கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

ரணிலின் வடக்கு விஜயம் - நோக்கமென்ன?

Tuesday 27 March 2012


 











எதிர்க்கட்சித் தலைவர் திரு. ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய குழுவினருடன் கடந்த வாரம் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ரணில், அங்கே சில பிரதேசங்களுக்குச் சென்று மக்களுடன் சந்திப்புகளை நடத்தினார். அங்குள்ள சில முக்கியஸ்தர்களையும் சந்தித்தார்.

‘ரணிலின் விஜயம், அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிவதும் ஐ.தே.கவின் நிலைப்பாட்டைப் புரியவைப்பதுமாகும். மேலும் யாழ்ப்பாண மக்களின் உணர்வுகளை அறிந்து கொள்வதுமாகும்’ என ரணிலின் பயணத்தில் கலந்து கொண்டிருந்த ஐ.தே.க வின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

ரணிலின் வருகையும் யாழ்ப்பாணத்தில் அவர் பேசியவையும் தலைப்புச் செய்திகளாகின ஊடகங்களில். அவர் அங்கே பேசத் தயங்கிய விசயங்களும் விதி விலக்காகத் தலைப்புச் செய்திகளாகின ஒரு சில ஊடகங்களில்.

இவையெல்லாம் புதினமல்ல. ரணில் யாழ்ப்பாண மக்களுக்குச் செய்த உபதேசங்களும் அவற்றைச் சில ஊடங்கள் தலைப்புச் செய்திகளாக்கியதுமே இங்கே புதினம்.

ரணில் சொன்னார்:

‘.....இலங்கையில் இப்பொழுதிருக்கும் ஆட்சி மாறினால் மட்டுமே தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்கும். யுத்தத்திற்குப் பின்னர் விரைவில் அரசியற் தீர்வு கிட்டப்படும் என்று அரசு காலத்துக்குக் காலம் கூறிவருகின்ற போதிலும் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இன்றுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கம் ஒருபோதுமே அரசியற் தீர்வைப் பெற்றுத்தரப்போவதில்லை. வடபகுதி மக்கள் பெரும் சுமையுடனும் அச்சத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தென்னிலங்கையிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. ஊழல், லஞ்சம், அதிகாரம், குடும்ப ஆட்சி போன்ற எல்லாவற்றாலும் நாடு சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது. நாடு இன்று அநீதியாளர்களின் கைகளிற் சிக்கியுள்ளது. இந்த அராஜகத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும். அதற்காகத் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுப் போராட முன்வர வேண்டும்....’ என்று.

ரணிலினுடைய இந்தக் கண்டு பிடிப்புக்கும் இந்த உபதேசத்திற்கும் அப்பாற் சென்று அவர் இப்போது உருவாக்கியிருக்கும் தமிழ் மக்களின் மீதான கருணை என்ற திரையை விலக்கிப் பார்த்தால் அவருடைய கடந்த காலக் காட்சிகள் தெரியும். மட்டுமல்ல ரணில் விக்கிரமசிங்கவையும் ஐ.தே.கட்சியின் கடந்த காலத்தையும் கண்டு கொள்ள முடியும்.

இதை வாசிக்கும்போது – குறிப்பாகத் தமிழ்பேசும் மக்களுக்கு, ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றியும் ஐ.தே.க. வைப்பற்றியும் எத்தகைய புரிதல் ஏற்படும்?

1.   இனவன்முறையை உச்சநிலைக்குக் கொண்டு சென்றது ஐ.தே.க.

2.   1977 - 83 இனக்கலவரங்களையும் 1981 யாழ் நூலக எரிப்புத் தொடக்கம் யாழ்ப்பாணத்தையே எரித்தது ஐ.தே.க.

3.   சிறைச்சாலையில் படுகொலைகளைச் செய்தது ஐ.தே.க.

4.   ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் தெருக்களிலே சுட்டுப் போட்டது தொடக்கம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைச் சிறையிலடைத்தது ஐ.தே.க. (பூஸா போன்ற சிறைச்சாலைகள் இதற்காக விசேடமாகத் திறக்கப்பட்டன).

5.   படுகொலைகளும் பாலியல் வன்முறைகளும் செய்வதற்கான தாராள அனுமதியைப் படைகளுக்கு வழங்கி இராணுவத்துக்கு உச்ச அதிகாரத்தை வலுப்படுத்தியது ஐ.தே.க.

6.   எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கத்தையும் அவருடைய தமிழர் விடுதலைக்கூட்டணியையும் பயங்கரவாத முத்திரை குத்தி நாட்டைவிட்டே தப்பியோட விரட்டியது ஐ.தே.க.

7.   மேலும் எதிர்க்கட்சியாக விளங்கிய அனைத்துத் தரப்பையும் பலவீனப்படுத்தி, இறுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையையும் பறித்தது ஐ.தே.க.

8.   வடக்குக் கிழக்கில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் முஸ்லிம் இளைஞர்களிற் சிலருக்கு ஆயுதம் வழங்கி நிலைமையை மோசமாக்கியது ஐ.தே.க.

9.   மக்களை மோசமான முறையிற் கட்டுப்படுத்தும் அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம், கடல்வலயச்சட்டம் என்று ஏராளம் சட்டங்களை அறிமுகப்படுத்தியது ஐ.தே.க.

10. இந்த நாட்டிலே நிறைவேற்று அதிகாரம் என்ற அதிகாரமிக்க ஜனாதிபதி ஆட்சி (பேயாட்சி) முறையை அறிமுகப்படுத்தி அதை அமூலாக்கியது ஐ.தே.க.

11. இலங்கை இந்திய உடன்படிக்கையின் வழியாக இந்திய இராணுவத்தை இலங்கைக்குள்ளே இறக்கியதால் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியிட வைத்தது ஐ.தே.க.

12. மக்கள் வாழும் பகுதிகளின் மீது படையெடுப்புகளை மனிதாபிமானத்துக்கு அப்பாலான முறையில் (வடமராட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஒபரேஷன் லிபரேஷன்) செய்தது ஐ.தே.க.

13. குண்டு வீச்சுகளையும் விமானத்தாக்குதல்களையும் நடத்தியது ஐ.தே.க.

14. இனப்பிரச்சினைக்கு போரின் மூலமாக – அடக்குமுறையின் மூலமாகவே தீர்வு காணப்படும் என்பதை அரசியல் வழிமுறையாகக் கொண்டு செயற்பட்டது, செயற்படுவதற்கு முன்னுதாரணமாக இருந்தது ஐ.தே.க.


இப்படி ஐக்கிய தேசியக் கட்சி இலங்கைத் தீவுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் செய்த தவறுகள் ஏராளமுண்டு. இவை சாதாரணமானவையல்ல. எளிதில் மறந்து விடக்கூடியனவுமல்ல. இன்றைய இலங்கையின் சீரழிவிற்கும் கட்டற்ற அதிகாரத்துக்கும் தொடக்கப் புள்ளிகளை உருவாக்கியதில் ஐ.தே.கவிற்கே முக்கிய பங்குண்டு.

இந்த நாட்டிலே மிக மூத்த அரசியற் கட்சி ஐ.தே.க.தான். மிக நீண்டகாலம் ஆட்சியிலிருந்த கட்சியும் ஐ.தே.க. தான். அதேயளவுக்கு இந்த நாட்டிலே இனப் பிரச்சினை தொடக்கம், பொருளாதாரப் பிரச்சினைகள் வரையில் எல்லாப் பிரச்சினைகளையும் சிக்கலான நிலைமைக்குக் கொண்டு சென்றதும் ஐ.தே.க. வே.

இதனாற்தான் ஐ.தே.க. தன்னுடைய தலைவர்களை அதிகளவில் வன்முறைக்குப் பலி கொடுக்க வேண்டியிருந்தது. வன்முறையை விதைத்ததன் விளைவை பின்னாளில் அது அனுபவிக்க வேண்டியிருந்தது.

அதைப்போல எந்த அதிகார முறைமையை அது தன்னுடைய ஆட்சிக்காகப் பயன்படுத்தியதோ அதே அதிகார முறைமையினால் இப்போது அது தண்டனைக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது.

இவ்வளவுக்கும், மேலே குறிப்பிட்டுள்ள ஐ.தே.கவின் தவறுகள் அல்லது அதனுடைய ஆட்சிச் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில் திரு. ரணில் விக்கிரமசிங்க மிகப் பொறுப்பான பதவியில் ஐ.தே.க.விலிருந்தவர்.

இதையெல்லாம் இப்போது இலங்கை மக்களோ அல்லது தமிழ் பேசும் மக்களோ எப்படி இலகுவாக மறந்து விட்டனர்? என்று அவர் நம்புகிறார். இவை அந்தளவுக்குச் சாதாரணமானவையா?

ரணிலினாலேயே, ஏன் அந்தக் கட்சியினாலேயே ஜீரணித்துக் கொள்ள முடியாத அளவுக்கு ஐ.தே.கவின் கடந்த காலம் அதற்குத் தண்டனையை வழங்கியதைக் கூடவா அவர் மறந்து விட்டார்?

இப்போது கூட தான் உருவாக்கிய சுற்றுச் சுவர்களுக்குள்ளிருந்தும் தான் வெட்டிய குழிக்குள்ளிருந்தும் தன்னால் உருவாக்கப்பட்ட நெருப்பு வளையங்களிலிருந்தும் வெளியேற முடியாமல் அந்தக் கட்சி இருப்பதைக் கூடவா ரணிலினால் புரிந்து கொள்ள முடியவில்லை?

இதையெல்லாம் மறந்து விட்டு, அல்லது மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நினைப்போடு புதிய கதைகளைச் சொல்ல முற்படுகிறார் அவர்.

இவை மட்டுமல்ல, விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்தபோது, அதை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் யுத்த வெற்றியாகக் கொண்டாடியபோது அந்த வெற்றிக்கான அடித்தளத்தை இட்டுக் கொடுத்தது தானே என்று ரணில் பகிரங்கமாகவே அறிவித்திருந்தார்.

மேலும் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்காக புரிந்துணர்வு உடன்படிக்கையையும் போர் நிறுத்தத்தையும் தான் உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன், புலிகளிடமிருந்து கருணாவைப் பிரித்தததும் தான் என்றும் இதன்மூலம் கிழக்கை இலகுவாக அரச கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டு வர முடிந்ததென்றும் தொடர்ச்சியாக, கருணாவைக் கொண்டே புலிகளை மதிப்பிட்டதாகவும் அதை வைத்துக்கொண்டே அவர்களுடைய அணுகுமுறைகளையும் தந்திரோபயங்களையும் முறியடிக்கக்கூடியதாக இருந்ததாகவும் கூறினார் ரணில்.

இவையெல்லாம் எப்போது மறக்கப்பட்டன?

தவறுகளையும் குற்றங்களையும் எப்போதும் முன்னிலைப்படுத்தினால் புதிய பிராந்தியங்களை நோக்கி நகரமுடியாது என்பது அடிப்படையான உண்மை. இதை மறுக்க முடியாது. ஆனால், தவறுகளையும் குற்றங்களையும் திருத்தாமலும் முன்னே நகர முடியாது. இதுவும் உண்மை. மறுக்க முடியாது இதையும்.

இதேவேளை யுத்தக் குற்றங்களைக் குறித்தும் கடந்த கால போர் மற்றும் இனமுரண்களைக் குறித்தும் இன்றைய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தையும் இப்படித்தானே நோக்க வேண்டும்? என்று யாரும் கேட்கலாம். உண்மை. இந்தக் கேள்வியும் நியாயமானதே.

தலைமைப்பொறுப்பிலிருக்கும் - ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் எவரொருவர் தவறுகளைச் செய்தாலும் பொறுப்புகளைத் தட்டிக் கழித்தாலும் அது தண்டிக்கப்படவேண்டியது. மன்னிக்க முடியாதது. குற்றத்திற்குரியதே. அதற்கான நெருக்கடிகளை இன்று தொடர்ச்சியாக ராஜபக்ஷ அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியிருப்பது இதனாற்தான்.

ஆனால், இதற்குப் பதிலாக – அல்லது மாற்றாக தான் ஆட்சிக்கு வரும்போது மாற்றங்களையும் தீர்வுகளையும் முன்வைப்பேன் என்று எத்தகைய அடிப்படையில், என்ன துணிச்சலில், எத்தகைய மன உறுதிப்பாட்டுடன் ரணில் வாக்குறுதிகளை வழங்குகிறார்? அல்லது அறிவிப்புகளைச் செய்கிறார்?

அவருடைய கட்சிக்குள்ளேயே அவருக்கு இன்னும் ஏராளம் நெருக்கடிகள். அதையே சமாளிக்க முடியாமற் திணறும்போது புதிய கனவுகளும் ஆசைகளும் அவருக்கு ஏற்படுவது சிரிப்பிற்கிடமானது.

அரசியலில் எதுவும் நடக்கும். இன்று வீழ்ச்சியடைந்திருப்பவர் எதிர்பார்க்க முடியாதவாறு எழுச்சியடைவர் என்பது எதிர்பார்க்கக் கூடியது. ஆனால், ரணில் சொல்லும் தீர்வுகளுக்கான நியாயம் இதை விட வேறானது.

அவர் கூறுகிற படி, இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்க முடியும். நாட்டில் அமைதியையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவேன். அநீதியை ஒழிப்பேன். அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவேன் என்ற அவருடைய கதைகளுக்கான அடிப்படைகள் என்ன? இதற்கான உத்தரவாதங்கள் என்ன? அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தரவாதங்கள்தான் என்ன?

இதுவரையான அரசியற் தவறுகளுக்கும் நாடு சிதைந்ததற்குமான தார்மீகப் பொறுப்பை அந்தக் கட்சியோ அல்லது அதனுடைய எந்தத் தலைவரோ இதுவரையில் ஏற்றுக்கொண்டதாக இல்லை. ஏன் ரணில்கூட இதுகாலவரையான தம்முடைய தவறுகளுக்காக வருத்தம் தெரிவித்ததில்லை. அதுதான் போகட்டும்.

ஆகக்குறைந்தது, அவர் கூறுகின்றதை மெய்ப்பிப்பதற்கான அடிப்படைக்குரிய புதிய திட்டங்களையும் நிலைப்பாடுகளையுமாவது அவர் அறிவிக்கட்டும்.

இனப்பிரச்சினை தொடர்பாக, போர்க் குற்றவிவகாரங்கள் தொடர்பாக, பொருளாதார மறுசீரமைப்புத் தொடர்பாக, இன ஐக்கியம் அல்லது நாட்டின் சுபீட்சம் தொடர்பாக என ஏதாவது ஒன்றைப் பற்றியேனும்.

தேர்தற்காலங்களில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தமிழ், முஸ்லிம், சிங்களக்  கட்சிகளுடன் பேச்சுகளை நடத்துகின்ற ரணில், இனமுரணைத் தீர்த்துக்கொள்வதற்காக ஏன் பேச்சுகளை முன்னெடுக்கக்கூடாது. அல்லது அதற்கான அடிப்படையை உருவாக்குவதற்காகத் தன்னுடைய பாத்திரத்தை வழங்கக்கூடாது. நாட்டில் மக்களின் சுமைகளைக் குறைப்பதற்கும், ஜனநாயக உரிமைகளை மீட்பற்கும் அவர் எத்தகைய போராட்டங்களை நடத்தினார். அல்லது அதற்குத் தயாராக உள்ளாரா?

எதற்கும் அவரால் பதிலளிக்க முடியாது. அத்தகைய உறுதிப்பாட்டையும் நிலைப்பாட்டையும் புதிய பார்வையையும் ஐ.தே.க இன்னும் கொள்ளவில்லை. அதைப் பற்றியே அது சிந்திக்கவும் இல்லை. எனவேதான் அது மிக மிகப் பின்னடைந்து சிதைந்து செல்கிறது.

ஒழுங்கான தலைமைத்துவம் இன்றி, ஒழுங்கான செயற்பாடின்றி இருப்பதற்குக் காரணம் சரியான உறுதிப்பாட்டையும் நிதியான நிலைப்பாட்டையும் புதிய பார்வையையும் அது கொண்டிருக்காமையே.

யாழ்ப்பாணத்தில் சில ஊடகவியலாளர்கள் சில கேள்விகளை திரு. ரணிலிடம் எழுப்பினார்கள். இனப்பிரச்சினைத்தீர்வுக்கான வழிமுறை குறித்தும், போர்க்குற்ற விவகாரங்களைக் குறித்தும், மக்களுடைய வாழ்க்கையைக் குறித்தும் அந்தக் கேள்விகள் இருந்தன.

இவை எவற்றுக்குமே அவர் பதிலளிக்கவில்லை.

அவருடைய கவனங்கள் நீதியைக் குறித்ததோ அமைதியைக் குறித்ததோ மக்களுடைய நல்வாழ்வைக் குறித்ததோ இல்லை என்பதற்கு அருடைய பதிலின்மை தெளிவூட்டுகிறது. பதிலாக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்வதற்கானதே.

இப்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தின் மீதான அதிருப்தியையும் போர்க்குற்றங்களின் அலை, தமிழ் மக்களிடம் உண்டாக்கிய மனநிலையையும் தனக்கான அறுவடையாக்கும் முயற்சியில், இந்தச் சற்றேனும் மனந்தளராத (ரணில்) விக்கிரம (hதித்தன்) சிங்க இறங்கியுள்ளார்.

வரலாறு ஒரு சக்கரம்தான். அதேவேளை அது மக்களின் மறதியினூடாகவும் அவர்களுடைய மூடத்தனங்களுக்கூடாகவும் திரும்பத்திரும்ப அதிகாரத்தை பொருத்தமற்றவர்களின் கைகளிற் கொடுத்துவிடுகிறது.

00






0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB