கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

பலவீனமான எதிர்க்கட்சி - நெருக்கடிக்குள் யூஎன்பி.

Sunday 18 December 2011

'ஊடகவியலாளர்களுக்கு வெள்ளைவான்களை வழங்குங்கள்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தெரிவித்திருக்கிறார். ரணிலின் இந்தக் கூற்று அதிர்ச்சிகரமான ஒன்றாகும்.

கொந்தளிக்கும் உணர்ச்சிகரமான ஒரு விடயமாக ஊடகவியலாளர்கள் குறித்த பிரச்சினைகள் இருக்கும்போது இவ்வாறான ஒரு வலுவான அபிப்பிராயம் நிச்சயமாக அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

அவருடைய ஆளுமை குறித்த கேள்விகள் உள்நாட்டிலும் சர்வதேசப் பரப்பிலும் எழுப்பப்பட்டிருக்கும் சூழலில் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு, ரணில் தன்னை ஒரு வலுவான ஆளுமையாக நிரூபிக்க முயன்றிருக்கிறார் போலுள்ளது.

இலங்கையின் அரசியல் நிலைவரத்தில், ஊடக சுதந்திரம் பற்றிய வாதப்பிரதிவாதங்களில், ஊடக சுதந்திரத்துக்குப் பதிலாக அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு சில சலுகைகளை வழங்கி மகிழ்விக்கச் சிந்தித்திருக்கும் பின்னணியில், ஜனநாயக நெருக்கடிகள் பற்றி விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ரணில் இப்படித் தெரிவித்திருப்பது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதைப்போல ரணிலின் அண்மைய அறிவிப்புகளும் பாராளுமன்ற உரைகளும் சற்றுக் கனதியாக மாறிவருவதையும் நாம் அவதானிக்கலாம்.

ஆனால், இந்த அறிவிப்புகள் மட்டும் ரணிலையோ அல்லது அவருடைய கட்சியையோ மேலே உயர்த்தி விடாது. அல்லது அவரும் அவருடைய கட்சியும் சந்தித்துவருகின்ற தொடர் நெருக்கடிகளை இவை எந்த வகையிலும் குறைத்தும் விடாது.

அதற்கு நிறையக் காரியங்களைச் செய்ய வேண்டும். அப்படி நிறையக் காரியங்களைச் செய்ய வேண்டுமென்றால், நிறையத் தியாகங்களைச் செய்ய வேண்டும். நிறையத் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்றால், அதற்கு மிகப் பரந்த மனமும் விரிந்த சிந்தனையும் வேண்டும் கடுமையான உழைப்பும் தேவை.

ஆனால், ஐ.தே.கவில் அப்படியான ஒரு சூழலோ ஒரு நிலையோ ஒரு தன்மையோ காணப்படவில்லை. தடைகளையும் உறைநிலைகளையும் உடைத்துக்கொண்டு மேற்கிளம்பி வரக்கூடிய ஆளுமைகள் இப்போதைய சூழலில் அந்தக் கட்சிக்குள் இருப்பதாகப் படவில்லை.

கரு ஜெயசூரியா சற்று மிதப்பானவராகத் தெரிந்தார். ஐ.தே.கவில் அவர் மூத்த உறுப்பினராகவும் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இதன்காரணமாக ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் ஆதரவு கட்சிக்குள்ளே அவருக்குண்டு. ஆனால், அவர் தன்னைத் தலைமைக்குரிய ஒருவராகவோ, ஒரு குறிப்பிடத்தக்க ஆளுமையாகவோ நிரூபிக்கத் தவறிவிட்டார்.

ரணிலை முந்தும் ஒரு பந்தையக் காரனைப்போலத் தோற்றங்காட்டினாரே தவிர, மற்றும்படி அவர் பின்வரிசையிலேயே தொடர்ந்தும் இருக்கிறார்.

கருவுக்குப் பிறகு, ஐ.தே.க.வில் இன்னொரு நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிந்தவர் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் மகன் சஜித் பிரேமதாஸ.

தந்தையின் கடுமையான உழைப்பும் அதன் வழியாக வந்த ஸ்தானமும் சஜித்துக்கு ஒரு அடிப்படையை உருவாக்கிக் கொடுத்திருந்தது. அதனால், அவர் கட்சிக்குள்ளும் வெளியேயும் அதிகம் அறியப்பட்ட ஒருவராக மாறியிருந்தார்.

ரணிலுக்குப் பதிலாக அல்லது மாற்றீடாக சஜித் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பை ஐ.தே.க வின் அனுதாபிகளும் ஆதரவாளர்களும் உள்நாட்டில் கொண்டிருந்தபோது, சஜித்தை ஓடக்கூடிய ஒரு குதிரையாக ஆக்கலாமா என வெளியுலகம் எதிர்பார்த்தது.

ஆனால், சஜித்தும் தனக்கான வாய்ப்புகளை இனங்காணத் தவறிவிட்டார். மேலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் முடியாதிருக்கிறார். தந்தையின் உழைப்பினாற் கிடைத்திருந்த வளங்களைக் கூட அவர் பெறுமதியற்ற நிலையிலேயே வைத்திருக்கிறார்.

ஆளுமை மிக்க தலைமைத்துவத்துக்குரிய ஒருவர் வீரியமுள்ள ஒரு முளையைப்போல எல்லாத் தடைகளையும் உடைத்துத் தகர்த்துக்கொண்டு, மேற்கிளம்பி வருவார்.

அத்தகைய ஆளுமைகள் எனச் சொல்லக்கூடிய அளவுக்கு இன்றைய ஐ.தே.க இல்லை என்றே சொல்லலாம்.

என்றபடியாற்தான் அந்தக் கட்சி ஒரு முதிய தீராத வியாதிக்காரனைப் போல பலவீனப்பட்டுக்கொண்டே போகிறது. உள்முரண்பாடுகளாலும் செயற்பாடுகளற்ற வெறும் உரையாடல்களாலும் அதிகாரப் போட்டியாலும் உடைந்துடைந்து உள்ளுக்குள்ளே மட்கிக் கொண்டிருக்கிறது அது.

எதிர்த்தரப்பினால் ஏற்படுகின்ற நெருக்கடிகளை விடவும் அது தனக்குள் கொண்டிருக்குள் உள் நெருக்கடிகளாலேயே திணறிக்கொண்டிருக்கிறது.  

இலங்கைத்தீவின் மூத்த கட்சிகளில் ஒன்றாகிய ஐ.தே.க இப்படியான ஒரு நிலைக்கு வரும் என அதனுடைய பிதாமகர்களும் அந்தக்கட்சியின் மூத்த தலைவர்களும் நினைத்திருக்கவே மாட்டார்கள்.

ஆனால், அவர்கள் பறித்த குழிகளிலேயே அந்தக் கட்சி வீழ்ந்திருக்கிறது. இப்போது மீண்டெழ முடியாத அளவுக்குக் கட்சியின் பலத்தையெல்லாம் முந்திய தலைவர்களின் தவறுகள் நோய்க்கிருமிகளாகி உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன. அல்லது, அவர்களுடைய எஜமானர்கள் ஐ.தே.கவின் ஆற்றலையெல்லாம் உறிஞ்சிவிட்டனர்.

பதினேழு ஆண்டுகால ஆட்சியில் கொடிகட்டிப் பறந்த அந்தப் பொற்காலத்தில்தான், ஐ.தே.கவின் வீழ்ச்சிக்கான மூலவித்துகள் வினைத்திறனுடன் முளைத்தன என்று சொல்வார்கள். அதாவது, அந்தக் கட்சியின் மிகப் புகழ்வாய்ந்த தலைவராகவும் ஆளுமையாகவும் இருந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா தான் ஐ.தே.கவை அதிகம் பின்னடைவுக்குக் கொண்டு போகக் காரணமாக இருந்தவர் என்று இன்று மதிப்பிடுகிறார்கள்.

கட்சிக்குள் இருந்த ஜனநாயகத்தை உறிஞ்சியெடுத்துத் தன்னுடைய அதிகாரத்தைப் பலப்படுத்தியவர் ஜெயவர்த்தனா என்பதால், ஜனநாயக உள்ளடக்கத்தாற் பலவீனமடைந்த ஒரு கட்சியாக ஐ.தே.க மாறிவிட்டது.

இப்பொழுது ஐ.தே.கவிற்குள் நடக்கின்ற மோதல் என்பது ஜனநாயக நெருக்கடியின் விளைவே. ‘கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை’ எனப் பகிரங்கமாகவே மூத்த உறுப்பினர்களே சொல்லி வருகிறார்கள்.

ஜனநாயக உள்ளடக்கத்ததிற் பலவீமானமாகக் காணப்படும் எந்தக் கட்சியும் எந்த அமைப்பும் தொடர்ந்து பலமாகவும் முடியாது, வீரியத்துடன் செயற்படவும் முடியாது என்பது விதி. ஐ.தே.கவும் இப்போது இந்த விதிக்குட்பட்டுள்ளது.

இலங்கை போன்ற நாடுகளில் நீண்டகாலமாக இயங்கி வருகின்ற கட்சிகளுக்குள்ளும் அமைப்புகளுக்குள்ளும் இத்தகைய ஜனநாயக நெருக்கடி ஏற்படுவது இன்று வழமை. அதிகாரத்தை நோக்கிய சிந்தனையே இதற்குப் பிரதான காரணம்.

ஆனால், இதை - இந்தப் பகிரங்கமான உண்மையை - இந்தப் பலவீனத்தை - இந்த அசிங்கத்தை வைத்துப் பராமரிப்பதற்கே ஐ.தே.க விரும்புகிறதே தவிர, இதைக் களைவதற்கு அது தயாராகவில்லை.

எந்த நிலையிலும் கட்சிக்குள் அதிகாரத்தைத் தன்னுடைய பிடியில் வைத்திருப்பதற்காகக் கடுமையாகப் பாடுபடும் ரணில் விக்கிரமசிங்க, வெளியே அரசியல் அரங்கில் மிகப் பலவீனமானவராகவே உணரப்பட்டிருக்கிறார்.

இதற்கு அவருடைய நிகழ்காலச் செயற்பாடுகள் மட்டும் காரணமல்ல. கடந்த காலத்தில் அவர் நிரூபிக்கத்தவறிய பல விடயங்களே அவரைப் பற்றிய இத்தகைய உணர்தலைக் கொடுத்துள்ளன.

ரணில், 2002 இல் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதற்கு முன்னர், 1992 இலும் அவர் பிரதமராக இருந்துள்ளார். (இது பிரேமதாஸவின் மரணம் அளித்த பரிசு என்று சொல்லப்படுவதுண்டு). அதற்கு முன்னும் அவர் வலுவான பதவிகளில் இருந்துள்ளார். இதைவிட அவருக்குக் கட்சிக்குள் ஒரு பாரம்பரியச் செல்வாக்கும் அவருக்கு இருக்கிறது. இந்தச் செல்வாக்குக் குடும்பத்தின் வழியாக வந்தது.

ஆனாலும் இதையெல்லாம் வைத்துக்கொண்டு, ரணிலினால், எந்தச் சிறுமுயலையும் பிடிக்க முடியவில்லை.

நாட்டில் செல்வாக்குச் செலுத்தும் நிலை தளர்ந்து இப்போது கட்சிக்குள்ளும் அவருடைய செல்வாக்கு வட்டம் சுருங்கத் தொடங்கியுள்ளது. ஐ.தே.க விலிருந்த முக்கியமான ஆளுமைகள் வெளியேறிச் சென்றதற்கு அதனுள்ளிருந்த தலைமைத்துவக் குறைபாடும் ஜனநாயக வெளியிலிருந்த போதாமையுமே  காரணம் என்பதையும் நாம் இங்கே இணைத்துப் பார்க்கலாம்.

எனவே, இப்போதைக்கு ஐ.தே.க தன்னுடைய நெருக்கடிகளிலிருந்து மீளும்போலத் தெரியவில்லை. அல்லது புதிய உள்ளடக்கமொன்றை உருவாக்கும்போலவும் தோன்றவில்லை.

இதற்குப் பிரதான காரணம், கட்சிக்குள்ளே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியே. ஆனால், உண்மையில் இந்த அதிகாரப் போட்டி அவசியமற்ற ஒன்று. அதிகாரம் இருந்தாற்தான் எதையாவது செய்யலாம் என்று யாராவது சிந்திப்பாராக இருந்தால், அதிகாரம் தனக்குக் கிடைத்தாற்தான் தன்னால் எதையும் செய்ய முடியும் என ஒருவர் நம்புவாராக இருந்தால், அவர் ஒரு தலைமைத்துவத்துக்கான தகுதியைக் கொண்டிருக்கக் கூடியவரல்ல.

இதற்கு நல்ல உதாரணம், இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ.

ஜே.ஆரினால் துவைத்துப் பிழியப்பட்டிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியை, அதனுடைய இயலாமை நிலையிலிருந்து மீண்டும் புத்தெழுச்சியடைய வைத்தவர் மகிந்த ராஜபக்ஸ.

அப்போது அவர் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கவில்லை. அல்லது கட்சியில் அதிகம் பிரபலமாகிய ஒருவராகவும் இருக்கவில்லை. ஏன், இலங்கையின் அரசியற் பரப்பில் அதிகம் தெரியவந்த ஆளாகவும் அன்று அவர் இருக்கவில்லை.

ஆனால், தலைமைத்துவமே இல்லாதிருந்த கட்சியை மெல்ல மெல்லக் கட்டியெழுப்பி வந்தார் அவர். அதற்காக அவர் பின்னாலிருந்து கடுமையாக உழைத்தார். கட்சிக்குத் தலைமைப் பொறுப்பைத் தான் ஏற்பதிலும் பார்க்க, பொருத்தமான ஒருவரைக் கொண்டு வருவதன் மூலமாகவே கட்சியையும் பலப்படுத்தி, தனக்கான இடத்தையும் நிர்மாணித்துக்கொள்ள முடியும் என அவர் கருதினார்.

இதன்படியே அவர் மிகத் தொலைவிலிருந்த திருமதி சந்திரிகா குமார ரணதுங்கவை அழைத்துவந்தார். சந்திரிகாவின் வருகை நிச்சயமாகக் கட்சியைப் பலப்படுத்தும். அது தன்னையும் பலப்படுத்தும் என்று அவர் நம்பினார்.

பிறகு அவருடைய நம்பிக்கை வெற்றியளித்தது@ நிரூபணமாகியது.

அதிக முயற்சியோ கடுமையான உழைப்போ இல்லாமல் பதிவிக்கு வந்தவர் திருமதி சந்திரிகா குமார ரணதுங்க என்பதை இந்த இடத்தில் நாம் நினைவு கூரலாம். சந்திரிகாவுக்கு இருந்ததெல்லாம் அவருடைய குடும்பத்தின் அரசியற் பின்னணியும் அவருடைய கணவரான திரு. விஜயகுமார ரணதுங்கவின் மூலமான அறிமுகமுந்தான்.

மகிந்த ராஜபக்ஸவே சந்திரிகாவுக்கான சிம்மாசனத்தை வழங்கினார். பிறகு அவரே அதைப் பறித்தும் கொண்டார். ஆனால், அவர் மிகவும் நிதானமாகத் தன்னை – தன்னுடைய தலைமைத்துவ ஆளுமையை நிலைப்படுத்தியவர்@ நிரூபித்தவர்.

அதேவேளை, ஒரு தலைமைத்துவம் என்பது, தனியே அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் மட்டும் தங்கியிருப்பதில்லை.

அதற்கப்பால், அது மற்றவர்களுக்கு இடமளிப்பதிலும், வரலாற்றை முன்னகர்த்தும் செயல்களை ஆற்றுவதிலும் தன்னுடைய மதிப்பார்ந்த நிலைகளை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

மேலும், எதற்காக ஒரு தலைமைத்துவம் இருக்கிறது, ஒரு தலைமைத்துவத்தின் செயல்விளைவுகள் எப்படி அமைய வேண்டும் என்பதிலும் தெளிவுடையதாக இருக்க வேண்டும். இதெல்லாம் இலங்கையின் இன்றைய அரசியற் தலைமைத்துவங்களிடையே இருக்கின்றனவா என்றால்.... முயலுக்குக் கொம்பிருந்தாலும் இவர்களுக்கு அந்தப் பண்பில்லை என்பதே நிலைமை.

ஆகவே, இலங்கையின் நீண்டகால ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியுமாகிய ஐ.தே.க தன்னுடைய கால்களை நிரந்தரப் பலவீனங்களில் இருந்து காப்பாற்குவதற்காக மிகக் கடுமையாகப் பாடுபட வேண்டியுள்ளது. (இந்த நிலைமைதான் ஏனைய கட்சிகளுக்கும் உள்ளது).

வலுவான எதிர்க்கட்சிகளே இல்லாத ஒரு நிலை இலங்கையின் அரசியலாகக்கூடிய அபாயமே உருவாகி வருகிறது. அதைக்குறித்த எச்சரிக்கையே இந்தப்பத்தியாகும்.
(நன்றி - வீரகேசரி)

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB