எத்தகைய வரலாற்றுத் தவறும் மக்களையே மிகப் பாதிக்கும். சில தவறுகளின் பாதிப்பு இலேசானது. சில தவறுகளின் பாதிப்பு மோசமானது. இலங்கையின் இனப்பிரச்சினை ஒரு பெரிய தவறு. அதன் தொடர்ச்சியான போர் அதைவிடப் பெரிய தவறு. போரின்போது நடந்த போர்க்குற்றங்கள் ஆகப்பெரிய தவறு. போர்க்குற்றங்கள் நடப்பதற்கு அனுமதித்தது எல்லாவற்றையும் விடப் பெரிய தவறு. எல்லாத்தவறுகளையும் தலையில் ஏற்றனர் மக்கள்.
இப்பொழுது இந்தத் தவறுகளைப் பற்றிய விளக்கங்களும் வியாக்கியானங்களும் தாராளமாக நடக்கின்றன. ஐ.நா செயலாளர் கூட நடந்த தவறுகளைப் பற்றி விளக்கம் அளித்திருக்கிறார். போதாக்குறைக்கு மன்னிப்புவரை கேட்டிருக்கிறார். ‘என்னமாதிரியான ஒரு காலம்’ எங்களுக்கு வாய்த்திருக்கிறது!
ஆனால், இந்தத் தவறுகள் எல்லாம் பல ஆயிரக்கணக்கானோரின் வாழ்வையும் உயிரையும் அல்லவா அழித்திருக்கின்றன! ஒரு நீண்ட காலத்தை இரத்தத்தில் அல்லவா தோய்த்து எடுத்துள்ளன!! பல்லாயிரக்கணக்கானோரை நடுத்தெருவில் அல்லவா கைவிட்டுள்ளன!!!
அப்படியென்றால் இவற்றுக்கான பதில் என்ன? தீர்வு என்ன? நிவாரணம் என்ன?
வெறும் வார்த்தைகளுக்குள்ளும் வெள்ளை அறிக்கைகளுக்குள்ளும் எத்தகைய நன்மைகளும் உருவாகுவதில்லை.
மேலே சொல்லப்பட்ட தவறுகள் எல்லாம் உண்மையில் சாதாரண தவறுகளே அல்ல. அவை குற்றங்கள். பெருங்குற்றங்கள். தொடர்ச்சியான குற்றங்கள். ஒன்றிலிருந்து ஒன்றாகப் பலவாக உற்பத்தியாகிய குற்றங்கள். திட்டமிட்டு நடத்தப்பட்ட குற்றங்கள். அந்தந்தத்தரப்பின் தேவைகளின் நிமித்தமாக நடத்தப்பட்ட குற்றங்கள்.
ஒரு குற்றம் பல குற்றங்களை உருவாக்கும் என்று நன்றாகத் தெரிந்தும் அந்தக் குற்றம் தொடர்ந்தும் நடைபெற அனுமதித்த குற்றம். மாபெருங்குற்றம்.
இதில் இலங்கை அரசுக்கும் பொறுப்புண்டு. எதிர்த்தரப்பில் இருந்த தமிழ்ச்சக்திகளுக்கும் பொறுப்புண்டு. பிராந்திய சக்தியாக இருந்து இலங்கைப் பிரச்சினையை வளர்த்துக்கொண்டிருக்கும் இந்தியாவுக்கும் பொறுப்புண்டு. சர்வதேச சமூகம் என்றபெயரோடு இயங்கும் வல்லரசு நாடுகள் அத்தனைக்கும் பொறுப்புண்டு. இந்தச் சர்வதேச சமூகத்துக்குத் தொண்டு செய்து கொண்டிருக்கும் ஐ.நாவுக்கும் பொறுப்புண்டு. ஐ.நாவின் அனுசரணையோடும் ஆதரவோடும் இயங்குகின்ற பிற பொது அமைப்புகளுக்கும் மனித உரிமை அமைப்புகளுக்கும் பொறுப்புண்டு. இந்த விவகாரத்தில் ஏட்டிக்குப் போட்டியான கருத்துலகத்தைக் கட்டியெழுப்பிய ஊடகங்களுக்கும் பொறுப்புண்டு.
ஆனால், யாரும் இந்தப் பொறுப்பை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை.
எனவே நடந்தவை அத்தனையும் மறுக்க முடியாத, மறைக்க முடியாத குற்றங்கள். தொடர்ந்து நடந்து கொண்டிருப்பவையும் அத்தகைய பகிரங்கக் குற்றங்களே. அதிலும் பெருங்குற்றங்கள். தொடர் குற்றங்கள்.
அப்படியானால், குற்றங்களை இழைத்தோருக்கான தண்டனை என்ன?
இதுதான் இன்றைய நம் கேள்வி. இந்தக் கேள்வி அறிவுலகத்திலுள்ள அனைவரும் எழுப்ப வேண்டிய கேள்வி. சனங்களைக் குறித்து சிந்திப்போர் சகலரும் எழுப்ப வேண்டிய கேள்வி. மனித உரிமைவாதிகள் அத்தனை பேரும் கேட்க வேண்டிய கேள்வி. பாதிக்கப்பட்ட சனங்கள் எழுப்பவேண்டிய கேள்வி.
மிகச் சாதாரணமாக, ஒற்றைவரியில் மன்னிப்பு என்று சொல்லிவிட்டுக் கடந்து போகக்கூடிய குற்றங்களை இவர்கள் யாரும் செய்யவில்லை. கூட்டாகச் சேர்ந்து இழைக்கப்பட்ட கூட்டுக் குற்றங்களே இவை.
எனவே இதை எதிர்ப்பதற்கும் இதைக் கண்டிப்பதற்கும் ஒரு கூட்டு நடவடிக்கையே இன்று தேவை. இது உலகளாவிய அளவில், அந்த ரீதியில் ஏற்பட வேண்டும்.
ஏனெனில் குற்றவாளிகளாக இருப்போர் இன்னும் உயர் பீடங்களிலேயே உள்ளனர். வலுவான நிலையிலேயே உள்ளனர். அதிகாரத்தோடும் வளங்களோடுமே உள்ளனர். பாதிப்புகள் எதையும் தங்களின் தோள்களிலே உணாராமலே உள்ளனர்.
ஆகவே, இந்தக் கேள்விகளை அனைவரும் ஒன்றிணைந்து எழுப்புவதன் மூலம் நடந்த தவறுகளுக்கும் நிகழ்த்தப்பட்ட குற்றங்களுமான தண்டனையை இவர்களுக்கு வழங்க வேண்டும். அந்தத் தண்டனையைப் பெறக்கூடிய வழிகளையும் நிலையையும் உருவாக்க வேண்டும். அதற்குரிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
அப்போதுதான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். குற்றங்கள் தடுக்கப்படும். மட்டுமல்ல, குற்றவாளிகளிடமிருந்து பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணமும் கிட்டும்.
இந்த நிவாரணம் என்பது முக்கியமானது. தண்டனை என்பது குற்றவாளிகளைக் கட்டுப்படுத்திக் குற்றங்களைத் தடுப்பதற்கும் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணத்தை வழங்குவதற்குமான அடிப்படையைக் கொண்டது.
இலங்கையில் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் அமைப்புகள் என்ற பேரிலும் உதவும் நாடுகள் என்ற வகையிலும் சிறு உதவிகளை சம்மந்தப்பட்ட தரப்புகள் செய்து வருகின்றன.
இது ஒரு ஏமாற்று நடவடிக்கையே. தங்களுடைய குற்றங்களில் இருந்து தப்புவதற்கான ஒரு உபாயமே. இதிலும் மறைந்திருப்பது அதிகார நிலையே.
இயல்பாகவே வளர்ந்திருந்த ஒரு நாட்டை, சுய நிலையிலிருந்த சமூகங்களை அழிவடைய வைத்து, கையேந்தும் நிலைக்குள்ளாக்கியது இலங்கையின் ஆட்சியாளர்களும் அரசியலாளர்களும் இந்தியாவும் சர்வதேச சமூகமும் ஐ.நாவுமே.
இன்று குட்டிச் சுவராக்கப்பட்ட நாட்டுக்கு உதவியென்றும் ஊக்குவிப்பு என்றும் கடன் என்றும் பிச்சைபோடுகின்றன இந்தத் தரப்புகள்.
போரினால் துவண்டு போயிருக்கும் சனங்களுக்கு இந்தப் பிச்சைகள் உண்மையில் அவர்களுக்குச் செய்யும் அவமானமே.
போரின்போது நடந்த குற்றங்களுக்கு இன்று மன்னிப்புக் கேட்கிறது ஐ.நா. ஆனால், போர் நடந்தபோதே போர்க்குற்றங்கள் நடக்கின்றன என்று பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் யுத்தக்குற்றங்கள் தொடர்பாக அறிக்கையிட்டன. தங்களின் கண்டனங்களைத் தெரிவித்தன.
ஏன், ஐ.நாவின் தொடர்பாளராக, அதிகாரிகளாக, பொறுப்புவாய்ந்த ஆணையாளர்களாக இருந்தோர் கூட அன்று இலங்கையின் நிலைமை தொடர்பாக, நடக்கும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக தங்களின் மதிப்பீடுகளையும் அறிதல்களையும் வெளிப்படுத்தியே வந்தனர்.
ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல், அன்று ஐ.நாவும் அதன் செயலர் பான்கி மூனும் யுத்தக் குற்றவாளிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைத்தனர்.
ஐ.நாவில் பொறுப்பான இடங்களில் இருந்தவர்களில் ஒருவரான நம்பியார் குற்றங்களுக்கு ஆதரவளித்திருக்கிறார்.
இன்னொருவரான கோடன் வைஸ் குற்றங்களைப் பகிரங்கப்படுத்துகிறார்.
ஆகவே, யுத்தத்தை எப்படி நடத்துவது? அதன் இறுதி முடிவு எப்படி அமையவேண்டும்? என்ற நோக்கத்தோடு இயங்கிய கூட்டுச் சக்திகளின் விருப்பத்துக்கு இடமளித்தது ஐ.நா. இது வெளிப்படையான உண்மை.
இன்று இன்னொரு நிலையில், பகிரங்க நெருக்கடிகள் எதிர்காலத்தில் ஏற்படலாம் என்ற நிலையில், யுத்தக் குற்றங்களை இலங்கையின் தலையில் மட்டுமே சுமத்த வேண்டும் என்ற நிலையில் தன் பக்கத்தில் தவறு நடந்து விட்டதாக ஐ.நா சொல்கிறது.
இதுவும் ஒரு அரசியலே. இதுவும் ஒரு பொறுப்பற்ற தவறே. இதுவும் ஒரு குற்றமே.
ஆனால், எல்லாக்குற்றங்களுக்கும் இறுதியில் தேவையானது தண்டனையும் நிவாரணமுமே.
இன்று இந்த இரண்டுக்காகவும் நாம் போராட வேண்டும்.
அதில் முக்கியமானது நிவாரணமாகும். அந்த நிவாரணம் சலுகை அடிப்படையிலான பொருட்களோ, உதவிகளோ அல்ல. அவற்றையும் உள்ளடக்கிய நிரந்தரத் தீர்வே.
இழப்புகளுக்கான ஈடு என்பது தீர்வே. அது அரசியல் தீர்வு. வாழ்வாதாரத் தீர்வு. நிலையான அமைதிக்கும் சமத்துவத்துக்கும் ஜனநாயக மேம்பாட்டுக்குமான தீர்வு. சுயாதிபத்தியத்துக்கான தீர்வு என அமையவேண்டும்.
இதையே ஐ.நா செய்ய வேண்டும். இதையே சர்வதேச சமூகம் செய்ய வேண்டும். இதையே இந்தியா செய்ய வேண்டும். இதையே இலங்கையும் தமிழ் அரசியற் தலைமைகளும் செய்ய வேண்டும்.
யுத்தத்தை ஆதரித்தோரும் அதை நடத்தியோரும் அதை உருவாக்கியோரும் இந்தத் தீர்வுக்கு உதவ வேண்டும். அதைப் பொறுப்பெடுத்துச் செய்ய வேண்டும்.
இல்லையென்றால் இன்னும் குற்றங்கள் பெருகும். தவறுகள் தொடரும் வரையில், குற்றங்கள் தொடரும் வரையில் யாரும் அமைதியாக இருக்க முடியாது. எங்கும் அமைதி நீடிக்க முடியாது.
00
0 comments:
Post a Comment