கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

சொல்லும் பொருளும் மனமும் அருள்வீர்!

Monday 9 January 2012















கடந்த 2011 ஆம் ஆண்டின் இறுதி வாரத்தில் மேலும் ஒரு சிறுவர் இல்லம் வன்னியில் - முல்லைத்தீவில் - திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஆண்டின் தொடக்கத்தில் - இந்த வாரம் - கிளிநொச்சியில் மேலும் ஒரு முதியோர் இல்லம் புதிதாகத் திறக்கப்படுகிறது.

இது எதனைக் காட்டுகிறது? சமூகத்தில் ஆதரவற்றோரின் நிலை அதிகரித்துள்ளது. அவர்களைப்பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களைப் பராமரிக்கும் முயற்சிகள், அந்த அரும்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைத்தானே!

வன்னியில் நடந்த போர் அங்கே, ஆதரவற்றோரையும் உதவி தேவைப்படுவோரையும் பெருக்கியுள்ளது. ஆனால், இந்தத் தேவைகளுக்கான உதவிகளைச் செய்வோரை அது பெருக்கியுள்ளதா என்றால், சற்று வருத்தத்துடன்தான் இதற்கான பதிலைச் சொல்ல வேண்டியுள்ளது.
உதவிகளும் ஆதரவும் தேவைப்படும் அளவுக்கு அவற்றைச் செய்வோரின் தொகை குறைவு.

ஆதரவு தேவைப்படுவோருக்கு உதவுவதே சிறந்த பணி. தொண்டிற் சிறந்தது, தேவைப்படுவோருக்குத் தேவைப்படும் காலத்தில் செய்யும் பணியே!

எனவேதான் ‘காலத்திற் செய்யும் பணி, ஞாலத்திற் சிறந்தது’ என்று சொல்வார்கள். இடமறிந்து, நிலையறிந்து செய்யும் உதவியே பேருதவியாகும்.
போர் எப்போதும் வேர்களை அறுத்தெறியும். சிதைவுகளையும் அழிவுகளையும் ஏற்படுத்தும். அதிலும் நவீன போர்கள் மிக அதிகமான சேதாரங்களை ஏற்படுத்துவன. நவீன போர்களில் அதிக சேதங்களையும் அழிவுகளையும் சந்திப்பவர்கள் பொதுமக்களே.

இவர்களே, பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். போர்ப்பயிற்சியோ, பாதுகாப்புக்கான ஆயுதங்களோ இல்லாத நிலையில் இருப்பவர்களும் இவர்களே.

மட்டுமல்ல, நவீன போரானது, வெடிபொருட்களை ஆதாரப் பொருளாகக் கொண்டிருப்பதால், அதன் தாக்கம் போர்க்களத்துக்கு அப்பாலும் ஏற்படுகிறது. இதைவிடப் பொது மக்களை மையப்படுத்தி, அவர்களை இலக்கு வைத்துத் தாக்குதலை நடத்தும் போர் முறையில் மக்களுக்கே அதிக சேதமேற்படுகிறது.
முதலாம், இரண்டாம் உலகப்போர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் அந்தப் போர் நடந்த நாடுகளில் மிக உச்ச நிலையில் இருந்தன. மனித வரலாறு கண்டிராத அளவுக்கிருந்த அந்தத் தாக்கங்களினால், லட்சக்கணக்கான சனங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இவற்றை எப்படி நிவர்த்தி செய்வது என்றே தெரியாத நிலையில் திணறின அரசுகள். குறிப்பாகப் போரில் ஈடுபட்ட அரசுகள். மேலும் சமூக ஆர்வலர்களுக்கும் இந்த நிலை ஒரு சவாலாகவே இருந்தது.

இந்த நிலையானது மனித குலத்துக்கே பெரும் சவாலை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்டோரை அந்தப் பாதிப்புகளிலிருந்து மீட்டெடுப்பதற்காகச் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டிய அவசியமேற்பட்டது மனித குலத்திற்கு.
இதன் விளைவுகளாகவே, பல்வேறுபட்ட தொண்டு அமைப்புகள் தோற்றம்பெற்றன. மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்காக அன்று தோற்றம் பெற்ற அமைப்புகளே, இன்று உலகெங்கும் மனித நேயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இலங்கையில் போர் நடந்த வேளையிலும் இப்போதும் தொண்டாற்றிக் கொண்டிருப்பவையும் இந்த அமைப்புகள்தான்.

(வெள்ளைக்காரன் - அந்நியநாட்டுக்காரன் எல்லாம் உதவுகிறான், ஆனால், எங்கட சொந்த உறவுகள்மட்டும் ஏதேதோ காரணங்களைச் சொல்லிக் காலத்தைக் கடத்தித் தங்களின் கைகளை இறுகப் பொத்திப் பிடிக்கின்றன. மனம் விரியாததே இதுக்கெல்லாம் காரணம். விடுதலையை உண்மையாக இவர்கள் விரும்பியிருந்தால், இவர்களிடம் நிச்சயமாக மனவிரிவு ஏற்பட்டிருக்கும். பாசாங்கு செய்பவர்களிடம் எப்படி மனவிரிவு ஏற்படும்?’ என்று கேட்கின்றார் வன்னியில் ஒரு முதியவர்.)

போரின் பாதிப்புகளுக்கு அப்பால், இயற்கை அனர்த்தம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளைச் சந்திக்கும் மக்களைப் பராமரிப்பதிலும் இந்த அமைப்புகளின் பணியும் பங்களிப்பும் உள்ளது. அதாவது, அனர்த்தமோ இடரோ எந்த வகையில் வந்தாலும் அவற்றாற் பாதிக்கப்படும் சனங்களைப் பராமரிப்பது, பாதுகாக்க முற்படுவது, ஆதரிப்பது, இத்தகைய பணிகளினூடாக பாதிக்கப்பட்டோரின் உளநிலையைச் சீராக்கி அவர்களை இயல்பு வாழ்வில் மேம்பட வைப்பதே இந்தத் தொண்டு அமைப்புகளின் பணியாகும்.

இத்தகைய பணியை எந்தச் சமூகம் முன்னின்று செய்ய முனைகின்றதோ அதுவே பண்பாட்டிற் சிறந்த சமூகமாகும். மனிதாபிமானமும் மனித நேயமுமே சிறந்த ஒரு பண்பாட்டின் அடிப்படைகளாகும். இவை வரண்டநிலையில் இருக்கும் எந்தச் சமூகமும் தனது பண்பாட்டை இழந்ததாகவே மாறும். இதற்குப் பிறகு, அந்தச் சமூகம் பண்பாட்டுப் பெருமைகளைப் பேசுவதால் பயனே இல்லை.

ஆனால், போரை உச்சநிலையில் நடத்திய, அதை ஆதரித்த ஈழத்தமிழ்ச் சமூகமும் இலங்கை அரசும் போரினாற் பாதிக்கப்பட்ட சனங்களைப் பராமரிக்கும் விதம் மிகக் கவலைக்கும் கண்டனத்துக்கும் உரியதாகவே இருக்கிறது. அதிலும் போரினால் அநாதரவாக்கப்பட்ட மக்களின் நிலையைப் பற்றிய கரிசனை இந்தத் தரப்புகளுக்குப் போதாது என்றே கூற வேண்டும். (பண்பாட்டிலும் வரலாற்றிலும் தாம் சிறந்த சமூகத்தினர் என்று இவர்கள் கூறிக்கொண்டிருப்பது எதன் அடிப்படையில்?).

பிரதானப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய இந்தப் பணி பாராமுகமாக்கப்பட்டுள்ளது. அல்லது சில சில்லறைத் தரப்பினர் இந்தப் பாதிப்புகளையும் பாதிக்கப்பட்டோரையும் வைத்து அரசியல் நடத்துகிறார்கள். அல்லது வியாபாரம் செய்கின்றனர். இவர்களிற் பெரும்பாலானோர் புலம்பெயர் நாடுகளில் இருக்கும் அரசியற் செயற்பாட்டாளர்களும் சில இணையத்தளத்தினருமே!

இதனால், பாதிக்கப்பட்டோர் மனிதாபிமான எல்லைகளுக்கு அப்பால், நீதிக்கும் தர்மத்துக்கும் அப்பால், மிக மோசமான முறையில் விற்பனைப் பண்டங்களாகவும் காட்சிப் பொருட்களாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இத்தகையதோர் அவலப் பின்னணியில், இந்த அவலநிலைக்கு மாறாகவும் இந்த அவலப்பரப்பிலிருந்து பாதிக்கப்பட்டோரை மீட்டுப் பராமரிப்பதாகவும் சில காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அத்தி பூத்தாற்போல என்பார்களே, அதைப்போல அருமையாகச் சில காரியங்கள்.

குறிப்பாக யாழ்ப்பாணத்திலுள்ள சில முக்கியமான – முன்னணிப் பாடசாலைகள், பாதிப்புக்குள்ளான சிறார்களை, போருக்குப் பின்னரான சூழலில் பொறுப்பேற்று அவர்களுடைய கல்வியை வழங்கி வருகின்றன. சென் ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி போன்ற இதில் முன்னுதாரணமானவை.

இதைப்போல அங்குள்ள சில சிறார்  இல்லங்களும் குறிப்பிட்ட தொகையிலான ஆதரவற்ற சிறுவர்களைப் பொறுப்பேற்று அவர்களுடைய எதிர்காலத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

ஆனால், இந்தத் தொகை மிகக் குறைவானவே. பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் - உதவி தேவைப்படுவோரின் தொகையுடன் ஒப்பிடும்போது இவ்வாறு பொறுப்பெடுக்கப்பட்டோரின் அளவு மிகமிகக் குறைவே.

வன்னியில் - கிளிநொச்சி மாவட்டத்தில் ‘மகா தேவ ஆச்சிரமம்’ மற்றும் ‘குருகுலம்’ போன்றவற்றில் சுமார் முன்னூறுக்கும் அதிகமான பிள்ளைகள் பராமரிக்கப்படுகிறார்கள். இந்த இல்லங்களில் ஆண்களும் பெண்களும் தனித்தனியாகவே பராமரிக்கப்படுகின்றனர். இந்த இல்லங்களுக்கான உதவிகளைப் பலர் முன்வந்து செய்வது குறிப்பிடத்தக்கது.

தவிர, முல்லைத்தீவு மாவட்டத்தில் - முத்தையன் கட்டில் இயங்கும் அன்பு இல்லத்தில் (புனித பூமி இல்லத்தில்) சுமார் அறுபது வரையான சிறார்கள் பொறுப்பேற்கப்பட்டுப் பராமரிக்கப்படுகிறார்கள். இந்தத் தொகை வரவர அதிகரித்து வருவதாக அங்குள்ள நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த இல்லத்துக்கான செலவீனங்களைப் பெருமளவிலும் புலம்பெயர் நாடுகளிலுள்ள உதவும் மனப்பாங்குடையோரே செய்து வருகின்றனர். இவர்கள் எந்த வகையான அரசியலையும் விட பாதிக்கப்பட்ட மக்களுக்கு – அநாதரவான சிறார்களுக்கு உதவுவதையே தங்களுடைய பிரதான அக்கறையாகக் கொண்டிருக்கின்றனர். சிலர் நேரிலேயே இந்த இல்லத்துக்கு வந்து நிலைமையைப் பார்த்து தங்களின் பங்களிப்பு எல்லையை விரிவாக்கம் செய்கின்றனர். அத்துடன், நிலைமையை நேரிற் பார்த்துச் செல்வதால், இவர்கள் இன்னும் பலரையும் இந்த இல்லத்துக்கான பங்களிப்பாளர்களாகவும் ஆக்குகின்றனர்.

‘முதலில் சொந்த உறவுகளுக்கு உதவுவோம். அவர்களைப் பராமரிப்போம். சிதைவு நிலையில் உள்ள சமூகத்தை நிலைப்படுத்துவோம். மீள் நிலைப்படுத்தப்படும் ஒரு சமூகத்தினாலேயே அதனுடைய எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும்.

இதற்கு ஆதரவும் வழிகாட்டலும் தேவை. முக்கியமாக உணவும் கல்வியும் அவசியமானவை. இதைச் செய்வோம்.  இதற்கு உதவுவோம்’ என்பதாக இருக்கிறது இவர்களுடைய நோக்கமும் சிந்தனையும் அபிப்பிராயமும்.
‘இந்த அடிப்படையில் உதவிகள் கிட்டினால், இளைய தலைமுறையை நல்லமுறையில் - சிதைவின்றி ஆற்றுப்படுத்தி வளர்த்தெடுக்க முடியும் என்று சொல்கிறார் அன்பு இல்லத்தின் நிர்வாகி.

‘முக்கியமாக கல்வியை இவர்களுக்கு ஊட்ட வேண்டும். அதற்கு ஏற்றவாறு இவர்கள் கல்வி கற்பதற்கான சூழல் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். வன்னியில் கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளில் கற்கின்ற சாதாரண மாணவர்கள் கூட ஒழுங்காகப் பாடசாலைகளுக்குச் செல்வதில்லை. அதற்கான வீட்டுச்சூழலும் இவர்களுக்கில்லை.

மேலும், இங்கே போதிய ஆசிரிய வளமும் இல்லை. இந்த நிலையில் இந்தப் பகுதிச் சிறார்கள் மிக மோசமான எதிர்காலத்தையே தங்கள் வாழ்வில் சந்திக்கும் அபாயமுண்டு. ஆகவே, இதைக் கவனத்திற் கொண்டே நாம் இந்த இளைய தலைமுறையைப் பொறுப்பெடுத்துப் பராமரிக்கும் பணியைச் செய்யத்தீர்மானித்தோம்’ என்கிறார் மேலும் இந்த நிர்வாகி.

‘நடந்த போரினால், உழைப்பாளர்களையும் தலைமை உறுப்பினர்களையும் இழந்த நிலையிலேயே வன்னியில் பெரும்பாலான குடும்பங்கள் இருக்கின்றன. இந்தக் குடும்பங்களினால், தங்களுடைய இளைய தலைமுறையைச் சீராகப் பராமரிக்க முடியாது.

மட்டுமல்ல, இன்னும் இந்தப் பகுதிகளுக்கு நல்ல வீதிகள் இல்லை. மின்சாரம் இல்லை. தொடர்பாடல் வசதிகள் இல்லை. இந்த மாதிரியான பற்றாக்குறைகள் எல்லாம் இளைய தலைமுறையையே அதிகமாகப் பாதிக்கிறது. ஏனெனில் இவர்களே எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டியவர்கள்.

தங்களுடைய எதிர்காலத்துக்கான தயாரிப்புகளை, ஆற்றல் மேம்பாடுகளை இவர்களுக்கு இப்போதே செய்யவில்லை என்றால், இந்தத் தலைமுறையினர் நிச்சயமாக நாளை சீரழிந்து போகும் நிலையே ஏற்படும்.

இவர்களுக்கான பாதுகாப்புத் தொடக்கம், கல்வி மற்றும் இதர அடிப்படைத் தேவைகளை உருவாக்கிக் கொடுப்பதே இன்றைய முக்கியமான மனிதாபிமானப் பணியாகும். அதுவே மிகச் சிறந்த சேவையாகவும் அமையும்.

இதைச் செய்வதே பாதிக்கப்பட்ட சமூகத்துக்கான அரசியற் செயற்பாடாகவும் இருக்கும்’ என வன்னியில் உள்ள மூத்த ஆசியரியர்கள் தெரிவிக்கின்றனர்.
‘போருக்காகவும் விடுதலைப் போராட்டத்துக்காகவும் தம்மை அர்ப்பணித்த ஒரு பிரதேசத்தின் மக்கள் தங்கள் சக்திக்கு மீறி, அளவுக்கதிகமான விலைகளைக் கொடுத்ததன் விளைவே இந்த அநாதரவான நிலைக்குக் காரணம்’ என்று துக்கப்படுகிறார் வன்னியிலுள்ள ஒரு சமூகச் செயற்பாட்டாளர்.

இத்தகைய ஒரு நிலையில், அன்பு இல்லைத்தைப்போல, பெண் சிறார்களுக்கான இன்னொரு இல்லத்தை – ‘பாரதி இல்லம்’ என்ற பெயரில் கடந்த வாரம் ஆரம்பித்திருக்கிறார்கள் அன்பு இல்லத்தைச் சேர்ந்த நிர்வாகத்தினர். இந்த இரண்டு இல்லங்களையும் வடக்குக் கிழக்குப் புனர்வாழ்வு அபிவிருத்தி நிறுவனமே மையமாக நின்று பராமரிக்கிறது.
இந்தப் பாரதி இல்லம் முன்னர் - போர்க்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளையில் இயங்கியது. பின்னர் செயலிழந்திருந்தது. இப்பொழுது இந்த இல்லம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முன்னரை விட இப்போதே இந்த இல்லத்தின் தேவை அதிகமாக உள்ளது. இந்த இல்லம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று சொல்வதையும் விட, இளைய தலைமுறைப் பிள்ளைகளுக்கான ஆதரிப்பு மையங்களின் தேவைகள் அதிகமாக உள்ளன என்பதே புரிதலுக்கானது.

முதலாம் இரண்டாம் உலகப் போர்களுக்குப் பின்னர், அதிகமான தொண்டு நிறுவனங்களும் தொண்டுப் பணியாளர்களும் மனிதாபிமான அடிப்படையில் அந்த நாடுகளில் பெருகியதைப் போல ஒரு நிலை ஈழத்தமிழ்ச் சமூகத்திலும் உருவாகியிருக்க வேணும்.

ஆனால், துரதிரஷ்டவசமாக அப்படியான பொது அமைப்புகள் எதுவும் மனிதாபிமான அடிப்படையில் உருவாகியதாக இல்லை. உருவாகிய அமைப்புகளைப் பற்றிய குறைகளைப் பேசுவதிலும் அவற்றைப் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பதிலும் இருக்கின்ற ஆர்வம் பாதிப்புக்குள்ளாகிய மக்களின் நலனில் இருக்கவில்லை.
இது கண்டிக்கப்பட வேண்டி ஒரு செயலாகும். திருத்தப்படவேண்டி ஒரு முக்கிய குறைபாடாகும்.

வீடு எரியும்போது அதை அணைப்பதற்குப் பதிலாக அது எரிவதைப் பற்றிய விமர்சனங்களைச் செய்வதும், அது எரிவதற்கான காரணங்களைப் பற்றி ஆராய்வதும் குற்றஞ்சாட்டுவதும் பொருத்தமானதல்ல.

வேண்டுமானால், வீட்டைப் பாதுகாத்துக் கொண்டு விமர்சனங்களை முன்வைக்கலாம். அப்போது வீடும் பாதுகாக்கப்பட்டிருக்கும். அதன் மீதான விமர்சனத்தை வைப்பதற்கான தகுதியும் கிடைத்து விடும்.

இத்தகைய ஒரு புரிதல் நிலையே இன்று தமிழ்ச் சூழலுக்கு அவசியமாக உள்ளது. இதுவே இன்றைய அவசியமான அரசியற் பணியாகவும் இருக்கிறது.
இந்த இளைய சமூகத்தினரே நாளைய பிரஜைகளாக வளரப் போகிறார்கள். இன்று இவர்களை யாரும் கவனிக்க வில்லை என்றால், நாளை இவர்கள் சீரழிந்த நிலையில் காணப்படுவர். அல்லது இன்றைய நிலையில் - உதவி தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அந்த உதவியைச் செய்யாததையிட்ட தரப்பினர் மீதான வன்மத்தோடே இவர்கள் வளருவர்.

இது எதிர்காலத்தில் வன்முறைச் சமூகமொன்றை நாம் எதிர்கொள்வதற்கான அடிப்படையையே ஏற்படுத்தும்.

ஆகவே, ‘காலத்திற் செய்யப்படும் உதவி, சிறிதெனினும் ஞாலனத்தால் மானப் பெரிது’ என்ற வள்ளுவரின் அறவாக்கினை, அரசியல் வாக்கினை, மனிதாபிமான வாக்கினை மனங்கொள்ளவேண்டும் நாம்.

வளரும் பயிர்களுக்கு நீர்வார்ப்பது பயிரை வளர்ப்பது மட்டுல்ல, சமூகத்துக்கான விளைச்சலைக் காண்பதற்கான ஒரு அருஞ்செயலாகுமல்லவா! அதுதான் அறிவியற் செயற்பாடுமாகும்.

ஒரு வகையில் இதுவும் நமது அரசியற் பணிதான். இன்னொரு வகையில் இது அறப்பணி. மனிதாபிமானப்பணி. உரிமையான பணி. இதையெல்லாம் விட்டு விட்டு போலித்தனமாகப் தேசியப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக் கவனத்தைத் திசை திருப்புவது என்பது, உண்மை நிலைமையை மறைக்கும் தந்திரோபாயமாகவே எதிர்காலத்திற் காணப்படும்.

பொய்களின் விளைச்சல்களும் தவறுகளின் பெருக்கங்களும் எப்போதும் பின்னடைவுகளையும் உட்பிளவுகளையுமே உருவாக்கும்.

ஆகவே இப்போது நாம் தவறுகளைத் திருத்திக் கொண்டு. காலப்பணிகளைச் செய்வோம். இல்லையெனில் இந்தத் தவறை வரலாறு மன்னிக்காது.

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB