கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

நோக்கங்கள் சிதையும் குடியேற்றங்கள்

Sunday 8 January 2012















இலங்கையில் அரசியற் பிரச்சினைகளில் முக்கியமானது, குடியேற்றத்திட்டங்கள் தொடர்பானவை. பிரச்சினைகளின் உருவாக்கத்திலும் குடியேற்றங்கள் காரணமாக இருந்திருக்கின்றன. இப்போது பிரச்சினைகளைத் தீர்ப்பதைக் குறித்துப் பேசும்போதும் குடியேற்றத்திட்டங்கள் காரணமாக இருக்கின்றன.

ஆகவே, குடியேற்றங்கள் என்றாலே ஏதோ ஒரு வகையில் பிரச்சினைதான் என்ற மனப்பதிவே எல்லோரிடமும் உள்ளது.

ஆனால், மேற்சொன்ன குடியேற்றத்திட்டங்கள் திட்டமிடப்பட்ட – அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட – சிங்களக் குடியேற்றங்கள்.
இதைவிட இன்னொரு வகையான குடியேற்றங்கள் வடக்கிலே நடந்துள்ளன. அந்தக் குடியேற்றங்களின் கதையும் நிலையும் வேறு.

00

வடக்கிலே - வன்னிப் பிரதேசத்திலே - கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த குடியேற்றத்திட்டங்களுக்கு மூன்று பிரதான காரணங்களைச் சொல்வார்கள்.

1. யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட காணியில்லாப் பிரச்சினைக்கும் தொழில் வாய்ப்புப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வாக வன்னிப் பிரதேசத்தில் குடியேற்றத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. (படித்த வாலிபர் திட்டம், மத்திய வகுப்புத்திட்டம், படித்த மகளிர் திட்டம், கமக்காரர் திட்டம் என்று இந்தத் திட்டங்களுக்கான பெயர்களே சூட்டப்பட்டுத்தான் இந்தக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன. இந்த அடிப்படைகளில்தான் காணிப் பகிர்வும் நடந்தது).

2. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திட்டங்கள் வன்னிப்பகுதியில் ஏற்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான முன்னேற்பாடாக இந்தக் குடியேற்றத்திட்டங்கள் செய்யப்பட்டன.

3. விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும் வேலைவாய்ப்பற்றவர்களுக்கு தொழில் வாய்ப்பாக விவசாயச் செய்கையை வழங்குவதற்காகவும் காணியற்றோருக்கான காணிகளை வழங்குவதற்காகவும் என்ற மூன்று பிரதான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் குடியேற்றத்திட்டங்கள் செய்யப்பட்டன.

மேலே சுட்டப்பட்ட இந்த மூன்று காரணங்களும் ஏதோவகைகளில் ஏற்புடையதாக இருக்கலாம். அல்லது இவற்றில் ஒரு காரணமோ அல்லது இரண்டு காரணங்களோ அல்லது இந்த மூன்றுக்கும் அப்பால் இன்னும் பல காரணங்களோ ஏற்புடையனவாக இருக்கலாம்.

ஆனால், என்னதானிருந்தாலும் வன்னிப் பகுதிக் குடியேற்றங்களில் பிரதானப்படுத்தப்பட்டிருந்தது விவசாயச் செய்கையாகும். வன்னியின் மண்வளமும் நீர்வளமும் விவசாயத்துக்கே அதிக சாத்தியங்களைக் கொண்டன. வன்னியின் பூர்வீக அடிப்படையும் விவசாயத்தையே மையப்படுத்தியது. வன்னியர்களின் பிரதான தொழிலும் மையப் பொருளாதாரமும் விவசாயத்தையே ஆதாரமாகக் கொண்டவை.

எனவே, இந்த விவசாயச் செய்கையை மையப்படுத்தியே குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. பின்னாட்களில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத்திட்டங்களும் அமைந்தன. அதற்கமையவே குளங்களும் நீர்ப்பாசன ஏற்பாடுகளும் பிற கட்டுமானங்களும் செய்யப்பட்டன.

