கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

குழப்பத்திலிருக்கும் டில்லி

Monday 19 March 2012


இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச் சாட்டில் அதிகமதிகம் நெருக்கடிக்குள்ளாகியிருப்பது இந்தியாவே. இலங்கையையும் விட இந்தியா சந்தித்திருக்கும் நெருக்கடியே அதிகமானது. மகிந்த ராஜபக்ஷவையும் விட அதிகம் சிந்திக்க வேண்டியவராக மன்மோகன் சிங்கே காணப்படுகிறார். இலங்கையின் ராசதந்திரிகளையும் விட இந்திய ராசதந்திரிகளே தூக்கமில்லாத இரவுகளைக் கழிக்க வேண்டிய நிலையிலுள்ளனர்.

இலங்கையைப் பாதுகாக்க வேண்டிய ஒரு அவசியம் இந்தியாவுக்கு ஏற்பட்டதன் விளைவே இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலைக்கான காரணமாகும். ஆகவே, இலங்கையின் பாதுகாப்புக் கவசமாக (டீரகநச )  இந்தியா இன்றிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இது தவிர்க்கவே முடியாத ஒரு நிலை.

ஒரு பக்கத்தில் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான அணி கொண்டு வரும் பிரேரணையை வெளிப்படையாக எதிர்க்க முடியாத நிலையில் இருக்கிறது. அப்படி எதிர்த்தால், இன்றைய உலகத்தில் இந்தியாவின் கண்ணியம் குன்றிவிடும்.

அதாவது, ‘மனித உரிமைகளைச் சீரழித்து மக்களின் படுகொலைகளுக்குக் காரணமான  ஒரு அரசைக் காப்பாற்ற முற்படுவது வரலாற்றில் இந்தியாவுக்கு அபகீர்த்தியைக் கொடுக்கும்.

இது அதனுடைய மாண்புக்கும் கீர்த்திக்கும் ஜனநாயக அடிப்படைகளுக்கும் பாதகமானது’ என்று இந்தியப் புத்திஜீவிகளும் முதன்நிலை ஊடகங்களும் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றன. இது ஒரு வகையான நெருக்கடி.

‘இலங்கையில் தமிழர்களின் மீதான இறுதி யுத்த நிகழ்ச்சிகளுக்கான பொறுப்பையும் அதன்கான தண்டனையையும் இலங்கை அரசு ஏற்றேயாக வேண்டும். எந்த நிலையிலும் இதனைத் தடுத்து விலக்குவதற்கு இந்தியா முயற்சிக்கக் கூடாது’ என்று தமிழ் நாடு அரசும் தமிழ்நாட்டின் ஏனைய கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் உள்ளன.

இவை இந்தியாவின் உள்ளே அதற்கிருக்கின்ற அடுத்த நெருக்கடிகள்.

இலங்கை மீதான குற்றப் பிரேணையை ஆதரித்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்பது இன்னொரு விதமான நெருக்கடி.

இந்தப் பிரேரணையை எதிர்த்தால் இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கும் சிங்களச் சமூகத்தினருக்குமிடையில் நல்லிணக்கம் கெட்டுவிடும். இது மேலும் மேலும் இந்தப் பிராந்தியத்தின் அமைதியின்மைக்கே வழியேற்படுத்தி விடும் என்ற நெருக்கடி.

இந்தப் பிரேரணையை ஆதரிக்காவிட்டால் மேற்குலகத்துடனான உறவில் கணிசனமான அளவில் திருப்தியின்மைகளைச் சந்திக்க வேண்டி வரும் என்ற நெருக்கடி.

இந்தப் பிரேரணையை இந்தியா எதிர்த்தால் இலங்கைத் தமிழ் மக்களின் கசப்புகளைப் பெற வேண்டும். பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்துக்கு எதிராக வரலாற்றில் செயற்பட்டதான ஒரு குற்றப் பாத்திரத்தை ஏற்றதாகி விடும் என்ற நெருக்கடி.

இப்ப மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளிப்பு நிலையிலிருக்கிறது இந்தியா.

உண்மையில் இதை ஆழ்ந்து நோக்கினால், இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வகுப்பிலும் அதைக் கையாள்வதிலும் ஏற்பட்ட குறைபாடுளே இந்த நிலைக்குக் காரணம் என்பது புரியும்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்திலிருந்து பிரித்தானியர் வெளியேறிய பின், இலங்கையுடன் நல்லுறவைப் பேணிப் பிராந்திய ஆதிக்கத்தைத் தனக்கிசைவாக வைத்திருப்பதற்கு இந்தியா முயற்சித்தது.
எனவே அது அதற்கமைவான வெளியுறவுக்கொள்கையை வகுத்துச் செயற்பட்டது.

ஆனால், எதிர்பார்த்ததைப் போல நிலைமைகளிருக்கவில்லை. இலங்கையில் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியும் பனிப்போர் உலகும் இந்தியாவின் எதிர்பார்ப்புகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் மாறாகவே அமைந்தன. மேலும் இலங்கையின் இனமுரண்களும் இந்தியாவின் நிம்மதியைக் கெடுப்பனவாக மாறிவிட்டன.

ஆகவே, வகுக்கப்பட்ட கொள்கைக்கமைய நிலைமைகள் இலகுவானவையாக இருக்கவில்லை. இது இந்தியாவைத் தொடர்ந்து சிரமங்களுக்குள்ளாக்கியே வந்தது. இன்னும் இந்தச் சிரமங்களிலிருந்து இந்தியா மீளவில்லை. இப்போதைய தத்தளிப்பு நிலையும் இதன்பாற்பட்டதே.

கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இலங்கை பொறுத்து இந்தியா அளவுக்கதிகமான நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. இன்னும் சற்று விளக்கமாகச் சொன்னால், மிகக் கவலைகொள்ளுமளவுக்கு இந்தியா இலங்கையினால் துன்பப்பட்டிருக்கிறது.

இந்தியப்படைகளை இலங்கையில் இறக்கியது, இறங்கிய படைகள் போரைச் சந்திக்க வேண்டியேற்பட்டது, அதனால் ஆயிரத்துக்கு மேற்பட்ட படையினரின் இழப்புகளை ஏற்க வேண்டியிருந்தது, இந்தியத் தலையீட்டின் பெறுபேறுகள் எதுவும் வெற்றியடையாத நிலையில் அது தன்னுடைய படைகளைத் திருப்பியழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது, பின்னர் இந்தியத் தலைவர்களில் ஒருவரான ராஜீவ் காந்தியை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது, பின்னர் இலங்கை அரசு மேற்கொண்ட போருக்காக உதவ வேண்டியிருந்தது, இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இலங்கையின் இறுதிப்போருக்கு உதவியது என்று பல நிகழ்ச்சிகளினூடாக இந்தியாவின் துயரம் தொடர்ந்திருக்கிறது.

இதேவேளை இந்தியா தன்னுடைய நலன்சார்ந்து அவ்வப்போது தமிழர்களையும் சிங்களவர்களையும் மாறி மாறிக் கையாண்டுமிருக்கிறது. அப்படிக் கையாண்ட போதும் இந்தியாவினால் தமிழர்களையும் திருப்திப் படுத்த முடியவில்லை. சிங்களவர்களையும் திருப்திப்படுத்த முடியவில்லை. இறுதியில் இப்போது எந்தப் பக்கம் நிற்பது என்று தெரியாத ஒரு அவல நிலைக்கு அது வந்து சேர்ந்துள்ளது.

அதாவது, இந்தத் துன்ப நிலையிலிருந்து இந்தியா இன்னும் மீளவில்லை.

பேய்க்குப் படைப்பதைப் போல அது என்னவெல்லாவற்றையும் தானமாகக் கொடுத்தாலும் இலங்கையை ஒரு நிலைக்குக் கொண்டு வரவும் முடியவில்லை. இலங்கை தொடர்பாக இந்தியாவின் உறவில் ஒரு சீர்நிலையை உருவாக்கவும் முடியவில்லை.

போரின்போது பிற நாடுகளின் உதவிகளை இலங்கை அதிகமாகப் பெறுமானால் அதற்குப் பின்னர் அந்த நாடுகளின் ஆதிக்கத்துக்கு அது உட்பட்டுவிடும் என்று கருதி தானாகவே முன்வந்து ‘ஏராளமான - தாராள உதவிகளை’ இந்தியா  இலங்கைக்குச் செய்தது.

போருக்குப் பின்னர் இந்தியாவுக்கு எதிரான  நாடுகளின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் பல அபிவிருத்திக்கான உதவிகளையும் கடனையும் மனிதாபிமான உதவிகளையும் இலங்கைக்குச் செய்கிறது.

ஆனால், ‘என்னதான் செய்தாலும் இந்தியாவினால் இலங்கை தொடர்பான நெருக்கடிகளிலிருந்து மீளவே முடியவில்லை. எவ்வளவை அள்ளி இறைத்தாலும் என்னதான் செய்தாலும் ஒரு போதுமே இலங்கையைத் திருப்திப்படுத்தவும் முடியவில்லை என்று சலித்துக் கொண்டார்  இந்திய உதவித்திட்டத்தில் ஈடுபட்டுவரும் உயர் அதிகாரி ஒருவர்.

இத்தகைய கசப்பான பின்னணியிற்தான் இன்றைய இந்தியாவின் நிலவரம் உள்ளது.

இலங்கையை இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியிலிருந்து பாதுகாப்பதற்குத் தவறினால் அது சீனாவின் பக்கம் சாய்ந்து விடும். சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரிக்குமானால் அதனுடன் இணைந்து பாகிஸ்தானும் தன்னுடைய செல்வாக்கை இலங்கையில் விஸ்தரிக்கும். இதெல்லாம் இந்தியாவுக்கு மேலும் நெருக்கடிகளைத் தரக்கூடிய சங்கதிகள்.

ஏற்கனவே சீனாவின் தலையீடுகளும் செல்வாக்கும் இலங்கையில் அதிகரித்துக் காணப்படுகின்றன. தவிர, மறு பக்கத்தில் மேற்குலகின் மூக்குநுழைதலையும் மட்டுப்படுத்த வேண்டும். ஆனால், இவையெல்லாவற்றையும் அது நுட்பமாகவே செய்ய வேண்டும். எந்தச் சக்தியுடனும் பகை நிலைக்குச் செல்ல முடியாது. குறிப்பாக மேற்குடன்.

ஆகவேதான் டில்லி மிகமோசனமான நிலையில் சங்கடங்களுக்குள்ளாகியுள்ளது. இந்திய ராசதந்திரிகளும் தலைமைப் பொறுப்பிலிருப்போரும் வாயைத் திறக்கவும் முடியாமல் மூடிவைத்திருக்கவும் முடியாமலிருக்கின்றனர்.

இந்த நிலைமை தொடர்பாக டில்லியில் ஓய்வு பெற்ற மூத்த ராசதந்திரிகளையும் பதவியிறங்கிய தலைவர்களையும் குறைசொல்கிறார்கள் இன்றைய தலைவர்களும் ராசதந்திரிகளும் என்று சொல்லப்படுகிறது.

இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா தீர்க்கமான ஒரு முடிவை எடுத்திருந்தால் இன்றைய நிலை ஏற்பட்டிருக்காது என்பது அவர்களுடைய அபிப்பிராயம்.

இலங்கையை ஒரு போதுமே தீவிர நிலையிற் கட்டுப்படுத்த முடியாது. அதனுடைய அரசியற் கேந்திரத்தின் இயல்பு அப்படிப் பட்டது என்கின்றனர் சில அவதானிகள்.

ஆனால், எப்படியோ இலங்கை பொறுத்து இந்தியா ஒரு தீர்மானத்துக்கு வந்தே ஆகவேண்டும். வெளிப்படையாக இல்லா விட்டாலும் அது எடுக்கவுள்ள நிலைப்பாடு தாக்கமுடையதாகவே இருக்கப்போகிறது.

போரின்பொழுது எவ்வாறு கொழும்பை டில்லி பாதுகாத்ததோ அதையொத்த தன்மையை அது இப்போதும் கடைப்பிடிக்கிறது.

ஆனால், இந்த இடத்தில் நாம் சில விடயங்களை முன்னிலைப்படுத்தலாம்.

1. இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் அணுகுமுறைத் தவறுகளை இதற்கு முன்னர் சரியமான முறையில் இந்தியாவின் முன்னிலை ஊடகங்கள் பேசத்தவறியமை.

2. இந்தியத் தலைவர்களும் ராசதந்திரிகளும் இந்தப் பிரச்சினையில் நல்லதொரு தீர்மானத்தை எடுக்காதிருந்தமை.

3. தமிழகத்தின் அரசியற் கட்சிகள் தங்களுடைய அரசியல் நலன்களுக்கு அப்பால் இலங்கையின் இனப்பிரச்சினையில் நடைமுறைக்குப் பொருத்தமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்காமை.

4. இந்திய அரசு இலங்கை இனப்பிரச்சினையிலும் இலங்கையின் வெளியுறவுக்கொள்கையிலும் நழுவற்போக்கைக் கைக்கொண்டமை.
இன்று இவைபோன்ற குறைபாடுகள் எல்லாம் இந்தியாவைத் தாக்கும் விஷக் காய்ச்சலைப் போல மாறியிருக்கின்றன.

இந்த நோயைக் குணப்படுத்துவதற்கு இந்தியா முதலிற் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அது யார் யாருக்காகவோ தானே தன்னை நோயாளியாக்கிக் கொள்ள வேண்டியேற்படும்.

குற்றம் செய்பவரைக் காட்டிலும் குற்றங்களுக்கு ஒத்துழைத்தவரே குற்றத்தை அதிகமாகச் செய்தவராவார், தண்டனைக்குரியவர் என்று சொல்லப்படுவதுண்டு. அதுதான் இந்தியாவைப் பொறுத்தும் பொருந்துகிறது இன்று.

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB