கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

ஜெனிவா – மனித உரிமைகள் பேரவை - இலங்கைக்கு எதிரான பிரேரணை அமெரிக்கப் பிரேரணை –

Tuesday 27 March 2012





இறுதியில் அது நடந்தே விட்டது. எது நடக்கக்கூடாது என்று இலங்கை விரும்பியதோ அது நடந்தே விட்டது. அது அப்படி நடப்பதை இலங்கை அரசினால் தடுக்க முடியவில்லை. அதைத் தடுப்பதற்காக அது எடுத்த அத்தனை முயற்சிகளும் இறுதியில் பயனற்றுப்போயின.

இலங்கைக்கு எதிரான பிரேரணையை இலங்கையர்களில் ஒரு பகுதியினராகிய இலங்கையர்களே வரவேற்றிருக்கிறார்கள். இலங்கைக்கு எதிரான இந்தப் பிரேரணை வெற்றியடைய வேண்டுமென்பதற்காக அவர்கள் கடுமையாக  வெளிப்படையாகவே முயற்சித்திருக்கிறார்கள்.

தாய்நாட்டுக்கெதிராகச் சிந்திக்கும் ஒரு உளநிலையும் அவசியமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் எதிர்பார்ப்புகளுக்கும் நம்பிக்கைக்கும் எதிராக அதனுடைய நட்பு நாடான இந்தியாவே செயற்பட்டிருக்கிறது.

கடந்த இரண்டாண்டுகளாக உச்சநிலையிலிருக்கும் போர் வெற்றி இப்போது அச்சநிலையாக உருமாற்றம் பெற்றிருக்கிறது.

மிகச் செறிவும் கடினத்தன்மையும் வாய்ந்த சிங்கள இராசதந்திரத்துக்கு நெருக்கடியும் பின்னடைவும் ஏற்பட்டுள்ளது.

இனமுரணின் விளைவான போர் முடிந்த பிறகும் இனமுரண்கள் கொதிநிலையிலேயே இருக்கின்றன. இன்னும் பிளவுண்ட நிலையிலான அணுகுமுறைகளே தொடர்கின்றன.

இதெல்லாம் ஏன் நிகழ்கின்றன? அல்லது எப்படி நிகழ்கின்றன?

இவற்றுக்கான பதில்களைக் கண்டு பிடிப்பதிலிருந்தே இலங்கை அரசினதும் இலங்கையர்களுடையதும் எதிர்காலம் தங்கியுள்ளது.

இதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம். அதற்கு முன்னர் -

சொந்த மக்களைக் குறித்து எந்த அரசு அக்கறைகளைக்குறைக்கிறதோ அவர்களுடைய பாதுகாப்புக்கும் கௌரவத்துக்கும் எந்த அரசு உரிய கவனமெடுக்கத் தவறுகிறதோ அந்த அரசுக்கு வெளி நெருக்கடிகளும் அழுத்தங்களும் அதிகரிக்கும் என்பது இன்றைய அரசியல் ஒழுங்காகும். இதில் வாதங்கள், விருப்பு வெறுப்புகள், பிற நியாயங்கள் இருக்கலாம். ஆனால், இந்த வெளி நெருக்கடிகளை குறிப்பிட்ட அரசு எதிர்கொண்டே ஆக வேண்டும். இதற்கு அண்மைய உதாரணங்கள் ஏராளமுண்டு.

ஏனெனில் இது ஒற்றை மைய உலகாகும். தவிர, இவ்வாறான வெளி அழுத்தங்களுக்கு எதிராக மக்கள் ஒரு முகப்பட்டு நிற்பதற்குப் பதிலாக மக்களைப் பிளவு படுத்தி நிற்பது குறிக்கப்படும் உள்ளுர் அரசுகளே. இலங்கையிலும் இதுதான் நிலவரம்.

இலங்கையின் நெருக்கடி நிலைக்குக் காரணமாக உள்ளது இனமுரண். இனமுரணின் காரணமாகவே ஒரு பெரும்போரையும் இருண்ட யுகமொன்றையும் இலங்கையர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இனமுரண் உருவாக்கிய அபாயக் குழி பொதுமக்களையும் விழுங்கியது. தலைவர்களையும் விழுங்கியது. ஆனால், இப்பொழுது போர் முடிந்த பின்னரும் முடிவற்றுத் தொடர்கிறது இந்த இனமுரண். இப்பொழுது அது வெளி அழுத்தங்களுக்கும் இடமளித்துள்ளது.

இனமுரணைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமையும் அதைக்குறித்துச் சிந்திக்கத் தவறியமையுமே – இன்னும் தவறுகின்றமையுமே இலங்கைக்கான பிரதான நெருக்கடிக்குக் காரணமாகும்.

இனமுரணின் காரணமாக இலங்கைக்கு முன்னரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அல்லது இனமுரணை இலங்கைக்கு எதிரான ஆயுதமாகப் பாவிக்கின்றன வெளிச் சக்திகள். இந்தியா தொடக்கம் அமெரிக்கா வரையில் இதைத்தான் செய்து வருகின்றன.

இதைப் புரிந்து கொள்வதிலேயே இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளது. அதாவது இலங்கையிலுள்ள அனைத்துச் சமூகத்தினருடைய எதிர்காலத்துக்குமானது.

சரி, இனி ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பிரேரணையைக் குறித்துப் பார்க்கலாம்.

அமெரிக்காவின் இந்தப் பிரேரணை ‘இலங்கைக்கு எதிரானது’ என்று  வெளிப்படையாகவே பொருள் கொண்டுள்ளது. ஆகவே இதனால் ஏற்படும் பாதிப்புகளும் நெருக்கடிகளும் இலங்கையர் அனைவருக்கும் பொதுவானவை. இதில் தமிழர் சிங்களவர் என்ற பேதங்களும் வகைப்பாடுகளும் இருக்கப்போவதில்லை. ‘ஆட்டுக்குரியதே குட்டிக்கும்’ என்பார்கள். எனவேதான் இந்தப் பிரேரணையைக் குறித்து நிதானமாகச் சிந்திப்போர் இதை இலங்கையர்களுக்கு எதிரான பிரேரணை என்று வியாக்கியானப்படுத்துகின்றனர். இது மறுக்க முடியாதது.

தவிர, இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வை உருவாக்கும் எண்ணப்பாட்டுடன் இந்தப் பிரேரணை உருவாக்கப்படவில்லை என்பதும் வெளிப்படையானது. அவ்வாறு ஒரு சிந்திப்பு இந்தப் பிரேரணை உருவாக்கத்தில் இருந்திருக்குமானால், அதற்கான வழிமுறைகளும் வேறாகவே இருந்திருக்கும். ஆனால், அப்படி நடக்கவில்லை.

இந்தப் பிரேரணைக்கான ஆதரவை அமெரிக்கா வெளிநாடுகள் பலவற்றிடம் கோரியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவிடம் அது மிகக் கடுமையாக முயற்சித்திருக்கிறது.

ஆனால், இலங்கையிலுள்ள சிறுபான்மைச் சக்திகளிடம் அது ஆதரவைத் தேடவில்லை. ஏனெனில் அதற்கு இதைக் குறித்த அக்கறைகளில்லை. அப்படியான ஒரு உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என்று அது சிந்திக்கவும் இல்லை. அப்படி அமெரிக்காவினால் சிந்திக்கவும் முடியாது. ஏனெனில், அமெரிக்காவின் அணுகுமுறையிலும் நிகழ்ச்சி நிரலிலும் ஒடுக்கப்பட்ட மக்களைக் குறித்தும் ஒடுக்கப்படும் இனங்களின் விடுதலையைக் குறித்தும் எத்தகைய நிகழ்ச்சித்திட்டமும் உருவாக்கப்பட்டிருக்கவில்லை.

ஆனால், உலகெங்கும் இனமுரணையும் அதன் விளைவாக உள்ளரங்கில் ஏற்பட்டிருக்கும் இடைவெளிகளையும் தனக்கான வாய்ப்பாகவே அமெரிக்கா பயன்படுத்துகிறது. இதையே சக்திமிக்க பிற  வெளித்தரப்புகளும் செய்து வருகின்றன.

இன்னும் சொல்லப்போனால் கூறப்படும் போர்க்குற்றங்களில் ஒரு பிரதான பங்கேற்பு அமெரிக்காவுக்கும் உண்டு. அதை விட போர்க்குற்றங்கள் நிகழ்வதைத் தடுக்காதிருந்த பொறுப்பும் அமெரிக்காவுக்குண்டு. இந்தக்குற்றச்சாட்டுகள் இந்தப் பிரேரணைக்கு ஆதரவளித்திருக்கும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்குமுண்டு.

போர்க்குற்றங்கள் நிகழ்கையில், சனங்கள் மரணக்குழிகளில் வீழ்த்தப்படுகையில் அதைத் தனக்கான சாட்சியங்களாக்கும் வகையில் செய்மதிகளினூடாக ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருந்தது அது.

இதற்குக் காரணம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அது தனக்கான ஸ்திரத் தன்மையொன்றை ஸ்தாபித்துக்கொள்வதே. அமெரிக்காவுக்குச் சார்பான அல்லது மேற்குக்குச் சார்பான நிலையொன்றை இலங்கையில் உருவாக்குவதற்குக் கடினமான நிலையே தொடர்ந்து வருகிறது.

கடந்த ஜனாதிபதித்தேர்தலின்போது – ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிலைப்படுத்தி மேற்கு எடுத்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.  இதை உணர்ந்த அமெரிக்கா இப்போது தான் சேகரித்து வைத்திருந்த ஆதாரங்களைப் பயன்படுத்தி, இந்தப் பிரேரணையை அரங்கிற்குக் கொண்டு வந்துள்ளது. தனக்கான ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது. அதில் அது கணிசமான அளவுக்கு வெற்றியுமடைந்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான மேற்குலகிற்கு இந்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருப்பது இலங்கை அரசாங்கமே. போருக்குப் பின்னர் அது செய்திருக்க வேண்டிய கடமைகளை உரிய முறையிற் செய்யாமல், பாவனை காட்டியமையே அதற்கான நெருக்கடியை அதிகரித்திருக்கிறது. அல்லது அதைக் கடக்க முடியாமற்போனது.

இந்த இடத்தில் சிங்கள மக்களும் முற்போக்காளர்களும் இலங்கையின் ஜனாதிபதியும் கவனிக்க வேண்டிய விசயமொன்றுண்டு. இனமுரணைத் தீர்க்க வேண்டும், அதைத் தீர்ப்பதற்கு தந்திரங்களுக்கப்பால், விசுவாசமான முறையில் செயற்பட வேண்டும் என்று சிந்தித்திருந்தால் இன்றைய நெருக்கடி ஏற்பட்டிருக்கச் சந்தர்ப்பம் குறைவு. தவிர, இலங்கையர்களில் ஒரு சாராரின் ஆதரவான நிலையும் ஏற்பட்டிருக்காது.


இதேவேளை இதில் இந்தியாவும் அமெரிக்க நெருக்கடிக்குள்ளாகியுள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். பலரும் கருதுவதைப்போல தமிழ் நாட்டின் அழுத்தங்கள் காரணமாக இந்தியாவின் தீர்மானம் அமையவில்லை.

இலங்கைப் போரில் இந்தியா வகித்த பங்கு, பாத்திரம் தொடர்பாக இன்று அமெரிக்காவிடம் உள்ள ஆதாரங்கள் உருவாக்கும் நெருக்கடிகளைக் குறித்தும், எதிர்காலத்தில் அமெரிக்கா இந்த முயற்சியின் தொடர்ச்சியாக உண்டாக்கவுள்ள பிரச்சினைகளைக் குறித்துமே இந்தியா சிந்தித்திருக்கிறது. தனக்குக் கிடைத்த வாய்ப்புகளையும் அதிகாரத்iயும் பயன்படுத்தி, இலங்கை இனப்பிரச்சினையின் தீர்வை இந்தியா சாத்தியப்படுத்தியிருந்தால் இன்று இந்தியா நெருக்கடிக்குள் சிக்கியிருக்க வேண்டியிருந்திருக்காது.

எனவே இந்தப் பிரேரணையில் அதிக லாபங்களைச் சம்பாதிக்கப்போவது மேற்குலகமே. நீண்டகாலத்துக்குப் பின்னர் இலங்கை விவகாரத்தில் ஒரு முன்னேற்றகரமான கட்டத்தை எட்டியுள்ளது மேற்கு. ஆனால், இதற்காக அது கடுமையாகப் போராடியிருக்கிறது. நினைத்த மாத்திரத்தில் இலகுவாக நிலைமைகளைக் கையாள முடியவில்லை மேற்கினால் என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இதேவேளை மனித உரிமைகள் விடயத்தில் தன்னுடைய அக்கறைகளையும் மாண்பு மிக்க செயற்பாடுகளையும் தான் நிலைநிறுத்தியிருப்பதான ஒரு தோற்றப்பாட்டையும் உலக அரங்கில் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் நிலைநிறுத்தியுள்ளன.

மனித உரிமை ஆர்வலர்களுக்கு இது குறித்த திருப்திகள் ஏற்படும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்ச்சியில் அமெரிக்காவின் பிரேரணை வரவேற்பான அம்சத்தைப் பெறும்.

இனவாதத்தை முன்னிறுத்துவோருக்கும் அதிகாரத்தில் அதிக மோகமும் நம்பிக்கையும் வைத்திருப்போருக்கும் இந்தப் பிரேரணை எரிச்சலையும் நெருக்கடியையும் ஏற்படுத்தும்.

ஆனால், எல்லாவற்றுக்கும் அப்பால் இறுதி விளைவுகள் என்று பார்த்தால், மனித குலத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தென்னாசியப்பிராந்தியத்திற்கும் இந்தப் பிரேரணையின் மூலமாக என்னென்ன அனுகூலங்கள் கிடைத்துள்ளன? என்ற கேள்வியே எழுகின்றது.

இந்தக் கேள்விக்கான பதிலை யார் சொல்வது? அல்லது வரலாற்றில் - எதிர்காலத்தில் எப்படி அமையும்?

ஆனால் ஒன்று, தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய கரகோசத்துக்கு அப்பால் எதுவும் நடந்து விடப்போவதில்லை.

இந்தியா ஆதரவு எப்படி ஒரு காலத்தில், தமிழர்களின் மனதில் பூமாரி மொழிந்தது என்பதை நினைத்துப் பார்த்தால் இதை எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.

வல்லரசுகளின் இதயம் எப்போதும் தங்களின் நலன்களைக்குறித்தே செயற்படுகிறது. ஒடுக்கப்படும் மக்களின் பிரச்சினைகள் அவற்றுக்கு வாய்பான ருஸிகரமான பண்டமே.
00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB