கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

உபாயமும் அதிகாரமும் -02

Monday 9 January 2012














இரண்டாம் உலகப் போரின்போது யப்பானின் மீது அணுக்குண்டை வீசித் தாக்கியது அமெரிக்கா. இதற்குக் காரணம், அப்போது யப்பான் ஜேர்மனியோடு சேர்ந்து போரில் ஈடுபட்டதே. இதை அமெரிக்கா குற்றமாகக் கருதியது.

இதற்கான தண்டனையாகவே யப்பானின் மீதான அமெரிக்கத் தாக்குதல்.

இந்தத் தாக்குதலால் யப்பானின் இரண்டு முக்கிய நகரங்களான ஹிரோஸிமாவும் நகஸாகியும் அழிந்தன. இந்த அணுக்குண்டின் பாதிப்பை இப்போதும் இந்த நகரங்களில் காணலாம்.

யுத்தம் முடிந்து விட்டது. காலமும் மாறிவிட்டது. அரசியற் போக்குகளும் மாறிவிட்டன. இப்போது யப்பானும் அமெரிக்காவும் நண்பர்கள். பல விசயங்களில் கூட்டாளிகள். இது எப்படி நிகழ்ந்தது?

அதேவேளை, இன்னும் யப்பானில் அமெரிக்காவின் கடற்படைத்தளங்களும் விமானப்படைத்தளங்களும் உள்ளன. அதற்காக அமெரிக்காவின் அடிமையாக – கீழ்ப்படிந்திருக்கவில்லை யப்பான்.

இலங்கையின் சமாதானப் பேச்சுகளின்போது அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தூதுவர்களில் முக்கியமானவர் யஸ_ஷி அகாஸி. இவர் வன்னிக்கும் வந்து சென்றார். வந்தவர் வன்னியில் பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்திப்பார். அப்போது வன்னியில் அகாஸி சொன்னவை முக்கியமானவை. குறிப்பாக, அவை பெரும்பாலும் அரசியல் உபாயங்கள். இலங்கைத் தமிழர்கள் தங்கள் கவனத்திற் கொள்ள வேண்டிய உபாயங்கள்.

00
அகாஸி சொன்னவை:-

“உலகத்திலேயே அதிக இழப்பையும் அதிகமான கொடுமையையும் சந்தித்த மக்கள் நாங்கள்(யப்பானியர்கள்). இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா நடத்திய தாக்குதலின் விளைவுகளை இன்னும் நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் சந்தித்த இழப்பின் அளவுக்கு இந்த உலகத்தில் வேறு யாரும் அதிக இழப்புகளையோ கொடுமையையோ சந்திக்கவில்லை. ஆனால், நாங்கள் இந்தத் தாக்குதலை நடத்திய அமெரிக்காவுடன் இப்பொழுது நண்பர்களாக இருக்கிறோம்.

எதிரியுடன், தாக்குதல் நடத்தியவர்களுடன், அழிவுகளைத் தந்தவர்களுடன், மன்னிக்கவே முடியாதவர்களுடன் எப்படி நட்புக் கொண்டாட முடியும்? என்று நீங்கள் கேட்கலாம். எங்களிடமும் இந்தக் கேள்வி இருக்கிறது.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் - யப்பானின் எதிர்காலம் குறித்துச் சிந்திக்கும் போது, புதிய உலக ஒழுங்கின்படி நாங்கள் அமெரிக்காவுடன் நட்புக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது.

ஆனால், அதை அங்கீகரிப்பதற்கு யப்பானிய மக்கள் தயாரில்லாத நிலையிலேயே இருந்தனர். காரணம், அந்த அளவுக்கு யப்பானியர்களின் மனதில் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது. மனிதாபிமானமற்ற அந்தத் தாக்குதலை யாரும் மன்னிக்கத் தயாராக இல்லை. அப்படி அமெரிக்காவுடன் நட்பு வைத்துக் கொள்வதென்பது யப்பானை அடிமை நிலைக்கே கொண்டு செல்வதாக இருக்கும் என பெரும்பாலான யப்பானியர்கள் கருதினார்கள். அவர்கள் அப்படிக் கருதியதில் தவறும் இல்லை.

அந்த அளவுக்கு அமெரிக்காவின் மீது வெறுப்பும் நம்பிக்கையின்மையும் யப்பானிய மக்களுக்கிருந்தது. ஆனால், நாங்கள் எதிர்கால யப்பானைப் பற்றியே சிந்தித்தோம். எதிர்கால யப்பானைப் பற்றிச் சிந்திப்பதாக இருந்தால், விரும்பியோ விரும்பாமலோ நாங்கள் எங்கள் கசப்பான கடந்த காலத்தை மறக்க வேண்டியிருந்தது.

கடந்த காலத்தைப் பற்றிச் சிந்திப்பதாக இருந்தால், எதிர்காலத்தைச் சிறப்பாக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டோம். ஆகவே எதிர்கால யப்பானுக்காக கசப்பான – மறக்கவே முடியாத – மன்னிக்கவே முடியாத கடந்த காலத்தை மறக்கத்தான் வேண்டும் என்று யப்பானிய மக்களை உணரவைத்தோம். இது இலகுவான காரியமாக இருக்கவில்லை.

ஏனெனில், அந்த அளவுக்கு ஒவ்வொரு யப்பானியரும் அமெரிக்காவினால், வஞ்சிக்கப்பட்டிருந்தனர். எந்தத் தலைமுறையிலும் மன்னிக்கவோ மறக்கவோ முடியாத காயமாக இருந்த நாகஸாகி, ஹிரோஸிமா தாக்குதல்களை எவரும் இலகுவாக மறந்து விடமுடியாதிருந்தனர்.
ஆனாலும் நாங்கள் யதார்த்தத்தைப் பற்றி, எங்களுக்கிருந்த அவசியத்தைப் பற்றிச் சிந்தித்தோம். எனவே எப்படியோ எங்கள் மக்களைத் தயார்ப்படுத்தி அமெரிக்காவுடன் நட்புக்குக் கரம் நீட்டினோம்.

அதற்காக நாங்கள் (யப்பானியர்கள்) அமெரிக்காவுக்கு விசுவாசிகளாகவோ அடங்கியவர்களாகவோ மாறிவிடவில்லை. யப்பானியர்களின் தனித்துவத்தையும் அவர்களுடைய அடையாளத்தையும் அவர்களுடைய முதன்மையையும் இன்று உலகம் வியப்போடு அங்கீகரித்துள்ளது. மிகக் குறுகிய காலத்திலேயே யப்பான் வளர்ச்சியடைந்து உலகத்தின் முதன்மைப் பட்டியலில் தன்னை இணைத்துக் கொண்டது.

இப்பொழுதும் அமெரிக்கத் தளங்கள் யப்பானில் இருக்கின்றன. இதை நாங்கள் அரசியல் ரீதியாக சுமையற்ற முறையில் மாற்றி வைத்துள்ளோம்.
யப்பான் இன்று சுயாதீனமான நாடாக, முதன்மை நாடுகளில் ஓரங்கமாக, உங்களுடைய பிரச்சினைகளைத் தீர்வுக் கொண்டுவர உதவும் நாடாக, இலங்கைக்கும் உதவும் நாடாக மாறியிருக்கிறது.

நான் இலங்கைக்கு ஒரு நண்பனாக, உதவும் ஆளாக, யப்பானியர்களின் பாடங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒருவராக, இந்த உலகத்தில் நன்மைகளையும் அமைதியையும் விரும்புகின்ற யப்பானியராக இங்கே வந்திருக்கிறேன்.

யப்பானியர்களின் அனுபவங்கள் உங்களுக்கும் பாடங்களாக, வழிகாட்டிகளாக இருக்கட்டும்.

உங்களைப் பொறுத்தவரை (இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை) யில் உங்களுடைய கடந்த காலத் துயரங்கள் மறக்க முடியாதவை. ஆனால், உங்களின் எதிர்காலத்துக்காக – எதிர்காலத்தின் நன்மைகளுக்காக நீங்கள் உங்கள் கடந்த காலத்தை மன்னிக்கவும் மறக்கவுமே வேண்டும்.

கடந்த காலத்தையும் விட எதிர்காலமே எப்போதும் பெறுமதியானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எதிர்காலம் என்பது உங்கள் இளைய சகோதரர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உரியது. அவர்களுக்கு நீங்கள் எதைக் கொடுக்கப் போகிறீர்கள். கடந்த காலத்தின் கறைகளையும் தேங்கிய கண்ணீர்த்துளிகளையுமா?

நிச்சயமாக அப்படி வேண்டாம். அவர்களுக்கு நிகரற்ற மகிழ்ச்சியான காலமொன்றைப் பரிசளியுங்கள். அந்தப் பரிசு உங்கள் திறமையாலும் சிந்தனையாலும் மனதாலுமே சாத்தியமாகும்.

இதற்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. நீங்கள் மக்களுக்கு நன்மைகளை நோக்கிச் சிந்திக்கக் கற்றுக் கொடுங்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியான – சுமைகளும் அபாயங்களும் இல்லாத ஒரு எதிர்காலத்தைப் பரிசாகக் கொடுத்தால் அதுவே போதும்..”

இப்படி அகாஸி சொன்னபோது, இதை அப்போது பலவிதமாக பலரும் மொழிபெயர்த்தார்கள். ‘அகாஸி ஒரு தந்திரப் பொறியை வைக்கிறார்’ என்றனர் சிலர்.

‘தமிழர்களைச் சிங்களவர்களிடம் சரணடையும்படி தந்திரமாகச் சொல்கிறார் அகாஸி’ எனச் சொன்னார்கள் வேறு சிலர்.

‘இது அடிமைச் சாசனமொன்றுக்கான புதிய விளக்கம். இதை மிக அழகாகச் சொல்லி ஏமாற்றுகிறார்’ என்று வேறு சிலர் கூறினர்.

‘இல்லை, அகாஸியின் கூற்றை நாங்கள் முழுதாகப் புறக்கணிக்க முடியாது. இவரைப் பரிசீலிக்கலாம்’ என்றனர் வேறு சிலர்.

இப்படியே பலவிதமான கருத்துகள் அகாஸியின் கூற்றுத் தொடர்பாக முன்வைக்கப்பட்டன. ஆனால், அகாஸி சொன்னதைப் போலவோ அவர் எதிர்பார்த்ததைப் போலவோ எதுவும் நடந்து விடவில்லை.
மாறாக பகை முற்றிப் பாதகமாகவே எல்லாம் முடிந்தன.

என்னைப் பொறுத்தவரையில் அகாஸி சொன்னவை ஒரு உபாயத்தின் பாற்பட்டவை. பெரும் அழிவையும் இழப்பையும் சந்தித்தவர்கள், அதிலிருந்து மீண்ட – எதிர்த்தரப்பை நட்புக் கொள்ள வைத்த, நட்புடன் நடப்பதற்கு இணங்க வைத்த, யப்பானைத் தனிமைப்படுத்த முடியாத அளவுக்கு புத்திபூர்வமாக்கிய அணுகுமுறையை அவர் சொன்னார்.

அகாஸி பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், இன்றைய உலகத்தில் அந்தச் சிறிய தோற்றமுடைய முதிய மனிதர் மிகச் சிறந்த இராசதந்திரியாகவே எனக்குத் தெரிகிறார்.

இந்த இடத்தில் பொருத்தம் கருதி வன்னியில் அப்போது நடந்த இன்னொரு நிகழ்ச்சியையும் சொல்ல வேணும்.

விடுதலைப் புலிகளிடன் நடந்த சந்திப்புகளின் போது அகாஸி பல விசயங்களைப் புலிகளிடமும் சொல்லியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகளின் அரசியற்றுறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வன் அகாஸியிடம் கேட்டார், “விடுதலைப் புலிகளை யப்பான் அங்கீகரிக்க வேண்டும். அதுவே தமிழ் மக்களுடைய விருப்பமும் தலைவர் பிரபாகரனின் விருப்பமும்” என்று.

இதற்குப் பதிலளித்த அகாஸி, “யப்பான் என்பது ஒரு பெரிய கப்பல். அதைச் சட்டெனத் திருப்பிவிட முடியாது” என்றார்.

இதன் அர்த்தம் பலவாக இருக்கலாம். ஆனால், முக்கியமாக யப்பான் என்ற நாட்டின் தீர்மானத்தையும் வெளியுறவுக் கொள்கையையும் சட்டென மாற்றிக் கொண்டுவிட முடியாது. யப்பான் பல நாடுகளுடன் தொடர்புகளையும் உறவுகளையும் கொண்டுள்ள நாடென்பதால், அவற்றைப் பாதிப்படையாத வகையில் பேணிக்கொண்டு, புலிகளை அங்கீகரிப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம். ஆனால், அதற்குக் கால அவகாசமும் கொஞ்சக்கால நட்புறவுப் பயணமும் (நம்பிக்கையும்) தேவை என்பதாக இருந்தது.

அகாஸியின் இந்தப் பதிலைத் தமிழ்ச்செல்வன் திரு. பிரபாகரனிடம் சொன்னார். இதைக் கேட்ட பிரபாகரன், சற்றுக் கோபத்துடன் அகாஸியிடம் சொல்லும்படி சொன்ன பதில்:-

“அப்படியென்றால், அந்தக் (யப்பான் என்ற) கப்பலை இந்தத் துறைமுகத்தில் (புலிகளிடம் - தமிழ்ப்பகுதியில்) கட்டமுடியாது” என்று.

விளைவு? - இப்போது எங்களுக்குத் துறைமுகமே இல்லை.

பின்னர் அகாஸி 2011 இல் மீண்டும் கிளிநொச்சிக்கு வந்திருந்தார். அதுவும் புலிகள் அவரை வரவேற்ற அதே இடத்துக்கு அவர் வந்திருந்தார்.

அப்போது அவரைச் சந்தித்தேன். அவர் முன்னர் பேசிய எதையும் பேசவில்லை.

என்னை அடையாளங்கண்டு சிரித்தார். ஆனால், அவருடைய சிரிப்பில் மெல்லிய துக்கம் படிந்திருந்ததைக் கண்டேன்.

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB