கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

இலங்கையின் பிம்பக் கலாசாரம்

Monday 19 December 2011

தெற்கிலே அதிவேக நெடுஞ்சாலையைக் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திறந்து வைத்திருந்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. இலங்கையின் வரலாற்றிலே முதல் அதிவேக நெடுஞ்சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சரித்திரம் தன்னுடைய பொன்னெழுத்துகளால் இந்தச் சம்பவத்தைப் பொறித்துக் கொண்டுள்ளது.

புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இந்தச் சாலையில் 100 கிலோ மீற்றர் வேகத்துக்குக் குறைவாக வாகனங்கள் ஓட்டப்படுமானால் தண்டம் அறவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதிவேக நெடுஞ்சாலைகளில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை என்றாலும் இலங்கையில் இப்படியொரு நிலை உருவாக்கப்பட்டிருப்பதையிட்டு ஆச்சரியமே ஏற்படுகிறது.

அதிலும் எல்லா விசயங்களிலும் நாடு சமனிலைகளை அடைவதற்கு இன்னும் எவ்வளவோ தூரம் பயணிக்க வேண்டியிருக்கும் சூழலில், இப்படியான  அறிவிப்புகளுடன் செய்யப்படும் அதிரடிக் காரியங்கள் மக்களுக்கு ஆச்சரியத்தையே ஏற்படுத்துகின்றன.

இந்த ஆச்சரியம் மகிழ்ச்சியினாலோ பெருமிதத்தினாலோ ஏற்படுவதில்லை. குறைபாடுகளின் மத்தியில் உருவாக்கப்படும் மாஜா ஜால மாதிரிகளால் உருவாகும் ஆச்சரியமே இது. இதன் அடித்தளத்தில் மக்கள் ஏமாற்றப்படுவதற்கான புள்ளிகளே அதிகமாக உண்டு.

சமனிலைப்படுத்தப்பட்ட விசயங்களின் வளர்ச்சிகளினால் ஏற்படும் ஆச்சரியங்கள் நிச்சமாக மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அதுவே நாட்டின் அபிவிருத்தியைச் சிறப்பாக்கும். அதுவே நாட்டின் அபிவிருத்திக்கும் பிரதேசங்களிடையேயான வேறுபாடுகளற்ற வளர்ச்சிக்கும் மூலாதாரமாகும்.

ஆனால், இலங்கையில் இன்னும் அப்படியான சிந்தனையோ நடைமுறையோ ஏற்படவில்லை. அப்படி அவை ஏற்படுத்தப்படவும் இல்லை. ஆனால், அப்படியான ஒரு பொது நடைமுறை உருவாக்கப்படவேண்டும்@ அப்படியான ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட சிந்தனையை வளர்த்தெடுக்க வேணும் என்று யாரும் கருதியதாகவும் தெரியவில்லை.

தெற்கிலே ஆரம்பித்து வைக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையைப் பற்றி அரசாங்கம் மிகப் பிரமாண்டமான பெருமிதப் புகழாரப் பிரச்சாரங்களைச் செய்திருந்தது.

இந்த நெடுஞ்சாலையைப் பற்றி தெற்கின் ஊடகங்களிற் பலவும்கூட பெருமிதச் செய்திகளை எழுதியிருந்தன.

ஆனால், வடக்கிலும் கிழக்கிலும் நாட்டின் பிற, பின்தங்கிய மாவட்டங்களிலும் வீதிகளும் மக்களின் வாழ்நிலையும் மிகப் பிந்தங்கியே உள்ளன.

குறிப்பாக, வடக்கில் – வன்னிப் பிராந்தியத்தில் ஒரு மணித்தியாலத்தில் 10 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனத்தை ஓட்டினாலே அது பெரும் சாதனை. அந்தளவுக்குச் சீரழிந்து போயுள்ளன இந்த வீதிகள். இங்குள்ள ‘ஏ’ தர வீதிகளே இந்த நிலையிற்தான் உள்ளன. (இதை வன்னியில் எந்தப் பகுதிக்குப் போய்ப்பார்த்தாலும் நீங்கள் காணலாம்).

இந்த வீதிகளால் அடிக்கடி பயணிக்கும் இராணுவத்தினரைக் கேட்டாலே அவர்கள் தாங்கள் படுகின்ற அவலத்தையும் அவஸ்தையையும் சொல்வார்கள்.

போர் முடிந்து இரண்டரை ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆனால், அடிப்படையான விசயங்களில், அவசியமான தேவைகளிற் கூட இன்னமும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.

இடையில் தேர்தற் தேவைகள் மற்றும் அபிவிருத்தி வேலைகள் என்பதற்காக அவசர அவசரமாகச் செய்யப்படும் புனரமைப்புப் பணிகள் வெறும் கண்துடைப்பு முயற்சிகளாகவே உள்ளன. அவசரமாக ஊற்றப்பட்ட தண்ணித் தார், ஊற்றப்பட்ட அவசரத்தோடேயே காணாமற் போய்விட்டது.

வன்னியில் உள்ள முக்கியமான வீதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல தடவைகள் திருத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்படித் திருத்தப்படும் வீதிகள் மூன்று நான்கு மாதங்களுக்கு மேல் தாக்குப்பிடித்து நிற்பதில்லை. (இது சர்வதேசத் தரத்தில் எந்த வகையைச் சேர்ந்தது என்று தெரியவில்லை).
பெருமளவு பணத்தைச் செலவழித்துப் புனரமைப்பப்படும் வீதிகள், இப்படிப் பழுதடைவதற்குக் காரணம், அவற்றை உரிய முறையில் புனரமைப்புச் செய்யாமையே!

வெறுமனே கிறவல் மண்ணை அள்ளி வீதியில் நிறைப்பதனூடாக சூழலையே பாதிப்படையச் செய்ய முடியும். ஒப்பந்த வேலைகளை எடுப்போரின் பொக்கற்றுகள் நிறையும். மற்றப்படி வீதியைச் செப்பனிட முடியாது. ஆனால், இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

கிறவலைப் போடுவதன் மூலமாக வீதியிற் பயணிப்போர் தூசியினால் அவதிப்படுகின்றனர். இது சுவாச நோய்களை உண்டாக்குகிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். கிறவலை வீதிக்காக அதிக அளவில் தோண்டி எடுப்பதனால், கிறவல் எடுக்கப்படும் பகுதிகளில் சூழற்தாக்கம் - நில அமைப்பில் பாதிப்பு - ஏற்படுகிறது. இதைப் பற்றி கிராமவாசிகள் கவலைப்படுகிறார்கள்.

ஆகவே, பணத்தைச் செலவழித்து, சூழற் பாதிப்பை ஏற்படுத்தும் காரியங்கள் நிகழ்கின்றனவே தவிர, வீதிப் புனரமைப்பு நடைபெறவில்லை.
இதனால், அதி தாமதப் பாதைகளே உருவாக்கப்படுகின்றன. இப்பொழுது வன்னியில் உள்ள 100 வீதமான வீதிகளும் அதி தாமதப் பாதைகளாகவே உள்ளன.

ஆகவே, இலங்கையின் வரலாற்றில் அதிவேகப் பாதைகளையும் அதிதாமதப் பாதைகளையும் ஒருங்கே கொண்டுள்ள பெருமையையும் இலங்கை பெற்றுள்ளது என்பதையும் சரித்திரம் தன்னுடைய பொன்னெழுத்துகளால் பொறித்துக்கொள்கிறது.

அதிவேகப் பாதையைப் பற்றி பெருமையான முறையிற் செய்திகளை வெளியிட்ட ஊடங்களின் பார்வையில் நாட்டின் இன்னொரு பகுதியில் உள்ள அதிதாமதப் பாதைகளின் நிலைமையைப் பற்றி அறிய முடியவில்லை.
ஊடகதர்மமும் ஊடகநிலையும் தகவற் பெறுமானச் சமனிலைச் சிறப்பும் இப்படித்தான் உள்ளது. எந்தவொரு ஊடகத்திலும் இதுவரையில் இத்தகைய சமனிலைக் குறைபாடுகளைச் சுட்டி, ஆசிரியர் குறிப்புகள்கூட எழுதப்பட்டதில்லை.

ஒரு சின்னஞ் சிறிய நாட்டில் வௌ;வேறு பகுதிகளில் நடக்கும் சமனிலைத் தளம்பலை அறியமுடியாத நிலையில் அல்லது அறிந்திருந்தாலும் அவற்றை வெளிப்படுத்த விரும்பாத நிலையிற்தான் யதார்த்தம் உள்ளது.

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் இப்படித்தான் யதார்த்தத்தை மூடிமறைத்துப் பெருமிதப் புள்ளிகள் உருவாக்கப்படுகின்றன. ‘மேன்மை தங்கிய’ ஜனாதிபதி அவர்களாலும் தற்போதுள்ள அரசாங்கத்தினாலும் பொன்னெழுத்துகளாற் பொறிக்கப்படக்கூடிய பல சாதனைகள் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது, அதன்மூலம் நாடு முழுவதையும் ஒரே நிர்வாக அலகின் கீழ் மீண்டும் கொண்டு வந்தது, நாட்டிலுள்ள முக்கியமான பாலங்களை நிர்மாணித்துத் திறந்து வைத்தது, புதிய பொருளாதார இலக்குகளை நோக்கி அபிவிருத்திப் பயணத்தை மேற்கொண்டிருப்பது, அதிவேக நெடுஞ்சாலையை ஆரம்பித்திருப்பது என இந்தப் பட்டியலைச் சிலர் வாசிக்கிறார்கள்.

ஆனால், ஜனநாயக நெருக்கடியும் அபிவிருத்திச் சமனின்மையும் இனமுரண்பாட்டுப் புள்ளிகளின் விரிவாக்கமும் அதிகாரக் குவிப்பும் மேலே சுட்டப்பட்ட பெருமிதங்களைச் சிதைக்கும் வெடிகுண்டுகளாகவே உள்ளன.

நாடு புறவயமான யுத்தத்தைக் கடந்திருக்கலாம். ஆனால், அது அகவயத்திற் கொண்டுள்ள அபாய வெடிகுண்டுகளை தன்னுள்ளே உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. இது பொறிக்கப்பட்டு வரும் அத்தனை பொன்னெழுத்துகளையும் பாழடித்து விடும்.

தற்போது நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் நேரிற் சென்று வரக்கூடிய தாராள நிலை தோன்றியுள்ளது. ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் ஊடகவியலாளர்கள் வரை எவரும் எங்கும் சென்று வரக்கூடிய நிலை உண்டு. அப்படி அவர்கள் எல்லா இடங்களுக்கும் சென்றும் வருகிறார்கள்.

இப்படியானதொரு நிலை உருவாகியிருப்பதால், இனிமேலாவது, வடக்குக் கிழக்குப் பகுதிகளின் உண்மை நிலையை இவர்கள் அறியக் கூடியதாக இருக்கும். அதன்படி அந்தப் பகுதிகளில் அபிவிருத்தியிலும் முன்னேற்றங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஜனாதிபதியின் புத்திரரான திரு. நாமல் ராஜபக்ஷவே எல்லா இடங்களுக்கும் செல்கிறார் என்பதால், அவர் நிலைமைகளை நேரிற் கண்டறியக் கூடிய வாய்ப்புண்டு.

இதனால், ‘முன்னேற்றங்கள் நிச்சயமாக ஏற்படும். அதிலும் அவை விரைவாகவே நிகழும்’ என்றும் சனங்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், எதிர்பார்த்தவை நிகழவில்லை. அவர்களுடைய நம்பிக்கைகள் மாயமான்களாகவே பொய்யுரைத்து மறைந்து கொண்டிருக்கின்றன.
ஆகவே, பிம்பங்களாற் கட்டமைக்கப்படும் அரசியற் பொருளாதாரக் கலாச்சாரத்தில் நாடு தேங்க வைக்கப்படுகின்றதா என்றே எண்ணத்தோன்றுகிறது. பிம்பங்கள் மக்களுக்கு எந்த நிலையிலும் ஆபத்தானவையே. பிம்பங்கள் உச்சச் சுரண்டலுக்கும் சனங்களின் சிந்தனை மயக்கத்துக்குமே அதிக சாத்தியங்களை வழங்குகின்றன. எத்தகைய பிம்பங்களிலும் உச்ச நலன்களைப் பெறுவது, அவற்றை உருவாக்கும் தரப்பினரே!

இலங்கை இன்று பிம்பக் கலாசாரத்துக்குள் ஆழமாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளது. யுத்த வெற்றியில் ஆரம்பிக்கப்பட்ட – அல்லது யுத்த வெற்றியிலிருந்த உருவாக்கப்பட்ட இந்தப் பிம்பக் கலாச்சாரம் ஏனைய எல்லா விசயங்களுக்குமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழர்களும் பிம்பக் கலாச்சார நிழலிலேயே உறங்கிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு வசதியாகத் தமிழ்க் கலாசாரத்தின் முகமே பிம்பக்கலாசாரத்தினாற் கட்டமைக்கப்பட்டு வருகிறது என்பதையும் நாம் கவனிக்க முடியும்.

பிம்பம் என்பது யதார்த்தத்துக்கும் உண்மைக்கும் எதிரானது. பிம்பத்துக்கு எதிரான உண்மை மிகக் கொடியதாகவே இருக்கும். அப்படியான நிலையிற்தான் இலங்கையின் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் அவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களின் நிலையும் உள்ளன.

இதைக்குறித்து சிந்திக்க வேண்டியது, பிம்ப உருவாக்கத்துக்கு எதிரான சிந்தனையாளர்களின் பணியும் அவசியமுமாகும்.

அதாவது, அகவயமாக உருவாக்கப்படும் யுத்தச் சூழலிலிருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இது.

அரசனின் மாளிகையில் நடக்கும் விருந்துதான் நாட்டிலுள்ள குடிமக்களின் வீட்டுச் சாப்பாடாகவும் இருக்கிறது என்று காண்பிப்பதை எந்த ஜனநாயக சக்தியும் அங்கீகரிக்க முடியாது.

ஜனநாயகத்தில் அரசனுக்கும் அரச முறைமைக்கும் இடமும் இல்லை.
இதையும் இலங்கை தன்னுடைய சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறித்துக் கொள்ள வேண்டும்.

00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB