கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு?

Sunday 27 May 2012















தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாதை எது? அதனுடைய பயணம் எந்த இலக்கை நோக்கியது? என்ற கேள்விகள் இன்று தீவிர நிலையில் அதனுடைய ஆதரவாளர்கள் மட்டத்திலேயே எழுந்துள்ளன.


இதனால், கூட்டமைப்பைக் குறித்து கடுமையான விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை கூட்டமைப்பை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்று கடுமையாகப் பாடுபடும் போக்கும் தீவிரமாக உள்ளது.


ஆனால், முன்வைக்கப்பட்டு வருகின்ற எத்தகைய விமர்சனங்களையும் கூட்டமைப்புப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அதைப்போல கூட்டமைப்புப் பின்பற்ற வேண்டிய முக்கியமான விசயங்களைக் குறித்த அறிவுரைகளைக் கூட அது ஏற்றுக்கொண்டதாக இல்லை. கூட்டமைப்பை எப்படியாவது காப்பாற்றி விட வேணும் என மற்றவர்கள் கொண்டுள்ள அக்கறையின் அளவுக்கு அதனுடைய உறுப்பினர்களிடம் அது குறித்த பொறுப்புணர்வில்லை. குறைந்த பட்சமாக கூட்டமைப்பு இவற்றைப் பரிசீலிப்பதாகவும் இல்லை.


பதிலாக மேலும் மேலும் குறைபாடுகளையே அதிகமாகக் கொண்டுள்ள ஒரு அமைப்பாக அது தன்னை வைத்திருக்கிறது. முரண், சுயமுரண் என்ற நிலை கூட்டமைப்பினுள் அதிகமாக உருவாகியுள்ளது. எத்தகைய விமர்சனங்களையும் (அது சிநேக விமர்சனமாக இருந்தாலும் சரி, புறநிலை விமர்சனமாக இருந்தாலும் சரி) அது ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தோடும் இல்லை.


இதனால், அது தொடர்ச்சியாகக் கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. தவறான அரசியல் தெரிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது. இலகுவில் எதிர்த்தரப்புகளால் தோற்கடிக்கக் கூடியதாக இருக்கிறது. இத்தகைய நிலை என்பது, அதனுள்ளேயே கொந்தளிப்பான நிலைமைகளை உருவாக்குகிறது@ முரண்களை உண்டாக்குகிறது@ அதனுடைய ஆதரவாளர்களைக்கூடச் சலிப்படையவும் சீற்றமடையவும் வைத்துள்ளது.


கூட்டமைப்பை ஆதரிக்கின்ற ஆய்வாளர்களும் பத்திரிகைள் உள்ளிட்ட ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் (கட்சிகளை ஆதரிப்போர் எப்படி ஊடகவியலாளர்களாக இருக்க முடியும்? என்று கேட்கப்படும் கேள்விகளும் உள்ளன) கூட இப்போது சோர்வடையும் நிலைக்கு வந்திருப்பதைக் காணலாம்.


இவர்களில் ஒரு சாரார் கூறும் கருத்தையும் இங்கே நாம் குறிப்பிடுவது பொருத்தமாகும். ‘கூட்டமைப்பின் அரசியலை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், நாங்கள் அந்த அமைப்பை ஏற்றுக்கொள்கிறோம். அதற்கு ஆதரவளிக்கிறோம்’ என்று இவர்களிற் சிலர் கூறுகின்றனர்.


இதற்கான காரணத்தைக் கூறும்போது, ‘புலிகளும் இல்லாத சூழலில், வேறு அரசியற் தலைமைகள் முறையாக இல்லாத போது மக்களுடைய ஆதரவைப் பெற்ற சக்தியாக களத்தில் நிற்பது கூட்டமைப்பு மட்டுமே. ஆகவே அதைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. கூட்டமைப்பையும் விட்டால் வேறு யாரைத் தெரிவு செய்வது?’ என்கிறார்கள்.
ஆகவே, வேறு வழியின்றி, இருக்கின்ற ஒன்றை அல்லது இருக்கின்றவற்றுள் தமக்குப் பிடித்த ஒன்றை இவர்கள் தேர்வு செய்கின்றனர் என்பது தெளிவாகின்றது. அதாவது, அரசுக்கு வெளியே தனி அடையாளத்தைக் கோரும் தெரிவுகளில் இவர்களுடைய புலனுக்குத் தட்டுப்படுவது கூட்டமைப்பே.


இதேவேளை ‘கூட்டமைப்புக்குக் கிடைத்த ஆதரவென்பது புலிகளினால் தெரிவு செய்யப்பட்ட அமைப்பாக அது இருக்கின்றது என்பதாற்தான்’ எனச் சொல்வோர் உள்ளனர். (இதைச் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் நிராகரிக்கின்றனர்).


‘புலிகளுக்குப் பிறகு உருவான ‘தமிழ் அரசியல் வெளி’யை நிரப்புவதற்காகவே கூட்டமைப்பை மக்கள் தெரிவு செய்தனர். ஆனால், அதை அந்த அமைப்பு விளங்கிக் கொள்ளாமலிருப்பதே கவலையளிக்கிறது’ என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர்.


‘இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆசிர்வாதம் கூட்டமைப்புக்கு உண்டு. ஆகவே அதைப் பலமாக வைத்திருப்பதன் மூலமாகவே எதிர்காலத்திற் பெறக்கூடிய அரசியல் ஆதாயங்களைப் பெற முடியும். அதிதீவிரவாதத் தமிழ்ச் சக்திகளையும் விட, அரசோடு இணைந்திருக்கும் தரப்பையும் விட கூட்டமைப்புக்கு இருக்கின்ற முக்கியத்துவம் இதுதான்’ என்று இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள்.


இப்படிப் பல வியாக்கியானங்களும் காரணங்களும் சொல்லப்படுகின்றன.


ஆனால், இலங்கை அரசாங்கம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மக்களுக்கான நலத்திட்டங்களைச் சீராகச் செய்யாதவரை –


போரினால் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களை முழுமையாகச் சீர்ப்படுத்தாதவரையில்-


போர்க்குற்றங்களைக் குறித்த விசாரணைனையைச் செய்யாதவரை –


இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு நேர்மையாக முன்வராத வரையில்-


தமிழ் பேசும் மக்களை வேறுபடுத்திப் பார்க்கும் வரையில் -


அவர்கள் அச்சப்படும் வகையில் அடையாளச் சிதைப்புகள் மேற்கொள்வதைக் கைவிடாத வரையில் -
அந்த மக்களின் மீது அரசியல் - இராணுவ மேலாண்மைகளைச் செலுத்திக் கொண்டிருக்கும் வரையில் -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு குறிப்பிட்டளவு மக்களின் ஆதரவும் அதற்கேற்ற ஊடகங்களின் ஆதரவும் இருந்து கொண்டேயிருக்கும்.


அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை வெளிக்காட்டும் ஒரு ஊடகமாகத்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பெரும்பாலான தமிழர்கள் கருதுகிறார்கள். அப்படியே அதைக் காட்டிக் கொள்கிறார்கள்.


கூட்டமைப்பின் பலவீனங்கள், அரசியல் ரீதியாக அதனுடைய குழப்பங்கள், அது தன்னகத்தில் கொண்டிருக்கின்ற சுயமுரண்கள் எல்லாவற்றையும் சேர்த்தே அவர்கள் அதனை ஆதரிக்கிறார்கள்.


எனினும் முடிந்த வரையில் அதனுடைய குறைபாடுகளை நீக்கி அல்லது அவற்றைக் களைந்து அதை ஒரு செயற்றிறன் மிக்க வலுவான அமைப்பாக்க வேண்டும் என்று அவர்களிற் சிலர் முயற்சிக்கிறார்கள். ஏனெனில் மக்களாக இருப்போருக்கு அவர்களின் முன்னே இருக்கின்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது ஒரு முக்கிய விசயமாகும். ஆகவே அவர்கள் அதைக்குறித்துச் சிந்திக்கிறார்கள்.


ஆனால், எவர் எப்படித்தான்; முயன்றாலும் கூட்டமைப்பானது வரவர மோசமான நிலையில் முரண்பாடுகளாலும் தடுமாற்றங்களாலும் சிதைந்து கொண்டேயிருக்கிறது.


இங்கேதான் நாம் சில விசயங்களைக் குறித்து மேலும் பேச வேண்டியுள்ளது.


இந்தப் பத்தியாளரால் ஏற்கனவே பல சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பின் இத்தகைய பலவீனங்களும் குறைபாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதிலும் தொடக்க காலத்தில். அதிலும் புலிகளின் வீழ்ச்சிக்கு முன்னரேயே. பிறகு தொடர்ச்சியாகவும். இப்போது பலரும் இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.


அப்போதே கூட்டமைப்பின் தடுமாற்றங்களைக் குறித்தும் உள் முரண்பாடுகளைக் குறித்தும் விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் மெல்லிய பகிரங்க நிலையில் பலரிடமும் இருந்தன. ஆனால், ‘புலிகளை மேவித் தனித்துவமாகக் கூட்டமைப்பு எத்தகைய தீர்மானங்களையும் மேற்கொள்ள முடியாது’ என்று கூறப்பட்டதால் கூட்டமைப்பின் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் நேரடியாக அதனைப் பாதிக்கவில்லை. புலிகளின் மீதே அந்தப் பழிகள் வீழ்ந்தன.


‘ஆளுமையற்ற தரப்பாக கூட்டமைப்பு செயற்படுகிறது, சுயாதீனமாக அதனால் ஏன் செயற்பட முடியாது?’ என்று எதிர்த்தரப்பினர் கூட்டமைப்பின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்திருந்தனர் ஒரு தரப்பினர்.
‘புலிகள் வீழ்ச்சியடைந்த பின்னரும் அது அப்படித்தான் உள்ளது. பின்னர் அது இந்தியாவின் நிகழ்ச்சி நிரலைக் கடந்து சிந்திக்க முடியாதிருக்கிறது’ என்றார்கள் பின்னர், சற்று ஏமாற்றத்தோடு.
‘இப்போது கூட்டமைப்பினர் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்குத் தாளம் போடுகிறார்கள்’ என்று குற்றம் சாட்டப்படுகிறது.


கூட்டமைப்பின் மீது தொடக்க காலத்தில் விமர்சனங்களை முன்வைத்தவர்கள் ‘இனப்பிரச்சினையில் மாறுபாடான நிலைப்பாட்டைக்கொண்டவர்கள்’, ‘அரசாங்கத்தின் நிகழ்;ச்சி நிரலுக்குக் கட்டுப்பட்டவர்கள்’ எனச் சந்தேகிக்கப்பட்டனர்.


ஆனால், இப்போது அதனுடைய கட்சியினர், ஆதரவாளர்கள் என்போரே அதனைக் கடுமையாக விமர்சிக்கின்றனர், அதனைக் குற்றம் சாட்டுகின்றனர் என்றால் இவர்கள் எல்லாம் எப்போது அரசின் நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டனர்? அல்லது இவர்களும் கூட்டமைப்பை எதிர்க்கும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனரா?
உண்மையில் அவ்வாறெல்லாம் இல்லை. அப்படியிருந்தாலும் அவர்கள் யாரும் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கான தேவையைக் குறித்துச் சிந்திக்காதவர்களும் அல்ல. எதிர்நிலையாளர்களும் இல்லை.
இங்கே பிரச்சினை கூட்டமைப்பிலேயே – அதனுள்ளேயே உள்ளது.


ஒரு அரசியல் அமைப்பானது ஒரு கொள்கையின் அடிப்படையில், கோட்பாட்டின் அடிப்படையில், அந்தக் கொள்கையையும் கோட்பாட்டையும் அடைவதற்கான வழிமுறைகளைக் கொண்டிருக்கும் வகையில், அதற்கான செயற்றிட்டங்களின் அடிப்படையில், அதற்கான செயலாற்றலின் அடிப்படையில் இருக்க வேண்டும். அரசியல் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும்.


இத்தகைய கொள்கை, கோட்பாடு, செயற்றிட்டம், செயலாற்றல் போன்றன கூட்டமைப்புக்கு உள்ளனவா? என்பதே இங்கே முன்னிறுத்தப்படும் கேள்வியாகும். அவை இருந்திருந்தால் அது பலருடைய விமர்சனங்களுக்கும் உள்ளக முரண்களுக்கும் உட்பட வேண்டியிருக்காது.  


கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்வதில் தொடங்கி, மக்களுக்கான பணிகள் மற்றும் அரசியற் பேச்சுகளில் முன்வைப்பதற்கான தீர்வுத் திட்டத்தைத் தயாரிப்பது வரையில் உள்ள ஏகப்பட்ட விடயங்களில் எந்த ஒன்றுக்கும் அது இதுவரையில் எத்தகைய தீர்மானங்களையும் எடுத்ததில்லை.


எனவேதான் அது மிகப் பலவீனமான ஒரு அமைப்பாக இருக்கின்றது. கூட்டமைப்பின் பலவீனம் என்பது இன்று மிகப் பகிரங்கமானது.


தன்னுடைய மக்களாலேயே பரிகசிக்கப்படும் ஒரு அமைப்பாக அது மாறியுள்ளது. இந்த நிலையில் மிகக் கடினமான எதிர்த்தரப்புடன் போராடி எவ்வாறு அது விடுதலையைப் பெற முடியும்? அல்லது தீர்வினைப் பெற இயலும்? ஒரு கொடி (தேசியக் கொடி) விவகாரத்தையே சரியாகக் கையாள முடியாத நிலையில் அது தடுமாறியது அண்மைய உதாரணம்.


எனவே, இன்று எழுகின்ற கேள்விகளுக்கு அதனுடைய பதில் என்ன? அதனை ஆதரிப்போரின் பதில்கள் என்ன?
எழுந்து நிற்கவே முடியாத ஒரு எருதை வைத்துக்கொண்டு பயணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.
ஆத்தாக் கொடுமைக்காக – பேருக்காக ஒன்று முன்னே நிற்கட்டுமே என்று சொல்வார்களே! அது மாதிரி ஒரு அமைப்பு இருப்பது, பெரும் நெருக்கடிகளின் மத்தியில் இருக்கின்ற சமூகத்துக்கு சரியாகுமா?
ஆனால், இலங்கை அரசுக்கு மட்டுமல்ல சிங்களப் பெருந்தேசியவாதிகளுக்கும் கூட்டமைப்பே தேவையாக இருக்கிறது. இந்த அமைப்பையும் விட ஒரு பலமான அமைப்பு, செயலாற்றல் மிக்க, சிந்தனைத் திறன் மிக்க அமைப்பு ஒன்று வருமிடத்து அதனை எதிர் நோக்குவதில் அரசுக்கும் சிங்கள மேலாதிக்கத்தினருக்கும் சிரமங்கள் ஏற்படும்.


அதையும் விட இதைப் பராமரிப்பது அவர்களுக்கு அதிக நன்மையை அளிக்கக் கூடியது. பலவானைக் கையாள்வது கடினம். பலவீனமானவனைக் கையாள்வது மிகச் சுலபம் என்பது அனைவரும் அறிந்த எளிய உண்மை.


ஆகவே பலவீனமான நிலையில் இருக்கும் கூட்டமைப்புக்கு நீர் ஊற்றுவதிலேயே அரசாங்கம் கவனஞ்செலுத்துகிறது. தெற்கிலே பலவீனமான ஐ.தே.கவை (ரணில் தலைவராக இருக்கும் வரையில் அவரால் ஒரு கோல் போடவே முடியாது என ஐ.தே.கவினரே சொல்வதைப்போல) அரசாங்கம் பேணி வளர்ப்பதைப்போல வடக்கிலே கூட்டமைப்பை அது பேணுகிறது.


கூட்டமைப்பின் பலம் என்பது இதுதான். அரசாங்கம் வழங்குகின்ற பலத்தில் உயிர்வாழ்வது. அதையே தன்னுடைய ஜீவபலமாக்கிக் கொள்வது. அதாவது அரசாங்கமே அதனுடைய பலத்தை எப்போதும் வழங்கிக் கொண்டிருக்கிறது.  அரசாங்கமே அதைத் தக்கவைக்கிறது. இது அரசாங்கத்துக்கு அவசியமான ஒன்று. தீர்வைக் கொடுக்காமல், தீர்வைப் பற்றிப் பேசிக் கொள்வதற்கு ஒரு அமைப்பை வைத்துக் கொள்வது. அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை ஏற்படுத்த முடியாத வகையில் எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஒரு அமைப்பின் இருப்பையே அரசாங்கம் விரும்புகின்றது.


தனக்கு அதிக நெருக்கடிகளைத் தராத, ஒரு அமைப்பைப் பராமரிப்பதன் மூலமாக தன்னுடைய நலன்களை மேலும் மேலும் பெற்றுக்கொள்ளலாம் என்ற தந்திரோபயத்தில் அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது.
இந்த இடத்தில்தான் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு உண்மை உண்டு. உண்மையில் அரசாங்கத்துக்குப் பிடிக்காத – அதற்கு நெருக்கடியைக் கொடுக்கும் தரப்புகளாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் றிஸாத் பதியுதீனும் உள்ளனர்.


இந்தத் தரப்புகள் வெளிப்படையாக அரசாங்கத்துடன் இணைந்து நிற்கின்றன. அப்படி இணைந்து நின்று கொண்டே அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து சில காரியங்களைச் செய்விக்கின்றன. (சம்மந்தன் பிடிப்பதும் சிங்கக்கொடி. டக்ளஸ் தேவானந்தா பிடிப்பதும் சிங்கக் கொடி. ஆனால், ஒருவர் அரசாங்கத்துக்கு வெளியே நின்று பிடிக்கிறார். மற்றவர் அரசாங்கத்துடன் நின்று பிடிக்கிறார் என்று ஒரு ஆய்வாளர் எழுதியிருந்தமை கவனத்திற்குரிய ஒன்று). இந்தத் தரப்புகள் நெருக்கமாக இருப்பதன் காரணத்தினால் இவை முன்வைக்கும் கோரிக்கைகளைப் புறந்தள்ள முடியாத நிலை, அரசாங்கத்துக்கு ஒரு தவிர்க்க முடியாத நெருக்கடியாகும். இந்தத் தரப்புகளின் கோரிக்கைகளை முழுமையாகச் செய்யாது விட்டாலும் குறிப்பிடத்தக்க அளவில் அது செய்தே ஆக வேண்டும் என்பது நிர்ப்பந்தம்.


இல்லையெனில் அதுவே அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை உருவாக்கும். – ‘உன்னுடன் நிற்கும் தரப்பினரின் சிறிய கோரிக்கையைக் கூட நீ நிறைவேற்றவில்லையே ‘என்று வெளியுலகத்தின் கேள்விகள் இந்தச் சந்தர்ப்பத்தில் எழும். எனவே அந்த நெருக்கடியைத் தணித்துக் கொள்வதற்காக அது விருப்பமில்லாது விட்டாலும் அவற்றைச் செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆகவே, உண்மையில் அரசாங்கத்தின் போக்கின்படி இது அதற்கு தவிர்க்க முடியாத ஒரு நெருக்கடியே.


இந்த நெருக்கடிகளை எதிர்காலத்திற் தவிர்ப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. எனவேதான் அது வடக்குக் கிழக்கில் தனியான ஏற்பாட்டை மேற்கொண்டு – சிறிலங்கா சுதந்திரக்கட்சியைப் பலப்படுத்தி வருகிறது.
இதன்மூலம் தான் மட்டும் தனியே பலமாவது, அல்லது பலவீனமான கூட்டமைப்புக்கு அடுத்தபடியாக சுதந்திரக் கட்சியே அடுத்த இடங்களைப் பெறுவது என்ற அணுகுமுறையைப் பலப்படுத்துவது. அரசுக்குச் சார்பான தரப்புகளின் தேவையைத் தவிர்த்து விட முயற்சிப்பது இந்த அடிப்படையிற்தான்.


ஆகவே, இதிலும் தமிழ் பேசும் மக்கள் மேலும் தோற்கடிக்கப்படும் பொறிகளே அதிகம் தென்படுகின்றன.
எனவே நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை மிக எளிதாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
இதை விளங்கிக் கொண்டால் அதிக குழப்பங்கள் பலருக்கும் ஏற்படாது, அதற்குப் பிறகு பதற்றங்கள் ஏற்படவும் அதற்காக மருத்துவமனைகளை (அரசியல் மருத்துவ மனைகளை) நாடவும் வேண்டியிராது.


எனவே, இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தற்போதைக்கு இல்லை என்பது தெளிவாகிறது. இதை நாம் அறுதியிட்டுக் கூறலாம். அப்படியான ஒரு தீர்வு கிட்டுவதாக இருந்தால், அது அதிசயத்திலும் அதிசயமான ஒரு நிழ்ச்சியாகவே அமையும். அது வெளிச்சக்திகளின் நலன் மற்றும் தேவைகளைப் பொறுத்தது.


00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB