கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

அரசு – தமிழ்த்தரப்பு என்ற பேச்சு முறைமை மாற்றப்பட வேண்டும்.

Tuesday 27 December 2011



00
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இது சோதனைக் காலம். ‘குருவியின் தலையிற் பனம்பழத்தை வைத்ததைப் போல’ என்று ஊர்மொழியிற் சொல்வார்கள். அதேநிலையில் இப்பொழுது கூட்டமைப்பு இருக்கிறது.

நெருக்கடிகளின் மேல் நெருக்கடிகள். அழுத்தங்களின் மேல் அழுத்தங்கள். உள் அழுத்தங்கள், வெளி அழுத்தங்கள் என பலமுனை நெருக்குவாரங்கள். இதிலிருந்து எப்படித் தப்பிப் பிழைக்கப்போகிறது கூட்டமைப்பு? இந்த நெருக்கடிகளையெல்லாம் எப்படி அது கடக்கப்போகிறது என்பதே இன்றுள்ள கேள்விகளாகும். நமக்கு மட்டுமல்ல, கூட்டமைப்பினருக்கும் இதே கேள்விகளே உண்டு.

எத்தகைய விமர்சனங்களுக்கும் அப்பால், இலங்கையில் இப்போது சற்று பிடிமானமுள்ள ஒரு எதிர்ச் சக்தியாக இருப்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. ஐ.தே.க, ஜே.வி.பி எல்லாமே களநிலையில் பலவீனமாகவே உள்ளன. உள் நெருக்கடிகள் அந்தக் கட்சிகளை உட்குவியச் செய்து கொண்டிருக்கின்றன.

ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுந்தான் இவற்றை விட ‘ஏதோ’ என்ற அளவில், அரசாங்கத்துக்கு எதிர்த்தரப்பாகச் செயலாற்றக் கூடியதாக உள்ளது.

ஏறக்குறைய 1977 இல் அ.அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, எதிர்க்கட்சியாக இருந்ததையும் விட, இப்போது கூட்டமைப்பு பெற்றுள்ள இடம் தாக்கமுடையது.

என்றபடியாற்தான், உடன்பாடே இல்லாத நிலையிலும் அரசாங்கம் கூட்டமைப்புடன் பேசுகிறது. அதனுடன் பேச்சுகளை எப்படியாவது நடத்த வேண்டியுள்ளது. என்பதாற்தான், கூட்டமைப்பை முக்கியப்படுத்தி, ராஜபக்ஷ சகோதரர்கள் அடிக்கடி அபிப்பிராயங்களைச் சொல்கிறார்கள். கடைசியாக ஜனாதிபதியும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும் இதன் அடிப்படையில், கூட்டமைப்பைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்.

ஆனால், இதைக் கூட்டமைப்பு உணர்ந்திருக்கிறதா? இந்த வாய்ப்பைப் புரிந்து கொண்டு அது விவேகமாகச் செயற்படுமா என்ற கேள்விகள் இன்னொரு புறத்தில் அதிக தாக்கத்துடன் இருக்கின்றன. அவை பற்றிப் பிறகு பார்க்கலாம்.

இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தத்தைப் பிரயோகிக்கக் கூடிய உள்நாட்டு அரசியற் சக்திகள் எதுவும் இல்லாத நிலையில், கூட்டமைப்பை அமெரிக்கா தலைமையிலான வெளியுலகம் பயன்படுத்த முயற்சிக்கிறது. ஆகவே, முதலில் அந்தத் தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு கூட்டமைப்பு ஒத்துழைக்க வேணும்.

அடுத்ததாக, இந்தியாவின் நட்புறவை முறித்துக் கொள்ளாத வகையில் காரியங்களைச் செய்யவும் வேண்டும். மறுபக்கத்தில் புலம்பெயர் தமிழர்களின் ‘தேசிய’ விருப்பத்தையும் நோக்கங்களையும் நிறைவேற்ற வேணும். அல்லது அவர்களுடைய கண்டனங்களுக்கும் எதிர்ப்புக்கும் ஆட்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேணும்.

இன்னொரு புறத்தில், அரசாங்கத்துடன் பேச வேணும். ஆனால், அரசாங்கத்துடன் பேச முடியாது. ஆனால், அரசாங்கத்துடன் பேசியே தீர வேணும். ஆனால், பேச முடியாது என்ற நிலைக்கு முகங்கொடுக்க வேண்டும். ‘விழுங்கவும் முடியாது, துப்பவும் முடியாது’ என்பார்களே, அதுதான் இது. அதாவது, மிகப் பயங்கரமான ஒரு நிலை கூட்டமைப்புக்கு.

இதைவிட, வெளிப்படைத்தன்மையாகவும் நிதானமாகவும் விட்டுக்கொடுப்புகளின்றியும் பேச வேண்டும் என வற்புறுத்தும் உள்ளுர்ச் சக்திகள். கடந்த வாரம் சிவில் சமூகம் என்ற பேரில் ஒரு அணியினர் இந்த நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டி அறிக்கையொன்றைக் கூட்டமைப்பிடம் கொடுத்தது நினைவிருக்கலாம்.

மேலும் கூட்டமைப்பினுள் வழமையாகவே இருக்கின்ற அணி முரண்கள்@ உள் நெருக்கடிகள். அத்துடன் வடக்குக் கிழக்கு இணைப்பு மற்றும் அரசியற் தீர்வு குறித்த பேச்சுகளின் தொடர்ச்சியில் உருவாகும் முஸ்லிம் தரப்பின் நெருக்கடிகள். ஆகவே, அந்தத் தரப்பையும் கையாள வேண்டிய நிலை.

மைதானத்தின் நடுவிலுள்ள ஒரு பந்தைப்போல அது நிறுத்தப்பட்டுள்ளது.  எல்லாராலும் விளையாடப்படும் நிலையில் அது இருக்கப்போகிறதா, அல்லது தன்னுடைய மையத்தை நோக்கி எல்லாத்தரப்பையும் கவர்ந்திழுக்கும் ஒரு காந்தவலுச் சக்தியுடைய தன்மையை உருவாக்கப்போகிறா? எனவே, மிகச் சிக்கலான நிலைமையில் கூட்டமைப்பு இருக்கிறது என்பது நிரூபணமாகிறது.

‘இந்த நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும்? யார்தான் எங்களின் நிலையையும் நெருக்கடியையும் புரிந்துகொள்கிறார்கள்? வெளியே இருந்து பார்க்கிறவைக்கு நாங்கள் என்ன செய்யலாம் என்று தெரியாது?’ என  கூட்டமைப்பின் மூத்த  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மனம்திறந்து சொல்வது, நாம் மேலே குறிப்பிட்டவற்றுக்கு ஆதாரமாகும்.

ஆனால், ஒரு அரசியற் கட்சி என்ற வகையில், ‘ஒரு இனத்தின் தலைமைச் சக்தி தானே’ என்று பிரகடனப்படுத்திக் கொண்ட நிலையில், நீண்ட யுத்தத்தின் பின்னர், மிகப் பெரும் அழிவுகளைச் சந்தித்த மக்களுக்கு வாக்குறுதி அளித்துத் தேர்தலில் மக்களின் ஆதரவைக் கோரிப் பெற்றுக்கொண்ட கட்சி என்ற அடிப்படையில், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, தமிழ்ச் சமூகத்தின் அரசியல் முன்னெடுப்புக்குப் பாத்திரவாளியாக தானே என்று சொன்ன நிலையில், கூட்டமைப்பு இந்த நெருக்கடிகளைச் சந்தித்தே ஆகவேண்டும்.

இந்தச் சவால்களை முறியடித்து முன்சென்றே ஆகவேணும்.

ஆனால், அது சாத்தியமா?

ஏனென்றால், கூட்டமைப்பு ஒரு மிகப் பலவீனமான அமைப்பாகவே தொடர்ந்தும் இருக்கிறது. அதனுள் வெளித்தெரியும் முரண்பாடுகள் தொடக்கம் அதற்குள் ஏராளம் பிரச்சினைகள். எந்தப் பிரச்சினைக்கும் அது தீர்வைக் கண்டதாக இல்லை. எனவேதான் ஆளாளுக்கு ஏற்றமாதிரிக் கதைக்கிறார்கள். ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்வாக்கு வளையங்களை உருவாக்கிக் கொள்ள முற்படுகிறார்கள்.

தவிர, ஒழுங்கமைப்பட்ட வேலைத்திட்டம் எதுவும் கூட இதுவரை கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்படவில்லை. அப்படியானதொரு வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தைப் பலரும் வலியுறுத்தியபோதும் கூட்டமைப்பினர் அதைக்குறித்துச் சிந்தித்ததாக இல்லை.

போரையும் போருக்குப் பிந்திய நெருக்கடிகளையும் மக்கள் தாங்களாகவே கடந்து வந்திருக்கிறார்கள். இன்னும் அவர்கள் தாங்களாகவே தங்களின் நெருக்கடிகளைக் கடந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த விசயமெல்லாம் மிகப் பகிரங்கமானவை.

எனவேதான் கூட்டமைப்புத் தொடர்ச்சியாகக் கண்டனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் கேலிப்படுத்தல்களுக்கும் உள்ளாகிறது. ‘மக்களைக் காப்பாற்ற வேண்டாம். மக்களின் நெருக்கடிகளைக் குறைப்பதற்கு முயலவேண்டாம். தனக்குள் இருக்கிற பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு, அரசியற் தீர்வு விசயத்திலாவது அது ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யட்டும்’ என்று கூறுகிறார்கள் சிலர்.

‘புலிகளற்ற வெற்றிடத்தில், தமிழ் மக்களின் தேர்வாகக் கூட்டமைப்பு மாறியுள்ளது. நீண்டகாலமாக உருப்படுத்தப்பட்ட தமிழ்த் தேசியம் என்ற கருத்து நிலையை மையப்படுத்தி அவர்களே மேற்கிளம்பியிருக்கிறார்கள். அதிலும் புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பாகவும் கூட்டமைப்பே உள்ளது. எனவே, அவர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பையும் அங்கீகாரத்தையும் பயன்படுத்தி, அரசியற்பிரச்சினையை தீர்வுக்குக் கொண்டு வரட்டும்’ என்று சொல்கிறார்கள் ஒருசாரார்.

ஆனால், இதை மறுத்துரைக்கும் தரப்பும் உள்ளது. ‘புலிகளின் வீழ்ச்சி ஏற்படுத்திய அனுதாபமும் அரசின் மீதான கோபமுமே கூட்டமைப்புக்கு  வெற்றி வாய்ப்பைக் கொடுத்தது. மற்றும்படி அதனிடத்தில் நம்பிக்கையளிக்கத் தக்க பெருஞ்சிறப்பெதுவும் இல்லை’ என இன்னொரு தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

இவையெல்லாம் பகிரங்கமானவையே. இங்கே பிரச்சினை என்னவென்றால், யதார்த்தத்தில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எல்லாத் தரப்பினர்களுக்கும் முகங்கொடுக்க வேண்டிய ஒரு நிலையில் - இக்கட்டான புள்ளியொன்றில் கூட்டமைப்பு இன்று வந்து நிற்கிறது என்பதே.

இதை, இந்தக் கட்டத்தை கூட்டமைப்பும் அதனுடைய தலைமையும் எப்படிக் கடக்கப்போகிறது? ஆகவே, மீண்டும் அதன்மீது கேள்விகளே உருவாகின்றன. ஒரு அமைப்பைச் சுற்றிக் கேள்விகள் அதிகமாக எழுகின்றன என்றால், அந்த அமைப்பின் செயற்றிறனிலும் கட்டமைப்பிலும் அதன் நம்பகத்தன்மையிலும் ஐயப்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்றே அர்த்தமாகும்.

எனவேதான் நாம் தொடர்ச்சியாகக் கூட்டமைப்புத் தொடர்பாக சில விடயங்களை வலியுறுத்தி வருகிறோம். சரி பிழைகளுக்கு அப்பால் தேர்தலின் மூலமாகத் தேர்வு செய்யப்பட்ட ஒரு அமைப்பு என்ற வகையிலும் தமிழ் மக்களின் சார்பாக பேச்சு மேசைக்குப் போகக்கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ள அமைப்பு என்ற வகையிலும் அது செயற்பட வேண்டியிருப்பதால், அது அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு அரசியற் கட்சிக்குள் இருக்கக்கூடிய அக முரண்பாடுகளை நாம் புரிந்து கொள்ளலாம்.  அதிலும் பல கட்சிகளையும் தேர்தலுக்காக சேர்த்துக் கொள்ளப்பட்ட உறுப்பினர்களையும் கொண்ட ஒரு அமைப்பில் முற்றுமுழுதாகவே சீரானதொரு ஒழுக்க முறைமை இருக்கும் என்றும் நாம் கருதவில்லை. அப்படி எதிர்பார்க்கவும் முடியாது.

ஆனால், போரால் முற்றாகவே பாதிக்கப்பட்டதொரு சமூகத்தின் அரசியலை முன்னெடுக்க வேண்டியதொரு சந்தர்ப்பத்தில் - அந்த மக்கள் தங்களின் நம்பிக்கையை முன்னிறுத்தி ஆதரவளித்திருக்கும் ஒரு அமைப்பானது அந்த மக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை எந்த நிலையிலும் தட்டிக்கழித்து விடமுடியாது. ஆகவே, அதற்குத் தக்கவாறு தன்னை அது நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னுடைய பொறுப்புகளையும் கடமையையும் உணர்ந்து கொள்வது அவசியம்.

ஆனால், தீர்மானிக்கப்பட்ட – ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத்திட்டங்களோ, தலைமைச் சக்திகளிலிருந்து உறுப்பினர்கள் வரையில் தம்மை அர்ப்பணிக்கும் மனோநிலையோ இன்னும் கூட்டமைப்பிடம் உருவாகவில்லை என்ற நிலையே தொடர்கிறது.

கூட்டமைப்பின் தலைமைச் சக்தியாகக் கருதப்படும் திரு. சம்மந்தனே கடுமையான விமர்சனங்களுக்குள்ளாக்கப்படுகிறார். அவரைச் சுற்றி ஏராளம் கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன. கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தொடக்கம் சிவில் சமூகத்தின் அறிக்கை வரையில் அனைவரிடமும்  திரு. சம்மந்தனின் மீதான நம்பிக்கையீனத்தின் வெளிப்பாடுகளை நாம் பார்க்க முடியும்.

ஆகவே, கூட்டமைப்பு தன்னை ஒரு தலைமைச் சக்தியாக நிரூபிக்க வேண்டியுள்ளது. அதனுடைய தலைமையானது கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் ஆளுமையும் நேர்மையும் அர்ப்பணிப்பும் உறுதியும் நம்பிக்கையும் உள்ள தலைமையாகத் தன்னை வளர்த்துக் கொள்வது அவசியம். உள்முரண்களைக் களையக்கூடிய ஆற்றலை அது கொள்ள வேண்டிய கடப்பாட்டிலுள்ளது.

இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஆள், கட்சி என்ற அடிப்படையில் தேர்வு செய்வதையும் விட கொள்கைக்காகவே வாக்களிக்கிறார்கள் என்று தமிழ்த் தேசியவாதிகள் சொல்வதுண்டு. ஆனால், அதைக் கடந்து அரசியல் நெறியிலும் அரசியலைக் கையாக்கூடிய முறைமையிலும் தன்னை வளர்;த்துக் கொள்ளும் ஒரு தலைமையாக – பிற சமூகத்தினரும் மதிப்பளிக்கும் ஒரு தலைமையாக தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு அது மாற வேண்டும். இதற்குச் சில அடிப்படையான விசயங்களை மேற்கொள்ள வேணும்.

நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருவதன் அடிப்படையில், முதலில் கூட்டமைப்பு வலுவான ஒரு கட்டமைப்பாக மாற்றப்பட வேண்டும். இதுகாலவரையும் மேற்கொள்ளப்பட்ட அரசியல் வழிமுறையை மாற்றி – பட்டறிந்த அனுபவங்களின் வழியாகவும் தோற்றுப்போன வழிமுறைகளையும் அணுகுமுறைகளையும் மாற்றி புதிய வழிகளையும் புதிய பயணத் திசைகளையும் காண வேண்டும்.

வழமையான பாணியில் அரசு – தமிழ்த்தரப்பு என்ற பேச்சு முறைமை மாற்றப்பட வேண்டும். இதுபோல பல அடிப்படை மாற்றங்களைச் செய்யாத வரையில் காலம் கடத்தும் காரியங்களும் தோல்விகளும் நெருக்கடிகளும் ஏற்படுமே தவிர, உருப்படியாக ஏதும் நடந்து விட வாய்ப்பில்லை.

இந்த நெருக்கடிகள் உச்சநிலையை அடையும்போது மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில், அதன் தலைவர் திரு. சம்மந்தன் அறிவிப்புளைச் செய்வதையும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதையும் நாம் அவதானிக்கலாம். இது பதற்றத்தின் வெளிப்பாடாகும்.

தவிர, நேரத்துக்குத் தக்கமாதிரியும் நிலைமைக்கு ஏற்றமாதிரியும் மக்களின் இரத்தத்தைச் சூடேற்றும் அறிக்கைகளோ பேச்சுகளோ பயனுள்ள விளைவுகளைத் தருவதில்லை. ஏட்டிக்குப் போட்டியாக வார்த்தையாடல்களை மேற்கொள்ளும்போது அதில் ஒரு வகையான சுவாரஷ்யம் இருக்கும்.

எனில், மீண்டும் சிங்கள அதிகார வர்க்கத்திற்கு ஏகப் பெரு வெற்றியை வெகுமதியாகவே அளிக்கும் காரியங்கள் தொடரத்தான் போகின்றன போலும்.

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB