கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

ஊருக்குத் திரும்ப முடியாத சனங்கள்

Monday 2 January 2012

 
‘மயிலிட்டிக் கடல் மீன் தனிச் சுவையானது. அந்தக் கடலிலிருந்து றோலர் என்ற வகைப்படகுகளில் தொழிலுக்குப் போன காலங்கள் இனிமையானவை’ என்று தங்கள் நினைவுகளை மீட்டிக் கொண்டு அகதிக் கூடாரங்களில் இன்னும் இருக்கிறார்கள் வலிவடக்குக் கடலோர மக்கள்.

போர் முடிந்து இரண்டாண்டுகள் கழிந்து விட்டன. புதிய ஆண்டுகள் மாறிக் கொண்டிருக்கின்றன. இதோ இன்னொரு புதிய ஆண்டு பிறக்கிறது. ஒவ்வொரு புதிய ஆண்டும் புதிய வழியைத் திறக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு அந்த வழிகள் திறக்கவேயில்லை. இந்தப் புதிய ஆண்டிலும் அதற்கான சாத்தியங்கள் இருக்குமென்று தோன்றவில்லை.

கால்நூற்றாண்டுக் காலத்தை அகதி வாழ்க்கையில் கழித்து விட்டனர் இவர்கள். இளைஞர்களாக அகதி முகாமுக்கு வந்தவர்கள் இப்பொழுது முதியவர்களாகி விட்டனர். முதியவர்கள் தங்கள் ஊருக்குப் போக வேணும் என்ற நிறைவேறாத கனவுகளுடன் அகதியாகவே இறந்து விட்டனர்.
நினைவுகளைச் சரியாகச் சேமிக்க முடியாத சின்னஞ்சிறுவர்களாக முகாமுக்கு வந்தவர்கள் இப்போது இளைஞர்களாகவும் நடுத்தர வயதுக்காரர்களாகவும் மாறிவிட்டனர்.

இவர்களுடைய பிள்ளைகளுக்குத் தங்கள் ஊர்களைப் பற்றி எதுவும் தெரியாது. சிலருக்கு மிகச் சிறிய வயது நினைவுகள் மட்டும் மங்கலாக உள்ளன.
பருவங்களை அகதி வாழ்க்கையே தின்கின்றது.

இந்த அகதிக் குடியிருப்புகள் யாழ்ப்பாணத்தில் சுன்னாகம், மல்லாகம், சங்கானை, சங்குவேலி, தெல்லிப்பழை போன்ற இடங்களில் உள்ளன.
பலாலி விமான நிலையத்தின் விரிவாக்கமும் பின்னர் அது மிகப் பெரும் படைத்தளமாக மாற்றப்பட்டதும் இந்தப் பிரதேச மக்களின் வாழிடங்களையும் விவசாய நிலங்களையும் கடலோரத்தையும் விழுங்கி விட்டன.

பலாலி செம்மண்ணில் விளையும் மரவள்ளிக் கிழங்கைச் சாப்பிட்டிருக்கிறீங்களா? அது அந்த மண்ணின் அளிக்க முடியாத ஒரு கொடை. ஆங்கேதான் குரக்கனையும் அதிகமாகப் பயிரிடுவார்கள் என்கிறார் அந்தப்பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி.

யாழ்ப்பாணத்தில் பலாலி மரவள்ளிக் கிழங்குக்கு என்று தனியான மாக்கற் இருந்திருக்கிறது ஒரு காலத்தில். ஆனால், இப்போது அங்கே மிதிவெடிகள்தான் விளைந்து கொண்டிருக்கின்றன. விளை நிலத்தையெல்லாம் படைவிரிவாக்கத்துக்காக எடுத்து விட்டார்கள் என்று துக்கத்தோடு சொல்கிறார் இந்த முதிய விவசாயி.

ஒரு விவசாய நாடு, விவசாயிகளுக்காக பல நலத்திட்டங்களைச் செய்யும் நாடு என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் தெருவிலே இருபத்தைந்து வருசமாக நிற்கிறோம். எங்களுக்கு ஒரு நீதியும் கிடைக்கவில்லை என்கின்றனர் வலிவடக்குப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள்.

இன்னும் சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் - அங்கே செல்ல வேண்டும் என்ற பேரவாவுடன் (மீள்குடியேற்றத்துக்காகக்) காத்துக்கொண்டிருக்கிறார்கள் இவ்வாறான விவசாயிகளும் கடற்றொழிலாளர்களும்.

1985 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தவர்கள் இதுவரையில் தங்களுடைய சொந்த இடங்களுக்குத் திரும்பமுடியாதிருக்கின்றனர்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாதிருக்கும் மக்களின் நிலை, போர் முடிந்த பிறகும் துயரமும் அந்தரிப்புமாகவே இருக்கிறது.

1980 களின் நடுப்பகுதியில் முதன் முதலில் இடம்பெயர்ந்தவர்கள், யாழ்ப்பாணத்தில் பலாலிப் பகுதியை அண்மித்த மக்களும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குக் கடலோர மக்களுமே.

இறுதியாக இடம்பெயர்ந்து தங்கள் சொந்த இடத்துக்குத் திரும்ப முடியாதிருப்பவர்கள் முல்லைத்தீவின் வடக்குக் கடலோரமான புதுமாத்தளன், பொக்கணை, வட்டுவாகல், வலைஞர்மடம் பகுதி மக்கள்.
இவர்களெல்லாம் மீண்டும் எப்போது தங்களுடைய சொந்த இடங்களுக்குச் செல்ல முடியும் என்று யாருக்கும் தெரியாது. சொந்த இடங்களுக்குச் செல்லக்கூடிய ஒரு நிலை என்றாவது வருமா என்றுகூடத் தெரியாத – அதை உறுதிப்படுத்த முடியாத நிலையில்தான் இவர்கள், வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அகதி வாழ்க்கையின் அலைச்சல்களின் மத்தியிலும் துயரத்தின் நிழலிலுமே  இவர்களுடைய பருவங்கள் கழிந்து கொண்டிருக்கின்றன.

இன்னும் அதிகமான மக்கள் மீள்குடியேற்றத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும் மாவட்டங்கள் முல்லைத்தீவும் யாழ்ப்பாணமுமே.
முன்னரே குறிப்பிட்டதைப்போல இந்த மாவட்டங்களிலிருந்தே ஆரம்பத்தில் இடம்பெயர்வு நிகழ்ந்தது.

யாழ்ப்பாணத்தில், பலாலி, கட்டுவன் வடக்கு, மாவிட்டபுரம், காங்கேசன்துறை, மயிலிட்டி, வளலாய் மேற்கு போன்ற இடங்களைச் சேர்ந்த மக்களே முதலில் இடம்பெயர்ந்தனர்.

இதைப்போல, முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, தென்னமரவாடி, நாயாறு போன்ற பிரதேச மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இதில் சில பகுதிகளில் மக்கள் மீளக்குடியேற வரையறுக்கப்பட்ட அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனையோரின் நிலையைப் பற்றி எந்தத் தீர்மானமும் இல்லை.

ஊருக்குத் திரும்ப முடியாத இந்தச் சனங்களைப் பற்றிய கதையாடல்கள் மெல்ல மெல்லக் குறைவடைந்தே போகின்றன.

யாழ்ப்பாணத்தின் வடக்குக் கடலோரப் பகுதிகளும் பலாலியை அண்டிய பிரதேசமும் உயர்பாதுகாப்பு வலயத்துக்குரியவை எனக் கூறப்படுவதால், அங்கே மீள்குடியேற்றத்தின் சாத்தியப்பாடுகள் குறித்த கேள்விகளே உள்ளன.

அப்படி அங்கே மீள்குடியேற்றம் நடைபெறுவதாக இருந்தாலும் அதற்கான கால எல்லையைக் குறித்து எந்தத் தீர்மானங்களும் இல்லை. பலாலி, கட்டுவன் வடக்கு, மாவிட்டபுரம், காங்கேசன்துறை, மயிலிட்டி, வளலாய் மேற்கு போன்ற பகுதிகள் பெரும்பாலும் மீள்குடியேற்றத்துக்கான சாத்தியங்களைக் குறைந்த அளவிலேயே கொண்டிருக்கின்றன.

அவ்வாறாயின் இந்த மக்களின் நிலை என்ன?

போருக்குப் பிந்திய நிலைமையிலும் இவர்கள் அகதி நிலையில், அடிப்படை வசதிகளையும் வாழ்க்கையையும இழந்துதான் வாழ வேண்டுமா?

போருக்குப் பிந்திய காலத்தின் உதவிகளும் புனரமைப்புகளும் நிவாரணங்களும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை. மீள் குடியேறிய மக்களுக்கே இந்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பினால், இவர்களுக்கு எதுவும் கிடைப்பதற்கு வழியில்லை.
ஆகவே, இவர்கள் நிரந்தர அகதிகள் என் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டு, முடிவற்ற சிரமங்களோடு வாழ வேண்டியதுதானா?

இந்த மக்கள் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? இந்த மக்களைப் பற்றிய தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? யார் இந்த மக்களைத் தங்களின் கைகளிலும் கருத்திலும் எடுப்பார்கள்?

இவர்களுக்கு மாற்று இடங்களைத் தேர்வு செய்து அங்கே குடியமர்த்தலாம் என்று சொல்கிறார்கள் சிலர். தொடரும் அகதி நிலையானது, இவர்களுடைய சமூக இருப்பைச் சிதைத்துவிடும். அகதி வாழ்க்கைக்குப் புதிய தலைமுறைகளும் நிர்ப்பந்திக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்கின்றனர் இவர்கள். அப்படி அகதி வாழ்க்கையில் இந்தச் சனங்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டால், அது இவர்களைச் சீரழிவு நிலைக்கே கொண்டு செல்லும் என்கின்றனர் மேலும்.

இந்த மக்களை வேறு இடங்களில் குடியமர்த்துவதைப் பற்றிச் சிந்தித்தால், அது அரசாங்கத்தின் நோக்கத்துக்குப் பலியாகும் - ஒத்துழைக்கும் நடவடிக்கையாகவே அமையும். இவர்கள் வேறு இடத்துக்கு நகர்த்தப்பட்டால், பின்னர், இவர்களுக்கான மீள்குடியேற்றத்தைப் பற்றி யாரும் பேச முடியாது.

இவர்கள் வேறு இடத்தில் குடியேறினால், அரசாங்கத்துக்கான அழுத்தமும் குறைந்து விடும். ஆகவே, இவர்கள் இப்படி இருப்பதே இவர்களுக்கான எதிர்காலப் பலமாகும். மட்டுமல்ல, இவர்களின் பிரதேசங்களை மீட்பதற்கும் இவர்களின் இந்த அகதி நிலையே ஒரு கருவியாக அமையும். எனவே, மாற்றிடங்களைக் குறித்து நாம் சிந்திக்கவே முடியாது என்கின்றனர் இன்னொரு தரப்பினர்.

இந்த இரண்டு தரப்பின் நியாயங்களும் புறக்கணிக்க முடியாத அளவுக்கு நியாயப்பாடுகளைக் கொண்டுள்ளன. இங்கே பிரச்சினை என்னவென்றால், இந்த மக்களுக்கான நீதி – வாழ்க்கை – எதிர்காலம் எல்லாம் எங்கே, எப்படிக் கிடைக்கும் என்பதுதான்.

அரசியலுக்காகவே பலியிடப்படும் இத்தகைய மக்களின் நிலையைக் குறித்து யார் கவனம் செலுத்துவது?

போருக்குப் பிந்திய நிலையில் அவரவர் தத்தமது இழந்து போன வாழ்க்கையை மீள்நிலைப்படுத்திக்கொள்வதற்கே முயன்று கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கும் சனங்களைப் பற்றிய கரிசனை குறைவடைந்தே செல்லும். அப்படித்தான் இந்தக் கரிசனை குறைவடைந்து செல்கிறது.

ஆனால், இவர்களுடைய அகதித் துயரம் முன்னரை விட அதிகரிக்கிறது. முன்னர், இடம்பெயர்ந்தோருக்கான உதவித்திட்டங்கள் அதிகமாக இருந்தன.

தவிர, எல்லோரும் இடம்பெயர்ந்து கொண்டிருந்ததால், மீளக்குடியேறும் நிலையொன்று வருமபோது தமக்கும் அதில் சாத்தியங்கள் கிட்டும் என்ற நிலை இருந்தது.

ஆனால், இப்பொழுது அந்த எதிர்பார்ப்பின் நிலை மாறி விட்டது. இப்போது மீள் குடியேறும் மக்களுக்கான உதவிகளே வழங்கப்படுகின்றன. இடம்பெயர்ந்தோருக்கான உதவிகளை வழங்குவதற்கு சர்வதேசத் தொண்டு நிறுவனங்களே மறுத்து வருகின்றன.



இடம்பெயர்ந்தோருக்கான உதவிகளைத் தொடர்ந்து வழங்கினால், அரசாங்கம் இந்த இடம்பெயர்தோரின் மீள் குடியேற்றம் பற்றிச் சிந்திப்பதைத் தவிர்த்து விடும். ஆகவே, மீள் குடியேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பதற்காக நாம் இந்த இடம்பெயர்ந்தோர் நிவாரணத்தைத் குறைக்க வேண்டியேற்பட்டுள்ளது என்கின்றார் சர்வதேசத் தொண்டு நிறுவனமொன்றின் உயர் அதிகாரி.

ஆகவே, கிடைத்த உதவிகளும் இல்லாத நிலையில், சொந்த ஊர்களுக்கும் திரும்ப முடியாதவர்களாக மாறியிருக்கும் இந்தச் சனங்கள் குறித்து உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். இது ஒரு அடிப்படைப் பிரச்சினை.

வளமான பிரதேசங்களின் மீள் எழுச்சியும் அந்தப் பிரதேச மக்களின் புதிய வாழ்க்கையும் கேள்விகளின் முன்னேயும் அழிவுகளின் முன்னேயும் நிறுத்தப்படுவதை விட, இவற்றுக்கான நியாய பூர்வமான தீர்வைக் காண வேண்டும்.

இலங்கையில் அகதிப் பெருக்கம் குறைவடைந்துள்ளது என்று அரசாங்கத்தின் உயர் மட்டத் தலைவர்களில் ஒருவர் அண்மையில் பெருமையாகச் சொன்னார். ஆனால், அகதி நிலை மாறிவிட்டது என்று அவர் சொல்லவில்லை. அப்படிச் சொல்வதற்கு அவரால் முடியாது.

அவர் சொல்வதைப் போல அகதி நிலை மாறியிருந்தாலும் அல்லது அது குறைவடைந்திருந்தாலும், பாதிக்கப்பட்டோரின் நிலை மாறவேயில்லை. இதுதான் உண்மை.

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB