கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

இலங்கைத் தமிழ் மீனவர் பிரச்சினை - புரிந்துணர்வே தீர்வைத் தரும்

Saturday 10 March 2012




















இலங்கையின் வடபகுதியிலுள்ள மீனவர்கள் இன்னும் பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டேயிருக்கின்றனர். மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்ற நிலை. போர் முடிந்தாலும் பிரச்சினைகள் தீரவில்லை. 


முன்னர் கடல்வலயச்சட்டம், போர் போன்ற அரசியற் காரணங்களினால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த மீனவர்கள் இப்போது அந்தத் தடைகளைக் கடந்துள்ளனர். இன்னும் வலி வடக்குப் பிரதேசத்தில் காங்கேசன்துறை – மயிலிட்டி போன்ற ஒரு வரையறுக்கப்பட்ட பிரதேசத்தைத் தவிர, ஏனைய இடங்களில் இயல்பாகத் தொழில் செய்யக்கூடிய நிலைமை உருவாகியிருக்கிறது. 


ஆனால், இந்த இயல்பு நிலையில், நீண்ட காலத்துக்குப் பின்னர் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பான சூழலில் புதிய பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன. 


இந்திய மீனவர்கள் என்று சொல்லப்படும் தமிழக மீனவர்களின் அத்துமீறல்களால் வடக்கின் பெரும்பாலான இடங்களிலுள்ள இலங்கைத் தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக பல மட்டங்களிலும் பேசப்பட்டாலும் எந்தத் தீர்வும் இன்னும் கிட்டவேயில்லை. 


இதேவேளை வடக்கில் சில பிரதேசங்களில் உள்ளுர் மீனவர்களால் இன்னொரு பிரதேச மீனவர்கள் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது. ஆகவே இந்தப் பிரச்சினைகளைப் பற்றி வடபிராந்திய கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் திரு. எஸ்.தவரட்ணம் அவர்களுடன் “வீரகேசரி்“ வாரவெளியீட்டிற்காக உரையாடினோம். 

00

இந்திய மீனவர்களினால் ஏற்படும் பிரச்சினைகள் இப்பொழுது எந்த அளவில் உள்ளன? கடந்த வாரம் நீங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கச்சதீவுக்குச் சென்று அங்கும் பேச்சுகளை நடத்தியிருக்கிறீர்கள். இந்த நிலையில் இது தொடர்பாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன?

இந்தப் பிரச்சினைக்கு இன்னும் ஒரு தெளிவான தீர்வு – நிரந்தரத் தீர்வு கிட்டவில்லை. ஆனால் எங்களுடைய பிரச்சினையை, எங்களின் நியாயத்தைத் தமிழக மீனவர்கள் புரிந்திருக்கிறார்கள். அதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். கடந்த வாரம்கூட நாங்கள்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கச்சதீவில் சுமார் மூவாயிரம் வரையான தமிழக மீனவர்களையும் அவர்களுடைய பிரதிநிதிகளையும் சந்தித்தோம். மிக விரிவாக இது தொடர்பாக, எங்களுடைய நிலைமைகள் தொடர்பாக நாங்கள் பேசினோம். பலவிசயங்களிலும் ஒத்துக் கொள்கிறார்கள். முன்னர் இந்தியாவுக்குச் சென்றே பேசியிருக்கிறோம். ஆகவே எங்களுடைய பிரச்சினைகள் அவர்களுக்கு நன்றாகவே புரிந்துள்ளது.

இந்தப் பிரச்சினை இன்று இந்திய - இலங்கை அரசுகளின் உயர் மட்டம் வரையில் பேசப்படுகின்ற அளவுக்கு கவனத்தைப் பெற்றுள்ளன.

ஆனால், அதையெல்லாம் எப்படி நடைமுறைக்குக் கொண்டு வருவது என்பதில்தான் பிரச்சினைகள் உள்ளன.

ஏனென்றால் இது இரண்டு நாடுகளுடன் சம்மந்தப்பட்ட பிரச்சினை. இரண்டு நாடுகளின் சட்ட திட்டங்கள், தொழில்முறைகள் சம்மந்தப்பட்ட பிரச்சினையாக இருக்கிறது. எனவே இந்தப் பிரச்சினையில் இந்திய அரசாங்கமும் இந்திய அரசியற் தலைவர்களும் எடுக்கின்ற தீர்மானங்கள்தான் இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத்தீர்வை, நல்ல தீர்வைத் தரும். முக்கியமாகத் தமிழ் நாட்டு அரசும் அங்குள்ள அரசியற் தலைவர்களும் இந்த விசயத்தில் மிகவும் பொறுப்போடு செயற்பட வேண்டும்.

இதைச் சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்? உங்களுடைய பிரச்சினைகள் என்னமாதிரியுள்ளன? அவை எந்த அளவில் உள்ளன?

எங்களுக்கு இப்பொழுது தமிழக மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் என்று பார்த்தால், நாகபட்டினம் பகுதியிலுள்ள மீனவர்களால் முல்லைத்தீவு தொடக்கம் வடமராட்சி கிழக்கு வரையான மீனவர்களுக்குப் பிரச்சினை ஏற்படுகிறது.

தொண்டி போன்ற பகுதி மீனவர்களால் வடமராட்சி மற்றும் வலிகாமம் மேற்குப் பகுதியான சுழிபுரம், மாதகல் போன்ற இடங்களைச் சேர்ந்த மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

ராமேஸ்வரம் பகுதி மீனவர்களால் மன்னார் வளைகுடாப் பகுதியில் தொழிற்செய்யும் எங்களுடைய கடற்றொழிலாளர்கள் பாதிப்புள்ளாகின்றனர்.

இந்திய மீனவர்கள் என்று சொல்லப்படும் தமிழக மீனவர்கள் செய்கின்ற தொழில்முறை வேறு. நாங்கள் செய்கின்ற தொழில்முறை வேறு. அவர்கள் பெரிய படகுகளில் வந்து மடிவலைகளைப் பயன்படுத்தித் தொழில் செய்கின்றனர். இது வளத்தை அழிக்கிறது. நாங்கள் கடலில் உள்ள வளத்தைப் பாதுகாத்துக்கொண்டே தொழிலைச் செய்ய வேணும். கடலில் கண்டமேடைகள் என்று சொல்லப்படும் மீன் வளப் பகுதிகளை நாங்கள் அழியவிட முடியாது. அந்தக் கண்ட மேடைகளே மீன்வள உற்பத்திக்கான ஆதாரமாகும்.

தமிழக மீனவர்கள் பயன்படுத்துகின்ற மடிவலைகள் இந்தக் கண்டமேடைகளுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எங்களுடைய மீனவர்கள் சிறுரகமான வலைகளையே பாவிக்கின்றனர்.

இந்த நிலையில் மடிவலைகளுடன் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசிக்கும் தமிழக மீனவர்களால் எமது வலைகள் அறுக்கப்படுகின்றன.

இதை அவர்கள் திட்டமிட்டுச் செய்கிறார்களா?

அவர்களும் நாங்களும் உடன்பிறப்புகளைப் போன்றவர்கள். சகோதர உறவே எங்களுக்கிடையிலுள்ளது. சில சந்தர்ப்பங்களில் எங்களுடைய படகுகள் வள்ளங்கள் பாதிக்கப்பட்டால் அவை தமிழக மீனவர்களால் காப்பாற்றப்படுகின்றன. அதைப்போல அவர்கள் வழிமாறி வந்தாலும் நாங்களே அவர்களைக் காப்பாற்றி உரிய இடத்துக்கு அனுப்பி வைக்கிறோம்.

இப்படியான ஒரு உறவே எங்களுக்கிடையில் உள்ளது. ஆனால், இந்த அத்துமீறல் இதையெல்லாம் பாதிக்கிற மாதிரியே நடக்கிறது. முக்கியமாக இவர்கள் பயன்படுத்துகின்ற வலையும் செய்கிற தொழில்முறையும் எங்களின் எல்லைக்குள் பிரவேசிப்பதுமே எங்களுக்குப் பாதிப்பபைத் தருகின்றன.


எந்த அடிப்படையில் இந்தப் பிரச்சினையைத் தமிழக மீனவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்? இந்திய அரசும் தமிழக அரசும் அங்குள்ள அரசியற் தலைவர்களும் இந்தப் பிரச்சினையை எப்படிக் கையாள்கின்றன? 

நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆனால், தங்களுக்கு வேறு தொழில்முறையைப் பற்றித் தெரியாது என்று சொல்கிறார்கள். அதேவேளை தங்களுக்கு இந்த இழுவைப்படகு - மடிவலையைப் பயன்படுத்துவதற்கு தடையில்லை என்றும் வேறு தொழில்களைச் செய்வதற்கான வசதிகள் - உபகரணங்கள்; தங்களிடம் இல்லை என்றும் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக அரசும் இந்திய அரசும் இது தொடர்பாக ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேணும். அயல் மீனவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொதுவான தார்மீக ரீதியான நடைமுறையொன்றை இவை பேண வேண்டும்.

இந்த மாதிரிக் கடல் மற்றும் காடு சார்ந்த எலலைப் பிரச்சினைகள் நாடுகளுக்கிடையில் ஏற்படுவதுண்டு. இதைத் தீர்த்துக்கொள்வதற்கு உரிய சர்வதேசச் சட்டங்களும் விதிமுறைகளும் உள்ளன. ஆனால், இதை யார் இப்போது நடைமுறைப்படுத்துவது?

இதைச் செய்யவேண்டியது தார்மீக அடிப்படைகளைப் பற்றிச் சிந்திக்கும் அறிஞர்களும் பொறுப்பான அரசியல்வாதிகளுமே. தமிழக அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் நலன்களைப் பற்றியே சிந்திக்கிறார்கள். இப்போது தமிழக அரசில் கடல்வளத்துறை கடற்றொழிற்றுறை அமைச்சராக இருப்பவருக்கே ஐந்து ஆறு வள்ளங்கள் இருப்பதாக தமிழக மீனவர்களே சொல்கிறார்கள். இப்படி இருக்கும்போது அவர்கள் எப்படி எங்களுக்காகச் சிந்திப்பார்கள்?

தமிழகத்தில் இருக்கின்ற பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு ஈழப்போராட்டம் ஒரு அரசியல் அந்தஸ்தைக் கொடுத்துள்ளது. அதற்காகவே அவர்கள் எப்போதும் அதைப் பற்றிக் கதைக்கிறார்கள். மற்றும்படி இந்த மாதிரியான நிலைமையில் ஈழமீனவர்கள் பாதிக்கப்படுவதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

தமிழகத்தில் செயற்படுகின்ற பல ஊடகங்களும் தவறான முறையிலேயே இந்தப் பிரச்சினைகளை எழுதி வருகின்றன.

எங்களுடைய பாதிப்பைப் பற்றி யாரும் உரியமுறையிற் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

சரி, அப்படியானால் இந்தப் பிரச்சினைக்கு என்னதான் முடிவு? இதை எப்படித் தீர்த்துக் கொள்வது?

இந்தப் பிரச்சினையைப் பேசித்தான் தீர்க்க முடியும். பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வைக் காண முடியும். ஆனால் அந்தத் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு அரசுகளால்தான் முடியும்

குறிப்பாக தொழில் முறையை மாற்றுவதைப் பற்றி, வள அழிவைத் தடுப்பதைப் பற்றி துறைசார்ந்த முறையில் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அரசுகளால்தான் முடியும். அதேபோல சட்டத்தை விதிப்பதற்கும் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் அதைக் கண்காணிப்பதற்கும் அரசாங்கங்களிடமே அதிகாரம் உள்ளது.

நாங்கள் இதுவரையில் பேசிக் காணப்பட்ட விசயங்களை நடைமுறைப்படுத்தியிருந்தாலே எவ்வளவோ பிரச்சினைகள் தீர்ந்திருக்கும். ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதற்கு எங்களிடம் அதிகாரம் எதுவும் இல்லை என்பதே காரணமாகும்.

ஆகவே, அரசுகள் எட்டப்படும் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். அதற்குக் கால எல்லையை நிர்ணயிக்க வேண்டும். இப்படிச் செய்யும்பொழுது பகைமையற்ற ஒரு நிலைமை ஏற்படும்.

அப்படியென்றால் எங்கே பிரச்சினை உண்டு? எதற்காக இந்தப் பிரச்சினை இன்னும் நீண்டு செல்கிறது?

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலே கடல்வளக் கற்கை நெறி படிப்பிக்கப்படுகிறது. இலங்கையிலே இன்னும் வேறு பல பல்கலைக்கழகங்களிலும் கடற்றொழிற் கல்வி போதிக்கப்படுகிறது. கடற்றொழிலுக்கு என்று தனியான அமைச்சே உண்டு.

ஆனால், இந்தப் பிரச்சினையை யாரும் உரிய கவனத்திற்கொள்வதாகத் தெரியவில்லை. இப்போதுதான் நாங்கள் மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் ஒரு நல்ல நிலையில் தொழிலைச் செய்ய வாய்த்திருக்கிறது என்றால், அதற்கும் பிரச்சினை. முன்னர் போர் பிரச்சினையாக இருந்தது. இப்போது தமிழக மீனவர் விவகாரம் பிரச்சினையாக உள்ளது.

இந்தப் பிரச்சினையை மீனவர்கள்தான் பேசி முடிவு காண வேண்டும். நாங்கள் பேசி பிரச்சினைகளைப் புரிய வைத்துள்ளோம். இப்போது அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு அதிகார மட்டத்திலுள்ளவர்களே முயற்சிக்க வேண்டும். அதிகாரிகள் தனியே பேசுகிறார்கள். அதிகாரிகளுக்குப் பிரச்சினைகளைப் பற்றித் தெரியாது. ஆகவே எல்லோரும் விசுவாசமாக இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முனைந்தால் இலகுவாகவே தீர்க்கப்பட்டு விடும்.

அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வந்திருந்தபோது இந்த மீனவர் பிரச்சினை பேசப்பட்டது. அவர் அதற்கு ஒரு திட்டத்தையும் முன்மொழிந்திருந்தாரே!

ஆமாம். அவரைச் சந்தித்திருந்தோம். அவர் எல்லாவற்றையும் கேட்டறிந்தார். இந்தப் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுத்தர முயற்சிக்கிறேன் என்று யாழ்ப்பாணத்தில் கூறிவிட்டுச் சென்றார்.

ஆனால், கொழும்பிலே அவர் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் சொன்ன அறிவுரை எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வாரத்தில் மூன்று நாட்கள் இலங்;கை மீனவர்களுக்கும் மூன்று நாட்கள் இந்திய மீனவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படட்டும். ஒருநாள் விடுமுறை நாளாகட்டும் என்று சொன்னார்.

அவர் ஒரு படித்த மனிதர். பலராலும் மதிக்கப்படுகிறவர். நாங்கள் கூட அவரை மதிக்கிறோம். அவரை விரும்புகிறொம். ஆனால், வாழ்வோடும் எதிர்காலத்தோடும் போராடிக்கொண்டிருக்கிறது எங்களொடு இந்த மாதிரி அவர் பேசுவது நல்லதல்ல.

கடல்வளம் அழிந்த பின்னர், அந்த வளத்தைப் பாதுகாப்பதைப் பற்றிச் சிந்திக்காமல் பொறுப்பற்ற முறையில் அரசியல் பேசுவது  அழகல்ல. அது நல்லதுமல்ல. எல்லோராலும் மதிக்கப்படுகின்ற அப்துல் கலாம் என்ற பெரிய அறிஞருக்கு – அதுவும் தமிழராகவே இருக்கின்ற அவருக்கு இது பொருத்தமானதல்ல.

 தமிழக மீனவர்களின் தொழில்முறையினால், கடல்வளங்கள் அழிக்கப்படுவதாகச் சொல்கிறீர்கள். ஆனால், கடல்வளத்தைக் கவனத்திற் கொண்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தொழிற்தடையை விதித்து அதைப் பேணுவதாகவும் அறிகிறோம். ஆனால், நீங்கள் இதற்கு மாறாகச் சொல்கிறீங்கள். அவர்களுடைய தொழில்முறையில் வளப் பாதுகாப்பைப் பற்றிப் பொருட்படுத்தவில்லையென்று...?

அவர்கள் மீன்கள் பெருகுவதற்கான ஒரு பருவகாலத்தை மட்டுமே சிந்திக்கிறார்கள். எங்களுடைய கடலோ பவளப்பாறைகளால் ஆனது. இந்தப் பவளப்பாறைகள் எங்களுக்குக் கிடைத்துள்ள பெரும் வளம். இழுவைப்படகுகளின் தொழில் முறையினால் இந்த வளம் பாதிக்கப்படுகிறது என்பதே எங்களுடைய கருத்து. இதை எங்களுடைய கடல்வள ஆய்வுகளே எடுத்துக் கூறுகின்றன. கடல் வள அறிஞர்கள் இதைப் பற்றித் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள்.

ஆகவே வளத்தைப் பயன்படுத்தினால் அதன்மூலம் நாங்களும் பயன்பெறலாம். தமிழக மீனவர்களும் பயன்பெறலாம்.

பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைத்து வளத்தைப் பாதுகாத்து ஒரு தொழில் வடிவத்தை நாம் உருவாக்க வேண்டும். நாங்கள் இரண்டு தரப்பினரும்  உறவுகளாக – உடன்பிறப்புகளாக – சகோதரர்களாக வாழ்ந்த வரலாற்றை மறக்கவே கூடாது.

சரி, உள்ளுரிலும் பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக குருநகர்ப் பகுதி மீனவர்களால் பூநகரிப் பகுதி மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புகளைச் சந்திப்பதாகச் சொல்லி வருகிறார்கள். இது தொடர்பாக நீதிமன்றம்வரை சென்றுள்ள நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. இதைப் பற்றிச் சொல்லுங்கள்?

தமிழக மீனவர்களால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுவதைப்போலத்தான் இதுவும். குருநகர் மீனவர்கள் இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட தொழில்முறையைச் செய்கிறார்கள். இதை நாங்கள் (சமாசம்) தடுத்திருக்கிறது. ஆனால், அவர்கள் சட்டவிரோதமாக - இரகசியமான முறையில் அந்தத் தொழிலைச் செய்கிறார்கள். இது பிழையான நடவடிக்கையே. மனச்சாட்சிக்கும் சக தொழிலாளிக்கும் செய்கின்ற அநியாயம்.

ஆனால், இதை நாம் தடுப்பதற்கு எங்களிடம் அதிகாரம் இல்லை. அதைப் பற்றி எங்களுடைய சங்கவிதிகளில் குறிப்பிடவில்லை. ஆகவே இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது திணைக்களமே. ஆனால், அவர்கள் கண்டும் காணாமல் விடுகிறார்கள். இது அடுத்த தவறாகும்.

மற்றது, இந்தப் பிரச்சினை நீதிமன்றத்துக்குச் சென்றபோது அங்கே குறிப்பிட்ட நபருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நான்கு படகுகளுக்கும் தலா ஒன்பது ஆயிரம் ரூபாய்ப்படி தண்டப்பணம் அறவிடப்பட்டதாக அறிகிறோம். அப்படிப் பார்த்தால் நான்கு படகுகளுக்கும் அன்று விதிக்கப்பட்ட தண்டப்பணத்தின் தொகை 36.000. ஆனால், அன்றைய அவர்களுடைய வருமானம் அதற்குப் பல மடங்காகும். அப்படியென்றால், எப்படி இதைத் தடுக்க முடியும்?

ஆகவே தண்டப்பணத்தை மிக அதிகமாக அறவிடவேண்டும்.

இதற்கெல்லாம் முதலில் புரிந்துணர்வு அவசியம். கள்ளனாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் இதைத் திருத்த முடியாது என்ற நிலைதான்.

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB