கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

கருணையற்ற மனம் = தமிழ்ச் சமூகத்தின் இதயம்?

Monday 19 March 2012
















பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் தலைவர்களும் கடமைகளைச் செய்யத் தவறும் பெற்றோரும் நிலைமைகளைப் புரிந்து கொள்ளாத மூத்தோரும் உண்மைகளை ஏற்றுக்கொள்ளாத ஊடகவியலாளரும் கருணையும் இரக்கமுமில்லா மக்களும் வரலாற்றாற் தண்டிக்கப்படுவர்.

இலங்கைத் தமிழர்களின் நிலை ஏறக்குறைய இதை ஒத்ததாகவே உள்ளது.

‘ஈழத்தமிழர்களுக்குப் பிறத்தியார் இழைத்த அநீதிகளுக்கு நிகரானவை அவர்களுக்குள்ளே இருக்கும் குறைபாடுகளும் தீங்குகளுமாகும்’ என்று ஒரு நண்பர் அடிக்கடி சொல்வார்.

உள்ளடுக்குகளில் ஜனநாயகமின்மையையும் தார்மீக நெறிகளிற் குறைபாடுகளையும் கொண்டது ஈழத்தமிழ்ச் சமூகம். குறிப்பாகச் சாதீயத்தாலும் பிரதேச வாதத்தினாலும் அறப்பிறழ்வைக் கொண்டது அது.

இதனால், அதனுடைய அரசியலிலும் விடுதலைச் சிந்தனையிலும் பலவீன நிலைகள் இலகுவிற் தொற்றிக் கொண்டன. விளைவு, அது தனது விடுதலைக்கான முயற்சிகளில் தொடர்ந்து பின்னடைவுகளையே சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் பின்னடைவுகளுக்கான காரணங்களைக் குறித்து மீளாய்வு செய்யவோ சுயவிமர்சனம் செய்யவோ அது தயாராகவில்லை.

இது அரசியலில் ஏற்பட்ட வீழ்ச்சி மட்டுமல்ல.

தமிழ்ச் சமூகத்தின் பிற அம்சங்களான மனிதாபினமானத்திலும், கல்வி மற்றும் மருத்துவம் போன்ற அடிப்படையான சேவைமனப்பாங்கிலும் பெருங்குறைபாடுகளையே உருவாக்கியுள்ளது.

விடுதலைக்காக, சமூக ஈடேற்றத்துக்காகத் தம்மை முழுதாகவே அர்ப்பணிக்கும் இயல்பினரை அதிகளவில் கொண்டிருந்த ஈழத்தமிழ்ச் சமூகத்திற்தான் உச்சமான சுயநலமும் உள்ளது.

கடந்த காலத்தில் விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்தவர்களைத் தவிர, போராட்டத்தில் ஈடுபட்டோரைத் தவிர, இன்னொரு சாரார், கல்வியிலும் பிற தொழிற்றுறைகளிலும் தங்களை மேம்படுத்திக் கொண்டனர். என்னதான் இதற்கு நியாயங்கள் கூறினாலும் இது மறுக்க முடியாத உண்மை.

இன்று போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். இதில் தனியே விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மட்டும் சேர்த்தியல்ல. பிற போராட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவர்.

உண்மையில் தங்களுடைய சமகாலத்தவர்களான ஏனையவர்கள் தம்மை முழுமையாக அர்ப்பணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் இவர்கள் ஏதோ காரணங்களின் நிமித்தமாக அதில் முழுமையாக ஈடுபடாமல் தங்களுடைய கல்வியைப் பெற்றுக்கொண்டனர். அல்லது தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டனர். இதைத் தவறென்று இங்கே கூறவும் இல்லை. வாதிடவும் இல்லை. ஆனால், இவர்கள் ஏனையோரை விட அதிக பாதிப்புகளுக்கும் சேதங்களுக்கும் உட்படவில்லை.

அதேவேளை ஏனையோரின் போராட்டப் பணிகளுக்கு ஆதவரவாக  சமூகத்துக்கான பிற பணிகளில் இவர்களிற் சிலர் செயலாற்றினர் என்பதையும் நாம் மனதிற்கொள்ள வேண்டும்.

ஆனால், இன்று இந்த நிலைமை பெருமளவுக்கும் மாற்றமடைந்துள்ளது. அல்லது வீழ்ச்சியடைந்துள்ளது எனலாம்.

முன்னெப்போதையும் விட இப்போதே ஈழத்தமிழ்ச் சமூகம் பெரும்பாதிப்புகளையும் இழப்புகளையும் சந்தித்துள்ளது. குறிப்பாக 1958, 1977, 1983 ஆகிய காலகட்டங்களில் ஈழத்தமிழர்கள் இனவன்முறையின் மூலமாகச் சந்தித்த இழப்புகள், கொடுமைகளையும் விடப் பின்னர் சந்தித்த இழப்புகளும் பாதிப்புகளுமே அதிகம்.

சொந்த இடத்திலேயே அவர்கள் இந்தப் பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்ததால், ஈடுசெய்து கொள்ள முடியாத அளவுக்கு நெருக்கடிக்குள்ளாகினர்.

குறிப்பாகப் போக்கிடமற்ற ஒரு நிலைக்கு, மீட்சிகொள்ளக் கடினமான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதில் வடக்குக் கிழக்குத் தமிழர்களே அதிகமானவர்களாக இருந்தனர். அதிலும் வன்னியைச் சேர்ந்தவர்களும் வாகரை மற்றும் படுவான்கரையைச் சேர்ந்த மக்கள் சந்தித்த பாதிப்புகள் வரன்முறைகளுக்கு அப்பாலானவை.

ஆனால், இந்த மக்களின் துயரை ஆற்றுவதற்கு யாரும் முன்வரவில்லை. இனவன்முறையினால் தெற்கிலிருந்து வந்தோரை அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களிலிருந்து உள்ளுர்ப் பொது அமைப்புகள் வரையில் பராமரித்தன.

ஏனென்றால், அப்போது பாதிக்கப்பட்டு வந்தோரில் கணிசனமானவர்கள் மத்தியதர வர்க்கத்தினராக இருந்தனர். இதனால் இவர்களுக்கு உதவவேண்டும் என்ற அபிப்பிராயம் அப்பொழுது முன்னிலைப்படுத்தப்பட்டது.

வன்னியிலும் வாகரையிலும் படுவான்கரையிலும் பாதிக்கப்பட்டவர்கள் நகர்ப்புறத்து மக்களோ மத்தியதர வர்க்கத்தில் கவனத்தைக் குவிக்கத் தக்க நிலையிலிருந்தோரோ அல்ல.

ஆகவே, அவர்களுக்கு உதவவேண்டும் என்று சிந்திப்போரின் தொகை மிக மிகக் குறைவாகவே உள்ளது. அதைவிடக் குறைவு இவர்களுடைய பாதிப்பை நேரிற் பார்ப்பதற்கே விரும்பாத நிலை. அப்படி யாராவது வந்து பார்த்தாலும் கூட அதை வைத்தே தமது பிழைப்பையும் பிரச்சாரத்தையும் மேற்கொண்டு விடுகிறார்கள்.




அதாவது, இணையங்களிலும் பிற அச்சு ஊடகங்களிலும் அரசியற் தரப்பினரின் உரைகளிலும் இந்த மக்களின் அவல நிலை பேசு பொருளாக்கப்பட்டுள்ளதே தவிர,

இந்த நிலையில் இந்தச் சனங்களுக்கான ஆதரவையும் சேவையையும் வழங்கியிருக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களின் அரசியற் தலைமைகளாகத் தம்மைப் பிரகடனஞ்செய்வோரைச் சேர்ந்தது. அதிலும் ஏகபிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு இதில் அதி கூடிய பொறுப்புண்டு. அவர்களிடத்திற்தான் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிற தொடர்பாடல் வாய்ப்புகளும் உள்ளன.

இதற்கடுத்ததாக பிற அரசியற் தரப்பினர் அத்தனை பேருக்கும் இந்த மக்களின் அவலத்தைத் துடைப்பதில், இந்தச் சனங்களின் வாழ்க்கைக்குத் துணையிருப்பதில் பெரும் பங்களிப்புக்கு இடமுண்டு.

தவிர, போரில் அதிக பாதிப்புகளைச் சந்தித்திராத வடக்குக் கிழக்கின் நகர்ப்புறத்துத் தமிழர்களுக்கும் இதில் கூடுதலான கடமையுண்டு.

ஆனால் யாரும் இந்த மக்களுக்குச் செறிவான உதவிகள் செய்தது கிடையாது. புலம்பெயர் நாடுகளில் இருந்து நேசக்கரம் போன்ற ஒன்றிரண்டு அமைப்புகளும் உள்ளுரில் கருணைப்பாலம் - உதவும் கரங்கள் போன்ற சிறு தொண்டாளர் அமைப்பைச் சேர்ந்தவர்களும் உதிரியாகச் சிலரும் பங்களிப்புகளைச் செய்து வருகின்றனர்.

யுத்தம் முடிந்தபின்னர் தாமரைச்செல்வி, தமிழ்ப்பிரியா, நடேசன் போன்ற சில படைப்பாளிகள் குறிப்பிடத்தக்க உதவிகளைச் செய்தனர். இவர்கள் பிறருக்கும் நிலைமைகளைச் சொல்லி அவர்களுடைய ஆதரவையும் பெற்று இந்த உதவிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், இதெல்லாம் ஒரு சிறிய அளவிற்தான்.

மற்றும்படி நிலைமையில் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை.

போரினாற் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிற நாடுகள் சில உதவிகளைச் செய்து வருகின்றன. சில சர்வதேசத் தொணடர் அமைப்புகளும் இந்த வகையான உதவிகளைச் செய்து வருகின்றன.

ஆனால், இந்த அளவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள் எந்தக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளையம் செய்ததாக இல்லை.  குறிப்பிடத்தக்க ஒழுங்கமைக்கப்பட்ட உதவிகள் எதையம் செய்ததாகத் தெரியவில்லை.

இவ்வளவுக்கும் உலகமெல்லாம் இருந்த யூதர்கள் ஒன்றிணைந்தே தமக்கென்ற புதிய தேசத்தை உருவாக்கினர். அதற்காக அவர்கள் செறிவான பங்களிப்பைச் செய்தனர் என்றமாதிரிக் கதைப்பதில் மட்டும் ஈழத்தமிழர்கள் கில்லாடிகளாக இருக்கின்றனர்.

ஆனால், தாங்கள் மட்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவோ, பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் மீளுருவாக்கத்துக்காகவோ எத்தகைய பங்களிப்புகளையம் செய்ய மாட்டார்கள்.

இதைப் பற்றிக் கதைக்கும்போது ‘வன்னியில் வீடில்லா நிலையில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அல்லற்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கணக்கான திருமண மண்டபங்கள் கட்டப்படுகின்றன’ என்று சில நண்பர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறைந்த பட்சம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகக்கூட யாரும் முயற்சிக்கவில்லை.

அண்மையில் கிளிநொச்சியிலுள்ள இந்திய வீட்டுத்திட்டத்தில் குடியிருக்கும் மக்களைப் புதிய தலைமுறை என்ற தொலைக்காட்சியினர் சந்தித்தபோது தங்களுக்கு எந்தத் தொழிலும் இல்லை. அதனால் மிகக் கஸ்ரமான சூழலில் வாழவேண்டியிருககிறது என்று அங்குள்ள மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். அதிலும் பெரும்பாலானவர்கள் கணவரை அல்லது உழைப்பாளிகளை இழந்தவர்கள். குறைந்த பட்சம் இவர்களுக்கான தொழில்வாய்ப்பை யாராவது கொடுத்தால் அதன் மூலம் இவர்களும் பிழைக்க முடியும். முதலீட்டைச் செய்வொரும் வருவாயைப் பெற முடியும்.

ஆனால், இவ்வாறான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துவதை விடவும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மதுபானச் சாலைகள், உல்லாச விடுதிகள் போன்றவற்றைத் திறப்பதற்காகவே படையினர், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என்பொரைத் தேடிப் படையெடுக்கின்றனர் பெரும்பாலான தமிழ் முதலீட்டாளர்கள். சில இடங்களில் சிங்கள முஸ்லிம் முதலீட்டாளர்களும் இந்த மாதிரியான தனிநபர் ஆதாயத்தை மையப்படுத்திய காரியங்களில் ஈடுபட:டு வந்தாலும் தமிழர்களே முதலிடத்திலிருககின்றனர்.

இதையெல்லாம் பார்க்கும்போது இந்த இனம்தானா விடுதலைக்காகப் போராடியது? இவர்களிடம்தானா தங்களை அர்ப்பணிக்கும் போராளிகள் இருந்தார்கள்? என்ற ஆச்சரியமான கேள்விகள் எழும்.

கருணையற்ற மனம் கல்லுக்குச் சமம் என்ற நிலையில் வரண்டுவிட்டது தமிழ்ச் சமூகத்தின் இதயம்.

எந்த ஊற்று இதனைக் குளிர்விக்குமோ!


1 comments:

தீபிகா(Theepika) said...

வலி மிகுந்த கசப்பான உண்மைகள்.
வறண்டு போய் இயங்குகிறது தமிழ் சமூகத்தின் இதயம். சனங்களுக்காக..சிந்திக்கிற உறவுகள்
இல்லாமல் இருப்பதும்...
சனங்களுக்கு உதவ பெரியளவில் அமைப்புக்கள் முன்னிற்காததும் வேதனைக்குரியவையே.

20 March 2012 at 01:25

Post a Comment

 

2009 ·. by TNB