காணிப்பங்கீடுகள் கூட விவசாயச் செய்கையை மையப்படுத்தி – அதற்கேற்றவாறே வழங்கப்பட்டன. விவசாயச் செய்கையை மையப்படுத்தியே பிரதானமாக, மேட்டு நீர்ப்பாசன (Lift irrication ) வசதிகூட செய்யப்பட்டது.

நீர்ப்பாசன வசதியில்லாத காணிகளில் சேனைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. சேனைப் பயிர்ச்செய்கைக்கேற்பவே காணியின் அளவுகளும் நிர்மாணிக்கப்பட்டன. அதாவது, மேற்கொள்கின்ற பயிர்ச்செய்கையின் தன்மைக்கு ஏற்றமாதிரியே அவரவர்களுக்கான காணிகளின் தொகையும் அமைந்தது. அதேவேளை, காணிகள் அமைந்த இடமும் இந்த அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டது.

இவற்றைச் சரியாகச் சொன்னால், அந்தந்தப் பயிர்ச்செய்கைக்கு ஏற்றவாறே காணிகள் தெரிவு செய்யப்பட்டன. அந்த அடிப்படையிலேயே அவை பகிர்ந்தளிக்கப்பட்டன@ பங்கீடு செய்யப்பட்டன.

சுpல திட்டங்களில் நெற்செய்கை பிரதானப்படுத்தப்பட்டது. ஆகவே, அதற்கேற்றவாறு காணிப் பங்கீட்டின் அளவு அமைந்தது. சில திட்டங்களில் மேட்டு நிலப்பயிர்ச்செய்கை மையப்படுத்தப்பட்டது. எனவே, அதற்கமைய காணித் தெரிவும் வழங்கலும் அமைந்தன. சில திட்டங்களில் சேனைப் பயிர்ச்செய்கைக்கான காணிகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டன.

அதாவது, இந்தத் திட்டங்களின் கீழ் பயிரிடுகையைச் செய்வதன்மூலமாக இவர்கள் தங்களின் வீட்டுக்கும் வருவாயைத் தேடிக் கொண்டனர்.

அதேவேளை, நாட்டின் தேவைக்கேற்ற உற்பத்தியை வழங்கி, நாட்டுக்கான உற்பத்திப் பங்களிப்பையும் பொருளாதாரப் பங்களிப்பையும் செய்தனர்.
இவ்வாறான ஒரு பொருளாதாரப் பங்களிப்புக்கும் ஏற்பாட்டுக்குமாகவே குடியேற்றவாசிகளுக்குக் காணிகள் வழங்கப்பட்டன. திட்டமிடப்பட்ட வகையில் அதற்கமைவாகக் காரியங்களும் நடந்தன.

இதன்படி சுமார் ஒரு இருபது தொடக்கம் நாற்பது ஆண்டுகாலம் இந்தக் காணிகளில் உரியவாறான பயிர்ச்செய்கைகள் செய்யப்பட்டன. அப்போது உழுந்தும் பயறும் நிலக்கடலையும் நெல்லும் எள்ளும் தாராளமாகவே விளைந்தன வன்னியில்.

பயிரிடப்படும் போகத்தை ஒட்டி வன்னியில் உழுந்தும் பயறும் எள்ளும் நிலக்கடலையும் எல்லா ஊர்களிலும் எல்லா வீடுகளிலும் போதிய அளவுக்குக் கிடைத்தன. அப்போது சேனைகளில் பயிரிட்டவர்களுக்கும் புலவுகளில் உழுந்தையும் பயற்றையும் பயிரிட்டவர்களுக்கும் இந்த நினைவுகள் இதைப் படிக்கும்பொழுது மீள எழும்.

முன்னர் துணுக்காய், மல்லாவி, முத்தையன்கட்டு, செட்டிகுளம், வவுனியா, நெடுங்கேணி போன்ற இடங்களில் மலிவாக உழுந்தையும் பயற்றையும் நிலக்கடலையையும் எள்ளையும் சோளத்தையும் வாங்கலாம்.
கொழும்பிலிருந்தும் நாட்டின் பிற இடங்களில் இருந்தும் இந்த இடங்களுக்கு வியாபாரிகள் வந்து இந்தப் பொருட்களைக் கொள்வனவு செய்துகொண்டு செல்வர்.

ஆனால், பிறகு நிலைமைகள் மாறிவிட்டன. ஒன்று போரின்காரணமான மாற்றங்கள். இதனால், விளைச்சல்களைச் செய்வதில் பலவிதமான பிரச்சினைகள் உருவாகின. அதையும் கடந்து விளைச்சலை மேற்கொண்டவர்கள் இருந்தாலும் அதன் வீதம் குறைவடைந்தது.

அடுத்தது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நிலை மாற்றங்கள். இந்த மாற்றங்களால், விலைநிர்ணயம் பெரும் பிரச்சினையாகியது. உற்பத்தியையும் விட விளைச்சலின் மூலமான வருவாய் குறைவாக இருந்தது. இதனால், உற்பத்தியின் வீதமும் உற்பத்தியாளர்களின் வீதமும் குறைந்தது.

அதையும் விட முக்கியமானது, பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்ட காணிகளைக் குடியிருப்புக் காணிகளாகவும் குடியிருப்பை அடுத்து சந்தை, கடை, தொழிற் சாலைகள் என மாற்றிவருவதே.

பயிர்ச் செய்கைக் காணிகளைக் குடியிருப்புக் காணிகளாக மாற்றிவரும் இந்த நிலைமை மிகப் பயங்கரமானது. இது சட்டவிரோதமானது. காணி வழங்கற் சட்டத்தின்படி பயிர்ச்செய்கைக் காணிகளை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாது. அப்படிச் சட்டவிரோதமான முறையில் அவற்றைப் பிறதேவைகளுக்காக வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆனால், கண்ணுக்குள் மண்ணைத்தூவி விட்டு எப்படியோ இந்தக் காணிகளை வேறு தேவைகளுக்கே மாற்றி விட்டனர் பலரும். ஏறக்குறைய முக்காற்பங்குக் காணிகள் இப்படி மாற்றப்பட்டு விட்டன. இன்னும் அப்படி மாற்றப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

இதன்மூலம் முன்னர் இந்தக் காணிகளை வழங்குவதற்காகத் திட்டமிடப்பட்ட நோக்கங்கள் முற்றாகவே சிதைக்கப்படுகின்றன.

உழுந்து விளைந்த புலவில் இப்போது வீடுகளும் கடைத்தொகுதிகளும். பயறு விதைக்கப்பட்ட சேனையில் ஆலைகளும் இயந்திரம் திருத்தும் இடங்களும். எள்ளு விதைக்கப்பட்ட இடங்களில் கடைகளும் தெருக்களும் என்று முற்றாகவே அந்தப் பிராந்தியங்கள் மாறிவிட்டன.

சேனை என்றும் புலவு என்றும் சொல்லப்பட்ட இடங்கள் எல்லாம் ஊர்மனைகளாகவும் சிறு பட்டினங்களாகவும் மாறிவிட்டன. காலமாற்றத்தில் இதெல்லாம் சகஜம் என்று யாரும் சொல்லக்கூடும்.

ஆனால், பிரச்சினை அதுவல்ல. உண்மையும் அதுவல்ல.
மக்களின் பொருளாதார அடிப்படைகளும் தெரிவுகளும் மாறிவிட்டதே இதற்குப் பிரதான காரணம். அடுத்தது, கடந்த முப்பது ஆண்டுகளாக காணியற்றோருக்கான காணிப்பங்கீடுகள் வழங்கப்படாத காரணத்தினால், இருக்கின்ற காணிகளைப் பங்கீடு செய்ய வேண்டிய அவசியத்திற்கு ஒவ்வொருவரும் தள்ளப்பட்டனர். குடியிருப்புக்கான காணிகளைப் பெற முடியாத நிலையில் தம்மிடம் இருக்கின்ற காணிகளைக் குடியிருப்புகளாக மாற்ற வேண்டிய அவசியத்திற்குத் தள்ளப்பட்டனர் மக்கள்.

இதனால், விளைநிலங்கள் தொழில் மையங்களாகவும் வணிக வளாகங்களாகவும் குடியிருப்புகளாகவும் மாறிவருகின்றன.
இந்த நிலைமை முன்னர் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே காணப்பட்டது. அங்கே இருந்த ‘செம்பாட்டுத் தறை’ என்று சொல்லப்படும் வளங்கொழிக்கும் செம்மண் விளை நிலங்கள் குடியிருப்புக்காக மாற்றப்பட்டன.

இந்த நிலையைத் தடுப்பதற்காகவே – விவசாயக் காணிகளின் இழப்பைத் தடுப்பதற்காகவே - யாழ்ப்பாண மக்களை வன்னியில் குடியேற்றுவதற்குத் திட்டமிடப்பட்டது என்று சொல்லப்படுவதுண்டு.

ஆனாலும் மெல்ல மெல்ல யாழ்ப்பாணத்தின் தோட்டவெளிகள் - விளைநிலங்கள், பனந்தோப்புகள் எல்லாமே குடியிருப்புகளாகவும் தொழிற்பிரதேசங்களாகவும் கடைவளாகங்களாகவும் மாற்றப்பட்டுவிட்டன. மேலும் அவை அவ்வாறே மாற்றப்பட்டும் வருகின்றன. ஏனென்றால், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக யாழ்ப்பாண மக்களுக்கான காணி வழங்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஆகவே, அவர்கள் தங்களிடம் இருக்கின்ற காணிகளையே எல்லாவற்றுக்குமாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதேவேளை, யாழ்ப்பாணத்தவர்களின் பொருளாதாரத் தெரிவுகளும் முறைகளும் மாறிவிட்டன.அவர்கள் இப்போது பெருமளவுக்கும் நுகர்ச்சிப் பொருளாதாரத்தையே பிரதானப்படுத்தியுள்ளனர்.
இது என்னமாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றால், அந்தப் பிரதேசத்தின் தனித்தன்மையையும் அடையாளத்தையும் மாற்றிச் சிதைத்து விடுகிறது.

உதாரணமாக, முன்னர் யாழ்ப்பாணத்தில் கரணைக்கிழங்கு, வெங்காயம், மரவெள்ளிக்கிழங்கு, குரக்கன், புகையிலை, மிளகாய், இராசவள்ளிக்கிழங்கு  போன்ற பயிர்கள் சில பகுதிகளில் மிகப் பிரசித்தமான அளவுக்கு விளையும். அந்தந்தப் பிரதேச மண்ணின் மணத்தைப்போல இந்த விளைபொருட்களின் சுவையும் இருக்கும்.

அப்படியிருக்கும்போது இந்தப் பொருட்களைப்பற்றிய நினைவுகளும் தனி அடையாளத்துக்குரிய நினைவையும் தகுதிப் பெறுமதியையும் கொண்டிருந்தன.

இவை இந்தப் பிரதேசத்தின் சூழல் அடையாளம், தொழில் முறை, பொருளாதார அடையாளம் எனப் பலவகைகளில் அமைந்திருந்தன.

ஆனால், குடியிருப்புகளாக இந்தப் பிரதேசங்கள் மாறும்போது இந்தப் பிரதேசத்தின் முகமாக இருந்த தனித்துவ அடையாளங்கள் குலைந்து போகின்றன.

இதைப்போலவே இன்று வன்னியில் விளைநிலங்களாக இருந்த இடங்களும் கால்நடைகள் வளர்க்கும் இடங்களாக இருந்த இடங்களும் மேய்ச்சற் தரைகளாக, நீர்நிலைகளாக, ஆற்றுப்படுகைகளாக இருந்த பகுதிகளும் மாற்றத்துக்குள்ளாகியுள்ளன.

இதன்மூலம் ‘வன்னிப் பகுதியானது ஒரு பெரும் விவசாயப் பிரதேசம்’ என்றிருந்த அடையாளம் குலைந்து, சனங்களின் குடியிருப்புப் பிரதேசங்களாக மாறிவருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இது இந்தப் பகுதியிலுள்ள மக்களின் தொழில் மற்றும் பொருளாதார அடிப்படைகளிலும் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன.
இதைவிட, இந்தப் பிரதேசங்களின் தனித்துவ அடையாளங்களும் மாறிவிட்டன.

‘முன்னர் ஒரு காலம் வவுனியாவில் உழுந்து விதைப்பார்கள்’ என்று சொல்லும்போது அதை நம்புவதற்கு இப்பொழுது கடினமாக இருக்கிறது என்றால், இந்த அடையாளச் சிதைவு எந்தளவுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம்.

எனவே, இiதைப்போல பல்வேறு பிரச்சினைகள், இன்று காணிப்பகிர்வின்மை தொடர்பாகவும் காணியற்ற நிலையினாலும் மாறியுள்ள பொருளாதாரப் போக்கினாலும் மக்களின் தெரிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினாலும் ஏற்பட்டுள்ளன.

ஆனால், சிலவற்றுக்குச் சில அடிப்படைகள் உண்டு. விவசாயத்துக்குப் பொருத்தமான இடங்களில்தான் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளலாம்.

கடையை எங்கே வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம். வீட்டை எங்கே வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாம். ஆனால், அப்படி நினைத்த இடத்திலெல்லாம் பயிர்களைச் செய்கைபண்ண முடியாது.

இங்கே, இப்படி இந்த அடிப்படையை மீறுவதே பிரச்சினையாகிறது. விவசாயத்தை மையப்படுத்தி வழங்கப்பட்ட காணிகள், அந்த அடிப்படையை மீறுவதே பிரச்சினை. இந்த இழப்பு நிரந்தரமான இழப்பாகும். இது ஒரு அடிப்படைப் பிரச்சினை. இது ஒரு அரசியற் பிரச்சினை.

இதன் விளைவாக இப்போது அரசி தொடக்கம், உழுந்து, பயறு, நிலக்கடலை, எள்ளு என எல்லாமே வேறு இடங்களில் இருந்து – வெளியே இருந்து வரவேண்டியுள்ளது.

பங்களாதேஸில் இருந்து உழுந்து வருகிறது. இந்தியாவில் இருந்து நிலக்கடலையும் பருப்பும் பயறும் வருகிறது. போதாக்குறைக்கு பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். சீனாவில் இருந்தும் பர்மாவில் இருந்தும் அரிசி வருகிறது. ஜப்பானில் இருந்து வாகனங்களும் இலத்திரனியல் பொருட்களும் மட்டும் வரவில்லை, இலங்கைக்கு உணவுப் பொருட்களும் அங்கிருந்து எடுத்து வரப்படுகின்றன.

அதாவது, நாட்டிற்குத் தேவையான உற்பத்தியையும் வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் உற்பத்தி செய்யும் காலம் போய், எல்லாற்றுக்கும் வெளியே இருந்து எதிர்பார்க்கும் நிலை இது.

உள்நாட்டு மக்களுக்கான அரசியற் தீர்வை வெளியே இருந்து எதிர்பார்ப்பதைப் போல, இன்று தமிழர்கள் தங்களின் பொருளாதாரத்தை வெளியே இருந்து எதிர்பார்ப்பதைப்போல, தங்களுக்கான உற்பத்திகளையும் வெளியே இருந்து எதிர்பார்க்கும் காலம் வந்துள்ளது.

அதாவது, இது ஓர் வேரிழப்பு நிலையே! இந்த வேரிழப்பு நிச்சயமாக எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். வேரற்ற சமூகம் அடிப்படைகளற்ற நிலைக்குத் தள்ளப்படும். அடிப்படைகளில் தளர்வுகள் ஏற்படுவது ஆபத்தானது.
இனப்பிரச்சினைக்கு நிகரானவை காணிப்பிரச்சினைகளும் குடியேற்றப் பிரச்சினைகளும். அவற்றில் இதுவும் ஒன்று.

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB