கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

ஊடகங்களின் பொறுப்புக் குறித்து...

Thursday 5 January 2012









‘ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இப்போது அரசியலையும் அரசியல்வாதிகளைப் பற்றியுமே எழுதுகிறார்கள். மக்களின் பிரச்சினைகளைப் பற்றி எழுதுவதில் அவர்கள் அதிக அக்கறை காட்டுவதில்லை’ என்று இலங்கையின் ஊடகங்களை அவதானித்த வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் ஒரு உரையாடலின் போது தெரிவித்தார்.

அவர் மேலும் தொடர்ந்து உரையாடும்போது, ‘...இலங்கையின் பிரச்சினைகளும் தேவைகளும் ஏராளமாக இருக்கின்றன. மக்களுடைய பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கப்பட வேண்டியிருக்கிறது.
நாடு யுத்தத்திலிருந்து மீண்டாலும் யுத்தகாலப் பாதிப்புகளிலிருந்தும் யுத்தகால நிலைமைகளிலிருந்தும் இன்னும் மீளவில்லை.
இது யுத்தத்தின் முடிவுக்குப் பிறகும் மக்களைப் புதிதாகச் சிந்திக்க விடவில்லை. ஆகவேதான் அவர்கள் இன்னும் யுத்தத்துக்கு முன்னரும் யுத்தகாலத்திலும் சிந்தித்ததைப் போல நம்பிக்கையீனமாகச் சிந்திக்கிறார்கள். அல்லது யுத்தகால நினைவுகளின் தொடர்ச்சியாகச் சிந்திக்கிறார்கள்.

இதிலிருந்து மீள வேண்டுமாயின் மக்களுடைய தேவைகளைப் பற்றியும் அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றியும் அதிகமாக எழுதவேண்டும். அப்படி அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றி எழுதி, உரியதரப்பினர்களின்  கவனத்துக்குட்படுத்தி, அவற்றுக்குத் தீர்வைக் காணும்போதே மாற்றங்கள் நிகழும்@ மக்களிடம் நம்பிக்கை பிறக்கும்’ என்றார்.

இந்த ஊடகவியலாளரின் கூற்றுகள் நிச்சயம் கவனத்திற்குரியவையே.
ஊடகவியலாளர்களின் பணி என்பது அரசியல்வாதிகளின் பணிகளாக அமைந்திருக்க வேண்டியதில்லை. அப்படி அது அமைந்து விடவும் கூடாது என்பது முதற்கவனத்திற்குரியது.

அத்துடன் ஊடகங்களும் அரசியல் அரங்காக சுருங்கி விடக்கூடாது என்பதும் முக்கியமானது.

‘ஊடகங்கள் எப்போதும் மக்களுடன் இருக்க வேண்டும். மக்களுக்காக இருக்க வேண்டும்’ என்பார்கள். எங்களுடைய சூழலில் பெரும்பாலான ஊடகங்கள் மக்களுடைய பிரச்சினைகளைப் பேசினாலும் அவற்றைச் சார்பு நிலையிலிருந்தே அதிகமாகப் பேசுகின்றன.

இதை இன்னும் தெளிவாகச் சொன்னால், எந்த விடயத்தையும் ஊடக முறைமை சார்ந்து – ஊடக அறநெறி சார்ந்து அணுகுவதை விடவும் அரசியல் விருப்பு - வெறுப்புச் சார்ந்தே அணுகுகின்றன.

இதனால் ஒரு விடயத்தின் பாதிப்பக்கம் மறைக்கப்படுகிறது. அல்லது மறுக்கமோ மறுபாதியோ பார்க்கப்படாது விடப்படுகிறது. இது மக்களை உண்மைகளிலிருந்தும் முழுமைகளிலிருந்தும் அந்நியப்படுத்தி விடுகிறது.

முழுமையை அறியாத மக்கள், உண்மைகளை அறியாத மக்கள் நிச்சயம் குறைபாடுடையவர்களாகவும் குறைச் சிந்தனைக்குட்பட்டவர்களாகவுமே இருப்பர்.

ஆகவே முதலில் ஊடகங்கள் ஒரு திறந்த வெளிக்கு தம்மைக் கொண்டு வரவேண்டும்.

யுத்தத்துக்குப் பின்னர் அப்படித் திறந்த வெளிக்கு வந்துள்ள ஊடகங்கள் இலங்கையில் எவை? அவற்றின் எண்ணிக்கை எந்தளவுக்கு நம்பிக்கையூட்டக்கூடியதாக இருக்கிறது?

இதேவேளை, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய காலகட்டத்தில் இயங்கிய மேற்குலக ஊடகங்கள் தமது கடந்தகாலப் படிப்பினைகளையும் யுத்த அழிவினையும் ஒரு பாடமாகக் கொண்டன என்பதை இங்கே நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

ஜனநாயகத்தையும் மக்களின் வாழ்க்கையையும் மனித நேயத்தையும் உண்மையையும் முடிந்த அளவுக்கு வலிமைப்படுத்த இந்த ஊடகங்கள் முயன்றிருக்கின்றன. இதனையே பின்னர் இவை தமது கோட்பாடுகளாகவும் நெறிமுறைகளாகவும் பின்பற்றி வருகின்றன.

இலங்கையின் ஊடகங்களில் பெரும்பாலானவையும் இன்னும் சார்பு நிலைப்பட்டும், அரசியல் மயப்பட்டும், இனரீதியாகச் சிந்திப்பனவாகவுமே இருக்கின்றன.

சிங்கள ஊடகங்கள் சிங்களத்தரப்பின் மனோநிலையைப் பிரதிபலிப்பனவாக இருக்கின்றன. தமிழ் ஊடகங்கள் தமிழ்த்தரப்பின் மனோநிலையைப் பிரதிபலிப்பனவாக இருக்கின்றன.

யுத்தமோ அதன் விளைவான அழிவுகளோ மக்களின் துயரங்களோ இந்த ஊடகங்களின் சிந்தனை முறையை மாற்றவில்லை. அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவுமில்லை.

பதிலாக இன்னும் இனவாதத்தை வளர்க்கக்கூடிய மாதிரியான உணர்ச்சிகரமான விடயங்களையே எடுத்தாள்கின்றன. உணர்ச்சிகரமான மொழியையும் வெளிப்பாட்டையும் கையாள்கின்றன.

இது நிலைமையை பாதக நிலையில் - ஆபத்து நிலையில் வைத்திருக்கவே செய்கின்றது. சமூகங்களை எரிபற்று நிலையில் வைத்திருப்பதே இதில் முக்கிய உபாயமாகும்.

ஏட்டிக்குப் போட்டி, எரிபற்று நிலை என்பது எப்போதும் ஊடகங்களுக்கான தீனியை அதிகமாகத் தரும். அதேவேளை மக்களையும் இந்தத் தீனிகள் அதிகமாகக் கவரும். ஆனால், இந்தத் தீனிகள் மக்களையே தீனியாக்கி விடும். அவர்களறியாமலே அவர்கள் தீனியாகி விடுகின்றனர். இது மோசமானதொரு நிலையே.

இப்படியான அணுகுமுறையும் தந்திரோபயமும்தான் கடந்த காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இப்போதும் ஏறக்குறைய இந்த நிலைதான் தொடருகிறது.

அதாவது, எரிபற்று நிலைக்குரிய அரசியலில் மையங்கொள்ள வைப்பதன் மூலம் மக்களை ஒருவிதமான மயக்க நிலைக்கும் - போதைக்கும் உள்ளாக்கி வைத்திருப்பது இதுவாகும்.

இதனால், மக்களின் ஏராளம் பிரச்சினைகளும் தேவைகளும் கவனிக்கப்படாது திசை திருப்பப்படுகின்றன. மட்டுமல்ல தங்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதைப் பற்றியும் மக்களிடம் உருவாகி வரும் புதிய அனுபவங்களும் புதிய நிலைப்பாடுகளும் கண்டு பிடிக்கப்படாது விடப்படுகின்றன.

எந்தப் பிரச்சினையையும் தீர்த்துக் கொள்ளக் கூடிய ஆற்றல் மனிதர்களுக்குண்டு. மனித இயல்பே அப்படித்தான். இல்லையென்றால், இத்தனை பெரிய வளர்ச்சியை மனிதகுலம் எட்டியிருக்க மாட்டாது. இதை நமது பெரும்பாலான ஊடகங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

சுருக்கமாகச் சொன்னால் பல சந்தர்ப்பங்களில் மக்களின் இயல்பான வாழ்க்கைக்கும் முன்னேற்றத்துக்கும் அரசியற்கட்சிகளும் அவற்றின் கொள்கைகளும் அரசியற் தலைவர்களின் செயற்பாடுகளும் காரணமாக அமைந்து விடுகின்றன.

இந்த அரசியற் கட்சிகளை ஆதரிப்பதன் மூலமாகவும் அரசியல்வாதிகளை முன்னிலைப்படுத்துவதன் வழியாகவும் மக்களைச் சிறுமைப்படுத்தி விடுகின்றன பல ஊடகங்கள்.

இதற்குக் காரணம் அவைகள் அரசியல் வாதிகளைப் போலவும் அரசியற் கட்சிகளைப் போலவுமே செயற்படுகின்றன என்பதேயாகும்.

அதாவது, மக்களின் குரல்களாக இருக்கவும் இயங்கவும் வேண்டிய ஊடகங்கள் மக்களை ஆள்வனவாக மாறிவிடுகின்றன. மக்களை அதிகாரம் செய்வனவாக மாறிவிடுகின்றன. மக்களின் ஜனநாய உரிமைகளை வென்றெடுக்கவும் பாதுகாக்கவும் வேண்டிய ஊடகங்கள் மக்களுக்குரிய ஜனநாயக அடிப்படைகளை மறுப்பனவாகச் செயற்படுகின்றன.

இப்படிச் சிந்தித்தால், பாதிப் பக்கத்தையே இந்த ஊடகங்களால் வெளிப்படுத்த முடியும். பாதி உண்மையை, தாம் விரும்புகின்ற விசயங்களை மட்டுமே மக்களுக்குக் கொடுக்க முடியும்.

அதற்கப்பால் மக்களை ஒளிமிக்க ஒரு பிரகாசமான வெளிக்கோ யுகத்துக்கோ அவற்றால் கொண்டு செல்ல முடியாது.

மக்களுக்குரிய ஊடகம் என்பது மக்களை விழிப்படைய வைப்பனவாகவும் மக்களுக்கு உண்மைகளைத் தெரியப்படுத்துவனவாகவும் இருக்க வேண்டும்.
அவை மக்களின் தரப்பிலிருந்து அதிகாரத்தரப்பை அணுகவேண்டும்.

மக்களுக்காக அதிகாரத்தரப்பை செயற்பட வைக்க வேண்டும். மக்களின் தேவைகளையும் அவர்களுடைய பிரச்சினைகளையும் அவர்களுடைய உணர்வுகளையும் வெளிப்படுத்துவதன் மூலம் மக்களின் குரலாக அவை தொழிற்படவேண்டும்.

உலகத்தின் வெற்றி பெற்ற முதன்மை ஊடகங்கள் சாத்தியப்படக்கூடிய எல்லைக்கு ஜனநாயகத்தை நோக்கியும் மக்களின் உரிமைகளை நோக்கியும் நகர்கின்றன. அவற்றின் செய்திகள் மற்றும் தகவல்களின் நம்பிக்கை – உண்மை நிலை போன்றவை அவற்றை மேன்மையை நோக்கி, வெற்றியை நோக்கி அவற்றை நகர்த்துகின்றன.

இந்த நகர்வுக்குக் குறுக்கே வரும் தடங்கல்களை அவை தமக்கான சவால்களாகவும் வெற்றிக்கான படிக்கற்களாகவும் பயன்படுத்திக் கொள்கின்றன.

ஊடகங்களின் வெற்றி என்பது மக்களுக்குரிய தேவைகளை இனங்காட்டுவதிலும் அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி வைப்பதிலும் அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதிலுமே தங்கியிருக்கிறது.

இந்தப் பணிகளில் அந்த ஊடகங்களுக்கு வருகின்ற நெருக்கடிகளும் நேர்கின்ற அபாயங்களும் அந்த ஊடகங்களை உலக அரங்கில் மேலும் அவற்றை ஸ்தாபித்துப் பலப்படுத்தி விடுகின்றன.

கூடவே அவை வலியுறுத்திய விடயங்களும் அவை வெளிப்படுத்திய உண்மைகளும் மக்களுக்கான நன்மைகளை – பயன்களை பெற்றுத் தருகின்றன.

ஏனெனில் இந்த மாதிரியான சவால்கள் என்பது மக்களின் வாழ்க்கைக்கான பாதுகாப்பையே வலியுறுத்துகின்றன.

இலங்கையில் போரை எதிர்த்த ஊடகங்களை விடவும் போரை ஆதரித்த ஊடகங்களே அதிகம். ஒருவகையில் இதற்கும் ஒரு நியாயம் இருந்தாலும் போரை இவை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான வழிமுறையாகக் கையாள்வதில் தவறி விட்டன என்பதில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருக்க முடியுமா?

போருக்குப் பின்னரும் நிலைமைகளில் மாற்றம் இல்லை என்பது இந்த ஊடகங்களின் கடந்த கால வழிமுறைகளில் குறைபாட்டையும் தோல்வியையுமே வெளிப்படுத்துகிறது.

உண்மையில் இலங்கையில் இன மத பேதங்களைக் கடந்த தேசிய ஊடகம் - தேசிய ஊடகவியலாளர்கள் என்பது மிகக் குறைவானதாகவே இருக்கிறது.

இதனால், மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் முதன்மைப்படுத்தும் போக்கும் துலக்கமாக வளர்ச்சியடையவில்லை.
தங்களுடைய பத்திரிகை, தங்களுடைய வானொலி, தங்களுடைய தொலைக்காட்சி என்று இலங்கையர்கள் கொண்டாடக்கூடிய  ஊடகங்கள் வந்திருக்குமானால் அல்லது அவ்வாறு அடையாளம் காணப்பட்டிருக்குமானால் அது பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழியைத் தந்திருக்கும்.

மக்கள் தங்களுடைய தேவைகளைப் பெறுவதற்கான வழிமுறைகளை மிக இயல்பாகத் தங்களிடம் வைத்திருக்;கிறார்கள். இது மனிதர்களின் சிறப்பியல்பாகும்.

இந்த இயல்பை மேலும் வலுவூட்டி அவர்களுடைய சிரமங்களைக் குறைப்பதற்கு ஊடகங்கள் முயற்சிப்பது அவசியம்.  இதற்கு மக்களுடன் அதிக தொடர்புடைய – மக்களில் அதிக கரிசனையுடை ஊடகவியலாளர்கள் வளர்த்தெடுக்கப்படுவது அவசியம். அப்படி வளர்த்தெடுக்கப்படும் ஊடகங்கள் தங்கள் ஊடகவியலாளர்களை மக்களிட் செல்லும்படி வற்புறுத்துகின்றன. அவர்கள் மக்களிடம் சென்று அவர்களிடம் இருக்கின்ற உண்மைகளையும் நிலவரங்களையம் வெளியே கொண்டு வருகிறார்கள்.

எங்கள் மக்களிடம் இருக்கின்ற பல விடயங்களை வெளி ஊடகங்கள் பல தடவைகள் வெளியே கொண்டு வந்திருக்கின்றன. அதற்குப் பிறகு அவற்றை மேற்கோள்காட்டி நமது ஊடகங்கள் மறு வெளியீடு செய்கின்றன. இது நமது பார்வைக்குறைபாட்டையும் மக்களைப் பொருட்படுத்தா மனோபாவத்தையும் உழைப்பின்மையையும் வெளிப்படுத்துகின்றது.

ஆனால், கடுமையான உழைப்பைச் செலவிடும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மக்களிடம் செல்வதால் - அவர்களுடன் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதால் தமது ஊடகச் செல்வாக்கை மக்களிடம் வலுவானதாக்கிக் கொள்கிறார்கள்.

ஆகவேதான் தங்களுடைய தரப்பின் குரல் என்றவகையில் அந்த ஊடகங்களை மக்கள் ஆதரிக்கிறார்கள்.

பொதுவாக தங்கள் வாழ்வின் கணிசமான பகுதி நேரத்தையும் உழைப்பின் கணிசமான தொகையையும் அவர்கள் ஊடகங்களுக்காகச் செலவிடுகிறார்கள். தமக்கான குரல்களாகவும் வெளிப்பாட்டுச் சாதனங்களாகவும் ஊடகங்கள் செயற்படட்டும் என்றே மக்கள் கருதுகிறார்கள்.

ஆகவே மக்களின் நம்பிக்கைக்கும் அவர்களுடைய உரிமைகளுக்கும் அவர்களுடைய எதிர்காலத்துக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டிய கடப்பாடும் பண்பும் ஊடகங்களுக்குரியது.

இலங்கையில் இத்தகைய பண்பில் இயங்குகின்ற ஊடகங்களைப் பட்டியலிட்டால் நமக்கு எத்தனை ஊடகங்கள் தேறும்?

‘ஒப்பீட்டளவில் வானொலிகள் கொஞ்சம் பரவாயில்லை. அதிலும் எவ். எம் வானொலிகள் இன்னும் மேல்’ என்கிறார் உள்ளுர் ஊடகவியலாளர் ஒருவர். நிச்சயமாக இவர் இலத்திரனியல் ஊடகங்களில் பணியாற்றும் ஆள் அல்ல.

எப்படியோ இலங்கை ஊடகங்கள் ஒரு பொறுப்பு மிக்க காலகட்டத்தில் இப்போதிருக்கின்றன என்பது மட்டும் கூடிய கவனத்திற்குரியது. அது அரசியல் ரீதியாகவும் மக்களின் பிரச்சினைகள், தேவைகள், வாழ்க்கையின் அடிப்படைகள் அத்தனையைச் சார்ந்ததுமாகும்.

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB