கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

கிழக்கில் தேர்தல் முடியவில்லை - ஹக்கீமின் தீர்ப்பு எப்படி?

Sunday 16 September 2012





















கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் முடிவுகளை அடுத்து, புதிர் நிறைந்த முடிச்சொன்றை வைத்துக்கொண்டிருக்கிறார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம். இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் 2012. 09.14 காலைவரையில் இந்த முடிச்சை ஹக்கீம் அவிழ்க்கவில்லை. ஹக்கீம் அவிழ்க்கவுள்ள முடிச்சில்தான் மாகாணசபையின் கதையும் விதியும் உள்ளது. ஆகவேதான் அதற்கு இந்தப் புதிர்த்தன்மை அதிகம். கவர்ச்சியும் அதிகம்.

நடந்த தேர்தலில் மூன்றாம் நிலையில் இருக்கும் கட்சி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ். அந்தக் கட்சியில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆக ஏழு மட்டுமே.

ஆனால், கிழக்கு மாகாணசபையின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடிய நிலையில் மு.காவும் ஹக்கீமும் பெற்றிருப்பதே இங்கே கவனத்தை ஈர்ப்பது. இதற்குக் காரணம், அந்தக் கட்சி தேர்தலுக்கு முன்னர் எடுத்த தீர்மானந்தான்.  மிகக் கடினமான ஒரு நிலையில் அந்தத் தீர்மானத்தை மு.கா எடுத்தது.
அரசாங்கத்துடன் சேர்ந்திருந்து கொண்டே அரசாங்கத்தரப்பின் கூட்டிற்குள் அடங்காமல், விலகித் தேர்தலில் தனித்து நின்றமை இதில் முக்கியமான ஒன்று. இது ஒரு புத்திபூர்வமான, துணிச்சமல் மிக்க முடிவு. ஆனால், நெருக்கடிகள் நிறைந்தது.

இதற்காக ஒரு கட்டத்தில் அந்தக் கட்சியின் முக்கிய நிலையில் இருக்கும் பஷீர் சேகுதாவூத், தன்னுடைய பிரதி அமைச்சர் பதவியையே துறந்தார்.
அதேவேளை மறுபக்கத்தில் ஹக்கீமையும் மு.காவையும் வளைத்துப் போடுவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் சம்மந்தனும் கடுமையாக முயற்சித்தனர். தமிழ்பேசும மக்கள் என்ற அடிப்படையிலும் சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் என்ற வகையிலும் ஒரு கூட்டிணைவு தேவை என்ற வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மு.காவுக்கு அழைப்பு விடுத்தது.

இதிலும் மு.காவும் ஹக்கீமும் சிக்கக்கொள்ளவில்லை.
அதாவது தேர்தற்காலத்தில் வழமையாக ஏற்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பவாதக் ‘கூட்டு’ என்ற பொதுவிதியை அது கடந்தது.

இதற்கான வெகுமதியாக இன்று மு.காவுக்கு ஒரு வலுவான ஸ்தானம் கிடைத்துள்ளது@ ஒரு சிறந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது.
அரசாங்கத்துடன், இணைந்து தேர்தலில் மு.கா நின்றிருந்தால், அரசின் தீர்மான வளையத்துக்குட்பட்டே இருந்திருக்க வேண்டும். அதாவது அரசாங்கம் தீர்மானிக்கும் எல்லைப் பரப்புக்குள்ளும் அதனுடைய நிபந்தனைகளுக்குட்பட்டும் நின்றிருக்க வேண்டும்.
அப்படி நின்றிருந்தால், இன்றிருக்கும் வலுநிலை மு.காவுக்குக் கிடைத்திருக்காது.

அதைப்போலவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் நின்றிருந்தாலும் அதற்கு இத்தகைய ஒரு நிலை வாய்த்திருக்காது. கூட்டமைப்புடன் ஆட்சியைப் பகிர்ந்து கொண்டிருக்க முடியுமே தவிர, அதற்கப்பால் வலுவைப் பிரயோகிக்கும் ஒரு நிலை ஏற்பட்டிருக்காது.

இந்த இடத்தில்தான் மு.கா பலருடைய கவனிப்பையும் பெற்றிருக்கிறது.
அரசியலில் உபாயங்களும் தந்திரோபாயங்களும் முக்கியமானவை. பலவீனமான நிலையிலும் பலத்தைக் கொடுப்பதிலும் நெருக்கடிச் சந்தர்ப்பங்களில் நெருக்கடி வளையத்தைத் தகர்ப்பதிலும் உபாயங்களுக்கும் தந்திரோபாயங்களுக்கும் முக்கிய பங்குண்டு.
மு. கா தெரிந்தோ தெரியாமலோ நல்லதொரு உபாயத்தைக் கையாண்டுள்ளது.

ஒரு சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற கட்சியும் அதனுடைய தலைமையும் எடுக்கின்ற தீர்மானத்தைப் பொறுத்தே அந்தச் சமூகத்தினுடைய பாதுகாப்பும் எதிர்கால முன்னேற்றமும் அமையும்.

மு.கா எடுத்த முதற்கட்டத் தீர்மானம் அதற்கு ஒரு கட்ட வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால், இந்த வெற்றி இன்னும் முழுமைப்படுத்தப்படவில்லை. இதற்கு அந்தக் கட்சியும் அதனுடைய தலைமையும் இன்னும் போராட வேண்டியுள்ளது. இன்னும் நிதானமாகவும் புத்திபூர்வமாகவும் இயங்க வேண்டியுள்ளது. இதுதான் இன்று மு.காவுக்கும் அதனுடைய தலைமைக்கும் உள்ள பெருஞ்சவால்.

அப்படிப் பார்த்தால், இன்னொரு நெருக்கடிச் சூழலுக்குள்தான்  மு.காவும் அதனுடைய தலைமையும் உள்ளது எனலாம்.

இந்த நிலையில் இந்தச் சவாலை எதிர்கொள்ளவும் இந்த நெருக்கடியை முறியடிப்பதற்காகவும் மு.கா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
எனவே, அடுத்ததாக ஹக்கீம் என்ன சொல்லப்போகிறார், எந்தப் பக்கும் திரும்புவார், யாருக்குப் பச்கைக் கொடியைக் காட்டுவார் என யாருக்குமே ஒன்றும் தெரியவில்லை. ஏன் அவருக்கே அதைப்பற்றி இன்னும் தெரியாதிருக்கலாம். ஏனெனில் அந்த அளவுக்குக் கட்சிக்குள்ளே குழப்பங்களும் அபிப்பிராய பேதங்களும் விவாதங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

எனவே இந்த இடைநிலையில் ஊகங்கள் பலவிதமாகக் கிளம்பித் தாராளமாக  அலைகின்றன.

அரசாங்கம் சொல்கிறது, தனக்கே மு.காவின் ஆதரவு கிடைக்கும் என்று.
சம்மந்தனும் அவருடைய சகாக்களும் சொல்கிறார்கள், தமிழ்பேசும் மக்களின் உணர்வுகளை மு.கா புறக்கணிக்காது எனத் தாம் நம்புவதாக.

மு.கா அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்து கொள்ளக்கூடிய சாத்தியங்களே அதிகமாக உள்ளதாக சில ஆய்வாளர்கள் ஆருடம் சொல்கின்றனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பக்கம் மு.கா வரவேண்டும் எனச் சில இணையத்தளங்கள் கருத்துக் கணிப்புச் செய்துள்ளன.

ஆனால், மு.கா எல்லாவற்றுக்கும் பதிலாக இன்னும் கதவைத்திறக்காமல், சத்தத்தை எழுப்பாமல், வெளியே பூட்டை மட்டும் தொங்க விட்டுள்ளது.
இதனால், (ஹக்கீமின் பதில் வரும்வரையில்) பதற்றத்தோடிருக்கிறது அரசாங்கம்.

அதே பதற்றத்தோடிருக்கிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.
மேலும் மு.காவுக்கு வாக்களித்த மக்கள்.

மேலும் அதனுடைய ஆதரவாளர்கள்.

மேலும் ஊடகங்கள்.

மேலும் அரசியல் அவதானிகள்.

எல்லாவற்றுக்கும் அப்பாலான உச்ச பதற்றத்திலிருக்கின்றன அமெரிக்காவும் இந்தியாவும்.

இப்படி எல்லோரையும் எல்லாத்தரப்பையும் பதற்றத்துக்குள் வைத்திருப்பவர் நிச்சயமாக ஒரு ‘கிங் மேக்கரா’கவே இருக்க முடியும்.

ஆம், ஹக்கீம் இன்று கிழக்கில், இலங்கையின் அரசியலில் ஒரு ‘கிங் மேக்கராகவே’ மாறியிருக்கிறார்.

எனவே இந்தக் ‘கிங் மேக்கர்’ என்ன சொல்லப்போகிறார்? என்ன செய்யப்போகிறார்? யாரை அணைத்துக் கொள்ளப்போகிறார்? என்ற கேள்விகள் புதிராகவே உள்ளன.

ஆகவே ஒரு வகையில் இந்த மாதிரியான நிலை என்பது வெளித்தோற்றத்துக்கு பெரும் வாய்ப்பாகத் தெரிந்தாலும் உள்ளே நெருக்கடிகளும் சிக்கல்களும் நிறைந்த ஒன்றாகவே இருப்பதுண்டு.
வரலாற்றில் எல்லோருக்கும் வாய்ப்புகள் கிட்டுவதுண்டு. சில வாய்ப்புகள் அபூர்வமானவை. எதிர்பார்த்திராதவை. எதிர்பார்த்திராத அளவுக்கானவை.

இப்பொழுது மு.காவுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பும் அத்தகைய ஒன்றே.
மு.கா தனியாக அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருந்தாற்கூட இத்தகைய ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்காது. அது தனியே அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுத் தனியாக ஆட்சியமைத்திருந்தாலும் அதிகாரப் பகிர்விலும் வள ஒதுக்கீடுகளிலும் பிற விசயங்களிலும் அரசாங்கத்துடன் இழுபறிப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்த மாதிரிப் பேரம் பேசும் நிலையொன்றினூடாக ஆட்சியில் பங்குபற்றும்போது அதனுடைய மதிப்பும் லாபங்களும் அதிகம். இது பின்னர் இலகுவான வழிமுறை ஒன்றும் கூட. இந்த ஆட்சிப் பகிர்வென்பது இரண்டு தரப்பையும் மனதிற்கொண்டே அணுகப்படுகிறது.

இதேவேளை, இன்னும் மு.காவின் முடிவுகள் வெளிவராத நிலையில் முன்னனுமானங்களை இங்கே நாம் அடுக்கிக் கொண்டிருக்க முடியாது. அது பொருத்தமானதும் அல்ல.

முஸ்லிம் காங்கிரஸ் அடைந்திருக்கும் முதற்கட்ட வெற்றியை அல்லது பாதி வெற்றியை முழுவெற்றியாக மாற்ற வேண்டுமானால், அது அடுத்ததாக எடுக்கவுள்ள தீர்மானமும் அதைச் செயற்படுத்துவதற்கு அது கையாளப்போகும் தந்திரோபாயங்களும் உறுதிப்பாடும் முக்கியமானவை.
இல்லையெனில் கைக்கெட்டியது வாய்க்குக் கிடைக்கவில்லை என்ற கதையாகிவிடும்.

இங்கேதான் நாம் இந்தப் பிரச்சினையைப் பற்றி ஆராயவேண்டியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் முதலில் தன்னுடைய தரப்பு மக்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. அப்படிச் சிந்திக்கும்போதே கட்சியின் நலனும் அதனுடைய எதிர்காலமும் ஒரு எல்லைவரையில் பேணப்படும். இதைக்குறித்த விவாதங்கள் கட்சிக்குள் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன என அறிய முடிகிறது.

இதேவேளை கட்சியின் நலனும் எதிர்காலமும் தனியே முஸ்லிம் மக்களுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு நிற்பதில்லை. அது அவர்களையும் உள்ளடக்கிக்கொண்டு, அரசியலுடன் தொடர்புடைய ஏனைய தரப்புகளையும் சேர்த்து இயங்குவது.

அப்படிப் பிற தரப்புகளையும் சேர்த்துக்கொண்டு இயங்கும்போதே கட்சியின் நலனும் அதனுடைய எதிர்காலமும் உறுதிப்படுத்தப்படும். இது அந்தக் கட்சி பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களையும் அது இயங்குகின்ற அரசியற் தளத்தையும் முன்னேற்றும்@ பாதுகாக்கும்.

எனவே முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள், அவர்களுடைய பிரச்சினைகள் என்பவற்றுடன் கிழக்கில் உள்ள ஏனைய சமூகத்தினரைப் பற்றியும் மு.கா சிந்திக்க வேண்டியுள்ளது.

அத்துடன், இலங்கையில் ஆட்சியை நடத்தும் தரப்பையும் கவனத்திற் கொள்ள வேண்டியிருக்கிறது.

சிறுபான்மைத் தரப்பினர் என்ற அடிப்படையில் சவால்களையும் நெருக்கடிகயைம் சந்திக்கும் தமிழ்த்தரப்பைப் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.

மேலும் இலங்கை அரசியல் மற்றும் சமூக நிலைமைகளில் நேரடி மற்றும் மறைமுகத் தலையீடுகளையும் உள்நுழைவுகளையும் மேற்கொள்ளும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் நிபந்தனைகளைப் பற்றியும் மு.கா கவனிக்க வேண்டியிருக்கிறது.

எனவே இத்தகைய பல தரப்பின் எதிர்பார்க்கைகள், நிபந்தனைகள், இழுபறிகளின் மத்தியிலேயே தன்னுடைய கப்பலைப் பாதுகாப்பாக ஒரு துறைமுகத்தில் நிறுத்த வேண்டிய பொறுப்பில் மு.கா வின் தலைவர் ஹக்கீம் உள்ளார்.

ஒரு காலத்தில் கப்பற்துறை அமைச்சை வழிப்படுத்தியது மு.கா. பல கப்பல்கள் நங்கூரமிடுவதற்கும் அவை துறைமுகத்தைச் சேர்வதற்கும் அன்றைய மு.கா தலைவர் வழிப்படுத்தியாக இருந்தார்.
இப்போது நீதி அமைச்சுப் பொறுப்பில் இருந்து நீதித்துறையின் பொறுப்பை வழிப்படுத்துகிறார் ஹக்கீம்.

ஹக்கீமின் தராசு, அவருடைய தீர்ப்பு, அவருடைய நியாயம், அவருடைய வழிகாட்டல், அவருடைய தீர்மானம் எப்படி இருக்கப்போகிறது?

அது கிழக்கில் மேலும் கொந்தளிப்புகளை ஏற்படுத்துமா? அல்லது புதிய சகாப்தத்தை உருவாக்குமா? அல்லது கிடைத்த வாய்ப்பையே ஹக்கீம் கை நழுவ விடுவாரா?

அவருடைய மனம் எங்கே திருப்பப்போகிறது? எங்கே நங்கூரமிடப்போகிறது?
00

0 comments:

Post a Comment

 

2009 ·. by TNB