கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

நிரந்தரப் படைமுகாம்கள்

Friday 30 December 2011

00


இலங்கையின் வரவு செலவுத்திட்டத்தில் அதிக செல்வாக்கைச் செலுத்துவது அச்சத்தின் காரணமாக உருவாகும் ஒருவகை உளவியலே. இதற்காகவே அது அதிக நிதி ஒதுக்கீட்டையும் மனிதவளப்பயன்பாட்டையும் பாதுகாப்புக்கெனக் கோருகிறது.

தற்போது வடக்குக் கிழக்கில் நிரந்தரப் படைமுகாம்களை அமைப்பதற்காக அரசு தீர்மானித்திருப்பதும் அதற்காகத் தனியாகவே நிதி ஒதுக்கீட்டைச் செய்திருப்பதும் இத்தகைய அச்சத்தின் காரணமாகவே.

மீண்டும் கிளர்ச்சிகளோ ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளோ நிகழலாம் என்ற அச்சத்தின் வெளிப்பாடே இது.

எந்த நிலையிலும் ‘எதிர்ப்பு முளைகள்’ மேற்கிளம்பிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையின் விளைவு இது.

இந்த முன்னெச்சரிக்கையின் உள்ளே வலைப்பின்னலாக இருப்பது அச்சமே.
உண்மையில் வடக்குக் கிழக்கில் மட்டுமல்ல, இலங்கை முழுவதுமே இராணுவ மயப்படுத்தப்பட்ட ஒரு சூழலே இன்றுள்ளது. இது இப்போதைக்கு நீங்கப் போவதும் இல்லை.

கடந்த காலத்தில், வடக்குக் கிழக்கிலிருந்து மட்டும் அரசுக்கு நெருக்கடிகளும் அபாயங்களும் ஏற்படவில்லை. தெற்கிலிருந்தும் அபாயங்கள் வந்திருந்தன. எனவே நாடு முழுவதையும் இராணுவக் கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதே அரசின் நோக்கமாகும்.

அரசுக்கு எப்போதும் எல்லோரின் மீதும் ஒரு அவநம்பிக்கை உண்டு. இந்த அவநம்பிக்கையே அச்சத்தின் காரணமாக உருவாகியதுதான். இது ஒரு தீரா நோயைப்போல நீடித்துக்கொண்டே செல்கிறது.

என்றபடியாற்தான், அது ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், கட்சிகள், அரசியற் செயற்பாட்டாளர்கள், மாற்றுச் சிந்தனையாளர்கள், தொழிற்சங்கங்கள், அறிவுசார் தொழிற்பாட்டாளர்கள் போன்ற அனைத்துத் தரப்பையும் தனக்குச் சார்பாக வைத்திருக்க முயற்சிக்கிறது. அல்லது தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிக்கிறது. அல்லது தன்னாற் கட்டுப்படுத்த முடியாத போது அவற்றை நிர்மூலமாக்க நினைக்கிறது.

ஆகவே, ஆட்சி பீடமென்பது அதனை அறியாமலே அச்ச உளவியல் நெருக்கடிக்குள் உட்பட்டுக் கொண்டு போகிறது. அல்லது அதற்குள் சிக்கிக் கொண்டே போகிறது. இவ்வாறான ஒரு நிலையிற் பயணிக்கும் எந்த அரசும், எந்தத் தரப்பும் மீண்டதாக வரலாறே இல்லை. எல்லாக் கதவுகளையும் மூடி மூடி இறுதியில் முற்றாகவே மூடுண்ட ஒரு நிலையையே இது சென்றடையும்.
இறுதியில் இது பேரழிவிற்தான் போய் முடியும்.

இதற்கு வரலாற்றில் ஏராளம் முன்னுதாரணங்கள் உள்ளன. அண்மைய நிகழ்கால வரலாற்றுண்மைகள்கூட இதற்குச் சான்று. ஏனெனில் மனித இயக்கம் எப்போதும் வெளியை நோக்கியே இயங்குகிறது. அது எத்தகைய மூடல்களையும் ஒரு போதும் ஏற்றுக்கொள்வதில்லை.

இலங்கைக்கான அச்சம் அல்லது அபாயம், வெளித்தரப்பினால் ஏற்படவில்லை. பதிலாக உள்நாட்டுச் சக்திகளாலேயே ஏற்படுகிறது.
அதாவது, அரசு தன்னுடைய சொந்தக் குடிமக்களைக் குறித்தே அச்சமடைகிறது. குடிமக்களிலிருந்து உருவாகக் கூடிய அதிருப்திக்கும் கிளர்ச்சிக்கும் போராட்டத்துக்குமே அது அச்சடைகிறது.

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் சொந்தக் குடிமக்களுடன்தான் அரசு மோதிக் கொண்டிருக்கிறது. சொந்தக் குடிமக்களுடன்தான் அது யுத்தம் செய்து கொண்டிருக்கிறது. சொந்தக் குடிமக்களைத்தான் அது கொன்று கொண்டிருக்கிறது. சொந்தக்குடிமக்களைக் கொன்ற குற்றங்களுக்காகவே அது சர்வதேச அரங்கில் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் கொல்லப்பட்ட மக்கள் அல்லது பலியாகிய சனங்களின் தொகையையும் விட ஐநூறு ஆண்டுகால அந்நியரின் ஆட்சியில் கொல்லப்பட்டவர்கள் குறைவு. சிந்தப்பட்ட இரத்தமும் குறைவு.
இப்போதுகூட சொந்தக் குடிமக்களைக் குறித்தே அது அச்சடைகிறது.

எதிர்காலத்திலும் சொந்தக் குடிமக்களின் தரப்பிலிருந்தே தனக்கு அபாயம் வரலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே தற்போது அதிக நிதி ஒதுக்கீட்டைப் பாதுகாப்புக்காக ஒதுக்க வேண்டிய நிலையில் உள்ளது.
ஆகவே சொந்த மக்களைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்காகவே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்த அடிப்படையில் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து நிகழுமானால், அது நாட்டைப் பொருளாதார அடிப்படையில் மட்டும் பாதிக்காது.

ஜனநாயக ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். சுதந்திரத்துக்கும் இயல்புச் சூழலுக்கும் ஒவ்வாமைகளை ஏற்படுத்தும்.

இன்று இலங்கையில் நடந்திருப்பது இதுதான். தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதும் இதுதான்.

வெளிச் சக்திகளுடன் மோதுவதற்கோ, வெளியிலிருந்து வரும் அபாயங்களைத் தடுப்பதற்கோ இந்தப் பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்படவில்லை. அப்படிப் பயன்படுத்தப்படப்போவதுமில்லை.

இலங்கையுடன் வெளித்தரப்பு மோதுவதற்கான ஒரு சூழல் உருவாகும் என்றால், அது பிராந்திய வல்லரசுகளாகவோ அல்லது சர்வதேச வல்லரசுகளாகவோதான் இருக்கும்.

அத்தகைய ஒரு நிலை வருமானால், அந்த மோதற்களத்தில் என்னதான் முயன்றாலும் படைத்துறை சார்ந்த நடவடிக்கையால் இலங்கை தாக்குப் பிடிக்கவே முடியாது.

ஆகவே பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடென்பது, நிச்சயமாக வெளிச்சக்திகளின் அபாயத்தைத் தடுப்பதற்கானதல்ல. அது, உள்நாட்டில் இருந்து உருவாகக் கூடிய அபாயங்களைத் தடுப்பதற்காகவே என்பது தெளிவாகும்.

கடந்த காலத்தில் நடந்ததும் தற்போது நடந்து கொண்டிருப்பதும் இதுதான்.

அதாவது, சொந்த மக்களைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கே அதிக நிதியும் அதிக மனித வளமும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது.

இலங்கையின் நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமையும் கூடிய நிதி ஒதுக்கீடும் தேசிய பாதுகாப்பு என்பதற்காகவே அமைகிறது.

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் வரவு செலவுத்திட்டத்தைப் பார்த்தால், இந்த நிதி ஒதுக்கீடு என்பது செங்குத்தாக விரைந்தேறியிருப்பதைக் காணமுடியும்.

இப்போது போர் முடிந்த பிறகும் அது கீழ்நோக்கிச் சரிவதாக இல்லை.
இதற்கு என்ன காரணம்?

நாம் மேலே கூறியிருப்பதைப் போல, ஆட்சியாளர்களிடமுள்ள அச்சத்தின் விளைவே அதிக நிதி ஒதுக்கீட்டை பாதுகாப்புக்காகக் கோருகிறது.

உள்நாட்டில் பொருளாதாரச் சீரின்மைகளை ஒழுங்கு படுத்தி மக்களின் வாழ்வை மேம்படுத்துவதன் மூலமாக அரசுக்கு ஏற்படும் நெருக்கடிகளையும் தொந்தரவுகளையும் நீக்க முடியும்.

ஜே.வி.பியினால் உருவாகிய நெருக்கடிகளுக்கான அடிப்படை பொருளாதாரச் சீரின்மைகளை மையப்படுத்தியதே.

அடுத்தது, அரசியல் அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பிரிவினையைக் குறித்த நெருக்கடிகளைக் கட்டுப்படுத்தலாம்@ நெருக்டிக்கான காரணிகளை இல்லாதொழிக்கலாம்.

தமிழரின் ஆயுதப்போராட்டம் இந்த அதிகாரப் பகிர்வைக் குறித்த பிணக்குகளின் அடிப்படையில் எழுந்ததே.

ஆகவே உள்நாட்டில் உள்ள முரண்நிலைகளை அகற்றுவதற்கான கவனத்தையும் அக்கறையையும் அரசு முதனிலைப்படுத்துவது அவசியம்.

முரண்நிலைகள் அகற்றப்படும்போது அச்சநிலை தணிந்து விடும்.

அபாயங்களை உருவாக்குவதற்கும் நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்குமான காரணிகளை நீக்கினால், அவை ஏற்படுவதற்கான சந்தர்ப்பமும் அற்றுப் போய்விடும்.

இல்லையெனில் கோடிக்கணக்கான ரூபாய்களைத் தேவையற்ற முறையில் செலவழித்து, உள்நாட்டு நெருக்கடிகளைப் பராமரிப்பதாகவே அமையும்.

இதற்கு நிரந்தரப் படைமுகாம்களோ, படைவிருத்தியோ பொருளாதாரச் செலவுகளோ நிரந்தரத் தீர்வைத் தந்து விடாது.

பதிலாக முரண்நிலைகளை அகற்றுவதன் மூலம் நாட்டின் அமைதியும் அபிவிருத்தியும் ஜனநாயகமும் செழித்தோங்கும்.

உள்நாட்டு நெருக்கடி மட்டுமல்ல, உள்நாட்டுச் சக்திகளைப் பயன்படுத்தி வெளிச் சக்திகள் உள்விவகாரங்களில் தலையிடுவதையும் கட்டுப்படுத்தலாம்.

ஆகவே, நிரந்தர சுபீட்சத்தை நோக்கிச் சிந்திக்கும் ஒரு முறைக்கு – மரபான சிந்தனை முறையைக் கடந்து புதிய சிந்தனை முறைக்கு அரசும் தலைவர்களும் செல்லவேண்டும்.

இன்றைய சூழல் நமக்கெல்லாம் பெரும் படிப்பினைகளைத் தந்திருக்கும் சூழல். இதை ஒரு வளமான அடிப்படையாகக் கொண்டு புதிய வெளிகளைத் திறக்கவேண்டும்.

இது கதவுகளைத் திறக்கும் காலம்.

மனித விதியென்பதே எல்லாவற்றையும் திறப்பதில்தான் அமைகிறது.

புதிர்களை அவிழ்ப்பதும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதும் அவற்றை இல்லாதொழிப்பதுமே அரசியல் அறிவும் அரசியல் அறமுமாகும்.

ஆகவே, பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் நிரந்தரப் படைமுகாம்களை அமைப்பதற்கான முயற்சிகள் என்பதையும் விட தீர்வுகளை நோக்கிய பயணத்தைப் பற்றிச் சிந்திப்பதே இன்றைய தேவையாகிறது. அதுவே தேசிய பாதுகாப்பையும் சமூகங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும்.

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB