கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

போருக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் எப்படியுள்ளது?

Sunday 1 January 2012



‘போருக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் எப்படியுள்ளது?’ என்று அண்மையில் சர்வதேச ஊடகமொன்றின் சார்பாக இலங்கைக்கு வந்திருந்த ஊடகவியலாள நண்பர் ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பினார்.

இந்தக் கேள்விக்கான பதிலை அளிப்பதற்காகச் சற்று யோசித்த போதே இலங்கையின் அரசியல் வரட்சியைத் துலக்கமாகத் தெரியக் கூடியதாக இருந்தது.

ஆகவே, ‘போருக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் என்பது, போர்க்காலத்தைப் போலவும் போருக்கு முந்திய காலத்தைப் போலவும் எந்த மாற்றங்களுமின்றிய – எந்த வளர்ச்சியுமற்ற நிலையிலேயே தொடர்கிறது’ என்றே பதிலளிக்க வேண்டியிருந்தது.

உண்மை இதுதானே.

அதே இனவாத அரசியல். அதே பாணியிலான அணுகுமுறைகள். அதே வகையான அரசியல் நடவடிக்கைகள். அதே மாதிரியான வாக்குறுதிகள். அதே வகையான கண்டனங்களும் குற்றச்சாட்டுகளும்.

முகங்கள் மாறியிருக்கின்றன. குரல்கள் மாறியிருக்கின்றன. கட்சிகள், அணிகள் போன்றவற்றின் பெயர்கள் மாறியிருக்கின்றன.

ஆனால், நிலைப்பாடுகளும் போக்குகளும் நிலைமைகளும் மாறவேயில்லை.

இதில் தமிழ்த்தரப்பு, சிங்களத்தரப்பு என்ற வேறுபாடுகளோ, சிங்களக்கட்சிகள், தமிழ்க்கட்சிகள் என்ற மாறுபாடுகளோ, அரசாங்கத் தரப்பு - எதிர்த்தரப்புக் கட்சிகள் என்ற வித்தியாசங்களோ கிடையாது.

எல்லாமே ஒரே மாதிரியான நடத்தைகளிலும் சிந்தனையிலும் ஒரே வகையான அணுகுமுறைகளிலுந்தான் செயற்படுகின்றன.

பழைய பல்லவி என்பார்களே! அதே கதைதான். பழைய கள்ளைப் பழைய மொந்தையிலேயே தருகிறார்கள். ‘மொந்தை’ எனப்படும் பாத்திரத்தைக் கூட மாற்றுவதற்கு இவர்கள் தயாராக இல்லை.

ஆனால், நாடு ஒரு பெரும் யுத்தத்தைக் கடந்திருக்கிறது. இந்த யுத்தத்தினால் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதார நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கை பொருளாதார நெருக்கடியிலும் ஜனநாயக நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கிறது. அதிலும் யுத்தப் பிராந்திய மக்களின் வாழ்க்கையும் அந்தப் பிரதேசங்களின் நிலையும் மோசமான கட்டத்திலிருந்து இன்னும் மீளவில்லை.

பொதுவாகச் சொன்னால், யுத்தகால நெருக்கடிகள் சற்றுத் தணிந்திருந்தாலும் நம்பிக்கை கொள்ளக்கூடிய அரசியல் யதார்த்தம் ஒன்று இன்னும் உருவாகவில்லை. இப்போதைக்கு அது உருவாகும் போலவும் தெரியவில்லை.

ஆகவே மீண்டும் நாடு நெருக்கடி நிலைக்குள்தான் சிக்கப்போகிறது என்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது.

இப்படியான நிலைமைகள் இருக்கும்போதும், நடைமுறைகளிலும் அணுகுமுறைகளிலும் மாற்றங்கள் ஏற்படவில்லை என்றால், இதற்கு என்ன காரணம்?
புதிதாக யாரும் சிந்திக்கத் தயாரில்லை. புதிய மாற்றங்களுக்குச் செல்வதற்கு இவர்களிடம் உடன்பாடில்லை.

இனப்பிரச்சினையினால் சிக்கித்தவித்த நாட்டை மீள்நிலைப்படுத்த வேண்டும் என்ற அக்கறை இவர்களிடம் இல்லவே இல்லை.

பொதுவாகச் சொன்னால், போருக்குப்பின்னான அரசியலை முன்னெடுக்கக்கூடிய தகுதியுள்ள அரசியற் தலைவர்கள் இந்த நாட்டிலே இல்லை எனலாம். இதுதான் நமது பிரச்சினை. இதுதான் நமது அவலம்.

இதுதான் எங்களுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு. இதுதான் நாங்கள் சந்தித்துள்ள அபாயம்.

இனமுரண்பாடு தொடங்கிய காலத்திலிருந்த அரசியற் சூழல் இன்றில்லை.

பனிப்போரின் காலங்கள் மாறி, இருதுருவ அரசியல் முடிவுக்கு வந்து, நிலைமைகள் மாற்றமடைந்து, இன்று புதிய தொரு அணுகுமுறைச் சூழல் தோன்றியுள்ளது.

பிராந்தியத்திற்கூட சீனா, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது.

பொருளாதார அடிப்படைகள் மாற்றத்துக்குள்ளாகியுள்ளன. ஆனால், இலங்கையின் உள்நாட்டு அரசியலோ அதே பழைய பாணியில், அதே அணுகுமுறைகளில், அதே பிரச்சினைகளுடன், அதே மாதிரியான சொற்களும் குற்றச்சாட்டுகளும் அதிருப்திகளும் மனக்குமுறல்களுடனும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலை நீடித்துக் கொண்டிருக்கும்போது பாதிப்புகளும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. வெளிச்சக்திகளின் அழுத்தங்கள் நாட்டைப் பாதிக்கும் நிலைக்குச் சென்றுள்ளன. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீள் நிலைப்பட முடியாமற் தவிக்கின்றார்கள். இனமுரண் மேலும் கூர்மையடைந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நாட்டில் அமைதியைக் குறித்தும் எதிர்காலச் சுபீட்சத்தைக் குறித்தும் சிந்திப்போர் எவ்வாறு செயற்படுவர் என்பதை இங்கே விளக்கத் தேவையில்லை.

நிச்சயமாக இனங்களுக்கிடையே நல்லிணக்கத்துக்கும் புரிந்துணர்வுக்கும் ஏற்றமாதிரியான – நம்பிக்கையூட்டக்கூடிய நல்ல காரியங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்பட்டிருக்கும்.

நாட்டின் அமைதியை உறுதிப்படுத்தும் வகையில், ஜனநாயத்தன்மையை மேலும் செழுமைப்படுத்தும் விதமாக, இதற்கான ஒரு பொறிமுறை நிச்சமாக உருவாக்கப்பட்டிருக்கும்.

இதற்குரிய பொறிமுறையை உருவாக்கும் விதமாக நாட்டில் ஒரு சிந்தனையாளர் வட்டம் உருவாகியிருக்கும். அதற்கேற்ற மாதிரி, ஊடகங்களும் அரசியற் தரப்பினரும் செயற்பட்டிருப்பர்.

ஆனால், இவை எதுவுமே நடக்கவில்லை. பதிலாக நம்பிக்கையீனங்களை உருவாக்கும் விதமாகவே காரியங்கள் நடந்து கொண்டிருக்;கின்றன.
கவலைகளை அதிகரிக்கக் கூடியமாதிரியே நிலைமைகள் சென்று கொண்டிருக்கின்றன.

இதற்கெல்லாம் காரணமாக ஒரு சாரார் அரசாங்கத்தைக் குறை சொல்கிறார்கள்@ குற்றம் சாட்டுகின்றார்கள். இவர்களுடைய குற்றச்சாட்டில் நிச்சயமாக உண்மையுண்டு. நியாயமும் உண்டு.

ஆனால், அரசாங்கத்தை மட்டும் குற்றம் சாட்டுவதாலோ அல்லது அரசிடம் பொறுப்பைச் சுமத்தி விடுவதாலோ நாட்டில் அமைதி கிட்டிவிடப்போவதுமில்லை. மக்களின் வாழ்க்கையின் நிம்மதி கிட்டிவிடப் போவதுமில்லை. நாட்டிலுள்ள நெருக்கடியும் நாட்டின் மீதான பிற சக்திகளின் நெருக்கடிகளும் தீர்ந்து விடப்போவதுமில்லை.

நாட்டில் அமைதியை உருவாக்குவதற்கும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அனைவருடைய பொறுப்பும் கடப்பாடுகளும் ஒத்துழைப்பும் அவசியமாகும்.

ஆனால், அதற்குரிய சூழலை, ஒத்துழைக்கும் நெகிழ்ச்சித் தன்மையை, ஏனைய தரப்பினருக்கான வரவேற்பை, பிற தரப்பினருக்கான மதிப்பை, எல்லோரும் சேர்ந்தியங்கக் கூடிய ஒரு வெளியை அரசாங்கம் - அரசாங்கத்தரப்பு - கொண்டிருக்கவில்லை என்பது ஏற்கக்கூடிய குற்றச்சாட்டே.

அதிலும் போரை முடிவுக்குக் கொண்டு வந்தபோதே அரசியற் தீர்வொன்றைக் காணவேண்டிய பொறுப்புக்கேற்ற வகையில், அரசியற் சூழலை அரசாங்கம் உருவாக்கியிருக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் அரசுக்கும் இருந்தது.

ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை. பதிலாக மேலும் நாட்டைப் பதற்றத்திலும் அமைதியற்ற நிலையிலும் வைத்திருக்கவே முயற்சிகளை மேற்கொண்டனர்.

அத்துடன் போரில் வெற்றிபெற்ற தரப்பாக சிங்களத் தரப்பையும் போரிலே தோற்கடிக்கப்பட்ட தரப்பாக தமிழ்த்தரப்பையும் அணுகவும் முற்பட்டனர். ஏறக்குறைய இந்தப் போக்கே இன்னமும் நீடிக்கிறது.

குறிப்பாக வடக்குக்கு வருகின்ற சிங்கள மக்கள் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தைப் பார்க்கும் மனநிலையோடு வரவில்லை. அதைப்போல போரிலே பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிய எந்த அக்கறையையும் இவர்கள் காட்டவில்லை.

இதில் தனியே சிங்கள மக்களை மட்டும் குறைசொல்ல முடியாது. பிற பிரதேசங்களில் இருந்து வருகின்ற தமிழ் மக்களும் இந்த அழிவடைந்த பிரதேசங்களை வெறுமனே பார்த்துச் செல்கிறார்களே தவிர, இந்தப் பிரதேசங்களை மீளக்கட்டுவதற்கு முயற்சிக்கவில்லை. அரசாங்கத்தின் நிலைப்பாடு தமக்கு ஒத்து வரவில்லை என்று சொல்கிறார்களே தவிர, அதற்கப்பால், இந்த மக்களுக்கு என்னமாதிரியான உதவிகளைச் செய்து இவர்களை மீள் நிலைப்படுத்தலாம் என்று சிந்திப்பதாக இல்லை.

ஆகையால், அரசாங்கத்தின் இந்தப் போக்கைச் சாட்டாக வைத்துக்; கொண்டு, ஏனைய தரப்பினர்கள் (தமிழ், சிங்கள, முஸ்லிம் கட்சிகள் அத்தனையும்) தமது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதும் மாற்று முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பதும் புதிய பாதைகளைக் கண்டடையாமல் விடுவதும் பொருத்தமானதல்ல.

பதிலாக அரசாங்கத்தின் போக்குக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தத் தரப்பினரின் அரசியல் நடவடிக்கைகளும் அரசியல் நிலைப்பாடுகளும் இருக்கின்றன.

எனவே அரசியல் ரீதியாகவும் சரி, சமூக நிலையிலும் சரி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகளைச் செய்வதாயினும் சரி, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதிலும் சரி போர் நடைபெற்ற காலத்தின் அணுகுமுறைகளே தொடர்ந்தும் பின்பற்றப்படுகின்றன.

அப்படியாயின், போர் கற்றுத்தந்த பாடங்கள் என்ன? அழிவுகளிலிருந்தும் இழப்புகளில் இருந்தும் நாம் எதைக்கற்றுக் கொண்டோம்? நம் கடந்த காலத்தின் படிப்பினைகள் என்ன?

ஊடகங்கள் அத்தனையும் ஏட்டிக்குப் போட்டியாக ஒரு தரப்புக்கு ஆதரவாகவும் இன்னொரு தரப்புக்கு எதிராகவுமே செயற்படுகின்றன.

புதுச் சிந்தனைதான் இந்த நாட்டுக்கு அவசியமானது என்று தெரிந்திருந்தும் அழிவைத்தந்த அதே பழைய பாணியிலான இனவாதத்தையே அரசும் அமூற்படுத்துகிறது. எதிர்க்கட்சிகளும் நடைமுறைப்படுத்துகின்றன.
புதிய சிந்தனையை முன்வைத்து அரசியலை மேற்கொள்வதற்கு யாரும் முன்வரத் தயாரில்லை. அப்படிப் புதிய சிந்தனையை முன்வைக்கக் கோருவோர் கடந்த காலத்தைப்போல இப்போதும் புறக்கணிக்கப்படுகிறார்கள். அல்லது இருட்டடிப்புச் செய்யப்படுகிறார்கள்.

அப்படிப் பார்த்தால் புதிய தடத்தில் ஓடுவதை விடவும் பழைய தடத்தில் - இனவாதத்திலேயே அரசியலை நடத்துவது சுலபம் என்றும் இனவாத அரசியலுக்கு அதிக உழைப்புத் தேவை இல்லை என்றும் இவர்கள் தீர்மானித்திருக்கின்றனர்.

என்ற படியாற்தான் இவர்கள் போராடுவதற்கு – மாற்று அரசிலுக்கு – போருக்குப் பின்னரான அரசியலுக்குத் துணியவில்லை. அரசாங்கம் தவறு செய்யுமாக இருந்தால், எதிரணிகள் ஓரணி திரளலாம் அல்லவா! ஆனால், அதற்கு எதிரணியில் உள்ள எந்தத் தரப்பும் தயாரில்லை.

அதாவது, சமாதானத்திற்கும் முன்னேற்றத்திற்கும் தீர்வுக்கும் ஜனநாயகத்திற்கும் இடமில்லை என்றால் இவற்றைக்குறித்துப் போராட வேண்டிய பொறுப்பு அரசியற் கட்சிகளுக்கும் அரசியற் தலைவர்களுக்கும் உண்டு. ஆனால், இந்தப் போராட்டங்களை நடத்துவதற்கு யார் தயார்? எந்தக் கட்சி இதுவரையில் அதற்காக முயன்றிருக்கிறது? இனியாவது யார் முன்வருவார் இந்த நாட்டை மீளுருவாக்கம் செய்வதற்கு?

அதாவது போருக்குப் பின்னரான இலங்கையைச் சமாதானத்திலும் அமைதியிலும் ஜனநாயகத்திலும் அபிவிருத்தியிலுமாகக் கட்டமைப்பதற்கு யார் வருவார்?
00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB