முதலாவது நபர்,
போர் வெற்றியைத் தன்னுடைய அரசியல் வெற்றியாக்கியவர். அதேவேளை போர்க் குற்றங்கள் அவரைச் சுற்றி நெருப்பு வளையங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. போர் வெற்றியையே எரித்து விடும் அளவுக்கு இந்த நெருப்பு வளையத்தைப் பாவிக்க முனைகின்றன இவருடைய எதிர்த்தரப்புகள்.
தவிர, குடும்ப மேலாதிக்கத்தினால் உருவாகிய அதிருப்திகள், பொருளாதார நெருக்கடிகள், ஜனநாயக நெருக்கடி குறித்த குற்றச் சாட்டுகள், சர்வதேச நாடுகளுக்கிடையிலான போட்டிகளின் விளைவான அழுத்தங்களும் அதிருப்திகளும் என்று இந்த நெருக்கடி வளையம் இன்னும் அதிகமாகிறது.
ஆகவே, அபாயக் குழியின் மேலே வைக்கப்பட்டிருக்கும் சிம்மாசனத்தில் இருந்து கொண்டே அவர் ஆட்சி செய்ய வேண்டியுள்ளது. எரிந்து கொண்டிருக்கும் மாளிகையில் மதுவருந்திக்கொண்டிருக்கும் மன்னரின் நிலை அவருடையது.
ஆனாலும் அவரைப் பாதுகாப்பதற்கென மிகத் தேர்ச்சியுடைய – வரலாற்று ரீதியாகவே நிபுணத்துவமுடைய ஒரு இராசதந்திரப் படை உள்ளது. சிங்கள இராசதந்திரிகளின் பாதுகாப்பரணில் அவர் பாதுகாக்கப்படுகின்றார்.
அந்த வியூகத்தை உடைத்து அவரைப் பலவீனப்படுத்தவென்று ஒரு பெரும் முயற்சி உள்நாட்டிலும் வெளியரங்கிலும் பலமாக நடந்து கொண்டிருக்கிறது.
அடுத்தவர் திரு. ரணில் விக்கிரமசிங்க.
தலைமைத்துவக் கனவுகளோடு நித்திரையுமில்லாமல் நிம்மதியுமில்லாமல் வெற்றியுமில்லாமல் அலைகின்ற விதி வாய்க்கப்பெற்றவர்.
ஒரு காலம் அமெரிக்கா தொடக்கம் மேற்குலகின் விருப்பத்திற்கும் எதிர்பார்க்கைகளுக்கும் உரிய ஒருவராக இருந்தார். அதைப்போல போரினால் கூடுதலான முன்னணித் தலைவர்களை இழந்திருந்த ஐ.தே.கவின் தலைமையை நிரப்பக்கூடியவர் என்றும் கருதப்பட்டிருந்தார் ரணில்.
ஆனால் இப்போது எல்லோரின் நம்பிக்கையையும் இழந்தவராகவும் எதையும் செய்ய முடியாதவராகவும் மாறி, சொந்தக் கட்சிக்குள்ளேயே நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
மற்றவர் திரு. சம்மந்தன்.
கட்சிக்குள்ளும் நெருக்கடி. ஆதரவாளர்களிடமும் நெருக்கடி. தமிழ்ச் சமூகத்தினர் என்று அடையாளப்படுத்தும் அணிகளினாலும் நெருக்கடி. புலம்பெயர்ந்திருக்கின்ற சனங்கள், தமிழ் ஊடகங்கள் போன்றவற்றாலும் நெருக்கடி. அரசாங்கத்தினாலும் நெருக்கடி. மேற்குலகத்தினாலும் நெருக்கடி. நட்பு சக்தி என்று கருதிக் கொண்டிருந்த இந்தியாவினாலும் நெருக்கடி என எல்லாப் பக்கத்தினாலும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த முதியவர், எதற்கும் எப்பொழுதும் பதற்றத்தோடேயே இருக்கிறார்.
தொலைபேசிகளைத் தவிர்த்து, ஆலோசனைகளைத் தவிர்த்து, நண்பர்களைத் தவிர்த்து, விசுவாசிகளைத் தவிர்த்து.... இப்படியே முழுதாகத் தனிமைப்பட்ட ஒரு சூழலுக்குள் தன்னை உட்படுத்திக் கொண்டிருக்கும் இவர், பெரும்பாலும் என்ன செய்கிறார், என்ன செய்யப்போகிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று எவருக்குமே தெரியாத நிலையில் இருக்கிறார்.
கூட்டமைப்பின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார், ‘புலிகளின் தலைவர் பிரபாகரனைப்போல ஒரு உத்தியைக் கடைப்பிடிக்கிறார் சம்மந்தன். யாருக்கும் பதில் சொல்லாத, யாருடைய குரலையும் கேட்காத, தானே எல்லாவற்றையும் முடிவெடுகின்ற ஒரு போக்காளராக மாறியிருக்கிறார் ஐயா’ என்று.
ஆனால், பிரபாகரனின் உபாயங்களும் ஒழுக்க விதிகளும் நடைமுறையும் வேறு. சம்மந்தனின் நிலை வேறு. எனவேதான் அவருடைய அறிக்கையின் மை காய்வதற்கு முன்னேயே அவருடைய கட்சிக்குள்ளிருந்து மறுத்தான் அறிக்கைகள் வருகின்றன. அவர் சொன்ன பதிலின் குரல் அடங்க முன்னரே மறுத்தான் குரல்கள் ஒலிக்கின்றன.
அடுத்த நபர் ஜெனரல் சரத் பொன்சேகா.
இராணுவத்தரப்பில் பறிக்கப்பட்ட தகுதி நிலையைவிட மேலதிகமாக அதிகமாகப் பெற விரும்பி, அரசியலில் குதித்தவர். போர்க்களத்தில் பெற்ற வெற்றியைப் போல அரசியற் களத்திலும் வெற்றிகளைக் குவிக்கலாம் என்று நம்பியவர். ஆனால், களத்தில் இறங்கியபோதே தெரிந்தது, இராணுவத்தரப்பிலிருந்த தளபதிகளையும் விட அரசியற் களத்தில் தனக்கு வாய்த்த தளபதிகள் அதிகம் திறன்களைக் காட்ட முடியாதவர்கள் என்று.
மேலும், இராணுவ அணுகுமுறையும் போருபாயமும் வேறு. அரசியல் அணுகுமுறையும் போருபாயமும் வேறு என்பதை அவர் மேலும் புரிந்து கொண்டது சிம்மாசனத்துக்குப் பதிலாகச் சிறைக் கதவுகள் திறக்கப்பட்டபோதே.
‘இராணுவத்தில் இழக்கப்பட்ட நிலையை விடவும் வேறொரு நிலை, பேறான நிலையைப் பெறலாம். அந்தப் போர்க்களத்தைப் போல இந்தப் போர்க்களத்தையும் - அரசியற் களத்தையும் வெல்லுங்கள். அது உங்களுக்கு இலகுவானது. ஏனென்றால் போரின் வெற்றியில் நீங்களும் பங்காளி’ என்று சொல்லி உற்சாகப்படுத்தியவர்கள், பக்கபலமாகவே நின்றவர்கள் ஜெனரலைத் தனியே சிறையில் வருடங்களை எண்ண விட்டுள்ளார்கள்.
ஆனால், ‘சிறையிலிருந்தாலும் ஏனைய நண்பர்களைவிட நான் நிம்மதியாக இருக்கிறேன்’ என்று தனக்கு நெருங்கிய சகா ஒருத்தரிடம் சொன்னாராம் ஜெனரல்.
இப்பொழுது ஜெனரல் வெளியே இருந்திருந்தால், அவரைச் சுற்றியும் ஆயிரம் கேள்விகள்@ கண்டனங்கள்@ குற்றச்சாட்டுகள் எல்லாம் எழுந்திருக்கும். அந்த வகையில் இது பரவாயில்லை என்று ஆறுதற் பட்டிருக்கிறார் ‘சீமான்’.
ஆகவே, இந்த நான்கு முன்னணித் தலைவர்களையும் கொண்டுள்ள நாடும் சமூகங்களும் எப்படி நெருக்கடி இல்லாமல் இருக்க முடியும்?
‘கோனைப் போலவே குடிகள்’ என்று முன்னோர் சொல்வர். தலைவர்களின் நிலை தளம்பும்பொழுது அந்தத் தலைவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நிலையிலும் அந்தத் தளம்பல் பிரதிபலித்தே தீரும்.
ஈராக்கின் தலைவராக இருந்த சதாம் ஹ_சைனைப் பதவி இறக்கியபோது ஈராக்கிய மக்கள் பட்ட அவலம் இதற்குச் சாட்சி. சதாமின் மீதான போரை அமெரிக்கா தொடுத்தபோது ‘பாக்தாத் எரிகிறது’ என்றே பத்திரிகைகள் தலைப்புச் செய்தியிட்டன.
பிறகு ஈராக்கியத் தெருக்களில் கதறலும் சிதைவுமாக அவலத்தில் மிதந்த காட்சிகளே யதார்த்தமாகியது.
லிபியத்தலைவர் கேணரல் கடாபியைக் கவிழ்த்தபோது லிபிய மக்கள் தெருவிலே விடப்பட்டனர். ஒரேயொரு கடாபிக்காக எத்தனை லிபியர்கள் தங்களுடைய வாழ்க்கையை இழக்க வேண்டியிருந்தது?
வன்னியிலே புலிகளை ஒடுக்கியபோது அங்கிருந்த சனங்கள் அவலத்தில் வீழ்த்தப்பட்டனர்.
வரலாறு காணாத பேரவலத்தில் சிக்க வைக்கப்பட்டனர் சாதாரண மக்கள்.
சரி பிழைகள் வேறு. ஒவ்வொரு தலைமைகளும் தளர்ச்சியடையும்போது, தங்களின் தவறுகளால் அவை நெருக்கடிக்குள்ளாகும்போது அது மக்களையே அதிகமாகப் பாதிக்கிறது.
இலங்கையின் இன்றைய நிலைவரம் இதை ஒத்ததாகத்தான் உள்ளது.
வரலாற்றை முன்னகர்த்தக் கூடிய - சக்திமிக்க - ஆளுமையைக் கொண்ட தலைமைகளைத் தங்களிடத்தே கொள்ளாத மக்களாகி விட்டனர் இலங்கை மக்கள்.
இந்தத் தேர்வுப் பரப்புக்கு வெளியே தங்களுக்கான தலைவர்களைத் தேட வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர்களாகவும் யாரும் இல்லை. ஏனென்றால் வாய்பாடுகளுக்குள்ளேயே அல்லது தங்களுக்குத் தெரிந்த சதுரங்களுக்குள்ளேயே தலைவர்களைத் தேடுவதற்குச் சிந்திக்கிறார்கள் ஒவ்வொரு தரப்பினரும், ஒவ்வொருவரும்.
இலங்கையின் அரசியலைப் பற்றி பேசுவோரிற் பெரும்பாலானோரும் ஐக்கியத்தைப் பற்றியும் ஐக்கிய இலங்கையைப் பற்றியுமே சிந்திக்கிறார்கள். இதை ஏற்றுக்கொண்டால், இந்த ஐக்கிய இலங்கைக்குள் எந்தச் சமூகத்தைச் சேர்ந்த எவரும் தலைவராக வரலாம். அது பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேணும் என்றில்லை.
வருகின்ற தலைவர் இலங்கையின் சுபீட்சத்துக்கும் இனங்களின் ஐக்கியத்துக்கும் அமைதிக்கும் தன்னுடைய ஆளுமையினால் பொருத்தமான பாத்திரத்தை வகிப்பவராக இருந்தாற் போதும்.
உண்மையில் அதுதான் சரியும்கூட.
ஆகவே தலைமைப் பொறுப்புக்கு வருகின்றவர் நிச்சயமாகச் சிங்களவராக இருக்க வேண்டும். அதிலும் பௌத்தச் சிங்களவராக இருக்க வேண்டும் என்றில்லை என்று அர்த்தமாகும்.
நாட்டுக்குப் பொருத்தமான தலைவர் என்பதே இங்கே முக்கியத்துவமடையும். இனங்களின் விருப்பத்துக்குரிய ஒருவர் என்று பார்த்தால் இப்போது தாங்களும் நெருக்கடிக்குள்ளாகி, மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்கி, நாட்டையும் நெருக்கடிக்குள்ளாக்கும் தலைவர்களே வரக்கூடும். அப்படி வந்தவர்களே நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர்.
எனவே நெருக்கடிகளிலிருந்த மீள்வதற்குச் சிந்தித்தால் புதிய தலைமைகளை, ஆளுமையும் மக்களிடம் விசுவாசமும் அர்ப்பணிப்புமுள்ள தலைமைகள் தேவை. அந்தத் தலைமைகளே தேசியத்தன்மை என்று சொல்லத் தக்க தலைமைகளாக இருக்கும்.
ஒரு சரியான தலைமை, நிறைவான தலைமை என்பது பிற சமூகத்தினரும் மதிக்கின்ற – நாடே மதிக்கின்ற தலைமையாக இருக்கும். அந்தத் தலைமையின் சொல்லுக்கு அனைத்துத் தரப்பினரும் மதிப்பளிப்பர். அந்தச் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்படுவர்.
ஆனால், அத்தகைய தலைமையை மக்களும் கண்டெடுக்கவில்லை. தலைவர்களாக தங்களைக் காண்பித்தவர்களும் தங்களைத் தலைவர்களாக வளர்த்துக்கொள்ளவில்லை.
இப்போது ஒவ்வொருவரைச் சுற்றியும் நெருக்கடிகள். பிறகு எல்லோரைச் சுற்றியும் நெருக்கடிகள். பிறகு நாட்டைச் சுற்றியே நெருக்கடி.
ஆளை ஆள் சொல்லிக் கொள்வதை விட, தரப்பைத் தரப்பு சொல்லிக் கொள்வதை விட எல்லோரும் நெருக்கடிக்குள்ளேயே இருக்கிறார்கள். எல்லோரும் நெருக்கடிக்குள்ளேயே இருக்கிறோம்.
00
0 comments:
Post a Comment