கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

இலங்கையில் தமிழ் பேசும் சமூகங்களின் எதிர்காலம் எப்படியிருக்கப்போகிறது?

Sunday 15 January 2012
















மேற்படி தலைப்பை என்னிடம் கேள்வியாகக் கேட்டார் ஒரு நண்பர். அவருடைய இந்தக் கேள்விக்குள் பெருந்துக்கம் நிறைந்திருக்கிறது@ அத்துடன் எதிர்காலத்தைக் குறித்த அச்சமும் கலந்திருக்கிறது. இது தனியே ஒருவருடைய கேள்வியோ கவலையோ அல்ல. தமிழ்பேசும் சமூகத்தைச் சேர்ந்த பலருடைய கேள்வியும் இப்படித்தானிருக்கிறது. அவர்களுடைய கவலைகளும் அச்சங்களும் இந்தக் கேள்வியில் கலந்திருக்கின்றன. அப்படிப் பார்த்தால் இது இன்று தமிழ் பேசும் மக்களின் பொதுக்கேள்வியாகவும் பொதுக் கவலையாகவும் பொதுவான அச்சமாகவும் உள்ளது எனலாம்.

ஆகவே இந்தப் பொதுக் கேள்வி குறித்து நாம் சீரியஸாகச் சிந்திக்க வேண்டும். வெளியே சாதாரண கேள்வியாகத் தெரியும் இதனுள்ளே அசாதாரண நிலைமைகளே உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன. காரணம் இந்தக் கேள்வியின் பின்னால் ஏராளம் வலைப்பின்னல்களும் பொறிகளும் உள்ளன. அதேவேளை இந்தக் கேள்வியில் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தலைவிதியும் எதிர்காலமும் ஏன் நிகழ்காலமும் கூட பொதிந்திருக்கின்றன. ஆகவேதான். இந்தக் கேள்வி எழுந்ததற்கான பின்னணியைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

இந்தக் கேள்வி ஒரு சூழ்நிலையின் வெளிப்பாடு. தமிழ்பேசும் சமூகங்கள் இன்று எதிர்கொள்கின்ற அரசியல் வெறுமை நிலை உருவாக்கிய சூழ்நிலையிலிருந்தே இந்தக் கேள்வி பிறக்கின்றது. அறுபது ஆண்டுகால அரசியல் போராட்டங்களும் முயற்சிகளும் தோல்வியில் வந்ததன் விளைவு இது. அவ்வாறாயின் தமிழ் பேசும் மக்களின் மனதில் தற்போதிருக்கும் தலைமைச் சக்திகள் குறித்தும் கட்சிகள் குறித்தும் கேள்வி நிலை எழுந்திருக்கிறது@ அவநம்பிக்கை உருவாகியிருக்கிறது என்பதே பொருளாகும்.

தமிழ் பேசும் மக்கள் தங்களுக்குரிய தலைமைச் சக்திகள் குறித்த தெளிவையோ தெரிவையோ கொண்டிருக்கவில்லை. அப்படி அவர்கள் தமக்கான தெரிவைச் செய்யக் கூடிய அளவுக்கு இந்தச் சக்திகளும் இப்போதிருக்கும் தலைவர்களும் துலக்கமான நடவடிக்கைகளைச் செய்யவுமில்லை. அரசியல் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கான தலைமைத்துவப் பண்பையும் வினைத்திறனையும் இந்தத் தலைவர்கள் கொண்டிருக்கவும் இல்லை. அதாவது, அரசியல் உரிமைகளுக்காகப் போராடிப் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் மக்களின் மனதில் இவர்களில் எவரும் தக்கதொரு இடத்தைப் பிடிக்கவில்லை என்பதே இந்தக் கேள்விக்கான காரணமாகும்.
 
எவரும் இன்னும் மக்களின் மனதோடு நெருங்கவில்லை. மக்களின் பிரச்சினைகளோடும் அவர்களுடைய உணர்வுகளோடும் கலந்திருக்கவில்லை. மட்டுமல்ல, தமிழ் பேசும் சமூகங்களின் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால அரசியற் பிரக்ஞையோடும் இவர்களில்லை என்பதே இவர்களின் பெரிய பலவீனமாகும். சுpலரிடம் ஒரு மெல்லிய விகித வேறுபாடிருக்கலாம்.

இந்தத் தலைவர்கள் குறைந்த பட்சம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளைக் கூடச் செயற்படுத்த முடியாத நிலையிலேயே அனைத்துத் தரப்பினரும் இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொது உதவித்திட்டத்தை வரைய முடியாமலும் உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாமலும் பொது உதவிநிதியமொன்றை உருவாக்க முடியாமலும் இவர்கள் இருக்கிறார்கள். அதாவது எதற்கும் வக்கற்ற நிலையிலும், எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று கூறுமளவுக்குமே இவர்கள் செயற்படுகிறார்கள்.

இப்போது தமிழ் பேசும் மக்களுக்கு என்று அதிக தலைவர்களும் அதிக கட்சிகளும் உருவாகியிருக்கின்றன. நாடு கடந்த நிலையில் கூட அரசியற் செயற்பாட்டு அணிகளும் ஆட்களும் தாராளமாக உருவாகியிருக்கும் சூழல் இது. அதிகளவான கட்சிகள் என்பதால் அதிகளவான நிலைப்பாடுகளும் செயற்பாடுகளும் உருவாகுவது இயல்பு. அதுவும் நீண்டகாலமாக ஒற்றைப் பரிமாண அரசியற் சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழ்பேசும் சமூகங்களுக்கு இந்த மாதிரி ஒரு நிலை உருவாகியிருப்பது எதிர்பார்க்க வேண்டியதே. அத்துடன் ஒரு ஜனநாயகக் சூழலில் இதுமாதிரி ஏராளம் அபிப்பிராயங்களோடும் நிலைப்பாடுகளோடும் பலரும் செயற்படுவது இயல்பானது என்று யாரும் சொல்லலாம். இது ஒரு வகையில் நியாயமானதாகவும் இருக்கலாம். ஆனால், இந்த நிலைப்பாடுகள் எல்லாம் அரசியல் ரீதியாகவும் வாழ்நிலை ரீதியாகவும்  பலவீனமடைந்திருக்கும் சமூகங்களை மேலும் பலவீனப்படுத்தும் என்பதே உண்மை. 
அதற்காக ஏகப்பிரதிநிதித்துவ நிலைப்பாடும் அணுகுமுறையும் பொருத்தமானது என்று அர்த்தம் அல்ல. தமிழ் முஸ்லிம் தரப்பினரிடையேயுள்ள கட்சிகளிலும் இந்தக் கட்சிகளின் தலைவர்களிடமும் எப்போதும் ஏகப்பிரதிநிதித்துவக் கொள்கையும் அணுகுமுறையுமே காணப்படுகிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தன்னையே ஏகபிரதிநிதித்துவ அமைப்பாகச் சொல்கிறது. முஸ்லிம் கொங்கிரஸ் சொல்கிறது முஸ்லிம் மக்களின் தலைமைத்துவ ஏக அமைப்பு தானே என்று. நாடுகடந்த தமிழீழ அரசினரும் இதற்கு விதிவிலக்கில்லை. எதிர்க்கட்சியை விரும்பாத, மாற்று அபிப்பிராயங்களைப் பொருட்படுத்தாத ஒரு சூழலில் அரசியல் நடத்தவே இந்தத் தரப்புகள் எப்போதும் விரும்புகின்றன. ஆனால், இது எந்த வகையிலும் பொருத்தமற்றது. அதுவும் இன்றைய உலகத்தின் போக்கில் இந்த ஏக விருப்பு அரசியல் எதிர் நிலை அம்சங்களையே பெருக்கும். (இதுகுறித்துப் பின்னர் தனியாகப் பார்த்துக் கொள்ளலாம்).
ஏகப் பிரதிநிதித்துவத்தைப் பற்றிப் பேசும் இந்தக் கட்சிகளும் தலைமைகளும் மக்களின் தேவைகள், பிரச்சினைகளைப் பற்றிக் கவலை கொள்வதில்லை என்பது துக்ககரமான இன்னொரு கதை. பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு இவை தீர்வு காண முயற்சிப்பது கூட இல்லை. பலவீனமான நிலையில் இருக்கும் சமூகங்களை மேல் நிலைப்படுத்தி அவற்றை வலுப்படுத்திக் கொண்டு அந்தச் சமூகங்களை வழிநடத்துவதே பொருத்தமானது என்றும் இவை சிந்திப்பதில்லை. ஆனால், என்னதான் இந்தச் சமூக மக்கள் கெட்டு நொந்தாலும் பரவாயில்லை, தமது அரசியல் இருப்பு முக்கியமானது. அதிலும் அதை மற்றவர்கள் பங்கு போடக் கூடாதது என்றே இவர்கள் விரும்புகிறார்கள். இது கண்டிக்கப்படவேண்டியது.


எனவே, இந்த நிலையில் தமிழ் முஸ்லிம் சமூகங்களின் இன்றைய நிலை, கடந்த காலத்துயரங்கள், கடந்த காலத்தில் இந்த மக்கள் அளித்த அரசியற் பங்களிப்புகள், போராட்டத்தையும் அரசியலையும் வழிநடத்திய சக்திகளின் தவறுகள், இந்தச் சமூகங்களின் எதிர்காலம் என்பவற்றைக் கணக்கிற் கொண்டு புதிய அரசியற் செயற்பாட்டை மிகப் பொறுப்போடு ஏற்று, புத்திப+ர்வமாகச் செயற்படும் அமைப்பும் தலைமைத்துவமுமே இன்றைய தேவை. இந்தத் தேவையின் பாற்பட்டே மேற்குறிப்பிட்ட பொதுக்கேள்வி மக்களிடையே எழுகிறது. ஆனால், இந்தக் கேள்விக்கான பதிலைக் காண முடியாத நிலையில்தான் மக்கள் துக்கத்தோடிருக்கிறார்கள். இந்தத் துக்கம் பல பத்தாண்டுகள் நீடித்தது. இன்னும் நீடித்துக் கொண்டிருப்பது. இது இன்னும் நீடிக்கக் கூடாதென்பதே இங்கே பொதுக் கேள்வியாகப் பரிணமித்திருக்கிறது.
02
விடுதலைப் புலிகள் இல்லாத இலங்கைத்தீவின் அரசியல் களம் இது. புலிகள் இருந்த கால நிலைமைகள் இன்று மாறிவிட்டன. புலிகளின் மேல் இனியும் பாரத்தைச் சுமத்திக் கொண்டு அரசாங்கமும் இருக்க முடியாது, சர்வதேச சமூகமும் இருக்க முடியாது, தமிழ் பேசும் தரப்பினரும் இருக்க முடியாது.
உள்நாட்டில் ஜனநாயக நடைமுறை சார்ந்த செயற்பாட்டில் பொதுவாக அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கின்றனர். ஆகவே இந்தத் தளத்திலிருந்து பிரச்சினைகளை அணுகவும் தீர்வுகளை நோக்கி முன்னேறவும் வேணும். கடந்த காலத்தின் தவறுகள் தடைகளாக இருக்கலாம். ஆனால் அதைக் கடந்து செல்ல வேண்டியது இன்றைய அரசியற் செயற்பாட்டாளர்களின் கடமை. அப்படி நடைபெறுகிறதா? என்றால் அதுதான் இல்லை.
விடுதலைப் புலிகள் இல்லையே தவிர அவர்கள் இருந்த காலகட்டத்தைப் போலவே பிரதான பிரச்சினைகள் அப்படியே இருக்கின்றன. அரசாங்கமோ பிற தரப்புகளோ இந்தப் பிரச்சினைகளைக் குறைக்கவும் தீர்க்கவும் முயற்சிக்கவில்லை. குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் இன்னும் முழுமைப்படுத்தப்படவில்லை. அரசியற் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. அரசியற் பிரச்சினைக்கான தீர்வு தேக்கநிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. தமிழ் பேசும் சமூகங்களின்மீதான பாரபட்சங்கள் நீங்கவில்லை. படைவிலகல் நிகழவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாடடையவில்லை. தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உறவு நிலை சீராகவில்லை. இடம் பெயர்ந்த மக்கள் முழுமையாக் குடியமர்த்தப்படவில்லை. வாழ்க்கைச் சுமைகள் குறையவில்லை. சட்டத்தால் சமூக உணர்வைக்கட்டுப் படுத்தும் நிலைமை மாறவில்லை. ஆகவே புலிகள் இல்லையே தவிர, பிரச்சினைகளும் பழைய நிலைமைகளும் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன.
எனவேதான் மேற்சொன்ன கேள்வி பொதுக்கேள்வியாக மக்களிடம் பரிமாணங் கொண்டிருக்கிறது. இதன் அர்த்தம் புலிகள் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வைக் கண்டிருப்பார்கள். மக்களெல்லாம் மகிழ்வோடும் நிம்மதியோடும் இருந்திருப்பார்கள். பிரச்சினைகளே இல்லாத உலகம் ஒன்று பிறந்திருக்கும் என்பதல்ல.


புலிகளைக் குற்றம் சுமத்தி, அவர்களின் மீது பழிகளைச் சுமத்திக் கொண்டிருக்கக்கூடியவாறு இன்று நிலைமை இல்லை என்பதே இங்கே கவனிக்க வேண்டியது. யாரும் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளுக்கு இப்பொழுது புலிகளின் அச்சுறுத்தல், தடை இல்லை என்பதே இங்கே கவனிக்கவேண்டியது. ஆகையால் பந்து இப்போது அவரவர் காலில் உள்ளது. அவரவர் அதை திறம்பட விளையாடவேண்டியதுதான்.


தமிழ் முஸ்லிம் மக்களின் உறவு நிலையில் புதிய சாத்தியங்களைக் காண முடியும் என்ற உற்சாகத்தை இன்றைய சூழல் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவைப் பலப்படுத்தும் வேலைகளைச் செய்வோருக்கு அச்சுறுத்தல் இல்லை என்பது இன்னொரு பெரிய விசயம்.

ஆகவே, தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான உறவு நிலையைப் பலப்படுத்துவதன் மூலம் இந்த இரண்டு சமூகங்களும் முதற்கட்ட நெருக்கடியைக் கடக்கலாம். அதேவேளை அடிப்படையில் தமிழ் முஸ்லிம் மக்கள் பலம் பெறலாம். ஆனால், இதற்கு தமிழர்கள் முஸ்லிம் மக்களின் அனைத்து உரிமைகளையும் நலனையும் பேணவும் அவற்றை உத்தரவாதப்படுத்தவும் வேணும். அதைப்போலவே முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களின் வாழ்வு குறித்து கரிசனைகளைக் கொள்வது அவசியம். இதை நடைமுறைப் படுத்தும் அரசியற் செயற்பாட்டாளர்கள் யார்?

அடுத்தது ஜனநாயகச் சூழலை வளர்த்தெடுப்பது, மாற்றுக் கருத்துகளுக்கும் அபிப்பிராயங்களுக்கும் திறந்த மனதோடு இடமளிப்பது, வசைபாடுதல்களையும் துரோகி தியாகி போன்ற சட்டகங்களுக்குள் செயற்பாட்டாளர்களை அடைப்பதையும் முத்திரை குத்தி வகைப்படுத்துவதையும் நீக்குவது, மறுவாழ்வுப் பணி உள்ளிட்ட முக்கிய நிலைமைகளில் ஒன்றிணைந்து நிற்பது போன்ற புதிய முறைச் செயற்பாடுகள் இன்று அவசியமானவை. இதைச் செய்வது யார்? இதெல்லாம் முன்சொன்ன கேள்விக்கான அடிப்படைக்காரணங்களாகும்.



00

தமிழ் ஊடகங்கள் கறுப்பு வெள்ளை அரசியலுக்குள் சிக்கியிருக்கும் வரை அவற்றினால் மக்களின் யதார்த்தமான பிரச்சினைகள் குறித்துச் சிந்திக்க முடியாது. உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் அப்பால் இந்த ஊடகங்கள் கற்பனாவாதத்திலும் தவறுகளைக் களையாமலும் இருக்கின்றன. வியாபார நோக்கத்திற்காக உயிர்களையும் குருதியையும் கண்ணீரையும் அவலங்களையும் தாராளமாகப் பயன்படுத்திப் பழகி விட்டன. வேறு சூழலில் என்றால், இந்த மாதிரி ஊடகங்களைக் கையாள்வதற்குக் கூச்சப்படுவார்கள். ஆனால், தமிழில் இந்தக் கூச்சம், நாகரீகம் எல்லாம் கிடையாது.


நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பாணியில் - எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஊடகங்களை நடத்தும் சமூகம் என்றால், அது ஈழத்தமிழ்ச் சமூகமாகத்தானிருக்கும்.
ஊடக அறநெறி, தொழில்முறைப் பொறுப்பு, தொழில் நேர்த்தி எல்லாம் தமிழ் ஊடகங்களிடம் கிடையவே கிடையாது. அப்படியிருந்திருந்தால் இப்படித் தமிழ் ஊடகங்கள் சீரழிந்திருக்காது. சில ஊடகங்கள் இதற்கு விதிவிலக்காக இருந்தாலும் அவர்களால் ஒரு பிரத்தியேக வெளியை உருவாக்க முடியவில்லை. சிங்கள இனவாதத்துக்குப் பதிலாக தமிழ் இனவாதத்தை வளர்ப்பதிலேயே தமிழ் ஊடகத்தின் பொதுப் போக்கு இருக்கிறது.
 
எனவேதான் கறுப்பு வெள்ளை அரசியல் இந்த ஊடகங்களில் பேணப்படுகிறது. கறுப்பு வெள்ளை அரசியலில் ஒரு போதும் விரிந்த பார்வைக்கு இடமில்லை. விமர்சனங்களுக்கு இடமில்லை. நியாயங்களுக்கு இடமில்லை. இந்த நிலை இப்படியே வளர்ந்து உண்மைக்கும் இடமில்லாமற் போய் விடுகிறது.

இதனால், தமிழ் பேசும் மக்களின் அரசியற் குறைபாடுகளைப்போலவே தமிழ் ஊடகங்களின் குறைபாடுகளும் இருக்கின்றன. இந்த ஊடகங்களோ முறையான ஜனநாயகச் சூழலை தமிழ் ஊடகத்திலும் அரசியலிலும் வளர்த்திருக்கின்றனவா? அல்லது புதிய விவாதங்களுக்கான வாசல்களையாவது திறந்திருக்கின்றனவா? அல்லது நெருக்கடியான கட்டங்களில் அவற்றை எதிர்கொள்ளும் வகையில் மக்களைத் தயார்படுத்தும் காரியங்களுக்குப் பின்னணியாக இருந்திருக்கின்றனவா? அல்லது போரினாலும் அகதி வாழ்வினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளைப் பற்றிய விழிப்புணர்வை இந்த ஊடகங்கள் தமிழ் பேசும் சமூகங்களிடம் ஏற்படுத்தியிருக்கின்றனவா? அல்லது, அரசியல், பண்பாடு, மனிதாபிமானப் பணிகள் போன்றவற்றில் ஒரு அழுத்தத்தரப்பாக இந்த ஊடகங்கள் பணியாற்றக்கூடிய ஆலோசனை வழங்கக் கூடிய நிலையைப் பெற்றிருக்கின்றனவா?

அப்படியெல்லாம் நடந்ததாக இல்லையே! ஆனால், விடுதலைக்காகப் போராடிய சமூகங்கள் என்றவகையிலும் பெரும் அழிவுகளைச் சந்தித்த சமூகங்கள் என்றவகையிலும் இன்னும் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சமூகங்கள் என்ற வகையிலும் இந்த ஊடகங்கள் எப்படிச் செயற்பட்டிருக்க வேண்டும்?


ஆகவே தமிழ் பேசும் சமூகங்களின் மனதில் இருக்கும் பொதுக்கவலைகளுக்கும் பொதுக்கேள்விகளுக்கும் விடைகாண்பது என்பதே புதிய அரசியல் நடவடிக்கைதான். அ ந்த அரசியல் நடவடிக்கை என்பது அரசாங்கத்தை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருப்பதை விடுத்து புதிய அரசியற் பாதையை வழிமுறையை செயற்படு நிலையைக் கொண்டதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வெற்றி வாய்ப்புகளை அரசுக்கும் அதன் அதிகார வர்க்கத்துக்கும் கொடுத்துக் கொண்டேயிருப்பதாகிவிடும். மக்களைத் தொடர்ந்தும் தோற்கடிக்கக் கூடாது. அப்படித் தோற்கடிக்கவும் முடியாது. அதன் ஒரு வெளிப்பாடே மக்களிடம் எழுந்துள்ள இந்தப் பொதுக் கவலைகளும் பொதுக் கேள்விகளும்.
 00

நன்றி- எதுவரை, புகைப்படம் - இணையம்

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB