் பலரும் தங்களுடைய இதயங்களைக் கழுவுவதற்குத் தயாரா?

பொறுப்புக்கூறல் என்பது எல்லோருக்குமானதே. அது தனியே ஏதோ ஒரு தரப்புக்கானது மட்டுமல்ல.

யுத்தத்தை நடத்தியோருக்கும் அதை ஆதரித்தோருக்கும் அதற்கு உதவியோருக்கும் அதை விரும்பியோருக்கும் பொறுப்புக்கூறவேண்டிய பொறுப்புண்டு.

யுத்தத்தின்போது சனங்கள் கொல்லப்படுகிறார்கள் என்று தெரிந்து கொண்டே அதற்கான நடவடிக்கையை எடுக்கத்தவறிய சர்வதேச சமூகத்துக்கும் பிராந்திய சக்திகளுக்கும் தொண்டர் அமைப்புகளுக்கம் ஐ.நாவுக்கும் பொறுப்புக்கூறவேண்டியதில் பொறுப்புண்டு.

ஏனெனில் சனங்கள் முதலில் தலைவர்களை நம்புகிறார்கள். தாங்கள் நம்புகின்ற தலைமைகளும் தரப்புகளும் அவர்களைக் கைவிடும்போது அவர்கள் வெளியுலகை நம்புகிறார்கள். பின்னர் சர்வதேச சமூகத்தை – ஐ.நா.வை எதிர்பார்க்கிறார்கள். அவர்களுடைய குரலும் கோரிக்கையும் அப்படித்தான் அமைகின்றன.

இது உலகப் பொது நிலை.

இலங்கையிலும் இதுதான் நடந்தது.

ஆனால்?

எவரும் சனங்களைப் பொறுப்பெடுக்கவேயில்லை. அவர்களுடைய இன்னல்களிலிருந்தும் அவர்களுடைய நெருக்கடிகளிலிருந்தும் அவர்கள் சந்தித்த அபாயங்களிலிருந்தும் யாரும் அவர்களைப் பொறுப்பெடுக்கவேயில்லை.

அப்படிப் பொறுப்பெடுக்காதோரும் சனங்களின் இன்னல்களுக்கம் நெருக்கடிகளுக்கும் பொறுப்பானவர்களும் நிச்சயமாக இன்று பொறுப்புக்கூறியே ஆகவேண்டும்.

பொறுப்புக்கூறல் என்பதிலிருந்தே இனி நாம் எதையும் தொடங்கவும் தொடரவும் முடியும். பொறுப்புக்கூறாத எவரும் வரலாற்றுப் பாத்திரத்திற்குரியவர்களல்ல. இதை மீண்டும் மீண்டும் வரலாறு திரும்பத்திரும்ப நிரூபித்தே வருகிறது.

 

2009 ·. by TNB