கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

Monday 19 March 2012



நேர்காணல் - 


ஆண்டியப்பன் வெள்ளைச்சாமி






போருக்குப் பிந்திய சூழலையும் சமூகத்தையும் ஒழுங்குபடுத்துவது மிகச் சவாலான காரியம். 


யுத்தத்தின் போது இருப்பிடம், தொழில், பொருட்கள், சேகரிப்புகள் எல்லாமே அழிந்தும் சிதைந்தும் விடுகின்றன. இடப்பெயர்வும் அகதி வாழ்க்கையும் மிக மோசமான அலைச்சலையும் அவலத்தையும் தருகின்;றன. இதனால் வாழ்க்கையின் கட்டமைப்பே தகர்ந்து விடுகிறது. போதாக்குறைக்கு உடல் உறுப்புகளின் இழப்பும் குடும்பத்தில் உயிரிழப்பும் ஏற்படும்போது இந்த நிலை இன்னும் மோசமாகிறது. இதனால், உளச் சிதைவு மிகப் பயங்கரமான அளவுக்கு சமூகத்தைப் பாதிக்கிறது. 


இவற்றையெல்லாம் மறுபடியும் மீள் நிலைப்படுத்துவதென்பது மிகச் சிக்கலான விசயம். 


போர் முடிந்த பின்னர், போரினாற் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் புனரமைப்புச் செய்வது, மக்களை மீள் நிலைப்படுத்துவது, இயல்புச் சூழலையும் இயல்பு வாழ்வையும் உருவாக்குவது என்பதெல்லாம் மிக உச்சமான பொறிமுறையினூடாகவும் கூட்டுச் செயற்பாடுகளினூடாகவுமே செய்யப்பட வேண்டியவை. 


ஆனால், துரதிர்ஷ்ட வசமாக இந்த விசயத்தில் இலங்கையின் அரசியற் சூழலும் அணுகுமுறையும் தமிழ் பேசும் மக்களின் தலைமைகளிடத்திலிருக்கின்ற குறைபாடுகளும் பெரும் இடைவெளிகளையே – பின்தங்கு நிலைகளையே ஏற்படுத்தியுள்ளன. உதவவேண்டிய நிலையிலிருக்கும் புலம்பெயர்ந்த சமூகத்திற் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்ட மக்களைக் குறித்துச் சிந்திப்பதையும் விட, இலங்கை அரசைப் பற்றிய சித்திரங்களையே தங்களுடைய மூளையில் நிரப்பி வைத்திருக்கிறார்கள். 


இதனால், இன்னமும் (போர் முடிந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலுள்ள இன்றைய கட்டத்திலும்) யுத்தப் பாதிப்புகளிலிருந்து மீள முடியாத நிலையிலேயே 60 வீதத்துக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். 


இவர்களுக்கு முறையான ஆதரவுகள் இல்லை. உதவிப் பணிகள் போதாது. எனவே இவர்கள் இன்னும் சிதைந்த வாழ்விலிருந்து மீண்டெழ முடியாமற் தவிக்கின்றனர். இந்த நிலையிலிருக்கும் ஆயிரக்கணக்கானோரில் ஒருவரான ஆண்டியப்பன் வெள்ளைச்சாமியை ‘வீரகேசரி வாரவெளியீட்டு’க்காகச் சந்தித்து உரையாடினோம். 


பரந்தனில் வசிக்கும் ஆண்டியப்பன் வெள்ளைச்சாமி, இறுதிக் கட்டப்போரில் காயப்பட்டவர். போர்க்களத்துக்குச் செல்லாமல், போரில் ஈடுபடாமலே காயப்பட்ட பல பொதுமக்களில் ஒருவர். இப்போது காயப்பட்டவர்களுக்கான உதவி ஏதாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு, தனக்கான உதவியைக் கோருவதற்காக கண்டாவளைப் பிரதேச செயலகத்தில் காத்திருந்த வேளை இந்த உரையாடலை மேற்கொண்டோம். 


00

 யுத்தத்துக்குப் பிறகு உங்களுடைய நிலைமை – உங்களின் வாழ்க்கை எல்லாம் எப்படி இருக்கு?

 ரொம்ப மோசம். சண்டை இல்லை என்கிறது கொஞ்சம் ஆறுதல். சாவு என்கிறது இப்ப இல்லை. ஊருக்குத் திரும்பியிருக்கிறம். ஆனால், இன்னும் முழுசா எல்லாம் வந்திடவில்லை. இன்னும் நான் தொழிலுக்குப் போகயில்லை. சிலபேர் வீடுகளைக் கட்டியிருக்கிறாங்கள். அவங்களுக்கு வீட்டுத்திட்டம் கிடைச்சிருக்கு. எல்லாருக்கும் வீட்டுத்திட்;டம் கிடைக்கயில்லை. ஆனா வருமெண்டுதான் சொல்றாங்க. இந்திய வீட்டுத்திட்டம்தான் வரப்போகுது என்கிறார்கள். அதுக்காகக் காத்திட்டு இருக்கிறோம்.

முன்னர் என்ன தொழில் செய்தீங்கள்? இப்போது ஏன் அந்தத் தொழிலைச் செய்ய முடியவில்லை? அல்லது அந்தத் தொழிலை மீள ஆரம்பிக்கிறதில என்ன பிரச்சினைகள்?


முன்னர் நான் கடை வைச்சிருந்தேன். சிறிய கடைதான். ஆனால் எங்களுடைய குடும்பத்துக்கு அது போதும். சண்டைக் காலத்தில அது போயிட்டுது. இடம்பெயர்ந்து போகும்போது எல்லாத்தையும் இழந்திட்டம். அப்படியே மாத்தளன்வரையும் போனோம். மாத்தளனில் நான் காயப்பட்டேன். இந்தா, இந்த வலக் கையிற்தான் காயம். அங்கயிருந்தே புல்மோட்டைக்கு ஏத்தினாங்கள். குடும்பம் தனிச்சிப்போயிட்டு.

பிறகு, நான் சுகப்பட்டு, முகாமுக்கு வந்து தேடித்தான் குடும்பத்தைச் சந்திச்சேன். இப்ப மறுபடியும் எல்லாரும் ஒண்ணா இருக்கிறம். ஆனால் தொழிலும் வருமானமும்தான் இல்லை.

புதிசா அந்தக் கடையை ஆரம்பிக்கிறதா இருந்தால் ரண்டு லட்சம் ரூபாயாவது வேணும். முன்னர் நான் மோட்டார் சைக்கிளை வைச்சிருந்தேன். கடைக்கு அதில் பொருட்களை எடுத்துப் போவேன். இப்ப அது ஒரு பிரச்சினை. அதுக்கும் ஏதாவது ஏற்பாடு வேணும்.

ஏன், என்ன மாதிரியான கடையை வைத்திருந்தீர்கள்? நடமாடும் வியாபாரமா? இப்ப வங்கிகள் தாராளமாகக் கடனைக் கொடுக்கின்றனவே?

நாங்கள் இருக்கிறது பரந்தனில். கடையை வைச்சிருந்தது கட்டைக்காடு கடற்கரையில். எங்களுடைய வீட்டுக்கும் நாங்க கடை வைச்சிருந்த இடத்துக்கும் இடையில் 20 கிலோ மீற்றர் தூரம். இங்கே பரந்தனில் பழங்கள் கிடைக்கும். அல்லது கிளிநொச்சியிலுள்ள தோட்டங்களுக்குப் போய் நான் பழங்களை எடுப்பேன். காய்கறிகளை வாங்குவேன்.

அதே மாதிரி, இங்க பரந்தனில் தாராளமாகப் பால் வாங்க முடியும். எங்களிடம் மாடுகள் நின்றன. அதிலும் பால் எடுப்போம். தயிர் ஆக்குவோம். அதை விட இங்கே வேறு இடங்களிலம் தாராளமாகத் தயிரை எடுக்கலாம். இதையெல்லாம் எடுத்துக் கொண்டுபோய் அங்கே, கடற்கரையில் விற்பேன். அங்கே ஒரு கடை போட்டிருந்தேன். கடையில் வேறு பொருட்களும் போட்டிருந்தேன். அதேவேளை இந்தப் பழங்களையும் தயிரையும் சேர்த்து விற்பேன். கடற்கரையில் இந்தப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு. அங்கே கடுமையான வெக்கை. அதற்காகத் தயிரும் பழங்களும் வாங்குவார்கள். அந்த மக்கள் செலவைப் பற்றி அதிகம் சிந்திக்க மாட்டார்கள். நல்ல உழைப்பாளிகள். தாராளமாக உழைப்பார்கள். அந்த அளவுக்குச் செலவழிப்பார்கள்.

அப்ப, இங்க – பரந்தனிலிருந்து இந்தப் பொருட்களை (பால், தயிர், பழங்கள், காய்கறி போன்றவற்றை) எடுத்துப் போவதற்கு மோட்டார் சைக்கிள் வேணும். பஸ் போக்குவரத்தெல்லாம் இன்னும் சரியாக இல்லை. இதுதான் பிரச்சினை.

வங்கிகள் கடன் கொடுக்கின்றன. ஆனால், முழுசாக் கடனை எடுத்து, தொழிலைப் பார்க்க முடியுமா? எனக்கும் முன்னரைப்போல இப்ப எல்லாத்துக்கும் ஏலாது. இந்தக் கையைப் பார்த்தீங்களா? பாரம் எல்லாம் தூக்க முடியாது. மாத்தளனில் ‘ஷெல்’ பட்டதால, ஆறுமாதம் ஆஸ்பத்திரியில் படுத்திருந்து சரிப்படுத்தியிருக்கிற கை.

ஏதாவது, உதவிகள் கிடைத்தால் அதையும் வைச்சு, வங்கியில் கடனையும் எடுத்து மறுபடியும் தொழிலைச் செய்யலாம் என்றே யோசிக்கிறேன். இல்லாவிட்டால் வங்கிக் கடனுக்காகவும் வட்டிக்காகவும்தான் உழைக்க முடியும். குடும்பத்துக்கான வருவாயும் தேவையல்லவா?

அதைவிட வங்கிகள் தாராளமாக கடனைக் கொடுத்தாலும் எங்களை மாதிரி ஆட்களுக்கு இலகுவாகக் கொடுக்க மாட்டார்கள். அதுக்கு இரண்டு அரசாங்க உத்தியோகத்தர்கள் பிணை நிற்க வேண்டும். அல்லது ஊரில் இருக்கிற பொது அமைப்புகள் சிபாரிசு செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு, கடற்றொழில் செய்கிறவர்களுக்கெல்லாம் அவர்களுடைய சங்கங்கள் இருக்கின்றன. நாங்கள் அந்தச் சங்கங்களில் இல்லை. இதையெல்லாம் செய்து கொண்டே இருக்கிறேன். அதாவது, வங்கிக் கடனுக்காக முயற்சி செய்து கொண்டேயிருக்கிறேன்.

யாரிடமாவது உதவிகளைக் கேட்டிருக்கிறீர்களா? அல்லது அரச உதவிகள் ஏதும் கிடைக்கவில்லையா?

அரசாங்க உதவிகள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் காயப்பட்டவர்களுக்கும் போரினால் இறப்புகளைச் சந்தித்த குடும்பங்களுக்கும் அரசாங்கத்தின் உதவிகள் வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். அது தொடர்பாகத்தான் இங்கே – பிரதேச செயலரின் அலுவலகத்திற்கு – வந்திருக்கிறேன்.

ஆனால், இந்த உதவி எப்போது கிடைக்கும், எந்த அளவிற் கிடைக்கும் என்றெல்லாம் தெரியாது. அதுவரைக்கும் பொறுத்துக் கொண்டிருக்க முடியுமா? குடும்பத்துக்கு ஏதாவது செய்யவேணுமே!

 உங்களைப் போன்ற ஆட்களுக்கு சிறு தொழில் அல்லது சுயதொழில் முயற்சிக்கான உதவிகள் அல்லது கடன் போன்றவை வழங்கப்படுகின்றனவே! குறிப்பாக குறிப்பிட்ட சில திணைக்களங்கள் அவற்றை வழங்கி வருகின்றன அல்லவா?

விவசாயிகளுக்கும் கடற்றொழில் செய்கிற ஆட்களுக்கும் இலகு கடன் கொடுக்கப்படுகிறது. தொழில் செய்வதற்கான உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. அதைவிட பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் என்று சொல்லப்படுகிறவைக்கும் உதவிகள் செய்யப்படுகின்றன. இந்த உதவிகளை பல தொண்டு அமைப்புகள் செய்கின்றன.

ஆனால், என்னைப்போல இருக்கிற பாதிக்கப்பட்ட ஆட்களுக்கு இன்னும் முழுமையான உதவிகள் கிடைக்கவில்லை. மாற்று வலுவுடையோர் என்ற வகையில் உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கான சிறு உதவிகள் செய்யப்படுகின்றன. அதற்காக கிளிநொச்சியில் இயங்கிய நிறுவனம் இப்போது இயங்கவில்லை என்று சொல்கிறார்கள். அந்த அமைப்பு வவுனியாவில் இயங்குகிறதாம்.

எனக்கு கை இருக்கு. ஆனால், அந்தக் கையால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னைப் போல இந்த மாதிரி நிலைமையில பலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு என்னவகையான உதவிகளைச் செய்யலாம் என்று பார்த்துச் சொல்லிறதுக்கு யாரும் இல்லை. இதுதான் எங்களின்ரை பிரச்சினை.

புனர்வாழ்வு அமைச்சு என்று ஒண்டிருக்கு. அதன் மூலமாக உதவி கிடைக்கும் என்று நம்பினோம். ஆனால், அந்த அமைச்சையே எங்களின் பகுதியில் காணவில்லை. கச்சேரியில் ஒரு கிளை இருக்கு. அங்கே போய்க்கேட்டால், விவரத்தை எடுக்கச் சொல்லியிருக்கு என்று மட்டும் சொல்கிறார்கள்.

அதன்படியே இஞ்ச வந்திருக்கிறன். பதிவு செய்வதற்காக.


உங்களுக்கு ஏதாவது உதவி கிடைத்தால் என்ன செய்வதற்குத் திட்டமிட்டிருக்கிறீர்கள்? 

எனக்குத் தெரிஞ்ச ஆட்கள் கடற்கரையில் இருக்கினம். அறிமுகமான இடத்தில் தொழில் செய்கிறது நல்லது. உதவியாகவும் இருக்கும். கடற்கரைக்கு வாங்கோ நாங்களும் உதவி செய்கிறோம் என்று அங்கே இருக்கிற ஆட்களும் கேட்டிருக்கினம். முன்னர் என்றால் அவர்கள் தாராளமாகவே உதவி செய்வினம். இப்ப அவர்களும் போரில் பாதிக்கப்பட்டு, அகதிகளாக இருந்து மீள்குடியேறியிருக்கினம். அதோட சுனாமியிலும் பாதிக்கப்பட்டவர்கள்.

இல்லையென்றால் இந்த நேரம் அவர்களே தாராளமாக உதவியிருப்பினம். ஆனால், நான் அங்கே போய்த்தொழிலைத் தொடங்கினால் அதுக்கு நல்ல உதவிகளைச் செய்வினம்.

உங்களுடைய நம்பிக்கை பாராட்டத்தக்கது. நிலைமைகளை நீங்கள் நன்றாகவே விளங்கி வைத்திருக்கிறீங்கள். உங்களுக்கு உதவியாக குடும்பத்தில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள்?

எனக்கு மூன்று பிள்ளைகள். மூன்றும் பெண்கள்தான். ரண்டு பேர் படிக்கிறார்கள். மூத்த பெண் வீட்டிலிருந்து கொண்டே பல உதவிகளைச் செய்வார். முன்னரும் வீட்டிலிருந்து கொண்டே பால் வாங்கித் தயிர் போட்டுக் கொண்டு பொயிருக்கிறேன். காய்களை வாங்கிப் பழுக்க வைத்து ஏற்பாடுகள் செய்வார்கள். எங்களுடைய வீடே இயங்கும். அப்படித்தான் எல்லாவற்றையும் செய்தோம்.

இப்ப கூட நாங்கள் எதையும் செய்வோம். தொழிலை ஆரம்பிக்கிறதுக்கு என்று ஒரு சிறு உதவிதான் தேவை. அது கடனாக இருந்தாலும் பரவாயில்லை.

உங்களை மாதிரி எவ்வளவு பேர் இப்படி இருக்கிறார்கள்? அவர்கள் என்ன செய்கிறார்கள்? அதாவது தங்களுடைய வாழ்க்கையை நடத்துவதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள்?

என்னைப்போலப் பலர் இருக்கிறார்கள். கிராமங்கள் தோறும் இந்த மாதிரிப் பாதிக்கப்பட்டவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். எல்லோருடைய நிலைமையையும் கஸ்ரமாகத்தான் இருக்கு. எங்களுடைய ஊரில் மட்டும் என்னைப் போல பதினாறு பேர் இருக்கிறார்கள். ஆறு பேருக்கு கால் இல்லை. மூன்று பேருக்கு கைகளில்லை. ஒருதருக்கு ரண்டு கையும் ஒரு காலும் இல்லை. இந்த நிலைமையில்தான் எங்களுடைய வாழ்க்கை போய்க்கொண்டிருக்கு.

சில இடங்களில் புலம்பெயர்ந்த மக்களுடைய அமைப்புகள் உங்களைப் போன்றவர்களுக்கு உதவி செய்வதாக அறிகிறொம். உங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லையா?

இல்லை. எங்களுடைய ஊருக்கு யாரும் அந்த மாதிரி வந்ததாகத் தெரியவில்லை. முன்னர் ஒரு தடவை யாரோ வந்து பெயர் விவரமெல்லாம் எடுத்துக்கொண்டு போனார்கள். ஆனால் உதவிகள் ஒன்றுமே கிடைக்கவில்லை. எனக்குக் கை நல்லாயிருக்கும் என்றால் நான் யாரிடமும் உதவிகளை எதிர்பார்க்க மாட்டேன். இப்ப வயசும் ஆச்சு.

00

நன்றி - வீரகேசரி

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB