கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

சுற்றி வளைப்புக்குள் சிக்குண்ட தரப்பு

Thursday 24 May 2012



பேச்சுவார்த்தையில் அரசாங்கம் தீர்வை முன்வைக்காததால் கூட்டமைப்புத் தப்பிப் பிழைத்தது. தீர்வை அரசாங்கம் முன்வைத்திருந்தால் அதை ஆதரிப்பதா இல்லையா என்ற விவாதத்தில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பிருந்திருக்கும். இது கூட்டமைப்பினுள் சிலவேளை முரண்களை உருவாக்கயிருக்கும். ஆனால், துரதிருஸ்ரவசமாக அரசாங்கமும் தீர்வெதையும் முன்வைக்கவில்லை. அப்படி அது தீர்வை முன்வைத்திருந்தால் சிலவேளை அதுவே கூட்டமைப்புக்குப் பெரும் நெருக்கடியாகவும் பிரச்சினையாகவும் இருந்திருக்கும்.





பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செல்லுமா? என்பது இன்று பரவலாக எழுப்பப்படுகின்ற ஒரு கேள்வியாகும். தெரிவுக்குழுவுக்குக் கூட்டமைப்புச் செல்வதில் லாபங்கள் என்ன? அதன்மூலம் எதையெல்லாம் சாதிக்க முடியும்? தெரிவுக்குழுவின் மூலம் தீர்வை எட்டுவதற்கு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் விசுவாசமாகச் செயற்படுமா என்ற கேள்விகளும் துணையாக எழுப்பப்படுகின்றன.

இதற்கான பதில்களைக் காண்பதற்கு முன்னர், இனப்பிரச்சினைக்கு எத்தகைய தீர்வு சாத்தியம் என்பது தொடர்பாக தமிழர்களோ அல்லது இலங்கையிலுள்ள மக்களோ அல்லது அரசாங்கமோ இதுவரையில் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

பொதுவாகப் பல முன்மொழிவுகள் மொழியப்பட்டுள்ளனவே தவிர, இதுதான் பொருத்தமான தீர்வு அல்லது இதுதான் பொருத்தமான நடைமுறை என்று எத்தகைய முன்வைப்பையும் யாரும் வைக்கவில்லை.

13 பிளஸ் என்ற கருத்திட்டம் ஒன்று இப்போது பிரஸ்தாபிக்கப்படுகிறது. இதுவே அதிகமாகப் பிரஸ்தாபிக்கவும் படுகிறது. ஆனால், இதை ஏற்க முடியாது என்று தமிழர்களில் ஒரு தரப்பினர் கடுமையாக வாதிட்டு வருகின்றனர்.

நாடு கடந்த தமிழீழக் கோட்பாட்டுடன் ஒரு தரப்புச் செயற்பட்டு வருகிறது. உள்ளக சுயாட்சி என்ற கருத்தை ஒரு தரப்பு வலியுறுத்துகிறது. சுயாட்சியை வலியுறுத்தும் சமஸ்டியே அவசியம் என இன்னொரு தரப்பு சொல்கிறது. கிடைப்பதைப் பெற்றுக் கொள்வோம் முதலில். பின்னர் கட்டம் கட்டமாக முன்னேறலாம் என்கின்றது இன்னொரு தரப்பு.

இவையெல்லாமே இதுவரையிலும் சாத்தியமற்ற முறையில் இருப்பதையும் இதில் எவையும் நடைமுறைக்கு வராமலிருப்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

ஆனாலும் அரசியல் அரங்கில் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. அதேவேளை இந்தத் தெரிவுகளை ஒவ்வொரு தரப்பும் தமது நிலைப்பாடாக அறிவித்து அதில் ஓரளவுக்கு நம்பிக்கை கொண்டும் உள்ளன.

ஆனால், தற்போது இதில் எத்தகைய நிலைப்பாட்டைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. ஏனெனில் அந்த அமைப்பினுள் பலவகையான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் உள்ளனர்.

இதனால், இதுவரையில் பகிரங்கமாகவோ அல்லது ரகசியமாகவோ கூட்டமைப்பினால் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாமலிருக்கிறது.

கடந்த தடவை பேச்சுகளுக்குச் சென்ற போது தீர்வுத் திட்டத்துடன் சென்றிருக்க வேண்டும் என்று கூட்டமைப்பை நோக்கிக் குற்றச்சாட்டை  முன்வைத்தவர்கள் உண்டு. அவர்கள் அப்படிக் கூடியதில் தவறும் இல்லை. ஆனால், கூட்டமைப்பினால் எத்தகைய தீர்வை முன்வைக்க முடியும்? அதனால், அப்படி இலகுவாக ஒரு தீர்வுக்குச் செல்ல முடியுமா? என்ற கேள்விகள் உள்ளனவே.

ஏனெனில் நாம் முன்னரே சொன்னதைப்போல அது பலவிதமான கருத்தோட்டமுள்ளவர்களைக் கொண்ட ஒரு கூடாரம். எனவே, அதில் ஏகமனதாக ஒரு தீர்மானத்துக்கு வர முடியாதிருக்கிறது.

ஆகவேதான் அது ஒரு தீர்மானத்துக்குச் செல்ல முடியாமல் தவிர்த்தது. அதேவேளை அரசாங்கம் ஒரு தீர்வை முன்வைத்தால் அதிலிருந்து தெரிவைச் செய்யலாம் என்று கருதியிருந்தது,

ஆனால், துரதிருஸ்ரவசமாக அரசாங்கமும் தீர்வெதையும் முன்வைக்கவில்லை. அப்படி அது தீர்வை முன்வைத்திருந்தால் சிலவேளை அதுவே கூட்டமைப்புக்குப் பெரும் நெருக்கடியாகவும் பிரச்சினையாகவும் இருந்திருக்கும்.

ஏனெனில் அப்படியொரு தீர்வை அரசாங்கம் முன்வைத்திருந்தால் அதை ஆதரிப்பதா இல்லையா என்ற விவாதத்தில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பிருந்திருக்கும். இது கூட்டமைப்பினுள் சிலவேளை முரண்களை உருவாக்கயிருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆகவே அந்தப் பேச்சுவார்த்தையில் அரசாங்கம் தீர்வை முன்வைக்காததால் கூட்டமைப்புத் தப்பிப் பிழைத்தது என்று நாம் கருதலாம்.

அடுத்தது இப்போது தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துக் கொண்டிருக்;கிறது. தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்புச் செல்ல வேண்டும் என்ற தொனியோடான அறிவிப்புகளை அமெரிக்கா, இந்தியா போன்ற  நாடுகளும் சொல்லி வருகின்றன.

கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு நாடுகளின் சொல்லைத் தட்டிவிட்டுத் தனியாகச் சுயாதீனமாக ஒரு தீர்வை அதனால் எடுக்கவும் முடியாது.

நிபந்தனையுடன் கூடிய அறிவிப்பைச் செய்து கொண்டு தெரிவுக்குழுவுக்குக் கூட்டமைப்புச் செல்லும்  என கூட்டமைப்பின் வலுமிக்க சமிக்ஞையாளர் சுமந்திரன் சொல்லியிருக்கிறார்.

ஆனால், அப்படிச் செல்லும்போது எத்தகைய தீர்மானத்தைக் கூட்டமைப்புக் கொண்டு செல்லும் என்றோ எத்தகைய தீர்வை அது ஏற்கும் என்றோ அவர் சொல்லவில்லை.

ஆப்படிச் சொன்னால் அது கூட்டமைப்பிற்கு உள்ளும் நெருக்கடிகளைக் கொடுக்கும் வெளியேயும் நெருக்கடிகளைக் கொடுக்கும். பொதுவாகக் கூட்டமைப்பு ஒரு தீர்வை முன்மொழிந்தால் அதை அந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பவர்களும் விவாதிப்பவர்களும் உள்ளனர். ஆதைப்போல கட்சிக்கு வெளியே உள்ள தமிழ் அமைப்புகளும் புலம்பெயர் தமிழர்களும் கூட விவாதிப்பார்கள், விமர்சிப்பார்கள், சில வேளை எதிர்ப்பு நடவடிக்கையிற் கூட இறங்குவார்கள்.

அதேவேளை, கூட்டமைப்பின் தீர்மானத்தை ஏற்கவேண்டாம் என்று சிங்களத்தரப்பிலும் தீவிர நிலையைக் கொண்ட சக்திகள் சொல்லக்கூடும்.

எனவே தீர்வொன்றைக் கொண்டு செல்ல முடியாத அவலமும் கூட்டமைப்புக்கு உண்டு. அதேவேளை தீர்வெதையும் எடுத்துச் செல்லாமல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் அதை அரசாங்கம் தனக்கான வாய்பபாகக் கருதிக் கொண்டு மேலும் காலத்தை இழுத்தடிக்கவும் வாய்ப்புண்டு.

அப்படித் தீர்வொன்றைக் கொண்டு செல்வதாக இருந்தால் அதனால் எத்தகைய தீர்வை எடுத்துச் செல்ல முடியும்?

இன்றைய உலக யதார்த்தத்தின் படியும் இலங்கையின் கள நிலைவரப்படியும் தனி ஈழத்திற்கான கோரிக்கை பொருத்தமற்றது என்று சிலர் வாதிடுகின்றனர். இதை விளங்கிக் கொள்ள முடியாமையினால் தான் நாம் அளவுக்கதிகமான இழப்புகளைச் சந்திக்க வேண்டிவந்தது. அதேவேளை போராட்டத்திலும் வெற்றிபெறமுடியாமற் போனது என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

ஆகவே, சர்வதேச சமூகம் எதிர்க்காத – அது நிராகரிக்க முடியாத ஒரு தீர்வை கூட்டமைப்பு முன்மொழிய வேண்டும். ஆனால், அப்படியான ஒரு தீர்வை கூட்டமைப்பு முன்மொழிந்தால் அதைத் தமிழ்த் தீவிர நிலையாளர்கள் எதிர்ப்பர்.

எனவே எத்தகைய முடிவையும் எடுக்க முடியாத ஒரு நெருக்கடிச் சூழலுக்குள் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் சிக்கியிருக்கிறது.

இதற்;கு அவசியமானது என்னவெனில், ஆளுமை மிக்க உறுத்திப்பாடே.

ஆனால், அத்தகைய ஆளுமை மிக்க தலைமைத்துவம் கூட்டமைப்பில் இருவருக்கே தற்போதுண்டு. இந்த இருவரும் ஓரளவுக்குச் சர்வதேச சமூகத்தின் உணர்வோட்டங்களைப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள்.  ஆனால், தமிழ்த் தீவிர நிலையாளர்களினால் இவர்கள் சந்தேகிக்கவும் கண்டிக்கவும் படுகிறவர்கள்.

ஒருவர் கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்மந்தன். மற்றவர் சம்மந்தனின் ஆசீர்வாதத்தைப் பெற்ற திரு. சுமந்திரன்.

இவர்கள் இருவருமே அரசியல் அணுகுமுறைகளைக் குறித்துச் சிந்திப்பவர்கள். எனவே இவர்கள் எத்தகைய தீர்வைப் பற்றிச் சிந்திக்கிறார்கள் என்பதைப்பொறுத்தே அடுத்த கட்ட நிகழ்ச்சிகள் அமையவுள்ளன. இவர்கள் இருவருக்குமே முஸ்லிம் காங்கிரசுடன் ஒரு இடைநிலைப்பட்ட புரிந்துணர்வும் உறவும் உள்ளது.

இவர்கள்தான் தெரிவுக்குழுவில் பங்கேற்பதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பவர்களும் கூட.

தெரிவுக்குழுவில் பங்கேற்பதால் என்ன லாபங்கள் தமிழர்களுக்குக் கிடைக்கும் என்பதற்கு முன்னர், அதில் பங்கேற்பதாக இருந்தலென்ன பங்கேற்காது விட்டாலென்ன, இனப்பிரச்சினைக்கான தீர்வு எத்;தகையதாக அமையும் என யாருக்காவது தெரிந்தால் அதுவே போதும்.

ஏனென்றால் அதிலிருந்;தே எத்தகைய நடைமுறைகளை அதற்காகக் கைக்கொள்ள முடியும் என்று சிந்திக்கலாம்.

ஆதற்கெல்லாம் முன்னர் முஸ்லிம்கள் என்ன நினைக்கிறார்கள்? ஆவர்கள் எதற்கெல்லாம் தயாராக இருக்கிறார்கள் என்றும் நாம்  சிந்திக்க வேணும்.

தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதில் லாபமா நட்டமா என்பதற்கு அப்பால், இவற்றைக் குறித்துச் சிந்திப்பது அவசியம். அதற்குப் பிறகே அடுத்த காரியம்.



00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB