ஓட்டம் முடியவில்லை -- முன்னர் துரத்தியது போர். இன்று துரத்துவது கடன்
Tuesday 17 January 2012
ஒரு காலத்தில், வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, சீட்டுக் கட்டிச் சம்பாதித்துச் சீதனத்துக்குக் காசு சேர்த்தவர்கள் ஈழத்தமிழர்கள். பிறகு, தங்களின் சம்பாத்தியங்களை வங்கிகளில் வைப்பிலிட்டுச் சேமித்தார்கள். வங்கிகளில் சேமிப்பது பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருந்தது அவர்களுக்கு. யுத்தச் சூழலில் இது இன்னும் பாதுகாப்பானதாகத் தோன்றியது.
இலக்கங்கள் கூடக்கூட சேமிப்பின் மகிழ்ச்சி உச்சத்துக்கு ஏறும். அதைவிட அதிலொரு பெருமை வேறு.
இதனால், தமிழ்ப்பகுதிகளில் இயங்கிய வங்கிகள் சேமிப்பில் முதலிடம் வகித்தன. ஆனால், தெற்கு மற்றும் மேற்கிலுள்ள சிங்களப்பகுதிகளின் வங்கிக் கிளைகள், சேமிப்புக்குப் பதிலாகக் கடனைத் தாராளமாக வழங்கிக் கொண்டிருந்தன. சிங்களவர்கள் சேமிப்பதற்குப் பதிலாகக் கடனை வாங்கிக் கொண்டிருந்தனர்.
இதை மறுவளமாகப் பார்த்தால், தமிழர்களின் காசில் சிங்களவர்கள் வாழ்ந்தனர் எனலாம். அவர்கள் வங்கிகளில் குறைந்த வட்டிக்குக் கடனை வாங்கி, தங்களுடைய தொழில் முயற்சிகளைச் செய்தனர். முதலீடுகளிலும் தாராளமாக ஈடுபட்டனர். வடக்குக் கிழக்கையும் விட ஏனைய பகுதிகளில் நிலவிய ஒப்பீட்டளவிலான அமைதிச் சூழல் இதற்கு மேலும் சாதகமான வாய்ப்புகளை வழங்கியது.
சேமிப்பதற்குப் பதிலாகத் தாராளமாகச் செலவு செய்யும் பழக்கம் சிங்களவர்களுக்கு எப்போதும் அதிகம். செலவு செய்வதற்காகவே சிங்களவர்கள் கடுமையாக உழைப்பார்கள் என்று தென்பகுதியில் நீண்டகாலம் இருந்த நண்பர்கள் சொல்வர். உழைப்பதைத் தாராளமாகச் செலவழிக்கும் இயல்பு அவர்களிடம் உண்டு. விதவிதமாகச் சாப்பாடுவதிலும் சுற்றுலாக்களுக்குப் போவதிலும் கொண்டாட்டங்களில் தாராளமாகச் செலவழிப்பதிலும் அலாதிப்பிரியம் அவர்களுக்கு.
நான் சிறுவனாக இருந்த காலத்தில் தெற்கிலிருந்து தினமும் பஸ் வண்டிகளில் சுற்றுலாவாக ஏராளம் சிங்களவர்கள் வடக்கே வருவர். வசதியுள்ளவர்கள்தான் இப்படி வருவதாக யாரும் எண்ணவேண்டாம். மிக வசதி குறைந்தவர்கள்கூட குடும்பம் குடும்பமாக வருவார்கள்.
அப்படி வருகிறவர்களுடைய உடற் தோற்றத்திலும் உடைகளிலும் அவர்கள் உடல் உழைப்புச் செய்யும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரியும். ஆனால், ஊர்களைப் பார்ப்பதிலும் பயணங்களைச் செய்வதிலும் அவர்களுக்கு நிறைய விருப்பம் என்றபடியால், செலவைப் பற்றிக் கவலைப்படாமல் இப்படி வருவார்கள்.
இப்படியான இயல்புள்ள சிங்களவர்கள் முதலீகளைச் செய்யவும் ஏதாவது தொழில்களை ஆரம்பிக்கவும் வங்கிகளில் தாராளமாகவே கடன்களை எடுத்தார்கள். வடக்கிலே குறைந்த வட்டியைக் கொடுத்துத் தமிழர்களின் சேமிப்பைப் பெற்றுக் கொண்ட வங்கிகள், கூடுதலான வட்டிக்குச் சிங்களவர்களுக்குக் கடன்களைக் கொடுத்தன.
போதாக்குறைக்கு போர் நடந்த காலத்தில், அரசாங்கமே தமிழர்களின் சேமிப்பைப் போருக்குப் பயன்படுத்தியதாகவும் ஒரு அபிப்பிராயம் உண்டு. வெளிநாடுகளில் இருந்து போருக்காகப் பட்ட கடன் போதாதென்று வங்கிகளில் இருந்த சேமிப்பை அரசாங்கம் கடனாகப் பெற்றுப் போருக்குப் பயன்படுத்தியதாக அந்த நாட்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
எது எப்படியோ அன்று இப்படியாக இருந்த ஒரு நிலைமை இன்று மாறியிருக்கிறது. இது யுத்தம் ஏற்படுத்திய மாற்றம். இப்பொழுது தமிழர்களும் வங்கிகளில் தாராளமாகக் கடன்களை எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதிலும் வன்னியில் வங்கிக் கடன்களைப் பெறாத குடும்பங்களே இல்லை. கடன்படவில்லை என்றால் அவர்களால் வாழவே முடியாது என்ற நிலை. இந்த நிலையில் எப்படி கடனை எடுக்காமல் இருக்க முடியும்?
வன்னியில் நடந்த இறுதிப்போர், எல்லோரையும் அகதிகளாக்கியது. அகதிகளோ எல்லாவற்றையும் இழந்து விட்டவர்கள். எனவே, இந்தப் போர் இன்று எல்லோரையும் அகதிகளாக்கிக் கடனாளிகளாக்கி விட்டது.
இவர்கள் சாதாரண கடனாளிகளில்லை. பெருங்கடனாளிகள். எதற்கும் கடன் எடுக்க வேண்டும் என்பதால், எல்லோரும் இரண்டு மூன்று கடன் என்று எடுத்துப் பெருங்கடனாளிகளாகிக் கொண்டேயிருக்கிறார்கள். வட்டியைக் கட்ட முடியாமல், மேலும் புதிய கடனெடுத்து பழைய கடனின் வட்டியைக் கட்டுகிறார்கள். பிறகு புதிய கடனுக்காக வேறு கடனை எடுக்கிறார்கள். தொடர்கடன்கள். நிரப்பவே முடியாத கடன்கள்.
வங்கிகளும் தவிச்ச முயலை அடிப்பதைப் போல பாதிக்கப்பட்ட மக்களை வைத்துக் கடனைக் கொடுத்து வட்டியையும் முதலையும் கறக்கின்றன. கடன்கொடுப்பதற்காகவே ஏராளம் வங்கிகள். ஏராளம் கிளைகள். ஏராளம் திட்டங்கள்.
போருக்குப் பிந்திய வடக்கில் 64 நிதி நிறுவனங்கள் தங்களுடைய கிளைகளைத் திறந்து கடன் திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றன. ஊர் ஊராக, வீடு வீடாகக் கடன் திட்டங்களைப் பற்றிய பிரச்சாரம் வேறு.
சனங்களைக் கடனாளிகளாக்குவதற்கே அரசாங்கமும் திட்டமிட்டுள்ளது போலும். இல்லையென்றால், அது பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்திட்டங்களையும் நிவாரணத்தையும் வழங்கியிருக்கும். அழிவுகளை முழுமையாகப் புனரமைத்திருக்கும்.
ஆனால், அப்படியான எதையும் அது செய்யவில்லை. அப்படியான எதையும் செய்யவும் அது யோசித்திருப்பதாகத் தெரியவில்லை.
சிறு உதவிகள் எந்த நிலையிலும் இந்த மக்களுக்குப் போதியதாக இருக்காது. முற்றாக இழந்த மக்களுக்கு முழுமைப்படுத்தப்பட்டதொரு உதவித்திட்டமே அடிப்படையான ஆதாரத்தை உருவாக்கும். அந்த அடிப்படையில் இருந்தே அவர்கள் தங்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்ப முடியும்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களாக இருப்பது வேறு. போரினால் முழுதாகவே அழிவடைந்த ஊர்களில் எல்லாவற்றையும் இழந்த மக்களாக இருக்கும் நிலை வேறு. இரண்டுக்கும் வித்தியாசமுள்ளது.
அரசாங்கம் எந்த வேறுபாட்டைப் பற்றியும் சிந்திக்கவும் இல்லை@ எந்த வித்தியாசங்களைப் பற்றியும் அக்கறைப்படவும் இல்லை. புலம்பெயர்ந்த தமிழர்களும் தாய்நிலத்தில் இருக்கின்ற தமிழர்களுக்காகப் பாசக்கண்ணீரை வடிக்கிறார்களே தவிர, பாசத்துடன் நடப்பதாகத் தெரியவில்லை.
போர் வாழ்க்கையையே மாற்றி விட்டது. தமிழர்களின் பொருளாதாரச் செயற்பாட்டையும் நோக்குநிலையையும் கூட மாற்றிவிட்டது.
அது சேமிப்புகளைச் சிதைத்து விட்டது. சேமிப்பாளர்களையும் சேமிப்புக்கான அடிப்படைகளையும்கூடச் சிதைத்தே விட்டது.
ஆகவே, சேமிப்புக்குப் பதிலாக இப்போது வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் கடனுக்காகவே உழைக்கிறார்கள். கடனையும் வட்டியையும் கட்ட வேண்டும் என்ற கடப்பாட்டுக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். கடன் அவர்களைத் துரத்துகிறது. ஓய்வில்லாமல் ஓடும்படி அது துரத்திக் கொண்டிருக்கிறது.
‘முன்னர் போர் துரத்தியது. இப்போது கடன்துரத்துகிறது’ என்று ஒரு கடனாளி வேடிக்கையாகச் சொன்னார். அவர் இப்படிச் சொன்னபோதும் அவருடைய இந்தப் பேச்சினுள்ளே ஒருவித துயரம் இழையோடியிருப்பதைக் காணலாம்.
போரின்போது கைகளை, கால்களை, கண்களை என்று உடல் உறுப்புகளை இழந்தவர்கள் கூட ஓட முடியாத நிலையில் கடனுக்காக ஓடிக் கொண்டிருக்கும் நிலையைக் காணமுடியும்.
ஏதாவதொரு தொழிலைச் செய்ய வேண்டும் என்ற நிலையிலேயே இவர்கள் வங்கிகளில் கடனாளியானார்கள். ஆனால், பட்ட கடனைக் கட்டக்கூடியவாறு உழைப்போ வருமானமோ இவர்களுக்கில்லை.
எவ்வளவுதான் முயன்றாலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் போதிய வருமானத்தை யாராலும் எதிர்பார்க்க முடியாது.
ஏனென்றால், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இருக்கும் சனங்களும் பாதிக்கப்பட்டவர்களே. ஆகவே, அவர்களிடம் தாரளாமாகச் செலவைச் செய்யக்கூடியவாறான நிதிவளம் இருப்பதில்லை. நிதிவளம் இல்லாத இடத்தில் எப்படி அதிக வருவாயை எதிர்பார்க்க முடியும்? வருவாய் குறைந்த நிலையில் எப்படிக் கடனுக்கும் வட்டிக்குமான உழைப்பை எதிர்பார்ப்பது?
ஆனால் ஒன்று - வங்கிகள் வந்த பிறகு, ஊர்களில் தவிச்ச முயல் அடிக்கிற நாள் வட்டி, அறா வட்டி, மீற்றர் வட்டிக் காரர்களின் கைகள் வீழ்ந்து விட்டன.
நாடே கடன் பட்டுக் கொண்டிருக்கும்போது குடிமக்கள் கடன்படுவதில் என்ன புதினம் என்று நீங்கள் கேட்கலாம்.
அப்படியான ஒரு கேள்வியைத்தான் ‘எத்தன்’ என்ற படத்திலும் கேட்கிறார், விமல். கடனிலேயே நாடும் மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், வாழ வேண்டியிருக்கிறது என்பதை மிகச் சுவாரஷ்யமாகச் சொல்லும் படம் இது. ஆனால், படத்தைச் சுவாரஷ்யமாகப் பார்ப்பதைப்போல வாழ்க்கை இருப்பதில்லை.
சேமிப்பையே தங்கள் வாழ்வாகக் கொண்டிருந்த ஒரு நிலை பெயர்ந்துள்ளதைப்போலவே தமிழர்களின் அடையாளங்களாக இருந்த பல சிறப்பம்சங்களும் போரினால் பெயர்ந்தும் சிதைந்தும் விட்டன. இவற்றை மீளுருச் செய்யும் காலம் எப்போது எந்த வடிவில் வருமோ!
00
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment